வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 30 மார்ச், 2009

செம்புலப்பெயல்நீரார்.



யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

செம்புலப்பெயல் நீரார். (குறுந்தொகை-40)


இயற்கைப் புணர்ச்சிக்குப் பின் தலைவன் தன்னைப் பிரிந்துவிடுவான் எனத் தலைவியின் மனம் அஞ்சுகிறது. அதனைக் குறிப்பால் உணர்ந்த தலைவன் அவளை ஆற்றுவிப்பதாக இப்பாடல் அமைகிறது.

குடிப்பிறப்பு, உறவுநிலை, செல்வநிலை, உயர்வு தாழ்வு, பார்த்து வருவதில்லை காதல்.என்பதைத் தலைவன் தலைவிக்கு அறிவுறுத்துகிறான்.
என் தாயும் உன் தாயும் எவ்விதம் உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவுடையவர்? நானும் நீயும் எக்குடிவழிச் சார்புடையவர்கள்? செம்மண் நிலத்தில் வீழ்ந்த மழைத்துளி போல அன்புடைய நம் நெஞ்சங்கள் ஒன்றாகக் கலந்தன.
இப்பாடலில் செம்புலத்தில் வீழ்ந்த நீர்போல என்ற உவமையே இப்புலவருக்கும் பெயராயிற்று.
சங்க இலக்கியத்துள் அதிகமாக எடுத்தாளப்பட்ட பாடல்களுள் குறிப்பிடத்தக்கது இப்பாடல். இப்பாடலில் உள்ள எளிமை, பொதுமை, உவமை ஆகிய பொதுக்கூறுகள் இப்பாடலை காலத்தை வென்ற பாடலாக்கியுள்ளன.

2 கருத்துகள்: