வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 9 ஜூன், 2009

மகன் இறந்தும் மகிழ்ந்த தாய்.

மகன் இறந்தால் எந்தத் தாயாவது மகிழவாளா? சங்ககாலத் தாயொருத்தி தன் மகன் இறந்தது அறிந்து மிகவும் மகிழ்ந்தாளாம். அதுவும் தன் மகன் பிறந்த போது இருந்த மகிழ்ச்சியை விட அதிகமான மகிழ்ச்சியோடு இருந்தாளாம்.
இது என்ன விந்தை என்று நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அவள் மகிழ்ந்ததற்கான காரணம் அக்கால மக்களுடைய வீரத்தை இயம்புவதாகவுள்ளது.

277.மீன்உண் கொக்கின் தூவிஅன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன்’ என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே ; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
(புறநானூறு 277)

பாடியவர்: பூங்கணுத்திரையார்
திணை: தும்பை துறை: உவகைக் கலுழ்ச்சி

என்பது பாடலாகும்.
( மாலையையோ அல்லது பூவையோ அணிந்து பகைவரோடு போர் புரிதல் தும்பையாகும்.)

மீனை உண்ணக்கூடிய கொக்கின் சிறகினைப் போல வெண்மையான நரைத்த கூந்தலை உடைய முதியவள் ஒருத்தி இருந்தாள். அவளின் இளைய மகன் தன்னைத் தாக்கவந்த யானையைக் கொன்று தானும் இறந்து போனான். இச் செய்தியைக் கூறக் கேட்ட தாய், அவனை ஈன்ற பொழுதினும் உவகை மிகக் கொண்டாள்
( உவகை – பெருமகிழ்ச்சி ) அவள் சிந்திய கண்ணீர் வலிய மூங்கில் அசைகின்ற வெதிர மலையில் பெய்த வான் மழை . மூங்கிலினின்று சொட்டும் மழைத்துளியினும் மிகுதியாகும். இப்பாடல் வழியாக சங்க காலப் மகளிரின் வீரம் உணர்த்தப்படுகிறது.

6 கருத்துகள்:

  1. நெஞ்சம் நெகிழ்ந்து போனது நண்பா

    பதிலளிநீக்கு
  2. சங்கக்கால பெண்களின் வீரத்தையும் மனோதிடத்தையும் சுட்டிக்காட்டுகிறது இந்த விந்தை....

    பதிலளிநீக்கு
  3. திரு குணசீலன் அவர்களே

    உங்களது வலைதளத்தில் இவ்வார தமிழர் பட்டையை காண முடிய்வில்லை, நாங்கள் உங்களது தளத்தைதில் எங்களது பட்டை சேர்த்து எண்ணி மிக்க பெருமை அடைந்தோம்,

    உங்களது உதவி எங்களுக்கு என்றும் வேண்டும்

    http://tamilers4bloggers.blogspot.com/

    என்ற பிளாக்கில் தமிழர்ஸ் பட்டையை இணைத்தவர்கள் பட்டியலில் உங்களது பெயரும் இருக்கு

    நன்றியுடன்
    தமிழர்ஸ்

    பதிலளிநீக்கு
  4. இன்றைக்கு இதே வீரத்தை நாம் வன்முறை என்று சொல்லுவோம். ஆனால் ஒருவருக்கு வீரமாக இருப்பது இன்னொருவருக்கு வன்முறை என்பது தான் உலக இயல்பு. அன்றும் இன்றும் என்றும் வீரத்தைப் போற்றிக் கொண்டே தான் இருப்போம்; அதனால் வன்முறையும் இருக்கும்; அதற்குத் தேவை எப்போதும் இருக்கிறது போலும். அந்த வீரம் என்னும் வன்முறை இல்லையேல் வாழ்க்கை முறை என்றும் தருமம் என்றும் சொல்லப்படும் ஒன்று நிலையின்றித் தத்தளிக்கும்.

    பதிலளிநீக்கு