வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 24 ஏப்ரல், 2010

பூ உதிரும் ஓசை




வானம், நிலா, நட்சத்திரம், தென்றல், என்று நான் எப்போதாவது இயற்கையைப் பார்த்து மகிழ்ந்து கவிதை சொல்ல முற்பட்டால் என் நண்பர்கள் சொல்வார்கள்,

இவன் காதல் வயப்பட்டுவிட்டான், கவிஞனாகிவிட்டான் என்று.

இயற்கை என்ன காதலர்களுக்காகவும் கவிஞர்களுக்காகவுமே தோன்றியதா?
சராசரி மனிதர்கள் இயற்கையோடு உறவாடக் கூடாதா?

என்னைக் கேட்டால் இயற்கையோடு உறவாடும் மனிதர்களே வாழத்தெரிந்தவர்கள் என்பேன்.

என் அனுபவத்தில் சொல்கிறேன் சராசரி வாழ்வில் இயற்கையோடு உறவாட நேரம் ஒதுக்கிப் பாருங்கள். உங்கள் இன்பம் இருமடங்காகும், துன்பம் பாதியாகக் குறையும்.

பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்று பாடல் கேட்டிருப்போம், ஆனால்,

பூ பூக்கும் ஓசையையோ, பூ உதிரும் ஓசையையோ கேட்டது உண்டா?

இன்றைய ஒலி மாசுபாடுகள் நிறைந்த உலகில் பூ பூக்கும் ஓசையை எங்கு கேட்பது என்கிறீர்களா?

காசின் ஓசையின் முன்னே
பூவின் ஓசையை எல்லோராலும் கேட்கமுடியாது என்பது உண்மைதான்“

“அப்படி என்னதான் சொல்லிவிட்டது காற்று
இப்படிக் குலுங்க குலுங்கச் சிரிக்கிறதே மரம்“


என்னும் கவிதை இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரம் கவித்துவம் மறைந்துள்ளதையே தெரிவிக்கிறது.

சங்ககாலக் காட்சி ஒன்று.

கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம்இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே“


(குறுந்தொகை -138
புலவர் -கொல்லன் அழிசி
திணை – குறிஞ்சி
உரி – கூடல்
துறை – குறி பிழைத்த தலைவன் பின் இரவுக்குறி வந்தபோது தோழி சிறைப்புறமாகக் கூறியது. இரவுக்குறி நேர்ந்ததும்ஆம்.)


தலைவன் கேட்கத் தோழி உரைக்கிறாள்,

எம் மனைக்கு அயலாகவுள்ள ஏழுமனையின் அப்பால் மயில் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய பூங்கொத்துக்களைக் கொண்ட நொச்சியின் அழகுமிக்க மெல்லிய கொம்புகள் உதிர்த்த நீலமணிபோன்ற நிறம் கொண்ட பூவின் ஓசையை மிகவும் கேட்டு, அலர் உரைக்கும் ஊர் தூங்கினாலும் நாங்கள் தூங்கவில்லை.

தலைமக்கள் இரவுக்காலத்தில் தலைவியின் வீட்டருகே சந்தித்து உறவாடி மகிழ்வது“இரவுக்குறி“ எனப்படும். இக்காலத்தில் தலைவன் தன் வருகையை ஏதாவது ஒலி செய்து தெரிவிப்பது மரபு. அதனால் தலைவன் செய்யும் ஒலிக்காக இரவு முழுவதும் உறங்காது காத்திருந்த தலைவிக்கு ஏழுவீடுகளுக்கு அப்பால் உதிரும் நொச்சிப் பூவின் ஓசைகேட்டது என்கிறாள் தோழி.

நொச்சிப் பூவின் மெல்லிய ஓசையைக்கூடக் கேட்கமுடிந்த நாங்கள் நீ சிறு ஒலி செய்திருந்தால் கூட அதைக் கேட்டிருப்போம். நீ வரவில்லை அதனால் ஏதும் ஒலி செய்யவில்லை. நீ வருவாய் எனக் காத்திருந்த தலைவி ஏமாற்றமடைந்தால் என்பதைத் தலைவனுக்கு உணர்த்தினாள் தோழி.

ஊர்தூங்கும் காலம் என்று தோழி குறிப்பது தலைவியை சந்திக்க ஏற்றகாலம் இரவு என்று “இரவுக்குறி“ தலைவனுக்கு அறிவுறுத்துவதாகவும் கொள்ளலாம்.

பாடல் உணர்த்தும் கருத்து.

 இரவுக்குறி, குறிபிழைத்தல் போன்ற அகத்துறைகள் விளக்கப்படுகின்றன.
 இயற்கையோடு ஒன்றிய பழந்தமிழரின் அகவாழ்வு புலப்படுத்தப்படுகிறது.
 நொச்சிப் பூ உதிரும் ஓசை கேட்கமுடிந்தது என்பதால் ஒலிமாசுபாடற்ற வாழ்வை சங்கத்தமிழர் வாழ்ந்தனர் என்பது உணரமுடிகிறது.
 மயில் அடியைப் போன்ற நொச்சி என்ற புலவரின் வருணனை மயில் அடியோடு நொச்சியிலையை நுட்பமாக ஒப்புநோக்கிய புலவரின் திறன் பாராட்டத்தக்கதாகவுள்ளது.

29 கருத்துகள்:

  1. என்னைக் கேட்டால் இயற்கையோடு உறவாடும் மனிதர்களே வாழத்தெரிந்தவர்கள் என்பேன்.

    உண்மை உண்மை உண்மை....

    பதிலளிநீக்கு
  2. வானம், நிலா, நட்சத்திரம், தென்றல், என்று நான் எப்போதாவது இயற்கையைப் பார்த்து மகிழ்ந்து கவிதை சொல்ல முற்பட்டால் என் நண்பர்கள் சொல்வார்கள்,
    இவன் காதல் வயப்பட்டுவிட்டான், கவிஞனாகிவிட்டான் என்று.

    hahahaa..ஆனால் குணா இந்த வம்புக்கு எல்லாம் போகமாட்டாரே,,,,

    பதிலளிநீக்கு
  3. சங்கக்கால காதலை இயற்கையோடு பின்னிபிணைந்து பதிவாய் அழகாய் படைத்துவிட்டீர் குணா..

    பதிலளிநீக்கு
  4. குணா,

    சிறப்பான ஆக்கமும், பகிர்வும்!

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பதிவு...

    பூ உதிரும் ஓசையை உணருமளவிற்கு கவனமாக காத்திருந்திருக்கிறார்கள்...

    அருமை...

    பதிலளிநீக்கு
  6. ///இவன் காதல் வயப்பட்டுவிட்டான், கவிஞனாகிவிட்டான் என்று.///
    உண்மைதானே.. இயற்கையைத் தானே காதலித்தீர்கள்.....

    ///என்னைக் கேட்டால் இயற்கையோடு உறவாடும் மனிதர்களே வாழத்தெரிந்தவர்கள் என்பேன்.

    என் அனுபவத்தில் சொல்கிறேன் சராசரி வாழ்வில் இயற்கையோடு உறவாட நேரம் ஒதுக்கிப் பாருங்கள். உங்கள் இன்பம் இருமடங்காகும், துன்பம் பாதியாகக் குறையும்.///

    உண்மை குணா.. உணர்ந்திருக்கிறேன்.
    மற்றொரு நல்ல இடுக்கை. நன்றி தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. "மயில் அடியைப் போன்ற நொச்சி என்ற புலவரின் வருணனை"

    "பூ உதிரும் ஓசை" இரண்டும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. இயற்கை என்ன காதலர்களுக்காகவும் கவிஞர்களுக்காகவுமே தோன்றியதா?
    சராசரி மனிதர்கள் இயற்கையோடு உறவாடக் கூடாதா?

    என்னைக் கேட்டால் இயற்கையோடு உறவாடும் மனிதர்களே வாழத்தெரிந்தவர்கள் என்பேன்.


    ......சரியாக சொல்லி இருக்கிறீர்கள். :-)

    பதிலளிநீக்கு
  9. மனதார ரசித்தேன் பதிவை.இயற்கை ரசிப்பின் முன் காசு எம்மாத்திரம்.
    உணரந்தால் தெரியும் !

    பதிலளிநீக்கு
  10. ஒரு உன்னதமான பதிவு.படித்து முடிக்கையில் மனத்துள் ஒரு இனம் புரியா மகிழ்வு மல்லிகையாய் பூத்தது..

    பதிலளிநீக்கு
  11. @றமேஸ்-Ramesh உண்மைதான் நண்பா இயற்கையின் காதலன் தான் நான்..
    என்றும் என்றென்றும்.

    பதிலளிநீக்கு
  12. @ஹேமா

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  13. இயற்கை அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால் காதல் வரும் போது தான் இயற்கையின் அழகை நன்றாக ரசிக்க முடியும். (இதை மாற்றியும் சொல்லலாம் :) :) )

    நல்ல கவிதையை விளக்கியிருக்கிறீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  14. சங்கக்கால காதலை இயற்கையோடு பின்னிபிணைந்து பதிவாய் அழகாய் படைத்துவிட்டீர் குணா..

    பதிலளிநீக்கு
  15. வர்ணனைகளும், விவரிப்புகளும் அருமையான நடையில்..
    தமிழாசான் ஆயிற்றே!!!

    பதிலளிநீக்கு