வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 3 அக்டோபர், 2011

யானை புக்க புலம்போல... - UPSC EXAM TAMIL - புறநானூறு -184



பொன் முட்டையிடும் வாத்து என்று ஒரு பழையகதை கேள்விப்பட்டிருப்பீர்கள்...

தினம் ஒரு பொன்முட்டையிடும் வாத்து ஒன்று ஒருவனுக்குக் கிடைத்ததாம்.  பேராசை கொண்டு, அவன் அதன் வயிற்றுக்குள் இன்னும் நிறைய பொன்முட்டைகள் இருக்கும் என்று எண்ணி அதன் வயிற்றை அறுத்தானாம். அது இறந்து போனதாம் அவன் ஏமாந்து போனானாம்.. என்று..

ஒரு நாடும் அதனை ஆளும் அரசனும் அறிந்துகொள்வேண்டிய கதையிது.

ஒரு நாடு தன்னிறைவு அடைந்த நாடாகத் திகழ “வரி அடிப்படையான ஒன்றாகும்.

மக்களின் நிலை உணர்ந்து ஒரு அரசு வரி விதித்தல் வேண்டும். அவ்வாறு விதித்தால் மக்கள் ஏமாற்றவேண்டும் என்று எண்ணமாட்டார்கள்.

பெறும் வரியையும் தன் குடும்ப வளர்ச்சிக்காக மட்டுமே அரசன் பயன்படுத்தாது, நாட்டு வளர்ச்சிக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்தால் பொன்முட்டையிடும் மக்கள் என்னும் வாத்துக்கூட்டங்கள் நிறைய பொன்முட்டை (வரி) இடுவார்கள். பேராசை கொண்டு வாத்தின் (மக்களின்) வயிற்றைக் கிழித்து பொன் முட்டைகளை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம் என்று அரசன் நினைத்தால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும்.

என்பார் வள்ளுவர்.

அன்றைய அரசனுக்குப் பின்னும், இன்றைய அரசியல்வாதிகளுக்குப் பின்னும் புகழ்பாடும் கூட்டங்கள் தானே நிறைந்திருக்கின்றன..

 

கா கா கா கா என்ற பறவையின் ஒலியல்லவா எங்கும் கேட்கிறது. இவர்களுக்கெல்லாம் வாய் என்று ஒன்று வெற்றி பெறும் வரைதான் இருக்கிறது. வெற்றி பெற்ற பின்னால் அவர்களுக்கு வயிறு மட்டுமே, அதுவும் அவர்களுக்கு மட்டுமே இருப்பது போலத்தானே எண்ணிக்கொள்கிறார்கள்

 

நம்ம ஊரு அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டு அரசியல்வாதியோட வீட்டுக்குப் போனாராம். அவரோட வீட்டைப் பார்த்து நம்மாளு வியந்துபோனாராம்..

 எப்படி இவ்வளவு பெரிய வீடு கட்டினீங்கன்னு கேட்டாராம்.

அதுக்கு அவரு சொன்னாராம்...

இங்க ஒரு பாலம் கட்டித்தரும் திட்டத்தில கொஞ்சம் கைவெச்சேன்..

அதான் இவ்வளவு பெரிய வீடு என்று..

சில நாட்களில் அந்த வெளிநாட்டு அரசியல்வாதி நம்மஊரு அரசியல்வாதி வீட்டுக்கு வந்து நம்மாளவிட அதிகமாக வியந்து போனாராம்.

அவர் நம்மாளப் பார்த்துக் கேட்டாராம்..

என்னைவிடப் பெரிய வீடாக் கட்டியிருக்கீங்களே எப்படி என்று...

அதற்கு நம்மாளு சொன்னாராம்..

அதோ பாருங்க ஒரு பாலம் தெரியுது... என்று..

அவரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைப் பார்த்துவிட்டு..

எங்கப்பா காணோம் என்றாராம்...

நம்மாளு சொன்னாராம்..

கட்டாத அந்தப் பாலத்தைக் கட்டினதாத்தான் கணக்குக் காட்டி இந்த வீட்டைக் கட்டினேன் என்று...

வெளிநாட்டு அரசியல்வாதி மனதில் நினைத்துக்கொண்டாராம்..

இந்தியாவ யாராலயும் காப்பாத்த முடியாதுடா!!!!!

என்று..

இன்றைய அரசில் பற்றி நாம பேசக்கூடாது.. அப்படிப் பேசுனா இது ஒரு நகைச்சுவை இடுகையா மாறிப்போகும்.. வாங்க நம் மன்னராட்சி காலத்துக்கே போவோம்..                                            

பிசிராந்தையார் என்றவுடன் கோப்பெருஞ்சோழன் தான் பலருக்கும் நினைவுக்கு வருவான். இவர்களுக்குள் இருந்த நட்பு தமிழுலுலகம் நன்கறிந்த ஒன்றாகும். பிசிராந்தையார் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். தம் மன்னன் மக்களிடம் அதிகமான வரி சுமத்தி வந்தான். அப்போது அவனை அறிவுறுத்தவேண்டிய அமைச்சர்களும், சுற்றத்தாரும் எதுவும் சொல்லவில்லை. தம் நாடு அழிந்துபோகுமே என்று வருந்திய பிசிராந்தையார் பாண்டியனிடம்...

 மன்னா..

யானையின் பசிக்கு நெற்கதிர்களை உணவாக்கிச் சிறிது சிறிதாகக் கொடுக்கவேண்டும்.

 நாட்டு மக்களிடம் வரியைச் சிறிது சிறிதாகப் பெறவேண்டும்.

அப்படிச் செய்யாமல், யானையை நிலத்தில் மேயவிட்டால் என்ன ஆகும்??

நூறு வயல்களாயினும் யானை தனித்துச் சென்று உண்டால் யானை உண்ணும் நெல்லைவிட அதன் காலடியில் பட்டு அழிந்துபோகும் நெற்கதிர்கள் அதிகமாக இருக்கும் அல்லவா?

என்று அறிவுறுத்தி பாண்டியனுக்குப் புரியவைத்தார். இதனைக் கீழ்காணும் பாடல் விளக்கும்.  


காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
10 யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.

                   புறநானூறு -184

பாண்டியன் அறிவுடை நம்பியை பிசிராந்தையார் பாடியது.

 திணை: பாடாண். ஒருவருடைய புகழ்வலிமைகொடை

அருள் ஆகிய  நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால்..

 ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும்.

ஆனால்நூறு வயல்கள் இருந்தாலும்யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.

அரசன் அறிவில் குறைந்தவனாகிமுறை அறியாதபுகழ்பாடும் கூட்டத்தோடு  ஆரவாரமாக மக்கள் அன்பு கெடுமாறுநாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால்யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் அந்நாடும் கெடும்.

 தமிழ்ச்சொல் அறிவாம்.

1. காய் நெல் = விளைந்த நெல்.

2. மா = ஒருநில அளவு (ஒருஏக்கரில் மூன்றில் ஒருபங்கு).

3. செறு = வயல்

4 தமித்து = தனித்து

5. புக்கு = புகுந்து.

6. யாத்து = சேர்த்து

7. நந்தும் = தழைக்கும்.

8. வரிசை = முறைமை

9.கல் - ஒலிக்குறிப்பு.

9. பரிவு = அன்பு

 10.தப = கெட

11. பிண்டம் = வரி, பொருள்

12. நச்சின் = விரும்பினால்.

13.புலம்

14.கவளம்- உணவு.

 பாடல் வழியே..

1.பாடாண் என்னும் புறத்திணை விளக்கப்படுகிறது.

2.செவியறிவுறூஉ என்னும் புறத்துறை உரைக்கப்படுகிறது.

3. சங்ககால வரி விதிப்பு முறையை அறிந்துகொள்ளமுடிகிறது.

4. மன்னனாகவே இருந்தாலும் தவறு செய்தபோது தட்டிக் கேட்கும் தெளிந்த வீரம் புலர்களிடம் இருந்தது என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

5. யானைபுக்க புலம் என்னும் உவமை மனம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

தொடர்புடைய இடுகைகள்






39 கருத்துகள்:

  1. அருமையான பாடல் அருமையான விளக்கம்
    அரும்சொற்பொருள் விளக்கம் அளித்திருந்தது அருமை
    புதிய பழம்சொற்கள் பலவற்றை அறிந்து கொள்ள முடிந்தது
    தொடர வாழ்த்துக்கள் த.ம 2

    பதிலளிநீக்கு
  2. நிறைய தமிழ் சொற்க்களை அறிய வைத்ததற்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. உண்மை... வரி விதிக்க வேண்டியது தான்... ஆனால் கொள்முதலை விட வரி அதிகமாகும் பொழுது எரிச்சல் வருகிறது... நான் பெட்ரோலை சொன்னேன்

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துகளை சங்க தமிழ் பாடல் வழியாக விளக்கி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. தமிழ்ப் பாலை வயிறு முட்ட உண்டதில் திருப்தி. தமிழ்ப் பாடலுக்கே அருஞ்சொற்பொருள் தரும் நிலை நிலவுவதில் சற்றே வருத்தம். இடுகையைப் படித்ததில் மிக்க மகிழ்ச்சி முனைவரையா.

    பதிலளிநீக்கு
  6. த.ம.6.
    சங்கப் பாடல் வழி அக்கால நிலையைச்சொல்லி ,நடுவில் இக்கால நடப்பையும் நகைச்சுவையோடு தொட்டுச் சென்ற விதம் அருமை!

    பதிலளிநீக்கு
  7. சங்க கால பாடல்கள் மூலம் சங்கதி சொல்லும் சகோக்கு வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  8. வெளிநாட்டு அரசியல்வாதி மனதில் நினைத்துக்கொண்டாராம்..
    இந்தியாவ யாராலயும் காப்பாத்த முடியாதுடா!!!!!//

    உண்மை உண்மை ஆ ராசா'வின் சுவிஸ் பணம் எழுபத்தி எட்டாயிரம் கோடி....!!!

    பதிலளிநீக்கு
  9. பொன் முட்டை இடும் வாத்துளை வயிற்றை அறுத்து மட்டுமல்ல தடம் தெரியாமல் அழித்து விடுவார்கள் போல....

    மக்களின் வரிப்பணம் முறையாக செலவழிக்கப்பட்டால் கூட சரி என்று சொல்லலாம் அவற்றை ஆட்சி மாறும்போதெல்லாம் பல திட்டங்களை கிடப்பில் போட்டு அழித்துவிடுகிறார்கள.

    பதிலளிநீக்கு
  10. நம்நாட்டில் கட்டாத அணைகள் போடாத ரோடுகள்...
    முடியாத மேம்பாலங்கள் எல்லாம் விடுகளாகத்தான் மாறிப்போயிருக்கிறது...

    இதுதான் இன்றைய நிலை

    பதிலளிநீக்கு
  11. அனைத்து விஷயங்களும் சுவாரஸ்யங்களுடன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. இன்று கண்மூடித்தனமாக வரிப்போட்டு வறியவர்களின் உயிரைச் சுரண்டும் இக்கால அரசியல்வாதிகளுக்கும் சேர்த்தே அப்பாடலை தீர்க்கதரிசனமாக படியிருப்பார் போலும்.
    இவ்விடுகை இக்காலச் சூலலுடன் பொருந்திப் போகிறது.நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  13. m
    ஆஹா எனக்கொரு வாத்தி கெடச்சிட்டாரு....
    தமிழ் சந்தேகங்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமா சகோ....

    பதிலளிநீக்கு
  14. அனைத்தும் அருமையான கருத்துகள்

    பதிலளிநீக்கு
  15. சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  16. வேர்களைத் தேடி வந்து அறிந்தமைக்கு நன்றி கருன்.

    பதிலளிநீக்கு
  17. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகி்ழ்சிச அசோக்.

    பதிலளிநீக்கு
  18. உண்மைதான் கணேஷ்..

    நாம் வாழும் காலம இப்படித்தான் எதிர்பார்க்கிறது..

    பதிலளிநீக்கு
  19. இன்னும் வெளிவராத தகவல்கள் எத்தனை எத்தனையோ..

    கருத்துரைக்கு நன்றி மனோ..

    பதிலளிநீக்கு
  20. உண்மைதான் சௌந்தர் இது கொடுமையிலும் கொடுமை.

    பதிலளிநீக்கு
  21. தாராளமாக நிகாசா..

    தங்கள் வருகைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  22. கருத்துரைகளுக்க
    நன்றி சதிஷ்
    நன்றி ரியஷ்

    பதிலளிநீக்கு
  23. சொல்லக் கூடாது சொல்லக் கூடாது
    என்றே
    சொல்ல வேண்டியவற்றை இங்கே
    சொல்லி விட்டீர் முனைவரே

    நன்று!நன்று!மிகமிக நன்று!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  24. ஒரு கருத்தை கருத்தாகச் சொல்வதை விடவும் தேர்ந்த உவமைகளுடன் சொல்லும்போது மனத்தில் ஆழப்பதிந்துவிடுகிறது. இப்பாடலின் கருத்தும் அப்படியே... புலவர் உரைத்தது மன்னனுக்கு நிச்சயம் உறைத்திருக்கும். அந்தப் புலவரைப் போலவே தாங்களும் இன்றைய அரசியல் நிகழ்வுகளை இடைச்செருகி சங்கப்பாடலைப் பகிர்ந்த விதம் வெகு நன்று.

    பதிலளிநீக்கு
  25. அருமை அருமை.. இது போன்ற பதிவுகள் அனைவரின் பார்வையிலும் கிடைக்கப்பெற்றால் இன்னும் இதற்கு உயிர் இருக்கும்..

    நல்ல சிந்தனை நன்றி..

    பதிலளிநீக்கு