வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

எதிர்பாராத பதில்கள்


முல்லா என்பவரை அனைவரும் அறிவாளி என்று கூறுவர். ஆனால் அவரது இரு நண்பர்களும், முல்லா ஒரு முட்டாள், ஆனால் அனைவரும் அவரை அறிவாளி என்று கூறுகிறார்கள். அவரை ஒரு சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று முயற்சி எடுத்து முல்லாவை மேடையில் பேச அழைத்தார்கள்.

முதலாவதாக முல்லா மேடையேறி 
“நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார். அனைவரும் தெரியாது என்று கூறினார்கள். நான் என்ன பேசப்போகிறேன் என்றே உங்களுக்குத் தெரியவில்லை. நான் எதற்காக உங்களிடம் பேசவேண்டும்? என்று கூறிவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.

இரண்டாவதாக, முல்லாவின் இரு நண்பர்களும் இப்படி முல்லா இறங்கிவிட்டாரே என நினைத்துவிட்டு மறுபடியும் முயற்சியெடுத்து முல்லாவை மேடைக்கு அனுப்பினர். மேடையேறியவுடன் முல்லா,
“நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். அனைவரும், போனதடவை தெரியாது என்று சொன்னதால் முல்லா மேடையைவிட்டு இறங்கிவிட்டார். அதனால் இந்தமுறை அவரைப் பேசவைக்கவேண்டும் என்று சிந்தித்து அனைவரும் “தெரியும்“ என்று சொன்னார்கள். அதற்கு முல்லா, நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்கே தெரியும் மறுபடியும் நான் ஏன் பேசவேண்டும் என்று மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.

மறுபடியும் இவரைப் பேசவைக்கவேண்டும் என்று முயற்சித்து இரு நண்பர்களும், முல்லாவை மேடைக்கு அனுப்பினர். முல்லா முன்பு போலவே “நான் என்ன பேசப்போகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?“ என்று கேட்டார். தெரியாது என்று சொன்னாலும் தெரியும் என்று சொன்னாலும் இவர் மேடையைவிட்டு இறங்கிவிடுகிறார் என்று மக்களெல்லாம் மிகவும் யோசித்துக்கொண்டிருந்தனர். அதனால் பாதிபேர் தெரியும் என்றும் பாதி பேர் தெரியாது என்றும் கூறினார்கள்.
முல்லா சொன்னார்.
தெரியாதவர்களெல்லாம், தெரிந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மேடையைவிட்டு இறங்கிவிட்டார்.
முல்லா அறிவாளி என்று ஏன் எல்லோரும் சொல்கிறார்கள் என்பதை இரண்டு நண்பர்களும் இப்போது உணர்ந்தார்கள்.
                          
பிடித்த கதையை எடுத்துச் சொன்னவர்.

                                               பா. முத்துலெட்சுமி
இரண்டாமாண்டு வணிகவியல் (கணினிப் பயன்பாடு)
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

இன்று தமிழ்த்தாத்தா பிறந்தநாள்.

உ. வே. சாமிநாதையர் (பெப்ரவரி 19,1855 - ஏப்ரல் 281942உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாகதமிழ் தாத்தா என அறியப்படுகிறார். ஒரு தமிழறிஞர். பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.


அச்சு பதித்த நூல்களின் பட்டியல்


மேலும்..

(நன்றி விக்கிப்பீடியா)

தொடர்புடைய இடுகை


அந்த மூன்று பூக்கள்


சங்க இலக்கியங்களையோ, காப்பியங்களையோ எப்போது படித்தாலும் உ.வே.சா அவர்களை நன்றியோடு எண்ணிப்பார்ப்பதுண்டு. தன்னலம் கருதாது தமிழுக்காக அவர் செலவிட்ட நேரங்களையும், அவரது தேடலையும் எண்ணிப்பார்க்கும்போது இவருக்கெல்லாம் எத்தனை முனைவர் பட்டம் கொடுத்தாலும் போதாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு தமிழரும் இவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்று எண்ணி்க்கொள்வதுண்டு.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

இன்று கலீலியோ பிறந்தநாள்

கலீலியோ கலிலி (பெப்ரவரி 151564 - ஜனவரி 81642) பிறந்தார். இவர் இத்தாலியில் பிறந்தார்.

இயற்பியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்று போற்றப்பட்டராவார்.

“ஒன்பது கோள்களில் ஒன்றுதான் உலகம், நிலா பூமியைச் சுற்றுகிறது.பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதும் இன்று நாமறிந்த உண்மை. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னால், 

நிலவும் சூரியனும் பூமியைச் சுற்றுகின்றன என்று நம்பினார்கள். நம் புராணங்களில் கூட அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு ஓடினான் என்றும்..

சூரியன் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கிலிருந்து மேற்கே செல்வார் என்றும் சிந்தனைகள் உண்டு. அந்தக் காலத்தில் சூரினைச்சுற்றித்தான் அனைத்துக் கோள்களும் சுற்றிவருகின்றன என்ற கருத்தைச் சொன்னதற்காக பெருந்துன்பத்தை அனுபவித்தார் கலீலியோ. இவர் கணிதமும், இயற்பியலும் பயின்றார். படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் நிறையவே கேள்விகள் கேட்டார். கற்பிக்கப்படும் அறிவியல் கருத்துக்களை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள இவர் மட்டும் ஆசிரியர்களிடம் அதற்கான ஆதாரங்களைக் கேட்பார். அரிசுடாடில் கூற்றைக்கூட மறுத்துப் பேசும் அளவுக்கு இவருக்கு அறிவியலின் மீது ஆர்வமும், பற்றும் இருந்தது. 

சனிகிரகத்தைச் சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார். வியாழன் கோளுக்கு நான்கு நிலாக்கள் உண்டு என்பதையும் கண்டுசொன்னார். சூரியனில் கரும்புள்ளிகள் தெரிவதை அவர் கண்டார். அவை என்னவாக இருக்கும் என்ற சி்ந்தித்தபோது அவை சூரியனைச்சுற்றும் கிரகங்களாகத்தான் இருக்கும் என்று சொன்னார். சூரியனைச் சுற்றித்தான் அனைத்துக்கோள்களும் சுழல்கின்றன என்ற கருத்தை அதன் வழிதான் நிரூபித்தார் கலீலியோ. கலீலியோ அவர்களின் தேடல் இன்றைய இளம் தலைமுறையினர் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகும்.

புதன், 13 பிப்ரவரி, 2013

இன்று உலக வானொலி நாள்



ஒரு காலத்தில் நாகரீகத்தின், தொழில்நுட்பத்தின், செல்வத்தின் அடையாளமாக இருந்தது வானொலி ஆகும். டேப் ரிக்கார்டர், தொலைக்காட்சிகள் வந்தபின்னும் இன்றுவரை காலத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொண்டு மக்களிடம் செல்வாக்குப் பெற்று விளங்குகிறது வானொலி.
வானொலி, எப்எம், சேட்டிலைட் வானொலி, இணைய வானொலி.. என இதன் படிநிலை வளர்ச்சி வியக்கத்தக்கது.
இன்றும் நாள்தோறும் வானொலி கேட்போர் நிறையவே இருக்கிறார்கள்.
பயணம் மேற்கொள்வோர், அலுவலகங்களில், கடைகளில் இன்றும் பலர் வானொலி கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தால் கட்சிசார்புடைய செய்திகளை அவை போட்டிபோட்டுக்கொண்டு வழங்குவதால் எது நடுநிலையான சரியான செய்தி என்று தெரியாமல் இன்று மக்களிடையே குழப்பநிலையே நீடித்துவருகிறது. அதனால் தொலைக்காட்சிகளோடு ஒப்பிடும்போது வானொலி நடுநிலையுடைய செய்திகளை வழங்குகிறது என்று மக்கள் நம்புகிறார்கள்.

மேலும் அழுதுவடியும் தொடர்நாடகங்களும், அறிவாளியைக் கூட முட்டாளாக்கும் கேளிக்கூத்துகளும் காணும்போது குரங்கு கையில் சிக்கிய மலர் மாலைதான் நம் கையில் இந்தத் தொழில்நுட்பம் என்று தோன்றுகிறது. அதனால் பலரும் மீண்டும் என் தொட்டிலுக்கு என்று வானொலி கேட்டுவருகிறார்கள்.

இன்றைய வானொலி அறிவிப்பாளர்கள் பலர் காலில் சுடுதண்ணீர் ஊற்றியதுபோல விரைவாக, மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் அறிவிப்பாளர்களிடம் சிக்கிக்கொண்டு தமிழ் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது.

இருந்தாலும், சிறுவயதில் வானொலியில் கேட்ட நாடகங்கள், இன்று ஒரு தகவல், பட்டிமன்றங்கள், விழிப்புணர்வுசார்ந்த செய்திகள், நேர்முக வர்ணனைகள் ஆகியவற்றை இன்று நினைத்துப்பார்த்தாலும் பசுமையாக மனதில் தோன்றுகிறது. குறிப்பாக அன்றைய நாட்களில் கேட்ட தென்கட்சி சுவாமிநாதன், இளசை சுந்தரம் ஆகியோரின் தகவல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அன்றைய வானொலி தந்த மனநிறைவை இன்றைய தொலைக்காட்சி தருகிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

அன்று இதே நாளில்..


1. இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள். லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்... 

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

(தமிழில் - பூ.கொ.சரவணன்)



2.இன்று சார்லஸ் இராபர்ட் டார்வின் பிறந்தநாள்..

சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 121809 -ஏப்ரல் 191882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள்(HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடுதொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.
இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள்மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,[5][6] அதாவதுவலிமையானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.
(நன்றி பூ.கொ.சரவணன், நன்றி விக்கிப்பீடியா)

திங்கள், 11 பிப்ரவரி, 2013

மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்


கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி 

சௌ.பிரியதர்சினி 

அவர்கள் டாக்டர் 
இராதாகிருட்டிணன் அவர்களின் ஓவியத்தை அழகாக வரைந்து வந்தார் உற்று நோக்கியபோது அதிகாரத்துக்கு ஒரு குறள் என 133 குறட்பாக்களால் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. 



23.01.2013 அன்று கோவையில் பிஎஸ்ஜி (PSG CAS) கலை அறிவியல் கல்லூரியில் 

“இயன்றவரை இனிய தமிழில்“ 

என்ற தலைப்பில் 

உரையாற்றினேன். அப்போது 

நினைவுப்பரிசாக இந்த ஓவியத்தை வழங்கினார்கள். இந்த 

ஓவியத்தை இயற்பியல் துறை 

மூன்றாமாண்டைச் சார்ந்த 

மாணவர் ஆனந்த் அவர்கள் 

வரைந்தளித்தார். அவரது படைப்பாக்கத் 

திறன் கண்டு வியந்துபோனேன்.



(நீங்கள் வரைந்த ஓவியத்தையோ, உங்களுக்குத் தெரிந்த இளம் படைப்பாளிகளின் ஓவியத்தையோ இந்த வலையில் வெளியிட வேண்டுமா ஓவியத்தை gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக)