வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 21 ஏப்ரல், 2010

அறிஞர்.அண்ணா கட்டிய வீடு.



அறிஞர்.அண்ணா அவர்களின் மனைவி தன் பேத்தி வாயிலாக அண்ணாவிடம் நாம் வீடுகட்டவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாராம். தன்பேத்தி கொண்டு வந்த கோரிக்கை எழுதிய தாளிலேயே வீட்டின் படத்தை வரைந்து கொடுத்தார் அண்ணா.

வரைபடத்தைப் பார்த்த அவரின் மனைவி, நம் வீட்டின் மாதிரிப்படமா? என்று கேட்க. அதற்கு அண்ணா அவர்கள்,


“நம் வீடே அதுதான்“ என்றாராம்.

-------------------------------------------------------------------------------------

அரசர் கண்பார்வையற்ற புலவர் ஒருவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தலாம் என்று எண்ணினார். ஆனால் அமைச்சரோ புலவர் கண்பார்வையற்றவர்தானே, என்று நினைத்து கிழிந்த பொன்னாடையைக் கொடுத்தார்.

பொன்னாடையைத் தடவிப்பார்த்தார் புலவர்.

புலவர் அதன் வடிவமைப்பைத் தான் தடவிப்பார்க்கிறார் என்று நினைத்த அரசர் புலவரிடம்,

புலவரே! அதில் அழகான வடிவமாக பூ இருக்கிறது, மாங்காய் இருக்கிறது என்றார்.

அரசருக்குப் பதிலளித்த புலவர்,

“ஆம் மன்னா பூவும் இருக்கிறது, காயும் இருக்கிறது அதில் பிஞ்சும் இருக்கிறது” என்றாராம்.

(பிஞ்சு என்று புலவர் மாம்பிஞ்சைக் குறிப்பது போல பொன்னாடையின் கிழிந்ததன்மையைச் சுட்டியதால் தன் தவறை உணர்ந்தார் அரசர்.)


-------------------------------------------------------------------------------------

 பெர்னாட்சா – இன்று நான் பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். நீங்களும் வருகைதாருங்கள் உங்கள் நண்பர்களுடன், “ அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்“

சர்ச்சில் – இன்று முக்கியமான நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்துகொள்ளமுடியாது. அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். “அப்படி ஏதாவதொன்று நடந்தால்“


-------------------------------------------------------------------------------------

நூறு ஆயிரமான கதை


வள்ளலிடம் சென்ற புலவர் நூறு ரூபாய் கேட்டார். இருங்கள் தருகிறேன் என்று தன் வீட்டினுள் சென்றுதிரும்பிய வள்ளல் புலவரிடம் நூறு ரூபாய் கொடுத்தார். அதனை வாங்க மறுத்த புலவர்..

புலவர் - என்ன ஐயா நீங்கள் இருநூறு ரூபாய் தருகிறேன் என்று சொல்லி நூறு ரூபாய் தானே தருகிறீர்கள்?
வள்ளல் – நான் எப்போது புலவரே இருநூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன்?
புலவர் – முன்னூறு ரூபாய் தருகிறேன் என்று தாங்கள் தானே சொன்னீர்கள்?
வள்ளல் – நான் எப்போது சொன்னேன். (மனதுக்குள் இவர் ஏமாற்றுக்காரராக இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டார்)

புலவர் – நானூறு ரூபாய் தருகிறேன் என்று தாங்கள் தானே சொன்னீர்கள்?
வள்ளல் – புலவரே ஏன் இப்படி பொய்பேசுகிறீர்கள். நான் எப்போது இப்படியெல்லாம் சொன்னேன்?

புலவர் – வள்ளளே நான் நூறு ரூபாய் தான் கேட்டேன்..

தாங்களும் இரு தருகிறேன் என்று சென்றீர்கள். “ இரு“ என்பதை சேர்த்துக்கொண்டு இருநூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன்.

முன்பு நூறு ரூபாய் தருகிறேன் என்றீர்கள் அல்லவா.. அந்த முன் என்பதையும் நூறு என்பதையும் சேர்த்து முந்நூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன்.

நான் நூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னீர்கள் அல்லவா.. அதனால் “நான்“ நூறு என்பதைச் சேர்த்து நானூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னதாகச் சொன்னேன் என்ற விளக்கம் சொல்லவும் புலவரின் தமிழ் நயத்தைவியந்த வள்ளல் நூறு ரூபாய் கேட்டுவந்த புலவருக்கு மகிழ்வோடு ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார்.

15 கருத்துகள்:

  1.  பெர்னாட்சா – இன்று நான் பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். நீங்களும் வருகைதாருங்கள் உங்கள் நண்பர்களுடன், “ அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்“

    சர்ச்சில் – இன்று முக்கியமான நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்துகொள்ளமுடியாது. அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். “அப்படி ஏதாவதொன்று நடந்தால்“



    ...... :-)

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே நல்லாயிருக்கு முனைவரே..!
    அண்ணாவின் கூற்று அருமை.

    பதிலளிநீக்கு
  3. சுவையோடு மெருகும் கலந்திருக்கு குணா...அருமை

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு நண்பரே . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. @dheva வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தேவா.

    பதிலளிநீக்கு
  6. ஒருநூறு நானூறு ஆனது அருமை. :-)

    பதிலளிநீக்கு