வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

கனவில் பேசிய நனவிலிமனம்.



விருப்பத்தின் விளைவே கனவு! அச்சத்தின் விளைவே கனவு! என அறிவியல் அடிப்படையில் உளவியல் அடிப்படையில் கனவு பற்றி பல்வேறு செய்திகளை அறிந்தாலும் ஒவ்வொருவருக்கும் தோன்றும் ஆசை எனக்கும் தோன்றுவதுண்டு.

விட்டுவிட்டுத் தோன்றும் கனவு, முழுமையாகத் தோன்றும் கனவு என்று இக்கனவுகள் கண்விழித்ததும் மறந்துபோய்விடும். எவ்வளவு ஆழமாகச் சிந்தித்தாலும் நினைவுக்கு வருவதில்லை. இன்னும் கேட்டால் உளவியலாளர்கள் விழித்ததும் நினைவுக்கு வராதது மட்டுமே ஆழ்மனதில் தோன்றும் கனவுகள் என்றும். நினைவுக்கு வந்தால் அக்கனவு மேல்மட்ட மனதில் தோன்றும் கற்பனையே என்று விளக்கம் தருவார்கள்.

நனவிலி மனம்..

நேற்று இரவு நல்ல தூக்கத்தில் இருந்தது போது உண்மையிலேயே நடப்பது போல ஒரு கனவு வந்தது….

என் நண்பனுடைய எதிரி ஒருவன் இறந்துவிட்டான். இறந்தாலும் ஆவியாக வந்த என் நண்பனுடைய தூக்கத்தைக் கூட கலைத்துவிட்டு துன்பப்படுத்திக் கொண்டிருந்தான்.

என் நண்பனின் சராசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டு எப்போதும் ஒருவித பயத்துடனே காணப்பட்டான். அடிக்கடி என்னிடம் வந்து இது குறித்து புலம்பினான்.

ஒருநாள் இரவு பேருந்துக்காக நானும் என் நண்பனும் காத்திருந்தோம் என் நண்பன் மனநிலை பாதிக்கப்பட்டவன் போல……………

டேய் நான் என்னடா பாவம் செஞ்சேன்?
என்னை ஏன்டா ஆவியா வந்து இப்படி படுத்தற?
முதலில் கனவில் மட்டும் வந்து தூக்கத்த பறிச்ச?
அடுத்து உருவமாக வந்து பயமுறுத்துன!
அடுத்து எல்லா ஒலியிலும் உன் குரல் மட்டும் கேட்டது!
இப்ப நேரிலே வந்துட்டியே!
என்னை விட்டுடுடா…………..
நீ உயிரோட இருக்கும் போது கூட உனக்கு இவ்வளவு சக்தி இல்லையே செத்துப் போய் ஆவியானா இவ்வளவு சக்தி கிடைக்குமா….

என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

இதைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்த என் நனவிலி மனது என்னிடம் சொல்லியது..


நான் ஆரம்பத்திலே உன் நண்பன்ட சொன்னேன்..

எல்லாம் உன் மனக் கற்பனை தான்..
பேய், பூதம், ஆவின்னெல்லாம் எதுவுமே இல்லை…….
அவனோட கற்பனைக்கு நீரூற்றி வளர்த்தது போல அதையே சிந்தித்துக்கொண்டிருந்தான். இப்போது மனநிலை பாதிக்கப்பட்டவன் போல புலம்புகிறான் என்று.!


அவ்வளவு தான் தூக்கத்துடன் கனவும் கலைந்தது.
ஏனோ தெரியவில்லை இந்த கனவு, விழித்தவுடன் கொஞ்சம் கொஞ்சம் நினைவிருந்தது. பூக்களை மாலையாகத் தொடுப்பது போல ஒவ்வொரு காட்சியாகச் சேர்த்து என் கனவை முழுமைப்படுத்தினேன்..

இயல்பாகவே பகுத்தறிவுவாதியான நான் கனவிலும் பகுத்தறிவுவாத சிந்தனையோடு இருப்பது பெருமிதம் கொள்வதாக இருந்தது.

இந்த கனவு என் மனதின் எந்தப் பகுதியிலிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் தூக்கத்தில் நனவிலி மனதிலிருந்து வந்தது என்பது மட்டும் எனக்குத் தெரியும். இந்தக் கனவு எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்தியது…………………



ஒருவன் மிகவும் பயந்தவனாம். அவனுக்கு பேயென்றால் ரொம்பவும் பயமாம். பக்கத்து ஊருக்குச் செல்லும் வழியில் சுடுகாடு இருப்பதால் அவ்வழியே செல்வதற்கு அஞ்சிக் கொண்டே இருந்தானாம். அவனுக்கு அவனுடைய அப்பா எவ்வளவு சொல்லியும் அவனுடைய அச்சம் போகவே இல்லையாம்.

ஒருநாள் அவனுடைய அச்சத்தை எப்படியாவது போக்கிவிடவேண்டும் என்று தன் மகனை அழைத்துக்கொண்டு ஒரு மந்திரவாதியிடம் சென்று தாயத்து ஒன்று வாங்கி அவன் கையில் கட்டினாராம்.

“இந்தத்த தாயத்தைகட்டிக் கொண்டு நடுஇரவு 12 மணிக்குக் கூட நீ சுடுகாட்டுக்குப் போகலாம. எந்தப் பேயும் உன் அருகில் வருவதற்கே அஞ்சும்“

என்றாராம் மந்திரவாதி. இவனும் புதுவிதமான துனிச்சலுடன் சுடுகாட்டை கடந்து பார்க்கலாம் என்று தாயத்தோடு உயிரையும் கையில் பிடித்துக்கொண்டு சுடுகாட்டு வழியே வந்தானாம்…


“எந்தப் பேயும் தன்னைப் பின்தொடரவில்லை என்பதை உணரத்தொடங்கினான்………

இப்போது இவன் மனம் முன்பைவிட அதிகமா அச்சம்கொள்ள ஆரம்பித்துவிட்டது………..

தாயத்தைக் அவிழ்த்து வீசி எறிந்துவிட்டுத் தலைதெறிக்க ஓடத்தொடங்கினான்.“

தந்தை கேட்டார் என்ன நடந்தது என்று….

அப்பா நான் தாயத்தைக் கட்டிக் கொண்டு சுடுகாட்டு வழியே போனேன்.. எந்தப் பேயும் என்னைப் பின்தொடரவே இல்லை…!!

சரி அப்பொழுது ஏன் இவ்வளவு அச்சத்துடன் ஓடிவருகிறாய்..??

“நான் இவ்வளவு நாள் அஞ்சிய பேய் கூட என் அருகில் வர அஞ்சுகிறது என்றால் இந்த தாயத்துதான் பேய்களுக்கெல்லம் பெரிய பேய்ய்ய்ய்ய்ய்ய்!“

என்றானாம்.

தன் மகனுக்குப் பேய் இல்லை என்பதை எப்படிப் புரியவைப்பது என்று தெரியாமல் தலையில் கைவைத்துக் கொண்டாரார் தந்தை.!

14 கருத்துகள்:

  1. அருமையான பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கருத்தும் கதையும் நன்றாக இருந்தது குணா..படிக்கும் போதே நானும் கனவுக்குள் சென்றுவிட்டேன்.....

    பதிலளிநீக்கு
  3. அடி மனதில் ஏதோ நண்பன் பற்றிய ஒரு பயமோ அவர் பாவமோன்னு ஒரு நினைவோ உங்களிடம் இருக்கலாம்.அதான் கனவாய் வந்திருக்குமோ !

    பதிலளிநீக்கு
  4. தாயத்து தான் பெரிய பேய்..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... திருத்தவே முடியாதுங்க.... நல்ல கதை!

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கனவில் மட்டும் பகுத்தறிவல்ல...
    தாயத்து கதையிலும் தான்...
    இன்னும் திருந்தாத சனம் நிறைய இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. ஃபிராய்டின் தத்துவங்கள்..இது குணாவின் தத்துவங்கள் நல்ல பதிவு குணா..

    பதிலளிநீக்கு
  7. ஹஹ்ஹா..படித்து முடித்ததும் சிரித்தேன்..
    பாரதி பாடினானே அது ஞாபகம் வந்தது..

    “ நெஞ்சு பொறுக்குதிலையே..
    இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால்.....”

    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு
  8. @ஆதிரா வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆதிரா.

    பதிலளிநீக்கு
  9. @ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி அஞ்சி அஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே..

    பதிலளிநீக்கு