வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 16 ஜூன், 2012

பொய் சொல்லும் காதுகள்

                   நம்மிடமே இருந்தாலும் சிலநேரங்களில் நம் புலன்கள் நமக்கு எதிராகவே செயல்படுகின்றன. மெய், வாய், கண், செவி, மூக்கு என ஒவ்வொரு புலன்களும் நமக்கு எதிராக எப்போதெல்லாம் செயல்படுகின்றன என்பதைக் கொஞ்சம் உற்றுநோக்கிப் பார்த்தால்.

  • உடல்நிலை பாதித்தல்
  • மனநிலை பாதித்தல் 
என்னும் இருநிலைகளை நாம் அடையாளம் காணமுடியும். இன்று ஒரு அகப்பாடலைக் காண இருக்கிறோம். இதில் தலைவியின் காதுகள் அவளிடம் பொய் சொல்கின்றன. இது உடல்நிலை பாதிப்பா? மனநிலை பாதிப்பா? என்று பார்க்கலாம் வாங்க..


  • காது பேசுமா?
  • பேசினால் பொய்பேசுமா? 

என்று தோன்றுகிறதா? பாடலைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்.


                    திருமண நாள் குறிக்கப்பட்ட இடைப்பட்ட நாளில் தலைவனின் நினைவாகவே வாடியிருக்கிறாள் தலைவி. அவளிடம் உன்னால் அவன் நினைவைத் தாங்கிக்கொள்ளமுடியுமா? என்று கேட்கிறாள் தோழி. அதற்குத் தலைவி பதிலளிப்பதாக இப்பாடல் அமைகிறது.

                    நள்ளிரவுப் பொழுதில் பனைமரத்தில் கட்டப்பட்ட கூட்டில் தம் அருகில் ஆண்அன்றில்பறவை இருந்தாலும் பெண் அன்றில் ஆண்அன்றிலை எண்ணி ஒலி எழுப்பும். அப்போது ஊர்மன்றத்தைப் பிளந்து கொண்டு செல்வதுபோன்ற பேரொலியுடன் தலைவனின் நெடிய தேர் வரவில்லை என்றாலும் வருவதுபோலவே என் காதில் ஒலிக்கிறது அதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன் என்கிறாள் தலைவி.

பாடல் இதுதான்.


முழவு முதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக்

கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவி முதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே.


குறுந்தொகை 301, 
குன்றியனார், 
இப்பாடலின் ஆங்கில வடிவம்...


My friend! In the middle of the night

my eyes have abandoned  sleep,
and even though I know that he isn’t coming
I feel I hear his tall chariots
with many bells, splitting the earth
and arriving in our town’s common grounds
as the black-legged anril bird
with her first set of eggs
in her nest woven
with small twigs from the luxuriant fronds
of the palm trees with drum-like trunks
calls out in pain for her loving mate.              

பாடலின் அழகுக்கு மேலும் அழகுதரும் கூறுகள்

  • ஒரே கூட்டில் வாழ்ந்தாலும் உடனிருக்கும் தம் துணையைப் பிரிந்ததாக எண்ணி அன்றில் பறவை வருந்தும் என்ற புலவரின் கூற்று அஃறிணை உயிரினங்களின் காதலுக்குத் தக்க சான்றாக அமைகிறது.
  • தலைவனின் தேர் வரவில்லை என்றாலும் பேரொலியுடன் விரைந்து வருவதுபோல ஓசை என்காதுகளில் ஒலிக்கும் என்ற தலைவியின் நினைவு தலைவன் மீது தலைவி கொண்ட பெருங்காதலுக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
தொடர்புடைய இடுகைகள்

17 கருத்துகள்:

  1. வணக்கம் முனைவரே,
    புலவர்களின் கற்பனா சக்திக்கு
    அளவே இல்லை தான்...
    காதுகள் இங்கே பேசுகின்றன
    அதுவும் பொய் பேசுகின்றன..
    ஆனாலும் அந்தப் பொய்களில்
    ஒரு இனிமை இருக்கத்தான் செய்கிறது...

    "இருசக்கர வாகனத்தில் வெளியே சென்று
    இருக்கும் நேரத்தில்..... சாலையில் தலைவன் கொண்ட
    அதே இருசக்கர வாகனம் எது சென்றாலும் அதன்
    சத்தத்தை கேட்டு .. வந்துவிட்டார் என வாசலுக்கு
    வரும் வேலை போல..."

    இலக்கிய நயம் மனம் நிறைத்தது முனைவரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்ககாலத்தை இக்காலத்தோடு
      தாங்கள் ஒப்பிட்டு உணர்ந்ததையும்,
      அதை உரைத்தமையையும்
      எண்ணி மகிழ்ந்தேன் அன்பரே.

      நீக்கு
  2. ம்ம்ம் ரெம்ப அருமை முனைவரே

    பதிலளிநீக்கு
  3. இந்த template நல்லா இருக்கு முனைவர் சார்.!

    பதிலளிநீக்கு
  4. பறவை ஆனாலும பாவை ஆனாலும் துயரம் ஒன்றுதானே

    அருமை முனைவரே!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் ஆமாம்..

    வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி புலவரே

    பதிலளிநீக்கு