வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 5 மே, 2014

தமிழர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!


* இந்தியாவில் தோன்றிய மிகத் தொன்மையான மொழி தமிழ்
* திராவிட மொழிகளிலேயே மிகப் பழமையான வரி விடிவ எழுத்தைக் கொண்ட மொழி தமிழ்.
* திராவிட மொழி ஆய்வுக்குப் பெரிதும் துணைபுரியும் மொழி தமிழ்
* தமிழில் 3 இனங்கள் உண்டு. அவை முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகும். தமிழ் என்ற சொல்லிலே 3 இனத்திற்கும் பிரதிநித்துவம் கிடைக்கிறபடியாக அமைந்துள்ளதும் பெருமையே.
* தெலுங்கரும் கன்னடியரும் தமிழை அரவம் என்றும் தமிழரை அரவாலு என்றும் கூறுவர்.

* தமிழ் வேர்ச்சொல் ஆய்வில் மிகவும் புகழ்பெற்றவர் தேவநேயப் பாவாணர்.
* தமிழ் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா, பிஜிட்தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது.
* இந்தியாவுக்கு வெளியே ஆட்சிமொழியாக அறவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.
* முதலில் அச்சேறிய இந்திய மொழி தமிழ்
* திராவிட மொழிகள் குறித்தும் மிகுதியாக ஆய்வு செய்த பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
* தமிழில் திருக்குறள் எனும் உயரிய நூல் தோன்றி 2000 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அப்படியானால் இம்மொழி தோன்றி குறைந்தது 10,000 ஆண்டுகளாகியிருக்க வேண்டும் என்பது மொழி ஆய்வாளர்களின் கருத்து.
* தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். அவை 3 அதிகாரம், 27 இயல்கள், 1610 நூற்பாக்களும், தமிழரின் வாழ்வியலக்கணமான திருக்குறள் 3 பால்கள், 133 அதிகாரங்கள்,1330 குறள்களையும், சிலப்பதிகாரம் 3 காண்டம், 30 காதைகள் 5001 வரிகளையும், மணிமேகலை 30 காதைகள், 4755 வரிகளையும், சீவகசிந்தாமணி 13 இலம்பகங்கள், 3145 பாடல்கள். பெரிய புராணம் 2 காண்டங்கள், 13 சருக்கங்கையும், 4286 பாடல்களையும், கம்பராமாயணம் 6 காண்டங்கள், 118 படலங்கள், 10589 பாடல்களையும், நல்லாப்பிள்ளை பாரதம் 18 பருவங்கள், 11000 பாடல்களையும். கந்தபுராணம் 6 காண்டம், 135 படலங்கள், 10345 பாடல்களையும், திருவிளையாடற்புராணம் 3 காண்டங்கள், 36 படலங்கள், 3615 பாடல்களையும். சீறாப்புராணம் 3 காண்டங்கள், 92 படலங்கள், 5027 பாடல்களையும், இரட்சணிய யாத்திரிகம் 5 பருவங்கள், 47 படலங்கள்,3776 பாடல்களையும், இராவண காவியம் 5 காண்டம், 57 படலங்கள், 3106 விருத்தங்களையும், ஏசு காவியம் 5 பாகம், 149 அதிகாரம், 810 விருத்தங்கள், 2346 அகவலடிகளையும் கொண்டுள்ளது.
* தமிழில் உள்ளவைகள் எல்லாம் அளவில் பெரியவை மட்டுமல்ல தன்மையிலும் பெருமைக்குரியனவாக உள்ளதையே தமிழின் தனிச்சிறப்பு எனலாம்.
* தமிழ் மொழி பக்தி மொழி, மனித இரக்க உணர்வைப் பெருமிதமாகப் போற்றும் அன்புமொழி. உலகில் வேறு  எந்த மொழியிலும் காணக்கிடைக்காத அளவு
பக்திப்பாசுரங்கள் நிரம்பிய மொழி தமிழ்.
* சைவம் பன்னிருதிருமுறையையும், வைணவம் நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தையும் வழிபடும் மந்திரமாகப் போற்றி வணங்கிவருகின்றன. இது நெடுங்காலமாகப்
பழக்கத்திலிருந்து வரும் தமிழர் வழிபாடு.
* தேவாரம்,திருவாசகம்,திருப்பாவை,திருவெம்பாவை, திருமொழி, திருவாய்மொழி, திருமந்திரம், திருவருட்பா, திருப்புகழ், தேசோமயானந்தம், சருவசமயக்கீர்த்தனைகள்,
இசுலாமியத் தாயுமானவரான குணங்குடி மஸ்தானின் பராபரக் கண்ணிகள், இத்தகைய தெய்வப்புகழ்மொழிகள் உலகில் வேறு எந்தமொழியிலும் இல்லை என்பதே தமிழின் தனிசிறப்பு.
* வைணவ சமய ஆச்சாரியர்களாகிய ஆழ்வார்கள் பலரும் தமிழைத் "தமிழ்' எனக் கூறாது, பல்வேறு அடைமொழிகளிட்டு "விட்டுச் சித்தன் விரித்த தமிழ், தேனாரின் செய்தமிழ், சொல்லில் பொலிந்த தமிழ், சீர்மலி செந்தமிழ், திருவரங்கத் தமிழ், கோதைவாய்த் தமிழ், நடைவிளங்கு தமிழ், நல்லியல் இன்தமிழ், சங்கத் தமிழ், சங்கமுகத் தமிழ், சங்கமலி தமிழ், நா மருவு தமிழ், பாவளருந் தமிழ், இன்தமிழ், வியன்தமிழ், தூயதமிழ், நற்றமிழ், நல்லிசைத் தமிழ், ஒண்தமிழ், தண்தமிழ், வண்தமிழ், இருந்தமிழ்' எனப் பலவாறாகப் போற்றியிருக்கின்றனர். இவை அனைத்தும் தமிழின் பெயரைச் சிறப்பிப்பனவாகும்.
* நமது நாட்டிற்குச் "செந்தமிழ் நாடு' என்ற பெயர் வைத்தவர் தேசியகவி சுப்பிரமணிய பாரதியார். இதில் நாட்டிற்கு அடைமொழியாக நமது மொழியும், மொழிக்கு அடைமொழியாகச் "செம்மை'யும் அமைந்திருப்பது பெரிதும் வியப்பிற்குரியதாகும்.
* "தமிழுக்கும் அமுதென்று பேர்'', தமிழ், தமிழ் எனக் கூற அது "அமிழ்ந்து' என ஒலிக்கும் எனக் கூறி மகிழ்ந்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். அந்த அளவோடு அவர் விட்டுவிடவில்லை. ""தமிழுக்கும் அமுதென்று பேர்; அது எங்கள் உயிருக்கு நேர்'' எனவும் கூறி, உயிருக்கு ஒப்பாகத் தமிழைக் கூறி உயிர்விட்ட கவிஞர் அவர். இதுகாறுங் கூறியவற்றால், தமிழின் பெயர்ச் சிறப்பை ஒருவாறு அறியலாம்.
* "தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை ""இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை மெய்ப்பிக்கும்.
* "பசி இல்லாவிடில் இந்தப் பாலையாவது குடியுங்கள்'' என்ற தன் மனைவியை நோக்கிப் புலவர் ஒட்டக்கூத்தர் கூறியது இது:
 ""போடி பைத்தியக்காரி! இன்று அரசவையில் புகழேந்தி அரங்கேற்றிய நளவெண்பாவில் இரண்டொன்றைப் பிழிந்து கொடுத்தாலாவது அதன் சுவைக்காக உண்ணலாம். உன் பாலில் என்னடி, சுவையாயிருக்கப் போகிறது?'' என்னே தமிழின் சுவை!
 ""அறம் வைத்துப் பாடியுள்ள இக் கலம்பகத்தைக் கேளாதீர்கள், கேட்டால் தங்களின் உயிரே போய்விடும்'' எனப் பாடிய புலவனே கூறித் தடுத்தபோதும், அதனைக் கேட்க விரும்பிய நந்திவர்மன் கூறியது என்ன தெரியுமா?
 ""தமிழைச் சுவைப்பதன் மூலம் சாவே வரினும் அதனை மகிழ்வோடு வரவேற்பேன்'' என்பதே. என்னே தமிழின் இனிமை! - இவ்வாறு தமிழின் சிறப்புகளை அடிக்கிக் கொண்டே பேகலாம்.
மூன்று சங்கங்கள்
* மூவேந்தரும் தமிழ் வளர்த்தனர் என்றாலும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியருக்கே உரியது.
* சங்கம் என்ற சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சங்கம்  என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் மணிமேகலை நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார்.
* மூன்று சங்கங்கள் பற்றிய விரிவான செய்தியை அல்லது வரலாற்றை முதலில் குறிப்பிட்டவர் இறையனார் அகப்பொருள் உரையின் ஆசிரியர் நக்கீரர்.
* முச்சங்கத்திற்கும் உரிய நூல் அகத்தியம்.
* முத்தமிழ் இலக்கண நூல் அகத்தியம்.
* இயற்றமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம்.
* இசைத்தமிழ் இல்க்கண நூல் முதுநாரை. நாடகத் தமிழ் இலக்கண நூல் இந்திரகாளியம் மற்றும் பஞ்சமரபு ஆகியன.
* புலவர்களின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் அகத்தியர். அகத்தியரின் மாணவர்கள் பன்னிருவர்.
* அகத்தியரின் 12 மாணவர்களும் சேர்ந்து எழுதிய நூல் பன்னிரு படலம்.
* அகத்தியர் எழுதிய நூல் அகத்தியம் தென்தமிழ் மதுரை என்று குறிப்பிடுவது மணிமேகலை.
* சங்கத் தமிழ் மூன்றும் தா என்பது ஒளவையாரின் தனிப்பாடல் ஆகும்.
* முச்சங்கத்தையும் மறுத்தவர்ள் பி.டி.சீனிவாச ஐயங்கார், கே.என். சிவராஜ பிள்ளை, கா.மச்சிவாய முதலியார் ஆகியோர்.
* மூன்று சங்கங்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா.அப்பாத்துரை, தேவநேயப் பாவணர் ஆகியோர்.
முதற்சங்கம்
* முதற்சங்கம் இருந்த இடம் தெனமதுரை. முதற்சங்கத்தின் காலம் சுமார் 4440 ஆண்டுகள். முதற்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 549.
* முதற்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 4449.
* முதற்சங்கம் சார்ந்த நூல்கள் அகத்தியம், பெரும் பாரிபாடல், முதுநாரை, முதுகுருகு ஆகியன.
* முதற்சங்கம் சார்ந்த புலவர்கள் அகத்தியர், நிதியின் கிழவன் ஆகியோர்.
இடைச்சங்கம்
* இடைச்சங்கம் இருந்த இடம் கபாடாபுரம் (குமரி ஆற்றங்கரை). இடைச்சங்கத்தின் காலம் சுமார் 3700 ஆண்டுகள். இடைச்சங்கப் புலவர்களின் எண்ணிக்கை 3700.
* இடைச்சங்க நூல்கள் தொல்காப்பியம். மாபுராணம், பூதபுராணம் ஆகியன.
கடைச்சங்கம்
* கடைச்சங்கம் இருந்த இடம் மதுரை (இன்றைய மதுரை). கடைச்சங்கத்தின் காலம் சுமார் 1850 ஆண்டுகள் கடைச்சங்கத்தில் புலவர்கள் 449 பேர்.
* கடைச்சங்கம் சார்ந்த நூல்கள் நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றினை, புறநானூறு, ஐந்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல், கூத்து, வரி ஆகியன.
* சிறுமேதாவியார், அறிவுடையார், இளந்திருமாறன், நல்லந்துவனார், மருதனிள நாகனார், நக்கீரனார் ஆகியோர் கடைச்சங்க காலப் புலவர்கள்.
இறையானர் களவியல் உரை
* நூலின் பெயர் அகப்பொருள் அல்லது களவியல் ஆகும். இதனை இயற்றியவர் இறையனார் அல்லது சிவன். இதற்கு உரை எழுதியவர் நக்கீரர்.
* உரைச் சிறப்பின் காரணமாக இந்நூலே இறையனார் களவியல் உரை என்று வழங்கப்படுகிறது.
* தமிழில் தோன்றிய உரையாசிரியர் நக்கீரர். களவியலுக்கு நக்கீரர் செய்த உரையே சிறந்தது என்பவர்.

சங்க இலக்கியச் செய்திகள்
* வாத்யாயனார் இயற்றிய நூல் காமசூத்திரம். காமசூத்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் அதிவீரராம பாண்டியன் அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் கொக்கோகம்.
* திணை இலக்கியம் என்று அழைக்கப்படுவது சங்க இலக்கியம்.
* சங்க இலக்கியத்தில் அகப்பாடல்கள் அனைத்தும் பாத்திரக் குற்றுகள் ஆகும். புறப்பாடல்கள் அனாத்தும் புலவர் கூற்றுகள் ஆகும்.
* எட்டுத்தொகை நூல்கள் என்பவை நற்றினை, குறுந்தொகை, ஒங்குறுனூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் ஆகியன.
* எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் ஐந்து, புற நூல்கள் இரண்டு. அகமும் புறமும் கலந்த நூல் ஒன்று (பரிபாடல்).
* எட்டுத் தொகை நூல்களில் காலத்தால் முந்தியது புறநானூறு.
* அகநானூறு அகம் என்றும், அகப்பாட்டு என்றும், நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.
* புறநானூறு புறம் என்றும், புறப்பாட்டு என்றும், புறம்பு நானூறு என்றும் குறிப்பிடப்படுகிறது.
நற்றிணை
* இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. நற்றினையைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
* நற்றிணை நூலைத் தொகுப்பித்த அரசன் பாண்டியன் மாறன் வழுதி.
* தொண்டி என்பது சேர நாட்டுத் துறைமுகம், கொற்கை என்பது பாண்டிய நாட்டுத் துறைமுகம், மாந்தை என்பது சேர நாட்டுக் கடற்கரை ஊர் என்பது போன்ற செய்திகள்
நற்றிணையிலிருந்து அறியப்படுகின்றன.
குறுந்தொகை
* குறுந்தொகை இது ஒரு அகநூல். 400 பாடல்கள் கொண்டது. குறுந்தொகையைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
* குறுந்தொகையின் கடவுள் வாழ்த்து முருகனைப் பற்றியதாகும்.
குறுந்தொகையின் மூலம் அறியப்படும் செய்திகள்:
* நன்னன் என்பவன் பெண் கொலை புரிந்த மன்னன். அதியமானின் தலைநகரம் தகடூர்(தர்மபுரி).
* கொல்லிமலைத் தலைவன் வல்வில் ஓரி. பரம்பு மலை தலைவன் பாரி.
* திருக்கோவிலூரையும், முள்ளூரையும் ஆட்சி செய்த மன்னன் மலையாமான் திருமுடிக்காரி.
* கரிகாலனுக்கு திருமாவளவன் என்ற பெயரும் உண்டு.
* கரிகாலனின் மகள் ஆதிமந்தி.
* யாய் என்றால் என் தாய் என்று பொருள், ஞாய் என்றால் உன் தாய் என்று பொருள், தாய் என்றால் அவன் தாய் என்று பொருள்.
* எந்தை என்றால் எம் தந்தை என்று பொருள், நுந்தை என்றால் உம் தந்தை என்று பொருள், தந்தை என்றால் அவர்கள் தந்தை என்று பொருள்.
* அவ்வை என்றால் எம் அக்காள் என்று பொருள், நுவ்வை என்றால் உம் அக்காள் என்று பொருள், தவ்வை அவர்கள் அக்கா என்று பொருள்.
* கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் இறையனார். (குறுந்தொகை)
ஐங்குறுநூறு
* இது ஒரு அகநூல். 500 பாடல்கள் கொண்டது. திணைக்கு நூறு பாடல்கள் வீதம் ஐந்து திணைகளின் கீழ் அமையப் பெற்றது. பாடிய புலவர்கள் ஐவர்.
* ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் கூடலூர்கிழார். தொகுப்பித்த அரசன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
* ஐங்குறுநூற்றை முதன் முதலாக தொகுப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.
* சங்க கால மக்கள் பகல் 12 மணியிலிருந்து நாளைக் கணக்கிட்டனர் என்னும் செய்தியை ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது.
* ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நல்லது என்ற செய்தியையும், பெண்களுக்கு இடக்கண் துடித்தால் மல்லது என்ற செய்தியையும் இந்நூலில்ருந்து அறிய முடிகிறது.
பதிற்றுப்பத்து
* சேர அரசர்கள் 10 பேர் பற்றஇ 10 புலவர்கள் தலா பத்து பாடல்கள் வீதம் பாடிய தொகையே பதிற்றுப்பத்து.
* முதல் பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. 80 பாடல்களே கிடைத்துள்ளன. முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.
பதிற்றுப்பத்தின் மூலம் அறியப்படும் செய்திகள்
* கடம்பர்கள் என்பவர்கள் சேர நாட்டு கடற்கொள்ளையர்கள் ஆவர்.
* அதியமானை வென்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை அதியமானுக்கு அதிகன் என்ற பெயரும் உண்டு.
* கிடுகு என்றால் கேடயம் என்று பொருள் சேர நாட்டின் துறைமுகம் தொண்டி.
பரிபாடல்
* பரிபாடல் என்பது தொல்காப்பியர் கூறும் பாவகைகலில் ஒன்று. எனவே பாவகையால் பெயர் பெற்ற நூல் பரிபாடல் ஆகும்.
* எட்டுத் தொகை நூல்களிலேயே அகத்திற்கும், புறத்திற்கும் உரிய நூல் பரிபாடல்.
* பொருட்கலவை நூல் என்றும் பரிபாடல் குறிப்பிடப்படுகிறது.
* தமிழின் முதல் இசைப்பாடல் பரிபாடல்.
* எட்டுத் தொகை நூல்களுள் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறும் நூல் பரிபாடல்.
* எட்டுத் தொகை நூல்களில் பாண்டியர்களைப் பற்றி மட்டும் கூறும் நூல்கள் இரண்டு 1. பரிபாடல் 2. கலித்தொகை
* பாண்டிய நாட்டைச் சிறப்பிக்கவே பாடப்பட்ட நூல் பரிபாடல். பரிபாடல் என்ற நூல் 70 பாடல்களைக் கொண்டதாக உள்ளது.
* பரிபாடலைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. பரிபாடலுக்கு உரை எழுதியவர் பரிமேலழகர்.
* பரிபாடலை முதலில் பதிப்பித்தவர் உ.வே.சாமிநாதையர்.
பரிபாடல் மூலம் அறியப்படும் செய்திகள்
* அம்பா ஆடல் என்பது தை நீராடல் ஆகும். தை நீராடல் தற்போது மார்கழி நோன்பாக மாறியுள்ளது.
* நெய்தல், குழலை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்பவை நீண்ட காலங்களைக் குறிக்கும் பேரெண்களாகும்.
* உலகின் தோற்றம் குறித்துக் கூறும் நூல் பரிபாடல்.
கலித்தொகை
* இது ஒரு அகநூல். கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல் கலித்தொகை. மொத்தம் 150 பாடல்கள் கொண்டது.
* கலித்தொகை ஐந்திணை நூலாகும். இதனைத் தொகுத்தவர் நல்லந்துவனார்.
* கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது.
* ஏறு தழுவுதல் பற்றிக் கூறும் நூல் கலித்தொகை. ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) என்பது ஒரு வீர விளையாட்டு.
* பெருந்திணைப் பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் கலித்தொகை ஆகும்.
* நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார், குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி, பசு மேய்ப்பவர் கோவினத்தார், நல்லினத்தார் என்று
குறிப்பிடப்பட்ட செய்தி ஆகியவற்றை கலித்தொகை குறிப்பிடுகிறது.
அகநானூறு
* இது ஒரு அக நூல் ஆகும். ஆசிரியப்பாவால் ஆன 400 பாடல்கள் கொண்டது.
* அகநானூற்றைத் தொகுத்தவர் உருத்திர சன்மனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி என்பவர் ஆவார்.
* அகநானூறு களிற்றியானை நிறை, மணிமிடைப் பவளம், நித்திலக்கோவை என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
* அகநானூறு நெடுந்தொகை என்றும் குறிப்பிடப்படுகிறது.
* குடவோலை முறைச் தேர்தல் குறித்து கூறும் நூல் அகநானூறு.
* சங்க இலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாகக் குறிப்பிடும் அக நூல் அகநானூறு.
புறநானூறு
* இதுவொரு புற நூல். அகவற்பாவால் ஆன 400 பாடல்கள் கொண்டது.
* புறநானூற்றைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
* புறம், புறப்பாட்டு, புறம்பு, தமிழ்க் கருவூலம் என வேறு பெயர்களைக் கொண்டு புறநானூறு வழஹ்கப்படுகிறது.
* அறம், பொருள், வீடு என்ற மூன்றைப் பற்றியும் பாடும் நூல் புறநானூறு ஆகும்.
* சேரன் போந்தை (பனை) மலரையும், சோழன் அத்தி மலரையும், பாண்டியன் வேம்பு மலரையும் அடையாள மலராகக் கொண்டிருந்தனர் என்று புறநானூறு இயம்புகிறது.
* சேரன் வில் கொடியையும், சோழன் புலிக்கொடியையும், பாண்டியன் மீன் கொடியையும் கொண்டிருந்தனர் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.
* சேரனின் தலைநகரம் வஞ்சி என்றும், சோவனின் தலைநகரம் உறையூர் அல்லது உறந்தை, தஞ்சாவூர் (தஞ்சை) என்றும், பாண்டியனின் தலைநகர் மதுரை என்றும், பல்லவரின் தலைநகர் காஞ்சி என்றும் இது குறிப்பிடுகிறது.
* பாரதப்போரில் சோறு படைத்தவர் உதியஞ்சேரல் என்றும் புறநானூறு குறிப்பிடுகிறது.
* பாரிக்கு உரிய மலை பரம்பு மலை, பேகனுக்கு உரியது பழனிமலை, ஓரிக்கு உரியது கொல்லிமலை, ஆய்க்கு உரியது பொதிகை மலை, அதியனுக்கு உரியது தகடூர், நன்னனுக்கு உரியது நவிரமலை போன்ற செய்திகளையும் புறநானூறு குறிப்பிடுகிறது.
* கபிலரை ஆதரித்தவன் பாரி, ஒளவையாரை ஆதரித்தவன் அதியமான், பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன், மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன், பிசிராந்தையாரிடம் நட்பு கொண்டவன் கோப்பெருஞ்சோழன் போன்ற விவரங்களையும் இது குறிப்பிடுகிறது.
* அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஒளவையார். கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் எயிற்றியனார். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர் கோவூர் கிழார் ஆகிய செய்திகளையும் புறநானூறு மூலம் அறியலாம்.
* யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா போன்ற வரிகள் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று வரிகள்.

18 கருத்துகள்:

  1. அருமையான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  2. சிறந்த ஆய்வுப் பகிர்வு
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொன்றும் சிறப்பான தகவல்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. தமிழின் வரலாற்றைச் சுறுக்கமாகவும் புரியும் படியாகவும்
    அழகாக அடுக்கிக் கொடுத்துள்ளீர்.
    (நான் முதுகலை படிக்கும் பொழுது இப்படி யாராவது கொடுத்திருந்தால் நிறைய மதிப்பெண்கள் வாங்கி இருப்பேன்)

    மிகவும் அருமையான பகிர்வு முனைவர் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  5. அருமையான பதிவு நண்பரே
    முச்சங்கங்கள் என்றுதான் இதுவரை சொல்லி வருகிறோம்
    ஆனால் துடிசைக் கிழார் அ .சிதம்பரனார் அவர்கள், முதன் இடை, கடைச் சங்கங்களுக்கு முன்பும் பின்பும், என பதினான்கு சங்கங்கள் இருந்துள்ளன என்பதை தனது தமிழ்ச் சங்கங்களின் வரலாறு என்னும் நூலில் பதிவு செய்துள்ளார், தென்னிந்திய தமிழ்ச் சங்கப் வெளியீடு
    தமிழன் என்று சொல்வோம் தலை நிமிர்ந்து நிற்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சங்கம் குறித்த கூடுதல் செய்திகளைத் தந்தமைக்கு நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  6. அரிய தகவல்கள். பகிர்விற்கு நன்றி. முகநூலிலும் பகிர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிப்ரியன்.

      நீக்கு
  7. தமிழின் தலையான சிறப்புக்களை பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. தமிழின் சிறப்புகள் விளக்கம் அருமை.. நிறைவான தகவல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பரே.

      நீக்கு
  9. ஐயா நான் மிரண்டு போயிட்டேன் ..அருமை அருமை..நான் தமிழைப் பற்றி சுருக்கமாக தெளிவாகக் கற்றுக்கொண்டேன் ஐயா..

    நன்றி...

    பதிலளிநீக்கு