வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 மார்ச், 2022

நன்றி மறக்கலாமா..


பசுவின் முலையை அறுத்தல், தாலி அணிந்த பெண்ணின் கருவைச் 

சிதைத்தல் சான்றோரை அடித்தல், இவை பாவச் செயல்கள்.

இப் பாவங்களைக் கழுவாய் செய்து போக்கிக்கொள்ளலாம். ஆனால், 

நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக 

பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்கு 

அவற்றின்  விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறம் 

பாடுகிறது.

(எந்நன்றி கொன்றாற்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்)

ஆயிழை கணவ! எம் அரசன் வாழ்க என்று உன்னை நான் பாடாவிட்டால் 

எனக்குப் பொழுது போகாது. நீ செய்திருக்கும் உதவி அத்துணைப் 

பெரியது. புன்செய் நிலத்தில் விளைந்த புறாவின் கருவாகிய முட்டை 

போன்ற வரகினது அரிசியை பால் விட்டு சமைத்த சோற்றில் தேனும் 

கலந்து இளமுயலின்  கொழுத்த சுடப்பட்ட இறைச்சியைத் தின்ற என் 

சுற்றத்தோடு  இலந்தை மரங்கள் நிறைந்த அகன்ற பொது வெளியிடத்தில் 

காலை, மாலை ஆகிய இரு அந்திப் பொழுதிலும் குடும்பத்தாரோடு 

சேர்ந்து உண்ணுமாறு உன் செல்வம் அனைத்தையும் உனக்காக மறைத்து 

வைத்துக்கொள்ளாமல் இனிமையாக பேசி ஏற்றுக்கொள்ளுமாறு 

பாணர்களுக்கு அமலை வெண்சோறு வழங்கியவன் நீ.நான் உனக்கு 

அடைக்கலம்.

இந்த உலகத்தில் சான்றோர் செய்த நன்று ஒன்று இருந்தால், 

வங்கக் கடலிலிருந்து சென்று இமயமலையில் தங்கித் திரும்பி 

இடி முழக்கத்துடன் பொழியும் கீழைக்காற்று மழைத்துளியைக்

காட்டிலும் நீ பல்லாண்டு காலம் வாழ்வாயாக.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்


குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென

நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென

அறம்பாடிற்றே ஆயிழை கணவ

காலை அந்தியும் மாலை அந்தியும்

புறவுக் கருவன்ன புன்புல வரகின்

பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு

இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்

கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி

அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு

அகலாச் செல்வம் முழுவதுஞ் செய்தோன்

எங்கோன் வளவன் வாழ்க என்றுநின்

பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்

படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்

யானோ தஞ்சம் பெருமிவ் வுலகத்துச்

சான்றோர் செய்த நன்றுண் டாயின்

இமயத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்

கொண்டல் மாமழை பொழிந்த

நுண்பல் துளியினும் வாழிய பலவே . 


பாடியவர்: ஆலத்தூர் கிழார்.

பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.

திணை:பாடாண், துறை: இயன்மொழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக