வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 12 ஜனவரி, 2023

திரிகடுகம் - நல்லாதனார்

 


பதினெண் கீழ்க்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 101 வெண்பாக்களால் பாடப்பட்டது. சுக்கு, மிளகு, திப்பிலி எனும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தருவதுபோல ஒவ்வொரு பாடலிலும் மூன்று நற்கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

 

விழுமியம் - சான்றாண்மை

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.   6

 

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும்,

தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும்,

பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

 

வருவாயுள் கால் வழங்கி வாழ்தல், செரு வாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை, எய்தப்

பல நாடி நல்லவை கற்றல், - இம் மூன்றும்

நல மாட்சி நல்லவர் கோள். 21

 

தனக்கு வரும் வருவாய்க்கு ஏற்றபடி அறம் செய்தலும்,

போரில் வெற்றி அடைதலும்,

நல்லவைகளைப் படித்தலும் நல்லவருடைய கொள்கைகள் ஆகும்.

 

உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்

பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச்

சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும்

தூஉயம் என்பார் தொழில்.   27

 

குளித்தபின் உண்ணுவதும்,

பொய் சொல்லாமல் இருத்தலும்,

தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும்,

ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.

 

வெல்வது வேண்டி வெகுண்டு உரைக்கும் நோன்பியும்,

இல்லது காமுற்று இருப்பானும், கல்விச்

செவிக் குற்றம் பார்த்திருப்பானும், - இம் மூவர்

உமிக் குற்றுக் கை வருத்துவார்.    28

 

வெல்ல வேண்டி சினந்து சொல்கின்ற தவம் இல்லாதவனும்,

கிடைத்தற்கரிய பொருளை விரும்புபவனும்,

பிறன் கல்வியில் குற்றத்தைப் பார்ப்பவனும் ஆகிய இம்மூவரும் துன்பத்தையே அடைவர்.

 

பல்லவையுள் நல்லவை கற்றலும், பாத்து உண்டு ஆங்

இல்லறம் முட்டாது இயற்றலும், வல்லிதின்

தாளின் ஒரு பொருள் ஆக்கலும், - இம் மூன்றும்

கேள்வியுள் எல்லாம் தலை. 31

 

நல்லவற்றைக் கற்றலும்,

இல்லாளோடு குறைவின்றி அறம் செய்வதும்,

முயற்சியால் செயற்கரிய செய்கையை முடித்தலும் சிறந்த கல்வியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக