வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 19 மார்ச், 2012

மனசை வாசித்தவள்


மனசை வாசிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.

படித்தாலும், சொன்னாலும்கூட புரியாதவர்கள் பலரிருக்க..

சிலரோ ஒருவரைப் பார்த்தவுடனேயே அவர்களை மதிப்பிட்டுவிடுகிறார்கள்..

இவர்களைப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கும்..

சோதிடக்காரர்கள், விளம்பரக்காரர்கள், ஆன்மீகவாதிகள் எல்லாம் மனிதமனங்களை வாசிப்பதில் வல்லவர்கள்தான்..


இங்கு ஒரு சங்ககாலத் தலைவி என்ன அழகாகத் தலைவனின் மனசை வாசிக்கிறாள் என்று பாருங்கள்..

 


பரந்துபடு கூரெரி கானம் நைப்ப
மரந்தீ உற்ற மகிழ்தலை அம்காட்டு
ஒதுக்கரும் வெஞ்சுரம் இறந்தனர் மற்றவர்
குறிப்பிற் கண்டிசின் யானே நெறிப்பட
வேலும் இலங்கிலை துடைப்ப பலகையும்
பீலி சூட்டி மணியணி பவ்வே
பண்டினும் நனிபல அளிப்ப இனியே
வந்தன்று போலுந் தோழி நொந்துநொந்து
எழுதெழில் உண்கண் பாவை
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே.

இது செலவுக்குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குரைத்தது.
நற்றிணை -177

தலைவன் தன்னைவிட்டு நீங்கிச் செல்ல நினைத்தான் என்பதை அவன் செயல்பாடுகளால் உணர்ந்தாள் தலைவி அதனைத் தோழிக்கு உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

ரந்த காடுமுழுவதும் மிகுந்த நெருப்பு எரிந்ததால் அழிந்து மரங்களெல்லாம் தீய்ந்து ஒதுங்கி நிற்கக்கூட நிழல் கிடைக்காத கொடிய நிலம் பாலை. அவ்வழியே என்னை நீங்கிச் செல்ல எண்ணினார் தலைவர். அதை நான் அவர் செயல்பாடுகள் வழியே நன்கு உணர்ந்தேன்.

எப்படி அறிந்தேன் என்று நீ கேட்கிறாயா..?


ஒழுங்குபடுமாறு அவரது வேலின் விளங்கிய இலையைத் துடைப்பார்!

அவரது கேடயத்துக்கு மயில்தோகை அணிந்து வைப்பார்!

இவைமட்டுமன்றி முன் எப்போதையும்விட மிகவும் அன்பாக நடந்துகொள்வார்.

அழகிய என் மையுண்ட கண்களிலே கண்ணீ்ர் வெள்ளமாகப் பரவ அவ்வெள்ளத்தில் நான் விழுந்து நீந்தும் நாள் இதுதான் போலும் என்று புலம்புகிறாள்.

பாடல் வழியே...

தலைவனின் மனசை நன்கு உற்றறிந்து வாசிக்கும் தலைவியின் உளவியல் அறிவு வியக்கத்தக்கதாகவுள்ளது

பாலைநிலத்தின் கொடுமையும், அவ்வழியே செல்வோர் கையில் வேலும், கேடயமும் எடுத்துச் செல்வார்கள் என்ற வழக்கம் எடுத்துரைக்கப்படுகிறது.

20 கருத்துகள்:

  1. மனவை வாசித்தவள் அருமை. அந்தப் பெண்மணி உளவியல் அறிஞர்களுக்கு சற்றும் சளைத்தவளல்ல. பகிர்வுக்கு நன்றி. கடந்த பத்து நாட்களாக வலைப் பக்கம் வர முடியவில்லை. வேலைப்பளு அதிகம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. ada!
    thakaval!
    nantru namathu ilakkiyangalai
    arivathukku- ungal valai payanpadukirathu!
    vaazhthukkal!

    பதிலளிநீக்கு
  3. தலைவனைத் தவிர வேறு சிந்தனையற்ற நிலையில் அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஊன்றிக் கவனித்து அதன்மூலமே அவர் மனநிலையை ஊகிக்கும் தலைவியின் திறம் அழகிய பாடல் மூலம் வெளிப்படுவது அழகு. அந்நியோன்னியமிக்கவரிடை ஏற்படும் நுண்ணிய மாற்றங்களும் பெரும் கவன ஈர்ப்பு செய்யப்படும். அருமையானப் பாடல் பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. அறியாத அருமையான பாடலை
    மிக அழகான விளக்கத்துடன்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அருமையான பாடல் ! நல்ல விளக்கம் ! நன்றி !

    பதிலளிநீக்கு
  6. சங்கப் பாடலும்
    தலைவனின் உளவியலை உணரும்
    தலைவியும் ம்ம்ம்... அருமை

    முனைவரின் எழுத்துக்களில் நிறை கற்றுக்கொள்ள முடிகிறது
    நன்றி தோழரே

    பதிலளிநீக்கு
  7. தலைவிக்கு பாலையின் கொடுமை. நற்றிணைப்பாடல் அழகு.

    பதிலளிநீக்கு
  8. மனம் வாசிக்கப்படுவதை உணர்கிறோம்தானே !

    பதிலளிநீக்கு
  9. பாடல் வழியே.. என்ற இடத்தில் “எப்போதையும்விட மிகவும் அன்பாக நடந்துகொள்வார்.“ என்பதை விட்டு விட்டீர்களே நண்பரே...
    அதையும் சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. தலைவியின் மனம் கோனாமல் நடந்து கொள்ளவேண்டும் என்பதில் தலைவன் கருத்தாய் இருந்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  11. தலைவனின் அன்பிற்காய் ஏங்கித்தவிக்கும் தலைவியின் நிலையினை அழகாக எடுத்துக்கூறிய பாடல் வரிகள்

    பதிலளிநீக்கு