வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


திங்கள், 8 டிசம்பர், 2025

பழமொழி நானூறு – வாழ்வியல் அறம்

 


பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி 4 ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

தன்னை அறியும் தலைவன்

பொற்பவும் பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்

சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்

அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்

பெரி(து)ஆள் பவனே பெரிது.   82

 பொன் போல் நன்மை பயப்பனவற்றையும், பொல்லாதனவற்றையும்..

செய்துகொண்டு வாழ்பவரை அவர்கள் பேசும் சொற்களால் மட்டுந்தான் அறிந்துகொள்ள முடியுமா?

புருவ வில்லின் கீழ் செவ்வரி பரந்து அகன்று விளங்கும் கண்ணை உடையவளே!

பெரிதும் அவரைக் கையாளும் பெரியவர் தாமே உணர்ந்துகொள்வார்.

பெரிதைப் பெரியவரே அறிவார் - பழமொழி

 

வரி பெறும் முறை

பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர்

அருத்தம், அடி நிழலாரை வருத்தாது,

கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ,

வண்டு தாது உண்டுவிடல். -242

பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர் அருத்தம், அடி நிழலாரை வருத்தாது, கொண்டாரும் போலாதே, கோடல்! அது அன்றோ, வண்டு தாது உண்டுவிடல்.

ஆட்சிக்கு உரிய பொருத்தம் அழியாத மன்னர்

குளுமைக்குப் பூ மாலை சூடிய மன்னர்

செல்வம் சேர்க்க வேண்டும்.

அவன் அடி நிழலில் வாழ்பவர் வருந்தாமல் வரி வாங்கிச் சேர்க்க வேண்டும்.

பிடுங்கிக்கொள்பவர் போலக் கொள்ளக்கூடாது.

அப்படி செய்வதானது

வண்டானது பூவில் தேன் உள்ளபோது உண்பது போலவும், தேன் இல்லாத பூக்களை விலக்கிவிடுவதும் போன்றதாகும்.

 

இம்மை மறுமை இன்பம்

ஈனுலகத்துஆயின், இசை பெறூஉம்; அஃது இறந்து,

ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்

நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்

வேள் வாய் கவட்டை நெறி -360

அறஞ் செய்கின்ற ஒருவன் ஈனுலகத்தாயின் இசை பெறும் இவ்வுலகின் திறத்து ஆராய்வோமாயின் புகழினைப் பெறுவான் இவ்வுலகினின்றும் நீங்கி மறுமை யுலகத்தின்கண் சென்றானாயின் அவ்வுலகமும் இனிதாக ஆகும். (ஆதலின்) நாள்தோறும் நன்மையைப் பயக்கும் அறங்களைச் செய்கின்றவனுக்கு                     இரண்டுலபிலும் இன்பமும் கவட்டை நெறியின்கண் உளவாகிய கலியாணங்களைப் போலும்.

இம்மை மறுமை இன்பங்களை அறம் எய்துவித்தலால், அதனை நாள்தோறும் செய்க.

 

அறம் செய்க

மாய்வதன் முன்னே வகைப்பட்ட நல்வினையை

ஆய்வின்றிச் செய்யாதார் பின்னை வழிநினைந்து

நோய்காண் பொழுதின் அறம்செய்வார்க் காணாமை

நாய்காணின் கல்காணா வாறு. -261

மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையை ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து, நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை, நாய் காணின் கல் காணாவாறு.

நல்வினை என்னும் நற்செயல் செய்யவேண்டிய ஒன்றாக வகைப்பட்டுக் கிடக்கிறது.

ஒருவன் தான் இறப்பதற்கு முன்னர் செய்தாக வேண்டும்.

அதனால் பயன் கிட்டுமா கிட்டாதா என்று ஆராயாமல் செய்ய வேண்டும்.

நோயால் வருந்தும் காலத்தில் அறம் செய்வாரைப் காணமுடியாது.

நோய் இல்லாமல் இருக்கும்போதே செய்திருக்கலாமே என்று வருந்துவாரைக் காண்கிறோம்.

இது எப்படி இருக்கிறது என்றால்,

நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை

கல்லைக் கண்டால் நாயைக் காணவில்லை

என்பது போல் இருக்கிறது.

வறுமையில் செம்மை

மடங்கப் பசிப்பினும் மாண்புடை யாளர்

தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை

மடலொடு புள்கலாம் மால்கடல் சேர்ப்ப

கடலொடு காட்டொட்டல் இல்.

   

மடங்கப் பசிப்பினும், மாண்புடையாளர், தொடங்கிப் பிறர் உடைமை மேவார்; குடம்பை மடலொடு புள் கலாம் மால் கடல் சேர்ப்ப! கடலொடு காட்டு ஒட்டல் இல்.

தாழை மரத்தில் இருக்கும் கூட்டில் பறவைகள் சண்டையிட்டுகொள்ளும் இருண்ட கடல் சூழ்ந்த  சேர்ப்பு நிலத்தின் வேந்தனே!

கடலில் துரும்பு ஒட்டாது. அதுபோல,

உடல் முழுவதும் செயலற்று மடங்குமாறு பசித்தாலும் மாண்பு உடையவர் பிறர் உடைமைகளை விரும்ப மாட்டார்கள். எண்ணவும் தொடங்க மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக