வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 30 செப்டம்பர், 2010

கண் (கலீல் ஜிப்ரான்)



ஒரு நாள் கண் சொன்னது….
நான் இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் நீலப்பனித்திரை மூடிய மலையினைக் காண்கிறேன். அது அழகாக இருக்கிறதன்றோ!

காது கேட்டது…

சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின் சொன்னது….
ஆனால் இங்கே எங்கே இருக்கிறது மலை?
யாதொரு மலையும் இல்லையே?
நான் எதுவும் கேட்கவில்லையே?

பிறகு கை பேசியது…
நான் அதை உணரவோ தொடவோ முயற்சித்தும் என் முயற்சி வீணாகிவிட்டதே! என்னால் எந்த மலையையும் காணமுடியவில்லையே!

இப்போது மூக்கு சொன்னது….
இங்கே எந்த மலையும் இல்லை. நான் அதை உணரவோ,நுகரவோ மோப்பம் பிடிக்கவோ முடியவி்ல்லையே?

பிறகு கண் மறு பக்கம் திரும்பிக்கொண்டது. மற்ற புலன்கள் யாவும் தங்களுக்குள் கூடி கண்ணினுடைய தவறான நம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டன.

இந்தக் கண்ணுக்கு ஏதோ ஆகிவி்ட்டது…
ஏதோ ஒன்று இருக்கிறது என்று.


கதை உணர்த்தும் நீதி….



○ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
○ அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
○ நான்கு முட்டாளுக்கிடையே ஒரு புத்திசாலி வாழமுடியாது.

இன்னும் திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது சிந்தனைகளின் திறவுகோலாக இக்கதை இருக்கிறது.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

நம்மால் ஏன் முடியாது?

தொழில்நுட்பம் இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது…………...

² எதிர்காலத்தில் மக்கள் தம்முள் தொடர்பு கொள்ளும் ஒரே மொழியாக இணையம் இருக்கப்போகிறது. நமக்குள் ஏற்படும் மொழிச்சிக்கல்களை சில மென்பொருள்கள் தீர்த்துவிடுகின்றன.

² இந்நிலையில் இணையத்துடன் உறவாட அவரவர் தாய்மொழியே சிறந்த கருவி என்ற சிந்தனை மேலோங்கிவருகிறது.

² ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியிலேயே கணினியை இணையத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருகிறது.

² கணினியையும், இணையத்தையும் பயன்படுத்த இன்று ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் என்ற தேவையில்லை.

² தமிழ் மொழியை ஆதரிக்கும் இயங்குதளங்களும் (ஓ.எஸ்), உலவிகளும் (ப்ரௌசர்), தேடு எந்திரங்களும் (கூகுள்….), மென்பொருள்களும் (என்.எச்.எம், அழகி…..) நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன…

² நாம் பயன்படுத்தும் தட்டச்சுப்பலகையும் தமிழிலேயே இருந்தால் எப்படி இருக்கும்…!!!!!!!!!



சீனம் உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி. சீனர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் தாய்மொழிப்பற்றே அடிப்படைக் காரணமாகும். சான்றாகப் பாருங்கள்….

இவர்கள் பயன்படுத்தும் தட்டச்சுக் கருவி கூட அவர்தம் தாய்மொழியிலேயே இருக்கிறது.

²  திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழி தமிழ்,செம்மொழிகளுள் ஒன்று. தென்னிந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும்  அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட்போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

(இவ்வலைப்பதிவில் வலது ஓரத்தில் தெரியும் நியோ கவுண்டரில் 100 நாடுகளுக்கு மேல் பார்வையாளர்களின் வருகையைப் பார்க்கமுடிகிறது. உலகு பரவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இத தக்க சான்றாக விளங்குகிறது.)

² இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த  இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசைஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது

இப்படி பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு தமிழில் தட்டச்சுப்பலகையை வழக்கத்திற்குக் கொண்டுவர நம்மால் ஏன் முடியாது?



மென்பொருள்களில் மட்டுமே வழக்கிலுள்ள தமிழ்த்தட்டச்சுப் பலகைகளை வன்பொருள் பயன்பாடடுக்கும் கொண்டுவருவதால் இன்னும் தமிழ் நுட்பம் வளரும். தமிழர்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.
(புள்ளிவிவரங்களுக்கு நன்றி விக்கிப்பீடியா)

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தீயில் விழுந்த தளிர்.



காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

தமிழர் மரபில் சில பண்பாடுகள் உலகத்துக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நாம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.

அகம், புறம் என வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒரே நாகரீகம் தமிழ்நாகரிகமே ஆகும்.

அகத்தில்,

தலைமக்களின் காதலை களவு, கற்பு என இரண்டாகப் பகுத்தனர்.

இயற்கைப் புணர்ச்சி ( தலைமக்கள் ஒருவரையொருவர் இயல்பாகப் பார்ப்பது)
இடந்தலைப்பாடு ( தலைவியை முன்பார்த்த இடத்தில் மீண்டும் பார்த்தல்)
பாங்கர் கூட்டம் ( தோழனின் துணையால் தலைவியைத் தலைவன் பார்த்தல்)
பாங்கியர் கூட்டம் ( தோழியின் துணையால் தலைமக்கள் சந்தித்தல்)
அம்பல் (தலைமக்களின் காதலை ஊரார் தமக்குள்ளே பேசுதல்)
அலர் (தலைமக்களின் காதலை ஊரார் பலரறிய பேசுதல்)
இற்செறித்தல் (களவினை அறிந்த பெற்றோர் தலைவியைக் காத்தல்)
வரைவு கடாவுதல் (தலைவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுதல்)
அறத்தொடு நிற்றல் (காதலை தலைவி தோழிக்கும் தோழி செவிலிக்கும் செவிலி நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்கும் புரியவைத்தல்)
உடன் போக்கு (பெற்றோரறியாது தலைமக்கள் அவர்களை நீங்கிச் செல்லுதல்)


இவ்வாறு இன்றும் நிகழும் இது போன்ற காதல் நிகழ்வுகளுக்கு அற்றைக் காலத்தில் அகத்துறைகளில் இதுபோல அழகான பெயரிட்டு அழைத்தனர்.

ஒரு முறை முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஆய்வி்ன் தலைப்பு “ இற்செறித்தலும் உடன்போக்கும் “ என்பதாகும். வினாநேரத்தில் நான் ஒரு வினாவை….

இற்செறித்தல் என்றவொன்றிருக்கும்போது உடன்போக்கு தேவையா? என்று கேட்டேன்…

ஆய்வு மாணவரால் பதிலளிக்கமுடியாத சூழலில் எனது நெறியாளர் சொன்னார்….


“இற்செறித்தல்“ பெற்றோரின் கடமை உடன்போக்கு காதலரின் “திறமை“ என்று..


சரி சங்ககாலச் சூழல் ஒன்றைப் பார்ப்போம்.

தோழி தலைவியிடம்….

நீ குன்றுகளையுடைய நாட்டின் தலைவனோடு, உடன்போக்கில் செல்ல உடன்பட்டமையால், யான் அவனிடம் கூறி அவனை அழைத்துக் கொண்டுவந்தேன். அவன் உன்னுடன் செல்லத் தயாராகக் குறியிடத்து வந்து நின்றான்.

நின் கைகளும், கால்களும் தளர்ந்து மெலிய தீயுற்ற தளிரைப்போல நாணத்தால் உள்நடுங்கி “இன்றைய பொழுது கழிவாதாகுக“ என்று கூறுகிறாய்….!

இந்நிலையில் நான் என்ன செய்வது………..?

என்று கேட்கிறாள்.

தலைவியின் உயிர் அவளை உடன்போக்குக்குச் (தலைவனுடன்) செல்ல
தூண்டியது!

அவளுடைய நாணம் (ஒழுக்கம் காரணமாக வரும் வெட்கம்) தீ உறு தளிர் போல நடுங்கி அதனைத் தவிர்க்க முற்பட்டது.


தோழியோ தலைவியிடம் நாணத்தைவிட கற்பு மேலானது என்பதை அறிவுறுத்தி அதற்குத் தயங்கும் தலைவியிடம் தன்னால் வேறு என்ன செய்ய இயலும் என்று வினவுவதாக இப்பாடல் அமைகிறது. பாடல் இதோ..

நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
‘இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.


குறுந்தொகை 383. பாலை

படுமரத்து மோசி கீரன்

உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி நாணால் வருந்தும் தலைமகளை நாணுக்கெடச் சொல்லியது.

இப்பாடலின் வழி..

² அகத்துறையொன்று விளக்கம் பெறுகிறது.

² உடன்போக்குச் செல்ல எண்ணிய தலைவி பின் தீயில்பட்ட தளிர்போல நடுங்குவது தமிழ்பண்பாட்டின் அடையாளமாக உணரமுடிகிறது. மரபை மீறிச்செல்கிறோமே என்ற அச்சம் காரணமாகவே தலைவியின் உடல் நடுக்கம் அமைகிறது.



வியாழன், 23 செப்டம்பர், 2010

ஒரு துளி கண்ணீர்.


ஒரு துளி கண்ணீர்.


² உலகில் மிகப்பெரிய செல்வம்……………….?
நமக்காக ஒருவர் சிந்தும் கண்ணீர்!
அடுத்தவருக்காக நாம் சிந்தும் கண்ணீர்!

உண்மையான அன்பிருந்தால் மட்டுமே இந்தச் செல்வம் கிடைக்கும்.



² பள்ளிக்கூடம்.


போகவேண்டிய நாளில் போக மனமில்லை!
போகமுடியாத நாளில் போகத்துடிக்கிறது மனம்!

பள்ளிக்கூடத்துக்கு!


² ஒலி அளவு


பேச்சின் ஒலி அளவை அதிகரிப்பதைவிட,
பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.

“நாணயங்கள் தான் ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும்!
ரூபாய் நோட்டுகள் அதிகம் ஓசை எழுப்புவதில்லை!!!


² கடவுள்

இன்று பசியால் வாடும் மக்களுக்கு
உணவு கொடுக்காத கடவுள்…

நாளை சொர்க்கமே கொடுப்பதானாலும்….

அப்படியொரு கடவுள் தேவையில்லை!!!

புதன், 22 செப்டம்பர், 2010

செல்வத்துப் பயனே ஈதல் - UPSC EXAM TAMIL - புறநானூறு -189



செல்வந்தர் ஒருவர் நாள்தோறும் அதிகாலையில் கையில் பணமுடிப்போடு ஊருக்குள் செல்வாராம். 
முன்பின் அறியாத யாரோ ஒருவரிடம் அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் பணமுடிப்பைக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிடுவாராம்.  

ஒருநாள் இப்படி யாரோ ஒரு ஆணிடம் கொடுத்துவிட்டு வந்தாராம். மறுநாள் காலையில் 
ஊர் மக்கள்….. யாரோ ஒருவர் திருடனிடம் பணமுடிப்பைத் தானே சென்று கொடுத்துவிட்டாராம் என்று பேசிக்கொண்டார்கள். 

வருந்திய செல்வந்தர் இன்று வேறு யாரிடமாவது கொடுக்கலாம் என்று அதிகாலையில் இன்னொரு ஆணிடம் கொடுத்துவந்தாராம்.

மறுநாள் காலையில் மக்கள்… 
யாரோ ஒருவர் பெரிய கஞ்சனிடம் பணமுடிப்பைக் கொடுத்துச் சென்றாராம் என்று பேசிக் கொண்டார்கள்.  

சரி இன்றாவது வறுமையில் வாடக்கூடிய யாருக்காவது தம் பணம் போய்ச்சேரட்டும் என்ற நல்ல மனதில் அதிகாலையில் ஒரு பெண்ணிடம் பணமுடிப்பைக் கொடுத்தாராம். 

மறுநாள் காலையில் மக்கள்… 
யாரோ ஒருவர் விலைமகளிடம் பணத்தைக் கொடுத்தாராம் என்று பேசிக்கொண்டார்கள். 

மனம் வாடிய செல்வந்தர் என்ன இது? 
நாம் நல்ல மனதுடன் தானே கொடுக்கிறோம்? 
 ஏன் இப்படி நடக்கிறது? 
என மனம் வருந்தியிருந்தபோது மறுநாள் காலையில் மக்கள்…. 

யாரோ ஒருவர் தினமும் பணமுடிப்பைக் கொடுத்துச் சென்றாரல்லவா… 

அந்தத் திருடன் தன் திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழக் கற்றுக்கொண்டான்.. 

பெரிய கஞ்சன் மனம் மாறித் தானும் ஏழை எளியவருக்கு உதவிசெய்ய ஆரம்பித்துவிட்டான். 

விலைமகள் தம் நேர்வழியில் வாழ ஆரம்பித்தாள்… 
எனப் பேசிக்கொண்டார்கள். 

என்று ஒரு ஒரு கதை படித்திருக்கிறேன்.. 
நல்ல மனதுடன் செய்யப்படும் கொடை நல்ல வாழ்க்கைக்கு அடித்தளமாகும் என்பதற்கு இக்கதையைச் சிறந்த சான்றாகக் கூறலாம். 

கொடுத்துக் கொண்டே இருந்தால் நம்மை ஏமாளி என்றல்லவா கூறுவார்கள்! 

கொடுத்துக் கொடுத்தே அடுத்தவர்களை நாமே சோம்பேறியாக்கலாமா? என்றெல்லாம் நாம் சிந்திக்கும் வேளையில், எல்லோருக்கும் அடிப்படையானது உணவு, உடை, உறைவிடம்….

போதும் என்று மனிதன் சொல்வது உணவுக்கு மட்டுமே! 
மானம் காக்கவே ஆடை அணிகிறோம்! 
இந்த செயல்கள் பணக்காரனுக்கும் ஏழைக்கும் பொதுவானது என்ற சிந்தித்தால் மண் பயனடையும். 

 நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.. அதற்கு ஈதலே சிறந்த வழி. 

கொடுத்து வாழ்பவரின் வாழ்க்கை பல்லாயிரமாண்டுகள்! 
இவ்வரிய கருத்தைக் கூறும் சங்கப்பாடல்... 

உண்பது, உடுப்பது ஆகிய செயல்கள் இரண்டும் அரசனுக்கும், ஆண்டிக்கும் பொதுவானது.

பெற்ற செல்வத்தைக் அடுத்தவருக்குக் கொடுப்பதே சிறந்த அறமாகும்.
என்பதை….

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'' 

                                                                    (புறநானூறு - 189)


பாடியவர் - மதுரை கணக்காயர் மகனார் நக்கீரனார்.

தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலன்றித் தமக்கே உரித்தாக ஆட்சி செய்து, வெண்கொற்றக் குடையால் நிழல் செய்த அரசர்க்கும்,


இடையாமத்தும், நண்பகலும் துயிலாது, விரைந்த வேகத்தைக்கொண்ட விலங்குகளை வேட்டையாடித்திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் (வறியவனுக்கு) உண்ணப்படும் பொருள் நாழியளவு தானியமே!

உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே!
இவை போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும்.

ஆதலால் செல்வத்துப் பயனே ஈதலாகும்!

செல்வத்தின் பயனை தாமே நுகர்வோம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் பெறமுடியாது. ஈதலால் மட்டுமே இதனைப் பெறமுடியும்.

இதே கருத்தை வள்ளுவர்..


"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்,
என்பும் உரியர் பிறர்க்கு'' (குறள் - 72)

"ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'' (குறள் - 231)

என்றுரைப்பர்.

பாடல் வழி…

கொடுத்து வாழ்வோர் இறப்புக்குப் பின்னரும் வாழலாம் என்ற கருத்தை இப்பாடல் பதிவு செய்கிறது. ( செல்வத்துப் பயனே ஈதல்)

உயிர்கள் யாவுக்கும் உணர்வுகள் பொதுவானது (உண்பது நாழி; உடுப்பவை இரண்டே)

எல்லாத் திணைகளுக்கும் பொதுவான இலக்கணங்களைக் கூறும் "பொதுவியல்" திணையாகவும், தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லும் - உயிர்க்கு உறுதி தரும் பொருள்களை எடுத்துரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித் துறையாகவும் இப்பாடல் பாகுபாடு பெற்றுள்ளது.

சனி, 18 செப்டம்பர், 2010

கணினி செயல்பாடுகளை வீடியோவாக்க..


இன்றைய சூழலில் நம் கணினியில் பயன்டுத்தும் பலவிதமான கோப்புகளை நாம் விரும்பும் வெவ்வேறு வடிவங்களாக மாற்றிக்கொள்வதற்கெனப் பல தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன.

பவர் பாயின்ட் கோப்பினை வீடியோவாக்கும் வசதிக்குப் பின்னர் நானறிந்து வியந்த தொழில்நுட்பம்..

கணினி செயல்பாட்டை வீடியோவாக்கும் தொழில்நுட்பமாகும்.
இந்த இலவச மென்பொருளைப் இங்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்..


கணினியின் செயல்பாடுகளை வீடியோவாக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி..

1. கணினியில் ஒரு செயல்பாட்டை அடுத்தவருக்கு ஒலி ஒளி வசதியுடன் தெளிவாக விளக்கலாம்.
2. எந்தத் துறையாக இருந்தாலும் நம் கருத்துக்களை இதுவரை வேர்டு, பவர்பாயின்ட், ஒலி, ஒளி என வெவ்வேறு தொழில்நுட்பங்களின் துணைகொண்டு கொடுத்திருப்போம்…

இந்த முறை அதற்கு ஒரு மாற்றாகவும் புதிய அனுபவமாகவும் அமையும்.


கூகுளில் சென்று ப்ரீ ஸ்கீரீன் ரெக்கார்டர் என்னும் குறிச்சொல்லைக் கொடுத்துத் தேடினால் நிறைய மென்பொருள்கள் கிடைக்கின்றன. அதில் இலவசமாகவும் நல்ல தொழில்நுட்ப வசதியும் கொண்டதாக இந்த மென்பொருள் விளங்குகிறது.

கணினி செயல்பாட்டை இலவசமாக ரெக்கார்டு செய்யம் வசதி விண்டோசின் ஏழாவது பதிப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வசதி இல்லாதவர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மென்பொருள் விண்டோசின் எச்பியில் நன்றாகப் பணிபுரிகிறது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

முரசு கட்டிலில் தூங்கியவர்.

இரும்பொறையின் அரண்மனையிடத்து முரசு வைக்கும் கட்டிலில் 

மோசிகீரனார் அறியாது ஏறி வழிநடந்த களைப்பால் அயர்ந்தார்.

முரசு கட்டிலில் ஏறியது தவறு என்று தண்டிக்காது ,  

அவர் துயில் நீங்கும் வரை கவரி வீசினான் அரசன்.

மோசிகீரனாரின் தமிழ்ப்புலமையைப் போற்றுமாறு இச்செயல் அமைந்தது.

நின் வீரமுரசு குற்றம் தீர இறுகப் பிணித்துக் கட்டப்பட்ட வாரையுடையது

கரிய மரத்தால் அமைந்ததால் கருமை படர்ந்த பக்ககங்களையுடையது.

மயிலின் தழைத்து நீண்ட தோகைகளால் ஒளிபொருந்திய புள்ளியையுடைய நீலமணிபேன்ற மாலையாகக் கொண்டு சூடப்பபெற்றது.
அதனுடன் உழிஞையின் பொன் போன்ற தளிர்களும் அழகு பெறச் சூட்டப்பபெற்றது.

புதன், 15 செப்டம்பர், 2010

வேடிக்கை மனிதர்கள்!


மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்…

இந்த விடுமுறைநாளில் ஊருக்குச் சென்றேன். 3 நாள் விடுமுறையதனால் இரவு 12க்குக் கூட மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்யும் வீரதீர செயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

² பேருந்தின் சன்னல் வழியே ஏதோ ஒரு பொருளைப் போட்டு இடம்பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்……
அந்தப் பொருளுக்குப் பதில் தன் குழந்தையை வைத்து இடம்பிடிப்பவர்களைப் பார்த்து வியந்துபோனேன்!!

² பேருந்து நிற்கும் முன்னர் ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன்…..
ஒருவர் பேருந்து நிற்கும் முன்னர் படிவழியே ஏறமுடியாத அளவுக்குக் கூட்டமானதால்……….
மெதுவாக வந்த பேருந்தின் வலதுபுறம் வந்து பின்புற சக்கரத்தில் கால் வைத்து சன்னல் வழியே ஏறி அமர்ந்து தன்னைத்தானே வியந்துகொண்டு பெருமிதத்துடன் மற்றவர்களைப் பார்த்தார்…!!

v பேருந்துகளில் செல்லத்தக்க கூட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தது. நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்.

ஒரு பேருந்து வந்தது…. நிலையத்தின் முகப்பிலேயே இருந்தநான் வழியிலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு ஏறி ஒருவழியாக பேருந்து நிற்கும் முன்னரே அமர்ந்துகொண்டார்கள்…

ஆனால் அந்தப்பேருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர்தான் செல்லும் என்று சொல்லிவிட்டு நடத்துனரும், ஓட்டுநரும் எங்கோ சென்றுவிட்டனர். வெறுப்படைந்த மக்கள் அரசுமுதல் பணியாளர்கள் வரை யார் யாரையோ திட்டினார்கள். மக்களை மேலும் வெறுப்பேற்றும் விதமாக….

அந்த 30 நிமிடத்தில் 5 பேருந்துகள் வந்து மக்களை ஏற்றிக்கொண்டு உடனேயே சென்றுவிட்டன.

இறங்கி அந்தப் பேருந்துகளி்ல் ஏறிச்சென்றவர்கள் சிலர். (சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பவர்கள்!)

நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவி்டலாம் என்றிருந்தனர் சிலர் (தெளிவாக முடிவெடுப்பர்கள்)

இறங்கி ஏறுவோமா?
வேண்டாமா? என்று சிந்தித்துக்கொண்டே பேசாமல் (பேசிக்கொண்டே) இருந்துவிட்டவர்கள் பலர்
(இவர்களுக்கு முடிவெடுக்கத்தெரியாது. காலம் தான் இவர்களுக்கு வழிசொல்லும்)

எதைப் பற்றியும் கவலைப் படாமல் தூங்கி அருகில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உரிமையுடன் தோளில் சாய்ந்துகொண்டவர்கள் சிலர்!!(எங்கிருந்துதான் இவர்களுக்கு இப்படித் தூக்கம் வருகிறதோ!)


நள்ளிரவு என்றும் பாராமல் பலவித உணவுப்பொருள்களை தன் குடும்பத்துடன் பெரும் சத்தத்துடன் வயிற்றில் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தனர் சிலர்!! ( பாவம் அவர்களுக்கு என்ன பசியோ!)

அந்தப் பேருந்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, கேட்டுக் கொண்டே நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவிடலாம் என்று காத்திருந்தேன்..

மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள். எங்கடா நடத்துனரையும், ஓட்டுநரையும் காணோம்….

நேரமாகும்னா வண்டியை ஏன்டா பேருந்து நிலையத்துக்குக் கொண்டுவரீங்க? என்றார் ஒருவர்

பேருந்தில் ஏன்டா பெயர்ப்பலகை போட்டீங்க? வண்டியை எடுக்கும் போது வெச்சிக்க வேண்டியதுதானடா என்றார் ஒருவர்?


ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவழியாக ஓட்டுநரும், நடத்துனரும் உள்ளே வந்தார்கள்..

எல்லோரின் கோபமும் நடத்துனர் மீது திரும்பியது. பலரும் திட்டிக்கொண்டிருக்க ஒருவர் நடத்துனரைப் பார்த்து….

ஏன்யா என்னயா நினைச்சிட்டிருக்கீங்க?
நீங்க பாட்டுக்க எனக்கென்னன்னு வண்டிய நிறுத்திட்டுப் போய்டீங்க?
பெயர்பலகை வைக்காவிட்டால் நாங்க ஏறியிருப்போமா? வேறு பேருந்தில் போயிருப்போம்ல. வண்டி போயிடுச்சு?

என்று வாய்மூடாமல் பேசிக்கொண்டிருந்தார்…..

அதானே நல்லா கேளுங்க என்று பிறரும் அவரை உசுப்பேத்திவிட்டனர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நடத்துனர்….

அமைதியாக….

நான் தூங்கி 3 நாளாச்சுங்க..
அரசுப் பேருந்து அதனால் நடத்துனர் பற்றாக்குறை..
காலைல 12 மணிக்குச் சாப்பிட்டதுங்க..
இரவு 12 மணியாச்சு பசிதாங்கமுடியாம சாப்பிட்டு வந்தேங்க….

அவ்வளவு தான் வண்டிய எடுத்தாச்சு என்றார்..

அதற்கு மேல் யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. பேருந்து அமைதியாகச் செல்ல ஆரம்பித்தது.

மக்கள் கோபமாகப் பேசும் போது நடத்துனரும் கோபமா….

உங்கள யாருய்யா ஏறச் சொன்னது?
நான்தான் அப்பவே சொன்னேன்லயா 30 நிமிடம் ஆகும்னு?

என்று ஏதாவது பதில் பேசியிருந்தால் வார்த்தை வளரும், கோபம் அதிகரிக்கும்.

இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்ட நடத்துனரின் பண்பு வியப்பிற்குரியாதாக இருந்தது.

வியாழன், 9 செப்டம்பர், 2010

விஸ்டா சைடுபார் நுட்பங்கள்.



ஒவ்வொரு இயங்குதளங்களும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புடையனவாக விளங்குகின்றன. விஸ்டாவில் என்னைக் கவர்ந்த சில…..



² ஸ்விட்ச் பிட்வின் விண்டோ என்ற கருவி எனக்கு மிகவும் பிடித்ததாகும். நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் விண்டோக்களை பிரிவியுவாக பார்ப்பதற்கு இவ்வசதி பயன்படுகிறது. இவ்வசதி விண்டோவின் பிற இயங்குதளங்களில் இருந்தாலும் விஸ்டாவிலிருக்கும் மேம்பட்ட வடிவாக்கம் என்னைக் கவர்வதாக இருந்துவருகிறது.

² சைடுபார் வசதி

◊ இதற்கு முன் சில ஆண்டுகளாக எக்ஸ்பி பயன்படுத்தி வந்த நான் விஸ்டாவிற்கு மாறியபின்னர் இவ்வசதி என்னை மிகவும் கவர்வதாக இருந்தது.
◊ (கன்ட்ரோல் பேனலில் சைடுபார் என்னும் பிரிவைச் சொடுக்கி இதனை விஸ்டா பயனாளர்கள் பெறலாம்.)

1. பீட் - இவ்வசதியை நம் முகப்பில் சேமிக்கும் போது வலைத்தளத்தில் பீட் முகவரியை (தளஓடை) இதில் சேர்த்தால் இணைய இணைப்பு இல்லாத போதும் அவ்வலைத்தளத்தின் இடுகைகளை, செய்திகளை நாம் படித்து மகிழலாம். நம் விருப்பப்படி 25,50,75,100 என இடுகைகளை வகைப்படுத்திக் கொண்டு கேட்கெட்டாகப் பயன்படுத்தமுடியும்.
2. நாட்காட்டி , கடிகாரம் இரண்டையும் நம் விருப்த்திற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.
3. ஸ்லைடு சோ வில் நாம் விரும்பும் படங்களை வரிசைப்படுத்தி நம் விரும்பும் விதத்தில், விரும்பும் கால இடைவெளியில் தோன்றச் செய்யலாம்.
4. மேலும் ஆன்லைனில் நமக்கு விருப்பமான கேட்கட்களைத் தேடியும் பெற முடியும்.
5. விண்டோஸ் விஸ்டாவின் இந்த சைடுபார் வசதியை, நம் கணினியின் வலது புறத்திலோ, இடதுபுறத்திலோ வைத்துக்கொள்ளலாம். மேலும் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சைடுபார் கேட்கட்டின் மீது வலதுபுறம் சொடுக்கினால் Detach From Sidebar என்னும் வசதியைப் பயன்படுத்தி நம் கேட்கட்டினை எந்த முகப்புப்பகக்கத்தில் எவ்விடத்தில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

புதன், 8 செப்டம்பர், 2010

கர்வம் அழிந்தது.



நான் மறையைக் கற்றவனல்ல ஞானி!
நான் மறையக் கற்றவனே ஞானி!

என்பது முதுமொழி.

நான் என்னும் அகந்தையையின்றி வாழ்வது எல்லோராலும் இயலாதவொன்றாகும். இருந்தாலும் அவ்வாறு இருக்க முயல்பவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடத்தேவையில்லை. எல்லோரும் அவர்களை ஞானி என்றுதான் உணர்வார்கள்.கதை ஒன்று…………



அறிஞன் ஒருவன் இருந்தான் அவனுக்கு தான் மிகவும் அறிவாளி என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. யாராக இருந்தாலும் அவர்களை கேள்வி கேட்டே மடக்கிவிடமுடியும் என்று தன்மீது மிகுந்த கர்வம் கொண்டிருந்தான்.

இவன் கர்வத்தை அழிப்பதற்காகவே காலம் ஒரு சூழலை உருவாக்கித்தந்தது.

ஒருநாள் கிராமத்தின் வழியே சென்றுகொண்டிருந்த அறிஞன், அவ்வழியில் மாடுமேய்த்துக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தான். நல்ல அறிவாளிகளே நான் கேள்வி கேட்கிறேன் என்றால் பேரச்சம் கொள்வார்கள். இவன் படிப்பறிவில்லாதவன் இவன் தன்கேள்விகளுக்கு அஞ்சுவதைப் பார்த்து இரசிக்கவேண்டும் என்று விரும்பினான்.

அறிஞன் : உன்னிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன்.

மாடு மேய்க்கும் இளைஞன் : (தயக்கமே இன்றி) கேளுங்கள்……..


அறிஞன் : (என்னடா இது அறிஞர்களே அஞ்சும் தன்னிடம் இவன் எந்த அச்சமுமின்றி கேள்வி கேளுங்கள் என்கிறானே! என்ற கேள்வியுடன்…)

1. “உலகில் உள்ள ஒளிகளில் சிறந்த ஒளி எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : சூரிய ஒளி! அதற்கு மேற்பட்ட ஒளியே இல்லையே!

அறிஞன் : 2.உலகின் சிறந்த நீர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : கங்கை நீர்! சிவன் தலையிலிருந்தும். விட்ணுவின் பாதத்திலிருந்தும் வந்து அதில் மூழ்கியவர்களுக்கு வீடுபேறளிக்கும கங்கை நீரைவிட சிறந்த நீர் வேறென்ன இருக்கமுடியும்?

அறிஞன் : 3. உலகின் சிறந்த மலர் எது?

மாடு மேய்க்கும் இளைஞன் : தாமரை மலர்! தேவதேவியரும் வீற்றிருக்கும் மலரை விட சிறந்த மலர் வேறேது? என்றான்..


அறிஞன் : ( இவனை படிப்பறிவில்லாதவன் வெறுங்குடம் என்றல்லவா எண்ணினேன். இவன் நிறைகுடம் என்று தெளிந்தான் அறிஞன்… ) உன் அறிவை மெச்சுகிறேன் இந்தா என்னுடைய விலையுயர்ந்த முத்துமாலை என்று பரிசளித்தான்…..

மாடு மேய்க்கும் இளைஞன் : (அறிஞனின் மிச்சம் மீதியிருக்கும் கர்வத்தையும் சம்மட்டியால் அடித்து நீக்க எண்ணி…) ஐயா நான் இந்தப் பரிசுக்குத் தகுதியல்லாதவன் அதனால் வேண்டாம். ……….

ஏனென்றால் நான் சொன்ன பதில்கள் மூன்றும் தவறானது..

அறிஞன் : (திகைத்து நின்ற அறிஞன் பேச்சின்றி விழித்தான்) என்னப்பா சொல்கிறாய் இதற்கு மேலும் இந்தக் கேள்விக்கு வேறு பதிலே இல்லையே!

மாடு மேய்க்கும் இளைஞன் : ஐயா…

2. சூரிய ஒளி சிறந்தது தான் இருந்தாலும் அந்த ஒளியைப் பார்ப்பதற்குக்கூட நம் கண்ணில் ஒளி வேண்டும்.. அதனால் கண்ணொளி சூரிய ஒளியைவிட உயர்வானது.
3. கங்கை நீர் புனிதமானது தான்.. இருந்தாலும் அதனை எல்லா நாட்டினரும், சமயத்தாரும் ஏற்பார்களா? அதனால்…..
தாகத்தோடு இருக்கும் ஒருவனுக்கு…..

கிடைக்காத கங்கை நீர் - கிடைத்த சிறிதளவு நீர்

என ஒப்பிட்டு நோக்கினால் கங்கை நீரை உயர்வானது எனக் கருதமுடியாது.

4. தாமரை மலருக்குப் பல சிறப்புகள் இருந்தாலும். நீரைவிட்டு வெளியே எடுத்தால் தாமரை வாடிவிடும்.. உண்மையில் மலர்களில் சிறந்தது பருத்திமலர்தான். அதிலிருந்து கிடைக்கும் நூலில் நெய்யப்படும் ஆடைகள் மக்களின் மானத்தையல்லவா நாள்தோறும் காக்கிறது. பருத்திமலரை விடத் தாமரை எந்த விதத்தில் மக்களுக்குப் பயன்டும் சிறந்த மலராகமுடியும்?


அறிஞன் : (தன் கர்வம் முற்றிலும் அழிந்த நிலையில் தலை தாழ்த்தி உண்மையை ஏற்றுக்கொண்டு விடைபெற்றான்)


இந்தக் கதையில் கேட்ட கேள்விக்கான பதில்கள் சரி - தவறு என்று நாம் சிநத்திப்பதைவிட….

அந்த அறிஞனின் கர்வத்தை அழிக்கும் ஆயுதமாக இந்த பதில்கள் அமைந்தன என்று சிந்திப்பது மிகவும் சரியான புரிதாலாக இருக்கும்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நாழிகைக் கணக்கர்.



பழமழையால் பதம் கெட்ட எள்ளின்காய், சின்மழையால் இனிதாக விளங்கினார்போல, களவுக்காலத்துத் தலைவன் இரவினும் பகலினும் பலரறிய வருதலால் ஊரில் அலர் எழ வருந்திய தலைவி, சில நாள் வருதலால் இனிமை பெற்றனள்.

சேற்றிலே நிற்றலை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை இருள் செறிந்த நடுஇரவில் “ஐ“ என்ற ஒலியுடன் சேற்றைவிட்டு வெளியே வரவோ, தம் துணையை எண்ணியோ கரையும். அவ்வொலி தலைவியின் தனிமைத் துயரை மிகுவி்ப்பதாக அமையும்.

(எருமை சேற்றைவிட்டு வெளியே வர எண்ணுவதுபோலத் தலைவியும் இற்செறிப்பிலிருந்து விடுதலை பெற்று தலைவனுடன் உடன்போக்கில் செல்ல எண்ணினாள்.)

இத்தகைய அச்சத்தைத் தரும் கூதிர்ப்பருவத்தும் என்னுடைய நெஞ்சு வருந்திப் புண்பட்ட துன்பம் காரணமாக, ஊர்க்காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை எண்ணிக் கொண்டிருப்பதுபோல என் கண்கள் துயிலாவாயின என்று தோழியிடம் சொல்கிறாள் தலைவி.

பாடல் இதோ…



குறிஞ்சி - தலைவி கூற்று

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.

குறுந்தொகை -261
-கழார்க் கீரனெயிற்றியார்.

(இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லவாளாய் சொல்லியது.)


நுண்பொருள் விளக்கம்.


பழமழை
- கார் காலத்தில் தோன்றும் முதல் மழை, புதுப்பெயல் எனவும்,இளமழை எனவும் அழைக்கப்படும். அக்காலத்தில் தொடர்ந்து பெய்யும் மழை “பழமழை“ எனப்படும்.

சிதட்டுக்காய்
- எள்ளிற்கு அதிக மழை பெய்தால் காய்கள் பதனிழந்து உள்ளீடற்றுப்போகும். உள்ளீடற்ற காய்களைச் சிதட்டுக்காய் என்பர்.

அலர்
- தலைமக்களின் காதலையறிந்த ஊரார் பேசும் மொழி.

இற்செறி்த்தல் - தலைவியின் காதலையறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்திருத்தல்.


உடன்போக்கு
- பெற்றோருக்குத் தெரியாமல் தலைவி தலைவனுடன் வீட்டை நீங்கிச் செல்லுதல்.

பாடல் வழி…


² இப்பாடலில்,
அக வாழ்வியில் அழகாக இயம்பப்படுவதுடன்,
நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பும் வருகிறது.

² காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.

என்னும் அடிகளில் உறங்காது நேரத்தைக் கணக்கிடும் நாழிகைக் கணக்கர்களைப் போலத் தம் கண்ணும் கண் மூடி உறங்க மறுக்கிறது என்கிறாள் தலைவி.

இக்கூற்று அக்காலத்தில் நாழிகைக் கணக்கிடுதற்கு என்று கணக்காளர்கள் இருந்த மரபை அறிவுறுத்துவதாகவுள்ளது.

திங்கள், 6 செப்டம்பர், 2010

தெரியவேண்டிய தமிழர்பண்பாடு.


திருச்செங்கோடு அருகே உள்ள பள்ளியிலிருந்து 10 பேர் கொண்ட மாணவியர் குழு ஜப்பான் சென்று வந்தது. அவர்களின் கல்விமுறை, பண்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காக இவர்கள் அங்கு சென்றனர். திரும்பிய மாணவிகளின் ஒருவர் பேட்டி ஒன்றில் சொல்கிறார்….

ஜப்பானியர்களின் மொழிப்பற்று, நாட்டுப்பற்று, அவர்களின் பண்பாடுகளில் அவர்கள் கொண்ட ஆர்வம், கல்வி முறை ஆகியன வியப்படையச் செய்வதாக இருந்தது என்று!

தம் தாய் மொழியையே விரும்பிப் பேசும் அவர்கள் ஆங்கிலம் பேசுவதை அவ்வளவு விரும்பவில்லை. தகவல் தொடர்பின் தேவைகருதியே ஆங்கிலம் பேசுகிறார்கள். அவர்கள் பண்பாடுகளை எங்களிடம் சொல்லுவதில் அவர்களுக்கிருந்த ஆர்வம். நம் பண்பாடுகள் மீது நாம் இன்னும் பற்றுவைக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக இருந்தது. மேலும் அவர்களின் கல்விமுறை…..

காலை முழுதும் தியரி வகுப்பும் மாலை முழுக்க செயல்முறை வகுப்புகளுமே இருந்தது.

என்று குறிப்பிடுகிறார்..


நாம் நம் பண்பாட்டை, மொழியை எந்த அளவுக்குத்,
தெரிந்து வைத்திருக்கிறோம்?
நேசிக்கிறோம்?
அடுத்தவருக்குச் சொல்வதில் பெருமைகொள்கிறோம்?

என்னும் பல கேள்விகளைத் தொடுப்பதாக இம்மாணவியின் கூற்று அமைகிறது..


சரி தமிழர் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றை இன்று காண்போம்….

“விருந்தோம்பால்“ நம் தொன்மையான பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றாகும்.

அன்றைய காலத்தில் விருந்தோம்பல் வாழ்வியல் கடமைகளுள் ஒன்றாகப் போற்றப்பட்டது. அதன் எச்சமாகவே வீடுகளுக்கு வெளியே திண்ணைகள் இருந்தன…

ஆனால் இன்று திண்ணை வைத்த வீடுகளையே பார்ப்பது அரிதாகவுள்ளது!

அகப்பாடல் ஒன்று…..


முன்பு ஒரு காலத்தில் பொருள் தேடி மீண்ட தலைவன் மீண்டும் பொருள்தேடவேண்டும் என்று எண்ணினான். அப்போது அவன் தென் நெஞ்சிற்குச் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது.


நெஞ்சே வாழிய! பொருள் ஈட்டும் முயற்சியை மேற்கொண்டு இனி நாம் தலைவியைப் பிரிந்து போதலும் கூடுமோ?
அவ்வாறு பிரிவதாயினும் நான் கூறுவதனைக் கேட்பாயாக!!

நாள்தோறும் நாம் உறக்கத்தில் கனவு காணும்போது அக்கனவில் தோன்றும் பொருள்கள் யாவும் கனவு கலைந்தவுடன் மறைந்துபோகும் தன்மையன. அதேபோல, நனவிலும் இளமையது செலவும், முதுமையது வரவும் கிடைத்தற்கரிய சிறப்பினையுடைய காமவின்பத்தின் தன்மையும் ஆய இவையும் தோன்றி விரைந்து மறையும் பொய்களேயாம்.

இவ்வுண்மைகளை நீ அறியாய் போலும்!!

வெம்மையான கோடைக்காற்றானது செந்நிற மூங்கிலின் அசையும் தண்டினைத் தாக்கி, ஞெமை மரத்தின் இலைகளை உதிர்த்தது. அவ்விடத்தே, களர் நிலத்துப்பிறந்த புழுதியை வாரி எடுத்துச் சுழன்று அடித்தது.

அத்தகைய வேனில் நிலைபெற்ற வெஞ்சுரத்துக் காட்டினிலே, தளர்ந்த நடையினையுடைய இளைய பெண் மானுடன் கூடியிருந்த புள்ளிகளையும், அறல்பட்ட கொம்பினையும் உடைய ஆண்மான், நீர் பருகும் வேட்கையுடன் தழை உண்பதை கைவிட்டு, அருகிலிருக்கும் நீரற்ற குளம் நோக்கிச் சென்று உண்ணுநீர் பெறாது மெலிந்து தளர, நிழல் அற்ற மரங்கள் கொண்ட பாலை நிலத்து நெடுவழியை நாம் கடந்து செல்ல வேண்டும்.

நாள்தோறும் தொடர்ந்து வரும் விருந்தினரைப் பேணுதற்கு இல்லத்தின் முன்னர் இடப்பட்ட பந்தரின்கண் வறுமையுற்று வாடி வருவோரைப் பாதுகாத்து, தழைத்த கூந்தலில் தாழை மடல் சேர்த்து , பின்னி அழகுறுத்தி மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, பள்ளியறையில் பணிவான மொழிகள், கூறும் பொலிவுற்ற கூந்தலையும் பேரழகு கலன்களையும் உடைய நம் தலைவியின் பண்புகளைக் காட்டிடைச் செல்லும் நீ நினைந்து மயங்குவாய் அல்லவா?


கனவிலே பொருள்கள் தோன்றிக் கழிவது போல நனவிலும் நாட்கள் பிறந்து விரைந்து கழியும் தன்மையன என்றான். விருந்தோம்பியும் வறியார்க்கு அவர் வேண்டியதொன்றை வழங்கியும் இல்லறம் நடத்தும் நம் தலைிவியின் பண்புகளும் பள்ளியறைப் படுக்கயைில் நம்முடன் பேசும் குழலும் யாழும் அமிழ்தும் குழைதத்த மழலைக் கிளவியின் இனிமையும் பேரின்பம் தருவனவாதலின்,
ஆறலைப்போரும் ஊறுசெய் விலங்குகளும் துன்பம் தரும் கொடிய காட்டிடையே செல்கின்ற பொழுது அவ்வின்பத்தை நினைத்து நீ மீண்டு வரஎண்ணுவாய்.

நெஞ்சே தேடும பொருளைத் தேடி முடித்தோம். எனவே மீண்டு வருதல் அரிய இளமையும் இருதலையும் ஒத்த காமத்தையும் சேரப் பெற்ற யாம் எம் நெஞ்சு கலந்தொழுகும் அன்புடையாளைக் கைவிட்டுப் பொருளிடத்தே வேட்கை கொண்டு இனிப் செல்லம் எண்ணம் இல்லை எனத் தன் நெஞ்சை நோக்கிக் கூறினான் என்க.

பாடல் இதோ..



ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும்,
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும்
கனவுக் கழிந்தனையவாகி, நனவின்,
நாளது செலவும், மூப்பினது வரவும்,
5 அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும்,
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல,
10 கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு,
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி,
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி,
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து,
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர,
15 மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து,
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்
20 வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி,
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை,
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே?
மதுரை அளக்கரிஞாழார் மகனார் மள்ளனார்

அகநானூறு -353 (பாலை)




* “இல்லறக் கடமைகளில் தலைவனுக்கு உரிய பங்கு தலைவிக்கும் உண்டு. அவைனவிட மிகுதியான பொறுப்பும் உண்டு விருந்தோம்வுவது தலைவியின் கடமை என்றே கூறத்தக்கது. என்று தம் “ஓவச்செய்தி“ என்ற நூலில் மு. வரதராசனார் குறிப்பிடுவர்.

¯ இவ்வகப்பாடலில் விருந்தோம்பலின் சிறப்பு….


“விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர்,
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத்
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல்“ என்னும் அடிகள் வழியாக...

நாள்தோறும் தொடர்ந்து வரும் விருந்தினரைப் பேணுதற்கு இல்லத்தின் முன்னர் இடப்பட்ட பந்தரின்கண் வறுமையுற்று வாடி வருவோரைப் பாதுகாத்து, தழைத்த கூந்தலில் தாழை மடல் சேர்த்து , பின்னி அழகுறுத்தி மகிழ்ச்சியுடன் புன்னகைத்து, பள்ளியறையில் பணிவான மொழிகள், கூறும் பொலிவுற்ற கூந்தலையும் பேரழகு கலன்களையும் உடைய நம் தலைவியின் பண்புகளைக் காட்டிடைச் செல்லும் நீ நினைந்து மயங்குவாய் அல்லவா?

என்னும் கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்.










“ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்கிறார்கள்
ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்கிறார்கள்“

“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

Þ ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.


இவர்….

(செப்டம்பர் மாதம் 5,ஆம் தேதி 1888ஆண்டில் - பிறந்தார்) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 42 டாக்டர் பட்டங்களைப் பெற்றவராவார். ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.



Ø ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தம்பணியை நேசித்து அர்பணிப்பு உணர்வுடன் வாழ்ந்துகாட்டிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை இவ்வேளையில் ஒப்புநோக்கி தம் பணியை சீர்தூக்கிப்ப பார்ப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.

Ø தமது வாழ்க்கையை வடிவமைத்த, வடிவமைக்கும் ஆசிரியர்களை நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது மாணாக்கர்களின் கடமையாகும்.


-------------/\--/\-------------------/\--/\--------------------/\--/\--

வியாழன், 2 செப்டம்பர், 2010

உங்களுக்குக் கண் தெரிகிறதா?

இன்பதுன்பங்கள் (கலீல் ஜிப்ரான்)


◊ இடுக்கன் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் -621)

என்று துன்பம் வரும் போது சிரியுங்கள். துன்பத்தை வெல்ல இதைவிட சிறந்தவழி வேறேதும் இல்லை.

◊ இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (குறள் -621)

என்று துன்பத்தைக் கண்டு துவளாதவர்கள் துன்பத்திற்கே துன்பம் தரும் ஆற்றலைப் பெறுவர் என்பர் வள்ளுவர்.

இதே கருத்தை கலீல் ஜிப்ரான்…………



◊ அதன் பிறகு, ஒரு பெண்மணி, “எங்களுக்கு மகிழ்ச்சியைப் பற்றியும் கவலையைப் பற்றியும் சொல்லுங்கள் என்று கூறினாள்.

அவர் பதில் கூறினார்.

மகிழ்ச்சி என்பது, முகத்திரை நீக்கிய உங்கள் துன்பம் தான்.


சிரிப்பு பிறக்கும் உங்கள் சொந்தக் கிணற்றை, அடிக்கடி உங்கள் கண்ணீர் நிறைத்துவிடுகின்றது.

அது வேறு எப்படி இருக்க முடியும்.

எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாகத் துன்பம் உங்களைச் செதுக்குகின்றதோ, அந்த அளவுக்கு நீங்கள் நிறைந்த இன்பம் பெறுவீர்கள்.

திராட்சை மதுக் கோப்பையை நீங்கள் ஏந்தி இருக்கிறீர்கள்களே, அது குயவனின் சூளையில் வெந்தது அல்லவா?

உங்களுக்கு ஆன்ம அமைதி தரும் புல்லாங்குழல், கத்திகளால் துளையிடப்பட்டது அல்லவோ?

நீங்கள் மகிழ்ச்சியடையும் போது, உங்கள் இதயத்திற்குள் ஆழ்ந்து பார்த்தால், உங்களுக்கு இன்பம் தருவதெல்லாம், உங்களுக்குத் துன்பம் தந்தவையே என்பதைக் கண்டுகொள்வீர்கள்.

“இன்பம் துன்பத்தைவி்ட மேலானது“ என்று உங்களில் சிலர் சொல்லக்கூடும் “இல்லை துன்பம் தான் பெரிது“ என்று சிலர் சொல்லக்கூடும்.

ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவை பிரிக்கமுடியாதவை.

ஒன்றாகத்தான் அவை வருகின்றன. ஒன்று உங்களுடன் தனியே அமர்ந்துகொள்ளும். மற்றொன்று உங்கள் படக்கையில் படுத்துக்கொள்ளும்.

உண்மையில், உங்கள் இன்பம், துன்பம் என்ற தட்டுகளுக்கிடையில் ஊசலாடும் தராசு நீங்கள்.

நீங்கள் வெறுமையாகும் போதுதான், அசையாமல் நடுநிலையில் நீங்கள் நிற்கமுடியும்.

தங்கம், வெள்ளி நிறுப்பவன் உங்களை உயர்த்திப் பிடிக்கும்போது அவனுக்கு உங்கள் இன்பமும் துன்பமும் வேண்டும் எடைபோட..

புதன், 1 செப்டம்பர், 2010

சிரிப்பும் சிந்தனையும்.


பெண்.

காதலிக்கப் பெண் வேண்டுமாம்!
கல்யாணத்துக்குப் பெண் வேண்டுமாம்!
வாரிசு சுமக்கப் பெண் வேண்டுமாம்!
வாரிசு மட்டும் ஆண் வேண்டுமாம்!

என்ன பெயர்??

ஆசிரியர் - உன் பெயர் என்ன?
மாணவி - அமுதா.

ஆசிரியர் - வீட்டில எப்படிக் கூப்பிடுவாங்க?
மாணவி - பக்கத்துல இருந்தா மெதுவாக் கூப்பிடுவாங்க…
தூரத்துல இருந்தா சத்தாமாக கூப்பிடுவாங்க!!


மதம்.

ராம் - இந்து
ஜான் - கிருத்தவம்

ரம்ஜான் - இசுலாமியர் கொண்டாடும் பண்டிகை!!

கடவுள்.

இறைவன் படைத்த உலகில்
மனிதன் வாழ்கிறான்!!

மனிதன் படைத்த சிலைகளில்
இறைவன் வாழ்கிறான்!

பாதை..

நீ செல்லும் பாதையில்
தடைகள் எதுவும் இல்லையென்றால்…

அது யாரோ சென்ற பாதை!!


பிரச்சனை

எதிர்மறை சிந்தனையாளர்கள்
பிரச்சனைகளை மட்டுமே பார்ப்பார்கள்!

நேர்மறை சிந்தனையாளர்கள்..
அதைத் தீர்க்கும் வழியை மட்டும் பார்ப்பார்கள்!!

நேசி.

உன்னை நேசிக்கும் இதயத்தை
நேசி!!
உன்னை கோபப்படுத்தும் இதயத்தை
அதிகமாக நேசி!!
-அன்னை தெரசா.