வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தங்கத்தைவிட மதிப்புமிக்கது!!

இன்றைய சூழலில் தங்கம் விலை மதிப்பு மிக்கதாக உள்ளது. தங்கத்துக்கு இருக்கும் மதிப்பு இன்று மனிதர்களுக்குக் கூட இருப்பதில்லை. நாளுக்கு நாள் இதன் மதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்தக் காலத்துலயெல்லாம் என்று மூத்தோர் தங்கத்தின் நிலை பற்றிச் சொன்னபோது நம்பமுடியாதது போல இருந்தது. இன்றைய சூழலில் நாம் கூட சொல்லமுடிகிறது. எங்க காலத்துலயெல்லாம் தங்கம் ஒரு கிராம் 300ரூபாய்க்கு விற்றது என்று..

சங்க காலத்தில் தங்கத்தின் மதிப்பு.
சங்க காலத்தில் தங்கம் காசாகவும், அணிகலன்களாகவும் பயன்பாட்டில் இருந்துள்ளது.

பொற்காசுகளைப் போன்ற நெல்லிக்காய்!
சங்க காலத்தில் பண்டமாற்று முறையோடு காசுகளும் பயன்பாட்டில் இருந்தன. பொன்னாலான காசுகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
சான்று.

பாலைநில வழியே பெருங்காற்று வீசியதால் உதிர்ந்த வடுவில்லாத நெல்லிக்காய்கள் பொற்காசுகள் உதிர்ந்து கிடப்பனபோல காட்சியளித்தன என்கிறார் மதுரை பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்.

“புல்லிலை நெல்லி புகரில் பசுங்காய்
கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்ப
பொலஞ்செய் காசிற் பொற்பத தாஅம் அத்தம்“
அகநானூறு -363 : 6-8

இப்பாடல் பாடிய புலவர் பொன்னை அணிகலனாகச் செய்யும் கொல்லற் தொழில் செய்திருப்பார் என்பதை இவர் பெயரே உணர்த்துகிறது.
அவரவர் பார்வை அவர் செய்யும் தொழில்சார்ந்தே இருக்கும் என்பதற்கு இவர் சொன்ன பொற்காசுபோன்ற நெல்லி என்னும் உவமையே தக்க சான்றாக அமைகிறது.

பொற்காசுகளைப் போன்ற உகாய்!

குயிலின் கண்களைப் போன்ற காய்களை முற்றி அழகிய பொற்காசு போன்ற நிறமுடைய கனிகளாக உகா மரத்தில் இருந்து வீழும் என்கிறார் காவன் முல்லைப் பூதனார். இதனை,

“குயிற் கண்டன்ன குரூஉக்காய் முற்றி
மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
உகாய் மென்சினை உதிர்வன அழியும்“
அகநானூறு 293: 6-8
என்ற பாடல் அடிகள் விளக்கும்.

இடையில் அணியும் பொற்காசுகள்!

பொன்னாலான பல்வேறு அணிகலன்களையும் சங்க கால மகளிர் அணிந்தனர். மகளிர் காசுகளை மாலையாகச் சேர்த்து அணியும் மரபையும் பாடல்கள் வழி அறியமுடிகிறது.இதனை,

“அம்மா மேனி ஐதமை நுசுப்பின்
பல்காசு நிறைத்த கோடேந்து அல்குல்
மெல்லியல் குறுமகள்“
அகநானூறு 75 : 18-20

என்ற பாடல் அடிகள் இதை விளக்கும்.
தங்கத்துக்கு இணையான மிளகு.

யவனர்கள் பெரிய மரக்கலங்கள் நிறைய தங்கத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டிவிட்டு அதற்கு இணையாக நம் நாட்டில் விளைந்த மிளகை அள்ளிச் சென்றமையை அகநானூறு அடையாளப்படுத்தியுள்ளது.இதனை,


யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

அகநானூறு – 149 : 9-10


தங்கத்தைவிட மதிப்புமிக்க எருமை!

முல்லை நிலத்து ஆயர்குலப் பெண் தான் விற்கும் நெய்யின் விலையாகக் கட்டித் தங்கத்தைக் கொடுத்தாலும் பெறாமல். அவர்களிடமே சேமித்து வைத்து நல்ல பால் தரும் எருமையையே வாங்கினாள் என்பதை,

“நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கரு நாகு பெறும்“
பெரும்பாணாற்றுப்படை 164-165
என்ற அடிகள் விளக்கும்.

அன்பின் உறவுகளே..

காலந்தோறும் தங்கத்தின் மதிப்பு எவ்வாறு மாறி வந்துள்ளது என்பதைப் பார்த்தீர்களா?

யாருக்கும் காத்திராத காலத்தைவிடவா உயர்ந்தது தங்கம்?
அறியாமையைத் தீர்க்கும் கல்வியைவிடச் சிறந்ததா தங்கம்?
குழந்தையின் சிரிப்பைவிட விலை உயர்ந்ததா தங்கம்?
உழைப்பவர் நெற்றி வியர்வையைவிட மதிப்புமிக்கதா தங்கம்?

இவை எல்லாவற்றுக்கும் மேலே போதும் என்ற மனதைவிட உயந்த்தா தங்கம்? என்று சிந்திப்போம்.


தங்கத்துக்கு உயிர் இல்லை!
தங்கத்துக்கு உணர்வு இல்லை!
தங்கத்துக்கு அறிவு இல்லை!
என்று தெளிவோம்.


உயிருள்ள
உணர்வுள்ள
அறிவுள்ள மக்களை, மாக்களை மதிப்போம்!!

46 கருத்துகள்:

  1. //
    பொற்காசுகளைப் போன்ற உகாய்!
    //
    புது வார்த்தை

    பதிலளிநீக்கு
  2. யாருக்கும் காத்திராத காலத்தைவிடவா உயர்ந்தது தங்கம்?
    அறியாமையைத் தீர்க்கும் கல்வியைவிடச் சிறந்ததா தங்கம்?
    குழந்தையின் சிரிப்பைவிட விலை உயர்ந்ததா தங்கம்?
    உழைப்பவர் நெற்றி வியர்வையைவிட மதிப்புமிக்கதா தங்கம்?//

    காலம் கடந்தும் எக்காலத்தும் மதிப்புள்ள
    அசல் தங்கங்களை மிக அழகாகச் சொல்லிப்போனது
    மெய்சிலிர்க்கச் செய்கிறது
    மனம் கொள்ளை கொண்ட பதிவு

    பதிலளிநீக்கு
  3. மீண்டு ஒரு அரிய விளக்கத்தைத் தந்துள்ளீர்கள் !

    பதிலளிநீக்கு
  4. இலக்கியத்துடன் சார்ந்த அறிவுரை பதிவு அகமகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்..

    நா.நிரோஷ்.
    காப்பியங்கள் பற்றி.....

    http://skavithaikal.blogspot.com/2011/09/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  5. // இன்றைய சூழலில் நாம் கூட சொல்லமுடிகிறது. எங்க காலத்துலயெல்லாம் தங்கம் ஒரு கிராம் 300ரூபாய்க்கு விற்றது என்று.. //

    ஹா ஹா! உண்மைதான்!

    பதிலளிநீக்கு
  6. // பாலைநில வழியே பெருங்காற்று வீசியதால் உதிர்ந்த வடுவில்லாத நெல்லிக்காய்கள் பொற்காசுகள் உதிர்ந்து கிடப்பனபோல காட்சியளித்தன //

    படிக்கும் போதே என்னவோ செய்கிறது. அந்த நிலை மீண்டும் வந்து விடாதா!

    பதிலளிநீக்கு
  7. // யவனர்கள் பெரிய மரக்கலங்கள் நிறைய தங்கத்தைக் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டிவிட்டு அதற்கு இணையாக நம் நாட்டில் விளைந்த மிளகை அள்ளிச் சென்றமையை அகநானூறு அடையாளப்படுத்தியுள்ளது //

    ஆஹா!

    பதிலளிநீக்கு
  8. //இவை எல்லாவற்றுக்கும் மேலே போதும் என்ற மனதைவிட உயந்த்தா தங்கம்? என்று சிந்திப்போம்.//

    நல்ல அறிவுரை. எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  9. தங்கமான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. பதிவு தமிழின் தனித் தமையை காட்டுகிறது.
    பாராட்டுகள்..
    தலைப்பும் கரெட்டா பொருந்துது.

    பதிலளிநீக்கு
  11. தங்கமே வேண்டாம் சார்.இந்தமாதிரி தமிழ் படித்தால் போதும்.

    //உயிருள்ள
    உணர்வுள்ள
    அறிவுள்ள மக்களை, மாக்களை மதிப்போம்!!//

    அருமையான வரிகள்.சிறப்பான விளக்கம்.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. தங்கத்தை விட மதிப்பு மிக்க பதிவு..

    பதிலளிநீக்கு
  13. காலம் பார்த்து உழைப்பை வெளிப்படுத்தினால்,நிச்சயம் மற்றவர்கள் விலைப்பாய் கருத்தும் தங்கத்தை எத்தனை வேண்டுமானால் நம்மால் வாங்க முடியுமே என்பதை உணர்த்தி இருக்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  14. ஊக வணிகத்தினால்தான் தங்கத்தின் விலை இவ்வாறு உயர்ந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  15. // போதும் என்ற மனதைவிட உயர்ந்ததா தங்கம்? //
    சிந்திக்க வைக்கும் வார்தைகள். நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  16. அட்டகாசமான பதிவு இது, எனக்கு இது புதுசு நன்றி...!!!

    பதிலளிநீக்கு
  17. மின்னுவதெல்லாம் பொன்னல்ல, மின்னாமல் இருக்கும் பொருள்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளதும் பொன் தான்..

    பதிலளிநீக்கு
  18. நல்ல பகிர்வு .. சில விடயங்களை அறிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  19. தங்கத்தை விட மிகுதி பல இருக்கு!
    இந்த பதிவும் தான்!

    பதிலளிநீக்கு
  20. //“நெய்விலை கட்டிப் பசும்பொன் கொள்ளாள்
    எருமை நல்லான் கரு நாகு பெறும்“
    பெரும்பாணாற்றுப்படை 164-165//
    அது ஒரு பொற்காலம்!

    பதிலளிநீக்கு
  21. முல்லை நிலத்து ஆயர்குலப் பெண் தான் விற்கும் நெய்யின் விலையாகக் கட்டித் தங்கத்தைக் கொடுத்தாலும் பெறாமல். அவர்களிடமே சேமித்து வைத்து நல்ல பால் தரும் எருமையையே வாங்கினாள் என்பதை,//

    நமது பாரம்பரிய நல் உள்ளத்தையும் பணத்திற்காக விலை போகாத குணத்தையும் அந்த பாடலை சுட்டி காட்டி விளக்கியமைக்கு அன்பு முனைவருக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  22. மிக அருமையான பதிவு.

    வேறொரு உறையூர் பற்றிய செய்தியில் தெருவெல்லாம், விளைந்த நெல்லைப்பரப்பி வெயிலில் காயவைத்து விட்டு, பெண்மணிகள் தங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து பாது காப்பார்களாம்.

    கோழிகள் நெல்மணிகளைக் கொத்த வருமாம்.
    தங்களின் காதில் அணிந்திருக்கும் மிகப்பெரியதும் எடை அதிகமானதுமான தங்கத்தோட்டைக் கழட்டி, அதனால் அடித்து கோழிகளை விரட்டுவார்களாம்.

    தங்கத்தை விட நெல்மணிகளைப் பொக்கிஷமாக காத்திருக்கிறார்கள். தங்கத்தோடு போனாலும் போகட்டும் என (கற்கள் போல நினைத்து) கோழியை விரட்டும் அளவுக்கு செல்வச்செழிப்போடு வாழ்ந்துள்ளனர், என்பதையும் அறிய முடிகிறது.


    வெகு அழகாக என்னைக் கவர்ந்த வரிகள்:

    யாருக்கும் காத்திராத காலத்தைவிடவா உயர்ந்தது தங்கம்?
    அறியாமையைத் தீர்க்கும் கல்வியைவிடச் சிறந்ததா தங்கம்?
    குழந்தையின் சிரிப்பைவிட விலை உயர்ந்ததா தங்கம்?
    உழைப்பவர் நெற்றி வியர்வையைவிட மதிப்புமிக்கதா தங்கம்?

    இவை எல்லாவற்றுக்கும் மேலே போதும் என்ற மனதைவிட உயந்த்தா தங்கம்? என்று சிந்திப்போம்.

    தங்கத்துக்கு உயிர் இல்லை!
    தங்கத்துக்கு உணர்வு இல்லை!
    தங்கத்துக்கு அறிவு இல்லை!
    என்று தெளிவோம்.

    உயிருள்ள
    உணர்வுள்ள
    அறிவுள்ள மக்களை, மாக்களை மதிப்போம்!!//

    சபாஷ். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

    தங்களுக்கு இன்று தமிழ்மணத்தில் 10 out of 10 கொடுக்க எனக்கு வாய்ப்பு அமைந்ததை எண்ணி மகிழ்கிறேன்.


    Voted 10 to 11 in Indli & 9 to 10 in Tamilmanam.

    பதிலளிநீக்கு
  23. நெற்றியில் அடித்தாற்போல் அறிவூட்டும் பதிவு..
    என்னதான் விலையேறினாலும் நகைக்கடைகளில்
    மட்டும் கூட்டத்துக்கு குறைச்சலே இல்லை.
    இதோ தங்கத்தைவிட் சிறந்தவைகள் ஆயிரம் உண்டென
    உங்கள் படைப்பு எல்லோரையும் போய் சேரட்டும்.

    உகா மரம்
    கேட்டறியா மரத்தின் பெயர்..
    இதற்கு இன்றையகாலத்துப் பெயரேதும்
    உள்ளதா முனைவரே...

    பதிலளிநீக்கு
  24. எது தங்கம், எவை தங்கம் என்று புடம்போடும் பதிவு..

    பகிர்வுக்கு மிக்க நன்றி.. நண்பரே..

    பதிலளிநீக்கு
  25. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கூரிய கதைதான் எனக்கும் ஞாபகம் வந்தது...தண்டட்டி(காதில் அணிவது)யை தூக்கி எறிந்து கோழியை விரட்டிய காலம் ஒரு காலம்!மனிதன் பொன்னுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏழை மனிதனுக்கு கொடுத்தால் நன்மை உண்டு...
    அருமையாய் எழுதியிருக்கீங்க குணசீலன்.

    பதிலளிநீக்கு
  26. தங்கத்தைவிட மழலையின் கல்விக்கு கைக்கொடுப்போம் அர்த்தங்களுடன் அறிவுரை நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  27. அறிவூட்டும் பதிவு...அருமையாய் எழுதியிருக்கீங்க முனைவரே...

    பதிலளிநீக்கு
  28. தங்கத்துக்கு உயிர் இல்லை!
    தங்கத்துக்கு உணர்வு இல்லை!
    தங்கத்துக்கு அறிவு இல்லை!
    என்று தெளிவோம்.
    அறிவுள்ள மக்களை, மாக்களை மதிப்போம்!!

    அருமையான உணவு உள்ள பகிர்வுக்கு மிக்க
    நன்றி வாழ்த்துக்கள் .......

    பதிலளிநீக்கு
  29. சுவாரஸ்யமான பதிவு. வைகோ சார் ரசித்த வரிகளை நானும் ரசித்தேன். உகாய்! உகா மரம்....அப்படியென்றால் என்ன மரமாயிருக்கும்?

    பதிலளிநீக்கு
  30. ஒரு பொருளை ஏற்றம் பெறச் செய்வதும் இழிவுபடுத்துவதும் மக்கள் மனத்தைப் பொறுத்தே உள்ளது. மொத்தமாய்ப் புறக்கணித்தால் விலை ஏறுமா தங்கம்?

    எது உண்மையான மதிப்பு கொண்டது என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள். பழம்பாடல்கள் மூலம் பண்டைய தமிழரின் எண்ணங்களையும் வாழ்வையும் அறியமுடிகிறது. தொடரட்டும் உங்கள் தமிழ்ச்சேவை.

    பதிலளிநீக்கு
  31. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜா

    மிக்க மகிழ்ச்சி இரமணி ஐயா

    மகிழ்ச்சி பாலா

    நன்றி நிரோஷ் பார்க்கிறேன்

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாலாஜி

    பதிலளிநீக்கு
  32. மகிழ்ச்சி காந்தி

    நன்றி இரத்தினவேல் ஐயா

    நன்றி இராம்வி

    நன்றி பாரத் பாரதி

    உண்மைதான் கோவி நல்ல சொல்லாட்சி

    நன்றி நண்டு

    பதிலளிநீக்கு
  33. நன்றி நடனசபாபதி ஐயா
    நன்றி மனோ
    மகிழ்ச்சி சூர்ய ஜீவா
    நன்றி அரசன்
    நன்றி கோகுல்
    உண்மைதான் சென்னைப் பித்தன் ஐயா

    புரிதலுக்கு நன்றி மாயஉலகம்

    பதிலளிநீக்கு
  34. சுடர் நுதல் மடநோக்கின் நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் முக்கால் சிறு தேர் முன்வழி விலக்கும்

    பட்டினப் பாலை - 21-25

    தங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும்
    புரிதலுக்கும்
    மேற்கோளுக்கும்
    கருத்துரைக்கும் நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

    பதிலளிநீக்கு
  35. மிக்க மகிழ்ச்சி மகேந்திரன்

    நானறிந்தவரை உகாய் மரங்கள் இப்போது அழிந்துவிட்டன என்றே கருதுகிறேன். மனிதன் காலடிபடாத காடுகளில் இருந்தால் மட்டுமே இப்போதும் இம்மரங்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது.

    தங்கள் வருகைக்கும் கருததுரைக்கும், வினவலுக்கும்,
    விருதினைத் தங்கள் வலையில் அணிந்தமைக்கும் நன்றிகள் நண்பா

    பதிலளிநீக்கு
  36. நன்றி ராஜா MVS

    தங்கள் தொடர்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  37. நன்றி நேசன்
    நன்றி ரெவரி
    நன்றி பழமைபேசி
    நன்றி அம்பாளடியாள்
    நன்றி ஸ்ரீராம்
    மகிழ்ச்சி கீதா

    பதிலளிநீக்கு
  38. உங்கள் தமிழ் அறிவும் ஆர்வமும் ஆச்சரியப் படுத்துகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. பெயரில்லா16 மே, 2014 அன்று AM 7:20

    சுதாகர் என்ற பெயரின் பொருள் என்ன

    பதிலளிநீக்கு