வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 4 டிசம்பர், 2008

தமிழ்ச்சிந்தனைகள்

என் கேள்விக்கு என்ன பதில்

என்னும் தலைப்பில் தமிழாய்வின் இன்றைய நிலை குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு கருத்துரை வழங்கிய நெஞ்சங்களுக்கு நன்றி…….


தமிழாய்வு குறித்த சிந்தனையாக இக்கட்டுரை அமைகிறது..

(கருத்துரை
1.aadippaavai said..(http://aadippaavai.blogspot.com/)
ஆம் உண்மைதான்.................
November 7, 2008 5:22 AM

2. அதிரை ஜமால் said..(http://adiraijamal.blogspot.com/)
நீங்கள் சொல்லியிருப்பவை உண்மையே
ஆனாலும் தமிழ் ஆய்வுன்னா - என்னதாங்க ?
November 20, 2008 8:17 PM

3.முனைவர் சே.கல்பனா said.(http://kalpanase.blogspot.com/)
வணக்கம்
தமிழாய்வின் நிலை தாழ்ந்து கொண்டிருப்பது உண்மை தான்.ஆய்வை எவ்வாறு நாம் தரப்படுப்புவது கூறுங்களேன்.
நன்றி.
November 21, 2008 5:54 AM

4. சே.வேங்கடசுப்ரமணியன். said..(http://thogamalaiphc.blogspot.com/)
நல்ல கருத்துக்கள் வரவேற்கிறேன்.
November 22, 2008 9:05 AM)

தமிழ்ச் சிந்தனை

அறிவியலே இன்றைய மானிட வளர்ச்சிக்கு அடிப்படை.தமிழில் அறிவியல் குறித்த செய்திகள் நிறைய உள்ளன.ஆனால் அறிவியலில் தான் தமிழ் குறித்த செய்திகள் குறைவு.அதற்கு நாம் நம் தாய்மொழியைப் புறக்கணித்ததும் ஒரு காரணமாகும்.
தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை
தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை
என்பது சான்றோர் வாக்கு.

ஒவ்வொரு மனிதனும் தன் தாய்மொழி வழியே சிந்தித்தால் தன் கருத்தை முழுமையாகவும்,ஆழமாகவும்,தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில் விஞ்ஞானம் மொழிகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு சில குறியீடுகளையே தன் மொழியாகக் கொள்ளப்போகிறது.அந்த சூழலில் செம்மொழிகள் சில மட்டுமே வழக்கில் இருக்கும்.
இன்றைய போக்கில் தமிழர் சிந்தனையும்,தமிழாய்வும் சென்றால் தமிழ் மொழி வழக்கொழிந்து போக வாய்ப்புள்ளது.

நாம் செய்யவேண்டியன

அறிவியல் துறையின் மணிமகுடமாகத் திகழ்வது கணிப்பொறி. கணிப்பொறியின் வளர்ச்சி நிலை இணையம்.தமிழர்கள் இணையம் குறித்த ஆழமான அறிவு பெற வேண்ணடும்.
அறிவியற்தமிழ் குறித்த ஆய்வு
இணையத்தமிழ் குறித்த ஆய்வு
இவையிரண்டும் இன்று தேவையான ஆய்வுகளாகும். நாம் தான் தாய்மொழி வழியே எல்லா அறிவியற்துறைகளையும் படிக்கும் வாய்ப்பிழந்து போனோம்.நம் வருங்காலத் தலைமுறையினராவது தாய்மொழிவழியே எல்லா அறிவியற்துறைகளையும் படிக்க வழிவகை செய்ய வேண்டும் அதில் உள்ள குறைகளைக் கண்டு களைய வேண்டும்.

முச்சங்கம் வைத்ததும் மூன்றுதமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.வலைமொழியில் சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.யாதும் ஊராக யாவரும் கேளிராக உலகுபரவி வாழும் தமிழர்களை இணையவழியே தமிழால் இணைப்பது நம் நாளையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் மொழி எதிர்காலத்தில் நிலைத்திருக்கும்.மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்பதை நாம் உணர வேண்டும்.






கவிஞர்.வைரமுத்து -
இதனால் சகலமானவர்களுக்;கும் என்ற நூலில் தமிழாய்வு குறித்தும்,அறிவியற்றமிழ் குறித்தும் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

இன்றின் தேவை என்பது என்ன?
தமிழினம் இருந்தது எங்ஙனம்?இழிந்தது எங்ஙனம்?
இவைதாம் ஆராய்ச்சியாளரின் அவசரத் தேவை.

இனம் ,மொழி , கலை , நாகரீகம் , பண்பாடு , பொருளாதாரம் போன்ற துறைகளை உழுதுபார்க்கவும் , பழுதுபார்க்கவுமான எழுதுகோல்கள் எழவேண்டும் .
ஒவ்வோர் ஆராய்ச்சியின் முடிவிலும் சிலநூற்றாண்டு சிக்கல்கள் அறுத்தெறியப்பட வேண்டும் .என ஆய்வின் தேவையை அறிவுறுத்துகிறார்.
இன்றைய ஆய்வு பற்றி கவிஞர் வைரமுத்து குறிப்பிடும் சிறுகதை

தவளை ஆராய்ச்சி செய்தான் ஒரு ஆராய்ச்சியாளன்.
ஒரு பலகையில் தவளையை உட்கார வைத்து அதன் ஒரு காலை வெட்டினான்.குதி என்றான் தவளை குதித்தது.
மறுகாலையும் வெட்டினான் குதி என்றான் தவளை குதித்தது.
மூன்றாம் காலையும் வெட்டினான் குதி என்றான் தவளை குதித்தது.
நான்காம் காலையும் வெட்டினான் குதி என்றான் குதிக்கவில்லை.
உடனே தான் கண்டறிந்த உண்மையை ஆய்வேட்டில் இவ்வாறு எழுதினான்
“நான்கு கால்கலையும் வெட்டிவிட்டால் தவளைக்;குக் காது கேட்காது என்று.”
இதுதான் இன்றைய ஆய்வின் நிலை.

அறிவியற்றமிழின் தேவை

 தமிழ் பக்தியாளர்களே நீங்கள் கோபுரங்களில் குடியிருக்க முடியாது.இறங்கி வாருங்கள்.
 நம்மை விட்டு விட்டு பூமி வேகமாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கவே இல்லை.
 உலகத்தின் எல்லாக் கரைகளிலும் அறிவியல் சமுத்திரத்தின் அலைகள் அடிக்க ஆரம்பித்துவிட்டன.
 நமது இனமும் அந்த அலையில் காலை நனைத்திருக்கிறது. என்று கூட சொல்லமாட்டேன்.
 அடித்த அலையின் வேகத்தில் நமது இனமும் கொஞ்சம் நனைந்திருக்கிறது என்று சொல்லுவேன்.
 உலக விஞ்ஞானம் மண்ணைத் துழாவியும் விண்ணை அளாவியும் காலத்தின் தேவைகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறது.
 நாம் குறைந்தபட்சம் அந்தப்பொருள்களின் பெயர்களையாவது தமிழில் கண்டுபிடித்தோமா?
 தமிழைக் காவியமொழி என்று சொல்லியே நிறுத்திவிடாதீர்கள்.தமிழ் நீட்சிகொண்டது நீங்கள் தான் நீட்டிக்கத் தயாராய் இல்லை.சற்றே தமிழுக்கு சுதந்திரம் கொடுங்கள்.
 தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும் இடுப்பில் மணிமேகலையும் பாதத்தில் சிலம்பு மட்டும் போதாது. அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
 தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவு ஜீவிகளே!
 நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை தமிழில் யோசிக்கவும் இல்லை.
 முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருபது போல நமது முத்த மொழியும் வைரம பாய்ந்திருக்கிறது.
 நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.ஆனால் அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுக்கக் கர்வப்படலாம்.
 ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்காள மொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக்குளிக்கவே இல்லை.
 பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாய் லிபிகள் இல்லை.
 ஆனால் உலகத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய பழைய மொழிகளில் குரல் விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
 ஊர்ச்சொற்கள் அனைத்திலும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்.
 இன்னும் இரண்டு மூன்று கடல்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.ஆனால் இந்த நூற்றாண்டுக்குத் தேவையான அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.


ஓ விஞ்ஞானமே
அறிவு கொடு!
ஏ தமிழா
உணர்வு கொடு!

என்று இயம்புகிறார்.

2 கருத்துகள்: