வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

!திருவள்ளுவரின் மகன்!


ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒவ்வொரு வகை.
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கும்.

எனக்குப் பாடம் எடுத்த ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்தும் பல்வேறு பண்புகளை நான் படித்த காலத்திலேயே பகுப்பாய்வு செய்திருக்கிறேன்.

இவரிடம் இது நல்ல பண்பு
இவரிடம் இது கெட்ட பண்பு
இவரைப் போலப் பாடம் எடுக்கவேண்டும்
இவரைப் போலப் பாடம் நடத்தக்கூடாது என்று நிறைய அவர்கள் நடத்திய பாடங்களைக் காட்டிலும் அவர்களின் பண்புகளைக் கற்று வந்திருக்கிறேன். இக்கல்வி இன்று நான் பாடம் எடுக்க எனக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது.

எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் ஒருவர் முதல் பாடவேளையென்றால் பொதுவாக ஏதாவது ஒரு சிந்தனை குறித்து 10 நிமிடங்களாவது பேசிவிட்டுத்தான் பாடத்துக்கே செல்வார். அது பாடப்பொருள் குறித்தோ, சமுதாயம் குறித்தோ, வாழ்க்கை குறித்தோ. இருக்கும் இது எனக்கு மிகவும் பிடிக்கும்..

நான் அப்போதே என் மனதில் பதியவைத்திருக்கிறேன் நாம் ஆசிரியரானால் இந்த முறையைப் பின்பற்றவேண்டும் என்று...

என்னால் முடிந்தவரை இன்று வரை நான் செல்லும் வகுப்புகளில் இந்த முறையைப் பின்பற்றி வருகிறேன்.

இதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு..

திருக்குறள் குறித்த சிந்தனை மாணவர்களுக்குப் பரவலாக வரவேண்டும் அதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்து சில காலமாக இம்முறையைப் பின்பற்றி வருகிறேன். இம்முறை மாணவர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நான் மறந்துவிட்டாலும்..

ஐயா இன்று ஒரு குறள் கேட்காமல் போகிறீர்களே என்பார்கள்..

வேறொன்றும் இல்லை..

வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என்றால்..
ஒருவர் ஒரே ஒரு குறள் மட்டும் தெளிவாகச் சொல்லி விளக்கமும் சொல்லவேண்டும். அதை நான் எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கேட்பேன். இதுதான் விதிமுறை..

இம்முறையைப் பின்பற்றுவதால் குறைந்த பட்சம் ஒருவர் ஒரு குறளையாவது ஆழமாகப் படிக்கிறார். அவர் சொல்லும் போது பிறமாணவர்களுக்கும் அது போய்ச்சேருகிறது. அவர்கள் எந்தக் குறள் சொன்னாலும். அதோடு தொடர்புயைய பிற குறள்களையும் அதுதொடர்பான கருத்துக்களையும், கதைகளையும், நகைச்சுவைகளையும் நான் அவர்களிடம் பகிர்ந்துகொள்வதுண்டு. அதனால் மாணவர்களுக்கு இந்தமுறை பெரிதும் பிடித்திருக்கிறது.

என்னைப் போன்ற விரிவுரையாளர்களும்,ஆசிரியர்களும் இதுபோன்ற பாடத்துக்கு அப்பாற்பட்ட திருக்குறள் குறித்த சிந்தனைகளை மாணவர்களிடம் பரப்பலாமே என்ற கருத்தை என் சிந்தனையாக உங்கள் முன்வைக்கிறேன்..

ஒருநாள் இப்படித்தான் குறள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது..

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்

(திருக்குறள் -69)

என்ற குறளைச் சொல்லி அதன் பொருளும் பேசினோம்..
(தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிட பெரிதும் மகிழ்ச்சிடைவாள்.)

சங்ககாலத்தில் சான்றோன் என்றால் வீரன் என்று பொருள். என்று அன்றைய காலம் தொடங்கி இன்றுவரை சான்றோன் என்ற சொல்லுக்கான மரபு மாற்றங்களைப் பேசி..

மாணவர்களிடம் இப்படியொரு கேள்வியை முன்வைத்தேன்..

இதில் வள்ளுவர் ஏன் “தன் மகனை” என்று சொல்லியிருக்கிறார்?
தன் மகளை என்று ஏன் சொல்லவில்லை?
என்பதே என் வினா.

என் எதிர்பார்ப்பு...

காலந்தோறும் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், மானிடவியல் கோட்பாடுகள், தாய்வழிச்சமூகம்..

என ஏதாவது ஒரு பொருளில் மாணவர்கள் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன்..

நான் சற்றும் எதிர்பாராத பதிலை ஒரு மாணவர் சொன்னார்..

ஐயா.. 
வள்ளுவர் ஏன் மகன் என்று குறிப்பிட்டார் என்றால்...
ஒருவேளை அவருக்குப் பிறந்தது மகனாக இருக்கலாம்.. அதனால் தான் அவ்வாறு கூறியிருப்பார். ஒருவேளை அவருக்கு மகள் பிறந்திருந்தாள் அவரும் தன் மகளை என்றே சொல்லியிருப்பார். என்றார்..

இப்படியொரு பதிலை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை!
நான் படித்த காலத்தில் திருவள்ளுவ மாலையில் திருவள்ளுவரின் வரலாறு  பற்றிப் படித்த நினைவுகள் எல்லாம் வந்து வந்து சென்றன. இந்த மாணவர்கள் அதெல்லாம் படிக்காவிட்டாலும் எப்படி இப்படி இவர்களால் சொல்லமுடிகிறது.. எல்லாம் இவர்களின் கற்பனை ஆற்றல் தான் என்று எண்ணிக்கொண்டு..
மனப்பாடம் மட்டுமே செய்து, 
நூலில் உள்ளதை தேர்வுத்தாளுக்கு படியெடுக்கும் மாணவர் சமூகம் எப்படியோ தானாக சிந்திக்கிறதே அதுவும் குறள் குறித்து சிந்திக்கிறதே என்று பாராட்டி...

வள்ளுவர் இன்றிருந்திருந்தால்.

தன் மகனை என்றோ
தன் மகளை என்றோ
பாடியிருக்கமாட்டார்
தன் மக்களை 
என்றே பாடியிருப்பார் என்று கால மாற்றத்தை அவர்களுக்குப் புரியவைத்துவிட்டு..
நடத்தவேண்டிய பாடத்துக்குச் சென்றேன்.
தொடர்புடைய இடுககைள்

20 கருத்துகள்:

  1. அப்பாக்களுக்கு பொண்ணுகள் தான் பிடிக்கும் ...

    அம்மாக்களுக்கு பையன்கள் தான் பிடிக்கும் ...


    ஒரு சின்ன விஷயம் பண்ணுனாவே அம்மக்கள் பசங்களை தூக்கி வைத்து பெருமை படுவாங்க ...அதான் அந்த அந்த இடத்தில் தாய் வந்து இருப்பதால் மகன் ன்னு சொல்லி இருக்காங்க ..இதே தந்தை அப்புடி ன்னு முடித்து இருதால் மகளே அப்புடின்னு போட்டு இருப்பார் ....

    கலை உங்க வகுப்பில் இருந்தால் நீங்க இன்னும் நிறைய கேள்வி கேட்டு உங்களை confuseபண்ணுவேன் சார் ....
    சரி விடுங்க எங்க டீச்சர் கிட்ட வந்து என்னை போட்டு கொடுதுடாதிங்க ..

    பதிலளிநீக்கு
  2. ayya manavrin arivu ennai-
    silirkka vAiththathu!

    ungalin anupavamum!
    yosikka vaikkirathu!

    பதிலளிநீக்கு
  3. சமூகத்தில் ஆண் பிள்ளை என்பதில் ஒரு பெருமதிப்பு.வள்ளுவரும் ஒரு ஆண்தானே !

    பதிலளிநீக்கு
  4. தங்களின் தமிழும் அதைச் சார்ந்த பதிவுகளும் அனுபவமும் அருமையாக உள்ளன. மாணவர்களுக்கு முதலில் சில நிமிடங்கள் பேசிவிட்டு வகுப்பு எடுத்தால் அவர்களும் கவனிக்க ஆரம்பித்துவிடுவார்கள். உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  5. ubayogamulla padhivu idhai ingirukkum thamizh aasiriyarmaar pinpattralaame
    nandri
    surendran

    பதிலளிநீக்கு
  6. ம்...

    மக்கட்பேறுவில் வரும் குறட்கள் 69,70 தவிர மற்றவற்றில் மக்கள் என்று தான் (மகற்கு-67 -என்பதும்)பொதுமையாக கூறுகிறார்.

    சான்றோன் = தீமை பயக்காதவன்.

    நம் பாரத்தை தாங்குவது இவ்வுலகு (990),
    நம்மை தாங்கியவள் தாய் (69).

    தாய்மையைபற்றியும்,பிரசவ வலியை பற்றியும் பெண்களுக்கு சொல்லத்தேவையில்லை.

    பொதுவாக பெண்கள் அனைவரும் சான்றாண்மை கொண்டவர்களே.
    ஆண் தான் இங்கு பிரச்சனை.
    அதனால் தாய் -மகன் என மட்டும் இங்கு குறிப்பிடப்பட்டது.

    சான்றாண்மை குன்றினால் தாயும் உலகும் தாங்காது என்ற வலியை உணர்த்தவே இது.

    ...

    அவ்வளவே.

    பதிலளிநீக்கு
  7. குணா , மாணவ கண்மணிகளுக்கு நீங்கள் கூறியதை உங்கள் அனுமதியின்றி முகப் புத்தகத்தில் பகிர்ந்து கொண்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு