வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 3 ஜூன், 2012

தேடினால் கிடைக்கும் வா..


உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள்
நண்பனுக்காக உயிரையும் கொடுக்கலாம் ஆனால் உயிரைக் கொடுப்பதற்கு ஏற்ற நண்பன் கிடைப்பது தான் அரிது என்றும் பலர் புலம்புவதுண்டு.
இன்பம் வந்தபோது மட்டும் கலந்துறவாடி, துன்பம் வந்தபோது ஓடி மறைவதல்ல நட்பு..
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச்செய்து,அழிவு வந்தபோதும் உடனிருந்து துன்பப்படுவதே நட்பு என்பார் வள்ளுவர். இதனை,
அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு (குறள்787)
என்ற குறள் விளக்கும்.
தன் தலைவனை நீங்கி வாடும் தலைவியின் மனம் மகிழ்ச்சியுறுமாறு தன்னம்பிக்கை மொழிகளைப் பேசுகிறாள் தோழி ஒருத்தி.
தலைவனை நீங்கிய தலைவி அவன் நினைவாகவே வருந்தியிருக்கிறாள். அவளை ஆற்றுப்படுத்துவதாகத் தோழி பேசுகிறாள்.
தோழி.. தலைவனைக் காணோம், தலைவனைக் காணோம் என்று ஏன் மயங்குகிறாய்,
  • நம் தலைவர் நிலத்திற்கு உள்ளே நுழையவில்லை. 
  • வானத்திற்கும் ஏறவில்லை. 
  • பெரியக் கடல் உள்ளும் நடந்துச் செல்லவில்லை. 
  • நாம் அவரை நாடுகள் தோறும், 
  • ஊர்கள் தோறும், 
  • குடிகள் தோறும் முறையாகத் தேடினால் 
  • அகப்படாமல் போய் விடுவாரா?


என்று தலைவியைத் தேற்றுகிறாள் தோழி..

பாடல் இதோ..
நிலந்தொட்டுப் புகார் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காலில் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ நம் காதலோரே.


குறுந்தொகை 130, வெள்ளி வீதியார்,

  • நிலத்திற்கு உள்ளே நாகஉலகத்துக் கன்னியரை விரும்பி நிலத்தை அகழ்ந்து அவ்வுலகிலே புகுந்திருப்பாரோ?
  • வானுலகில் வாழும் அரமகளிரை விரும்பிக் காலால் தேவ உலகிற்கு ஏறிச் சென்றிருப்பாரோ?
  • இம்மண்ணுலகில் நீரர மகளிரை விரும்பி அக்கரைக்கும் இக்கரைக்குமாகக் குறுக்கே கிடக்கின்ற பெருங்கடலில் காலால் நடந்து சென்றிருப்பாரோ? 
  • நம்நாட்டிலும், பிறநாடுகளிலும், நம் ஊரிலும் பிற ஊர்களிலும் ஒவ்வொரு குடியாக முறையாகத் தேடினால் அகப்படாமல் தப்பி வேறிடம் சென்றிடுவாரோ!!!
என தன்னம்பிக்கை மொழிகளைப் பேசுகிறாள் தோழி.

இப்படி நேர்மறையான எண்ணங்களையும், தன்னம்பிக்கை 
மொழிகளையும் பேசும் நண்பனோ, தோழியோ அருகே இருந்தால், பெரிய மலைகளும் சிறு கற்களாகவே நமக்குத் தோன்றும்.

தொடர்புடைய இடுகைகள்


14 கருத்துகள்:

  1. ஒருவன் தப்பான ரூட்டுல போனா அவனை தடுத்து நிறுத்தி நேர்வழிக்கு அழைத்து வந்து அவனையும் வாழவிட்டு தானும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் வந்தார்கள் வள்ளுவர் காலத்து நண்பர்கள்..,

    இப்போதுள்ள நண்பர்களோ ஒருவன் நேர்வழியில் சென்றுகொண்டிருந்தாலும் கூட அவனை கன்பியூஸ்பன்னி தீயவழியில் தள்ளிவிட்டு அவனையும் அழித்து தானும் அழிகிறார்கள்..,

    அருமையான பாடல் நல்ல விளக்கம் முனைவர் சார் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன் மதிப்பீட்டுக்கும், ஒப்பிட்டு நோக்கியமைக்கும் நன்றி நண்பா.

      நீக்கு
  2. நேர்மறையான எண்ணங்களையும், தன்னம்பிக்கை
    மொழிகளையும் பேசும் நண்பனோ, தோழியோ அருகே இருந்தால், பெரிய மலைகளும் சிறு கற்களாகவே நமக்குத் தோன்றும்.

    அவரைத் தேடிக் கண்டடைவோம்.. !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி

      நீக்கு
  3. நட்பின் பெருமையை வள்ளுவர் வழியில் விளக்கினீர்!
    நன்று முனைவரே!

    த ம ஓ 8

    பதிலளிநீக்கு
  4. அறிய தகவல்களும் விளக்கமும் பகிர்வுக்கு நன்றி .
    Tha.ma.9

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. நட்பின் மகத்துவம் விளக்கும் அருமையான வரிகள். இப்படியொரு நட்பு அருகில் இருந்தால் நாளடைவில் கவலைகளும் நீர்த்துப்போகும். அருமையான பழம்பாடல் பகிர்வுக்கும், குறள் மேற்கோளுக்கும் நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு