வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 9 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 133. ஊடலுவகை


 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அளிக்கு மாறு. - 1321

தவறின்றியும், தவறு காணுதல் அவா் அன்பை பெறும் வழியன்றோ 

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி

வாடினும் பாடு பெறும். - 1322

ஊடலால் வரும் சிறுதுன்பத்தால், அன்பு குறையினும் பெருமை பெறும்

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னார் அகத்து. - 1323

நிலத்துடன் நீர் சேர்ந்தது போன்றவருடன் ஊடுதலைவிட பேரின்பம் ஏது

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்

உள்ளம் உடைக்கும் படை.- 1324

கூடலுக்குக் காரணமான ஊடல் தான், என் மனவுறுதியை அழிக்கிறது  

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்

அகறலின் ஆங்கொன் றுடைத்து. - 1325

தவறின்றியும் அவள்மீது சிறுகோபம் கொண்டு நீங்கியிருத்தலும் சுகமே

உணலினும் உண்டது அறல்இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது. -1326

உண்பதைவிட செரித்தல் இனிது, கூடுவதைவிட ஊடுவது இனிது     

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலிற் காணப் படும். - 1327

ஊடலில் தோற்றவரே வென்றார், அது கூடுதலில் வெளிப்படும்

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்

கூடலில் தோன்றிய உப்பு. -1328

கூடிப் பெறும் இன்பத்தை, இவளை ஒருமுறை ஊடிப் பின் பெறுவோமா

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

நீடுக மன்னோ இரா. - 1329

அவள் ஊடியே இருக்கட்டும், அவளை வேண்டியே இவ்விரவு நீளட்டும் 

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின். - 1330

ஊடுவதே காமத்திற்கு இன்பம், கூடித் தழுவுதலே ஊடலுக்கு இன்பம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக