வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 18 ஜனவரி, 2021

காட்டு வழி... காட்டும் வழி...

 


சங்கப் பாடல்களுள் அகநானூற்றுப் பாடல்கள் பழந்தமிழரின் அகவாழ்வியலைச் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன. அகவாழ்வில் களவு எனப்பட்ட காதலும், கற்பு எனப்பட்ட திருமணவாழ்வும் பல்வேறு நிலைகளில் எடுத்தியம்பப்பட்டுள்ளன. களவும் கற்று மற என்று சொன்ன நம் முன்னோர் மரபுகளை இலக்கியங்கள் வழி அறிந்துகொள்ளமுடிகிறது. காதல் என்றால் என்ன, காதல் என்பது எதுவரை? காதல்  வரைவாக மாறவேண்டிய காரணங்களையும் பாடல்களின் வழியாக அறியமுடிகிறது. இப்பாடலில், திருமணத்தைப் பற்றியே நினைக்காமல் ஒரு தலைவன் காதலித்துக்கொண்டிருக்கிறான். இரவு நேரத்தில் கூட தலைவியைக் காண கொடிய பாதையில் வருகிறான். அவன் தவறை அவனுக்கு உணர்த்தி, அவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது.

 

இருள்கிழிப் பதுபோல் மின்னி வானம்

துளிதலைக் கொண்ட நளிபெயல் நடுநாள்

மின்மினி மொய்த்த முரவுவாய்ப் புற்றம்

பொன்னெறி பிதிரிற் சுடர வாங்கிக்

குரும்பி கெண்டும் பெருங்கை ஏற்றை

இரும்புசெய் கொல்லெனத் தோன்றும் ஆங்கண்

ஆறே அருமர பினவே யாறே

சுட்டுநர்ப் பனிக்கஞ் சூருடை முதலைய

கழைமாய் நீத்தம் கல்பொரு திரங்க

அஞ்சுவந் தமியம் என்னாது மஞ்சுசுமந்

தாடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்

ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய

இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை

நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த

மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்

வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை

உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி

அருள்புரி நெஞ்சமோ டெஃகுதுணை யாக

வந்தோன் கொடியனும் அல்லன் தந்த

நீதவ றுடையையும் அல்லை நின்வயின்

ஆனா அரும்படர் செய்த

யானே தோழி தவறுடை யேனே.

                     -எருமை வெளியனார் மகனார் கடலனார்.

அகநானூறு 72. குறிஞ்சி

 

தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாகத் தலை மகள் தோழிக்குச் சொல்லியது.

தோழி தலைமகட்குச் சொல்லி யதூஉமாம்.

 

சிறைப்புறம் – இரவு நேரத்தில் தலைவியைக் காணத் தலைவன் வருவதுண்டு. இந்த சந்திப்பை இரவுக் குறி என்பர். தலைவன் தலைவியும் தோழியும் இருக்கும் இடத்திற்கு அருகில் மரத்தின் பின்னே மறைந்திருப்பான். அவன் மறைந்திருப்பதை தலைவியும் தோழியும் நன்கு அறிவார்கள். இருந்தாலும் அறியாதது போலவே தமக்குள் பேசிக்கொள்வார்கள். அவர்கள் பேசுவதைத் தலைவன் கேட்பான். தலைவனிடம் நேரடியாக சொல்லமுடியாத செய்திகளை இவ்வாறு இருவரும் பேசிக்கொள்ளும்போது அவனுக்குப் புரியவைப்பது சங்க கால மரபு.

     இந்தப் பாடலில் தலைவன் இரவில் தலைவியைச் சந்திக்க, கொடிய பாதையில் வருகிறான். அவன் வரும் பாதையோ கரடி, காட்டுப் பன்றி, கொடிய முதலை, பாம்பு என கொடிய விலங்குகள் வாழக்கூடியது. அவன் இவ்வாறு வந்து செல்வதால் தலைவி அடையும் துயரங்களை அவனுக்கு உணர்த்தி திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாக இப்பாடல் அமைகிறது.

 

இருளைக் கிழிப்பதுபோல் வானம் மின்னுகிறது.

மழை கொட்டி உடல் நடுங்கும் நடு இரவுப்பொழுதில்,

கரடி உணவுக்காகக் கறையான் புற்றைக் தோண்டும், அதிலிருந்து

மின்னமினிப் பூச்சிகள் பறக்கின்றன. அது கொல்லன் உலைக்களத்தில்ப் தீப்பொறி பறப்பது போல் காணப்படுகிறது.

தலைவன் வரும் வழியோ கொடுமையானது.

அவன் கடக்கும் ஆறோ நினைத்தாலே நடுங்கவைக்கும் கொடிய முதலைகளைக் கொண்டது.

படகு, தள்ளும் மூங்கிலை ஊன்றமுடியாத அளவுக்கு ஆற்றில் வெள்ளம் பெருகி வருகிறது.

தனியே வருகிறோமே என்று எண்ணாமல் தலைவன் அஞ்சாமல்

தலைவியைக் காண வருகிறான்.

மேகங்கள் மூடிக்கிடக்கும் மூங்கில் காட்டு மலைப்பிளவு வழியில்

வருகிறான். கருவை வயிற்றில் தாங்கிக்கொண்டு இரண்டு உயிருடன்

இருக்கும் தன் பெண் புலியின் பசியைப் போக்குவதற்காக, ஆண்புலியானது

ஆண் பன்றியைத் தாக்கி பாம்பு உமிழ்ந்த மணி வெளிச்சத்தில்

இழுத்துக்கொண்டு வருகிறது.

வாளின் கூர்மை போன்ற பாதையில் கையில் வேலுடன் அவன் வருகிறான். நினைத்தாலே  நடுங்கவைக்கும் கொடிய பாதையென்றாலும் உன்னைக் காணும் ஆவலுடன் உனக்கு அருள் புரிய வருகிறான்.

அப்படி வரும் அவனும் கொடியவன் இல்லை.

அவனுக்கு உன்னைத் தந்தாயே நீயும் கொடியவள் இல்லை.

உங்கள் இருவரையும் கூட்டிவைத்த நானே தவறு செய்தவள் ஆவேன்.

என்று சொல்கிறாள் தோழி.

 

உள்ளுறை

பெண் புலியின் பசியைப் போக்குவதற்காக, ஆண்புலி, ஆண் பன்றியைத் தாக்கி பாம்பு உமிழ்ந்த மணி வெளிச்சத்தில் இழுத்துக்கொண்டு வருகிறது.  என்ற கருத்தானது தலைவியைத் தலைவன் வரைவு மேற்கொள்ள அதாவது திருமணம் பேச வந்தால் கடுஞ்சொல் பேசாமல் தலைவி வீட்டார் ஏற்றுக்கொள்ளலாம் என்ற குறிப்பும் இதில் உள்ளுறையாக இடம்பெறுகிறது.

பெண் புலி – தலைவி, ஆண் புலி – தலைவன், பாம்பு உமிழ்ந்த மணியின் வெளிச்சம் – தலைவனுக்கு எதிர்பில்லாமல் தலைவியை வரைவு மேற்கொள்ளும் நல்ல வாய்ப்பைக் குறிக்கிறது.

இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை என்ற பாடலடிகளில் களிறு என்ற சொல்லானது யானையைக் குறிப்பதாகத் தோன்றினாலும், களிறு என்று இப்பாடலில் சுட்டப்பட்டது ஆண் பன்றியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்என்ற அடிகளில் புலி யானையை இழுத்து செல்ல வாய்ப்பில்லை என்பதாலும், களிறு ஆண் விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல் என்பதால் ஆண்பன்றியையே புலவர் குறிப்பிட்டிருக்கலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக