வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 21 ஜனவரி, 2021

செந்நிலப் பெரு வழி...

 


பிரிவு என்பது உறவுகளுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்தலாம்.

அந்த இடைவெளியானது..

சிலருக்கு உடல்சார்ந்து மட்டுமே இருக்கலாம்.

சிலர் பிரிந்தாலும் உள்ளத்தால் இணைந்திருக்கலாம்.

ஆம், நினைத்துப் பார்த்தல் கூட ஒரு வகை சந்திப்புதானே..!

வள்ளுவர் பிரிவாற்றாமை என்றொரு அதிகாரமே வகுத்திருப்பார்.

பாலை நிலம் சார்ந்தே பிரிவு பெரிதும் பேசப்பட்டிருந்தாலும். அந்த பிரிவு தரும் வலி முல்லை நிலத்தில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வள்ளுவர் காட்டும் தலைவி சொல்வதாக,

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151)

என்றொரு திருக்குறள் உண்டு. செல்லாவிட்டால் என்னிடம் சொல். நீ என்னைப் பிரிந்துசெல்வதென்றால் உனது வருகையை, உயிருடன் இருப்பவர்களிடம் சொல் என்கிறாள் இத்தலைவி.

இன்று பிரிவு இவ்வளவு பெரிதாகப் பார்க்கபடுவதில்லை. தொலைத் தொடர்பு வளர்சியும், போக்குவரத்து வசதிகளும் தூரத்தையும், நேரத்தையும் சுருக்கிவிட்டன.

அன்று தூரத்திலிருந்தாலும் நினைவுகளால் ஒன்றாக இருந்தனர்.

இன்று அருகிலிருந்தாலும் சமூகத்தளப் பயன்பாடுகளால் பிரிந்து வாழ்கிறோம்.

பிரிவு என்பது ஒருவர் உயிர்விடும் அளவுக்கு சொல்லப்படுவது அன்பின் ஆழத்தைக் காட்டவே ஆகும்.

அகநானூற்றில் முல்லைத் திணைப் பாடலில் தலைவன் சொல்லிச் சென்ற காலம் வந்தும் தலைவன் வாராமையால் வருந்தியிருக்கிறாள் தலைவி. மனதைத் தேற்றிக்கொண்டு எப்போது வருவான் என வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள். அவளின் துயரைக் கண்டு வருந்திய பாணன் தலைவியின் தோழியர் கேட்பச் சொல்லியதாக இப்பாடல் அமைகிறது. தலைவியின் நிலைகண்டு அவளுக்கு ஆறுதல் சொல்லமுடியாதவனாக யாழிசைத்துச் செல்லும் பாணன் தலைவனின் தேரின் வருகையைக் காண்பதாக இப்பாடல் அமைகிறது.

அகநானூறு - 14. முல்லை

அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழிக்

காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன்

ஈயன் மூதாய் வரிப்பப் பவளமொடு

மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய

அங்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்

திரிமருப் பிரலை புல்லருந் துகள

முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்

குறும்கொறை மருங்கின் நறும்பூ வயரப்

பதவுமேயல் அருந்து மதவுநடை நல்லான்

வீங்குமாண் செருத்தல் தீம்பால் பிலிற்றக்

கன்றுபயிர் குரல மன்றுநிறை புகுதரு

மாலையும் உள்ளா ராயிற் காலை

யாங்கா குவங்கொல் பாண வென்ற

மனையோள் சொல்லெதிர் சொல்லல் செல்லேன்

செவ்வழி நல்யாழ் இசையினென் பையெனக்

கடவுள் வாழ்த்திப் பையுள் மெய்ந்நிறுத்

தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே

விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்

கல்பொரு திரங்கும் பல்லார் நேமிக்

கார்மழை முழக்கிசை கடுக்கும்

முனைநல் லூரன் புனைநெடுந் தேரே.

                                                                  -ஒக்கூர் மாசாத்தனார்.

[பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.]

தோழி முதலானோரைப் பாங்காயினார் என்று அழைப்பதுண்டு.

செவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்

காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்கும்,

தம்பலப் பூச்சிகள் வரிசையாக ஊர்ந்துசெல்லும்,

பவளத்துடன் நீலமணி நெருங்கி இருந்ததைப் போன்று இருக்கும் குன்றுகள் 

சூழ்ந்த அழகிய காட்டின் அரிய வழிகளில் மடப்பமுடைய தம் பெண்மானைத் 

தழுவி, முறுக்கிய கொம்புகளை உடைய இரலை மான்கள்

புல்லை உண்டு தாவி மகிழ்கின்றன,

பசுவினங்களை முல்லை ஆகிய அகன்ற புலத்தில் பரவலாக மேயவிட்டு,

கோவலர்கள் சிறிய குன்றுகளின் பக்கங்களில் உள்ள நறுமணமுள்ள பூக்களைப் பறித்துச் சூடிக்கொண்டனர்,

அறுகம்புல்லை மேய்ந்தமையால் செருக்கான நடையுடைய 

நல்ல  வினங்கள் பருத்த மடியுடன் இனிய பாலைப் பொழிய, கன்றை 

நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகும். 

அந்த மாலைக் காலத்திலும்  தலைவர் வரவில்லை எனின், காலையில் என்ன 

ஆவோமோ பாணனே! என்று சொன்ன தலைவியின் சொல்லுக்கு எதிர்ச்சொல் 

சொல்ல முடியாதவனாகி, செவ்வழிப் பண்ணை நல்ல 

யாழில்  இசைத்தவனாய் மெல்ல, கடவுளை வாழ்த்தி, துயரத்தை 

வெளிக்காட்டிஅவர் வரும்வழியே சென்றேன், விட்ட அம்பு போன்ற 

வேகத்தையுடைய குதிரையின் வேறுபட்ட ஓட்டம் அதிகரிக்க கற்களில் மோதி 

ஒலிக்கும் பல ஆரங்களைக்கொண்ட சக்கரம், கார்காலத்து மழையின்  

இடிமுழக்கின் ஒலியை போல முழங்க போர்முனையே தன் ஊராகக் கொண்ட 

தலைவனின் அலங்கரிக்கப்பட்ட நெடும் தேரினைக் கண்டேன் நானே என்று 

பாணன் உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

இப்பாடல் வழியாக பிரிவில் ஏற்படும் வலியும், அன்பின் ஆழமும் உணர்த்தப்படுகிறது. எவ்வளவு துன்பத்தில் தலைவி வாடியிருந்தாலும் தலைவன் வந்துவிடுவான் என்று மனதைத் தேற்றிக்கொண்டு காத்திருக்கும் மாண்பு குறிப்பிடப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக