வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

மலையாளக் காற்று - சிற்பி

 


    சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கவிஞர்
, மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் என பன்முகத் திறன்கொண்டவர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். அக்கினி சாட்சி நாவலுக்காகவும், ஒரு கிராமத்து நதி என்ற கவிதை நூலுக்காகவும் என இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது, கபிலர் விருது, எனப் பல விருதுகள் பெற்றவர்.

பண்டைய சேரநாடே இன்றைய கேரளம். கேரளம், தமிழகத்துக்குப் பலவளங்களைத் தந்துள்ளது. தமிழகத்துக்கும் கேரளத்துக்குமான உறவை நினைவுகொள்வதாகவும், கேரளத்தின் கொடைகளைப் பட்டியலிடுவதாகவும் இக்கவிதை அமைகிறது. காற்றுக்கு ஏது மொழி. இங்கு மலையாளக் காற்று என்பது குறியீடாக அமைகிறது.

‘’காற்றே வா

மலையாளக் காற்றே வா

இளங்காலைப் போதில்

தெருவே மணக்கவரும் பூக்காரிபோல்

வாசனை நடைபோட்டு வா

இளம்காலைப் பொழுதில் தெருவே மணம் வீசும்படி பூக்களைச் சுமந்து வருகிற பூக்காரி போல  நல்ல வாசனையோடு நடைபோட்டு வா’ என்று மலையாள இலக்கியத்தை, நட்பை, வளத்தை வரவேற்கிறார்.

சனி, 9 ஆகஸ்ட், 2025

மனத்தூய்மை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்  என்கிறது உலகநீதி

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா என்றார் அகத்தியர்

சிந்தை தெளிவாக்கு என்று பாடிய பாரதி

பேயாய் உழலுஞ் சிறுமனமே!

பேணாய் என்சொல் இன்று முதல் நீயா ஒன்றும் நாடாதே

நினது தலைவன் யானேகாண் என்று பாடியுள்ளார்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

வாய்ப்பு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


வாய்ப்பு என்றவுடன் பலருக்கும் வேலை, வாய்ப்பு தொழில் வாய்ப்பு தான் நினைவுக்கு வரும் ஆனால் இவை இரண்டையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன…

காலையில் சூரியன் தோன்றுவதையும் மாலையில் மறைவதையும் பார்க்க எத்தனையோ பேர் காத்திருக்கிறார்கள். நிலவை, நட்சத்திரங்களை, வானவில்லை இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளையும் காண்பதற்காகக் காத்திருப்பவர்கள் இயற்கையை ரசிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்களில் சிலர் கவிஞராகலாம், ஓவியராகலாம், நிழற்படக்கலைஞராகலாம்.

பொழுதுபோக்குக்காக விளையாடுவோர் பலர். சிலர் விளையாட்டுதான் தம் வாழ்க்கை என்று அதில் உள்ள வாய்ப்பை உணர்ந்து விளையாட்டில் புகழ்பெறுகிறார்கள்.

பொருள் தேடுகிறேன், பிள்ளைகளின் கனவுகளுக்காக உழைக்கிறேன், அவர்கள் ஆசைப்பட்டதை வாங்கிக்கொடுக்கிறேன் என்று பொருள் தேடுவோரில்

எத்தனை பேருக்கு பிள்ளைகளோடு நேரம் ஒதுக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு நம்மைச் சுற்றி பல வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக மனிதர்களை, வாய்ப்பில்லை என வாடுவோர், வாய்ப்புகளைத் தேடுவோர், வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வோர் என மூன்று வகையாகப் பகுக்கலாம்.

 

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

மெய்ப்பொருள் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 


அறிவுடைமை அதிகாரத்தில் திருவள்ளுவர்,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.     ( 423)
யாரிடம் கேட்டாலும் உண்மையை ஆராய்ந்து அறிவதே அறிவு

என்றும்,

மெய்யுணர்தல் அதிகாரத்தில்

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.  (355)

எப்பொருளையும் தோற்றத்தை மட்டும் காணாமல் உண்மைக் காண்பதே அறிவு

என்றும் உரைத்துள்ளார்.

இவ்விரு குறள்களையும் ஆழ்ந்து நோக்கினால் செவிகளால் கேட்பது, கண்களால் காண்பது ஆகிய இரண்டும் உண்மைதானா என ஆராய்ந்து அறியவேண்டும் என்ற கருத்து தோன்றுகிறது.

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

என்ற பாரதியார் பாடலும் மெய்ப்பொருள் குறித்த தேடலாகவே உள்ளது.

பொருள் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு.

புதன், 6 ஆகஸ்ட், 2025

செல்வத்துள் செல்வம் - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே  என்றும்,

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் எனவும் உரைத்தார் ஒளவையார்.

மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்கனியும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும் என்பது பழமொழி

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம் என்றார் உலகநாதர்

செவி வாயாக நெஞ்சு களனாக

கேட்டவை கேட்டு அவை விடாது உளத்து அமைத்து

என்றார்  பவணந்தி முனிவர்.

அரசர்க்கு நல்லறிவுச் சிந்தனைகளைத் தரும் புறத்துறை செவி றிவுறூஉ எனப்படும்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

எண்ணித் துணிக - சான்றோர் சிந்தனை - வானொலி உரை


எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன், அதன் விளைவுகளைப் பற்றியும், அதைச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றியும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். இது வெற்றிக்கான முதல்படி.

குழந்தைப் பருவத்தில் நாம் முதல் அடி எடுத்துவைத்ததிலிருந்து இந்த மணித்துளி வரை நம் சொல், செயல் இரண்டிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்குள் இயல்பாகவே இருப்பது எண்ணுதல் மற்றும் துணிதல் ஆகிய பண்புகளே. இப்பண்புகளை மேலும் கூர்மைப்படுத்தும்போது நம் செயல் சிறப்பாக அமையும்.

கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம் என்கிறது உலகநீதி.

(சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்.      ( 664)

சொல்லுவது யார்க்கும் எளிது, சொல்லியபடி செய்துமுடிப்பதே அரிது என்று திருவள்ளுவர் சொல்லுவது போல அரிய செயல்களைச் செய்பவர்களாக இருக்கிறோமா?

வாய்ச்சொல்லில் வீரரடி என்று பாரதியார் சொல்வது போல இருக்கிறோமா என்று சிந்திக்கவேண்டும்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

உழைப்பு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 



உழைப்பே உயர்வு தரும், உழைக்காத காசு நிலைக்காது, என்றெல்லாம் அனுபவமொழிகள் உண்டு.

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று பாடல் உண்டு.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியும் உழைத்துவாழ் என்றே அறிவுறுத்துகிறது.

அடிமையைப் போல உழைப்பவன் அரசனைப் போல உண்பான் என்றார் கதே,

உழைப்பை இருவகைப்படுத்தலாம்..

அறிவு உழைப்பு உடல் உழைப்பு

அறிவு உழைப்பாளர்களுக்கே மதிப்பு அதிகம்

உடல் உழைப்பாளர்களுக்கு மதிப்புக் குறைவு

பலர் ஏன் உழைக்கிறோம்எதற்காக உழைக்கிறோம்எப்படி உழைக்கிறோம்?

என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

செவ்வாய், 17 ஜூன், 2025

கடல் - அழகின் சிரிப்பு - பாரதிதாசன்

 

கடல்

மணல்அலைகள்
ஊருக்கு கிழ‌க்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம்போல்
மணல் மெத்தைஅம்மெத் தைமேல்
நேரிடும் அலையோகல்வி
நிலையத்தின் இளைஞர் போலப்
பூரிப்பால் ஏறும்வீழும்;
புரண்டிடும்பாராய் தம்பி.

கீரியின் உடல் வண்ணத்தையும் கடற்கரையின் மணல் மெத்தையையும் ஒப்பிட்டு  உரைக்கிறார். கடல் அலை வந்து செல்வது கல்விநிலையத்துக்கு வரும் இளைஞர் போல என்றுரைக்கிறார். இவ்வாறு இயற்கையிடமிருந்து நாம் பெற்றதும் பெவேண்டியதும் நிறையவுள்ளன.

செவ்வாய், 25 மார்ச், 2025

மெய்ப்பாட்டியல் விளக்கம் (தொல்காப்பியம்)

 




உள்ளத்து உணர்ச்சிகள் உடலில் தென்படுவது மெய்ப்பாடு. 

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில்  மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது

 

உணர்வுகளை ஆங்கிலத்தில் Emotion என்கிறோம்.

உடலசைவு மொழிகளை ஆங்கிலத்தில் Body language என்கிறோம்..

முகத்தில் தோன்றும் உணர்வுகளை Emoji என்ற குறியீட்டு மொழியில் வெளிப்படுத்தி வருகிறோம்..

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் என்பார் திருவள்ளுவர்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

உள்ளத்தனையது உயர்வு

 


வாழ்க்கையில் வெற்றிபெறத் தேவையான பண்புகளுள் குறிப்பிடத்தக்க நற்பண்பு ஊக்கம் ஆகும்.

சோம்பலின் இழிவைப் பற்றி மடியின்மை அதிகாரத்திலும், முயற்சியின் பெருமையை ஆள்வினையுடைமை அதிகாரத்திலும் மன உறுதி பற்றி வினைத் திட்பம் அதிகாரத்திலும் பேசிய திருவள்ளுவர் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஊக்கத்தின் சிறப்பியல்புகளைப் பேசியுள்ளார்.

ஊக்கம் என்பது ஒருவருக்கு பல நிலைகளில் ஏற்படலாம். பட்டம் உயரே பறப்பதற்கு காற்று மிகவும் தேவையாகிறது. அதுபோல மனிதர்கள் உயர ஊக்கம் தேவைப்படுகிறது

ஊக்கத்தை மனதின் எழுச்சி, புத்துணர்ச்சி, உற்சாகம் என பலவாறு அழைக்கிறோம்..

ஊக்கத்தை உள் ஊக்கம், புற ஊக்கம் எனப் பிரிக்கலாம்.

உள் ஊக்கமானது மனதளவில் தோன்றக்கூடியது..

புற ஊக்கம் நம்மைச் சுற்றியுள்ளவர்களாலும் சூழல்களாலும் தோன்றுகிறது.

ஊக்கமது கைவிடேல் என்றார் ஔவையர். ஊக்கத்தை எப்போதும் கைவிடக் கூடாது என்பதுதான் இதன் பொருள் ஆனால் ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல் எனச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டு மது ஊக்கம் தருகிறது என்று நம்புகிறார்கள். மேலும் மதுவைப் போல பல போதைப் பொருள்கள் ஊக்கம் தருவதாக நம்புவோர் பலர் உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் கூட விளையாட்டு வீரர்கள், ஊக்கம் தரும் உணவுப்பொருள்களோ, போதைப் பொருள்களோ பயன்படுத்தியுள்ளனரா என சோதிப்பது வழக்கமாக உள்ளது.

ஊக்கம் ஒருவருக்கு எப்படித் தோன்றுகிறது..

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

இதுவும் கடந்துபோகும் - வானொலி உரை

 


இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் இரண்டு பக்கங்கள். இன்பம் சிரிப்பையும், துன்பம் அழுகையையும் வரவழைக்கிறது. உண்மையான நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ இன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் இரண்டு மடங்காகிறது. துன்பத்தைப் பகிர்ந்துகொண்டால் பாதியாகக் குறைகிறது. நமக்குப் பிடித்த செயல்களில் உள்ள துன்பங்களை மனம் கண்டுகொள்வதில்லை. நமக்குப் பிடிக்காத செயல்களில் உள்ள சிறு துன்பங்களையும்,  மனம் ஏற்றுக்கொள்வதுமில்லை, சகித்துக்கொள்வதுமில்லை. பக்குவமுடையவர்கள் இன்பங்களையும் துன்பங்களையும் சமமாகவே பார்ப்பார்கள். பக்குவத்தின் முதிர்ந்த நிலை துன்பத்திலும் சிரிப்பது.

 திருக்குறளில் (63) இடுக்கண் அழியாமை என்றொரு அதிகாரம் உண்டு

 இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில். - 621

துன்பம் வரும்போது சிரிஅதுதான் துன்பத்தை வெல்லும் வழி  என்றார் திருவள்ளுவர். துன்பத்தில் சிரிக்கமுடியுமா? அப்படிச் சிரித்தால் அவர்களை இந்த உலகம் எப்படிப் பார்க்கும். இவருக்கு மனநலம் ஏதும் பாதிக்கப்பட்டுள்ளதா என்றுதானே பார்க்கும்.  மருத்துவர் ஊசி போடும் போது குழந்தைகள் அழுவதைப் பார்த்திருப்போம். ஆனால் பெரியவர்கள் அழுவதில்லை. இது எப்படி சாத்தியமானது? இருவருக்கும் வலி பொதுவானதுதானே.. இருந்தாலும் வலியை ஏற்றுக்கொள்ள மனம் துணிந்துவிட்டால் துன்பங்கள் தெரிவதில்லை..

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

நூல் பல கல்..

 

அறிவை வளர்க்கும் வாயில்களுள் நூல்கள் குறிப்பிடத்தக்கன.

கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் என பதிவுசெய்யப்பட்ட மனித சமூகத்தின் அனுபவங்கள் அச்சுவடிவில் புத்தகங்களாப் பதிப்பிக்கப்பட்டன.

புத்தகங்களைப் பணம்கொடுத்து வாங்குகிறோம்..

ஆனால் அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆம்..

புத்தகங்களுக்குக் கொடுக்கும் பணம் என்பது அச்சாக்கத்துக்குப் பயன்படுத்திய மை மற்றும் காகிதங்களுக்கான பணம் தானே தவிர அறிவுக்கானது அல்ல..

அறிவை விலைகொடுத்து வாங்கமுடியாது.

அச்சுப் புத்தகங்களை வாசித்த காலம் மாறி இன்று மின் புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் தொழில்நுட்ப மாற்றத்தால் பல வடிவங்களில் நூல்கள் கிடைக்கின்றன.

உயிர்களுக்கு சுவாசித்தல் எவ்வளவு முதன்மையானதோ அதுபோல மனிதர்களுக்கு வாசிப்பு மிகவும் தேவையானது.

செவ்வாய், 28 ஜனவரி, 2025

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் - SEO




Search Engine Optimization for Tamil e-Contents

குறிச்சொற்கள்

          தமிழ் மின் உள்ளடக்கங்கள்தேடுபொறி உகப்பாக்கம்தேடுபொறி மேம்படுத்தல்வலைப்பதிவுமின்னூல்வலையொளி, Tamil E-Contents, SEO, Search Engine Optimization, Blog, E-Book, Youtube


 கட்டுரைச் சுருக்கம்

          அறிவைப் பெறும் வாயில்களுள் ஆசிரியர்கள் முதன்மையானவர்கள். ஆசிரியர்களுக்கு இணையாக இன்று இணையதளங்கள் வளர்ந்துள்ளன. இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் செய்திகளுள் பயனர்களுக்குத் தேவையான செய்திகளைப் பெறத் தேடுபொறிகள் உதவுகின்றன. தேடுபொறிகளால் மனிதர்களின் அறிவுப் பரப்பு விரிவடைந்துள்ளது. மொழி எல்லைகளைக் கடந்து அவரவர் தாய்மொழியில் பல நுட்பங்களையும் அறிந்துகொள்ளத் தேடுபொறிகள் உதவுகின்றன. தமிழ் மின் உள்ளடக்கங்களைப் பலரும் உருவாக்கினாலும், தேடுபொறிகளுக்கு இணையத்தில் உள்ள பல்வேறு தமிழ் வளங்கள் தெரியவில்லை. தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான தேடுபொறி உகப்பாக்கம் குறித்து நுட்பமாக எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

 

தேடுபொறி

          தேடுபொறி என்பது ஒரு கணினி நிரலாகும். இது இணையத்தில்  உள்ள தரவுகளிலிருந்து பயனர்கள் தேடும் தரவுகளைத்  திரட்டி வழங்குகிறது. இத்தரவுகளின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை, விரைந்து வழங்குதல் ஆகிய நிலைகளில் தேடுபொறிகளின் தரநிலை மாறுபடுகிறது. “ஆர்ச்சி (Archie) தேடுபொறி[1]  1990 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறியாக அறியப்படுகிறது. அதைத் தொடர்ந்து யாகூ, கூகுள், பிங், பைடு என பல தேடுபொறிகள் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.