நன்மை செய்தவர்களை வாழ்த்துவதும்தீமை செய்தவர்களைப் பழிப்பதும் உலக மரபு.
இப்புறப்பாடலில் பாண்டியன் புலவருக்குப் பரிசில் தருவதற்குக் காலம் கடத்திவந்தான். இது முறையன்று என்று புலவர் ஆவூர் மூலங் கிழார் எடுத்துரைத்து வாழ்த்துகிறார்.
பரிசில் தராமல் காலம் தாழ்த்தியது தமக்கு ஏமாற்றமாக இருந்தாலும். ஏமாற்றுவது பெருங்குற்றமல்லவா, அதனால் அவனும் அவன் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என்று வாழ்த்துகிறார் புலவர்.
பாடல்,
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே 5
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை;
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,
நோய் இலராக நின் புதல்வர்; யானும், 10
வெயில் என முனியேன், பனி என மடியேன்,
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை,
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு மகள் உள்ளிச்
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! 15
புறநானூறு - 196
திணை பாடாண் திணை;
துறை பரிசில் கடா நிலை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.