வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

உழைத்தால் மட்டும் போதுமா?


உழைப்பே உயர்வு தரும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்
உழைக்காத காசு நிலைக்காது

என்றெல்லாம் அனுபவமொழிகள் உண்டு..

உழைப்பை இருவகைப்படுத்தலாம்..

அறிவு உழைப்பு - உடல் உழைப்பு

அறிவால் உழைப்பவர்கள் தன்னை உணர்ந்தவர்கள்
உடலால் உழைப்பவர்கள் தன்னை மறந்தவர்கள்

என்பது எனது அனுபவம்.

செக்குமாடு சுற்றிவருவதுபோல..

பலர் ஏன் உழைக்கிறோம்? எதற்காக உழைக்கிறோம்? எப்படி உழைக்கிறோம்?

என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்...

அதனால் உழைப்புத்திருடர்களும் இன்றைய சூழலில் நிறையவே தோன்றிவிட்டனர்.

குறுகிய காலத்தில் உயரத்துக்குவரவேண்டும்,
பெரிய பணக்காரராகவேண்டும் என்ற பேராசையில் அறிவு உழைப்பாளிகளில் சிலர் உடல் உழைப்பைத் திருடும் கயவர்களாகிவிட்டனர்.

காலம் எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.
உழைப்புத்திருடர்களில் பலர் இன்று சிறைச்சாலைகளுக்குள்ளே கம்பியெண்ணிக்கொண்டிருக்கிறார்கள்..
சிலர் தலைமறைவாக ஓடி மறைந்திருக்கிறார்கள்..

 புரிந்துகொள்வோம்...

உழைப்பு மனிதனை ஏமாற்றுவதில்லை!
மனிதன் தான் உழைப்பை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான்!
கடைசியில் அவனே ஏமாந்தும் போகிறான்..

அதனால்...

உழைத்தால் மட்டும்போதாது.. 
உணர்வோம்..

நாம் ஏன் உழைக்கிறோம்?
எதற்காக உழைக்கிறோம்?
எப்படி உழைக்கிறோம்?



 தொடர்புடைய இடுகைகள்














புதன், 24 அக்டோபர், 2012

கொடுப்பவர்களெல்லாம் கோமாளிகல்ல..


    காலங்கள் மாறினாலும் சில மனிதர்கள் மாறுவதில்லை. அந்த அடிப்படையில் மாறாத மனிதர்களை,
    கொடுப்பவர்கள்
    வாங்குபவர்கள்
    என இருவகைப்படுத்தலாம்.

    கொடுப்பவர்களை,
    புண்ணியத்துக்காகக் கொடுப்பவர்கள்
    மனிதாபிமானம் கருதிக் கொடுப்பவர்கள்.
     என இருவகைப்படுத்தலாம்.

    வாங்குபவர்களையும்,
     வேறு வழியில்லாமல் வாங்குபவர்கள்
    வாங்குவதையே வழியாக எண்ணி வாழ்பவர்கள்
    என இருவகைப்படுத்தலாம்.

    வாங்குவோரில் சிலர் நினைத்துக்கொள்ளலாம்..

    இப்படி அள்ளி அள்ளிக்கொடுத்தால் கடைசியாக நம்மைப்போலத்தான் இரவலராக போவார்.
    இவர் ஒரு ஏமாளி,
    இவர் ஒரு கோமாளி என்று கூட எண்ணிக்கொள்ளலாம்.

    இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

    பேகன் என்றொரு வள்ளல். ஆம் மயிலுக்காகப் போர்வை கொடுத்தானே அதே வள்ளல்தான்..

    சிலர் நினைக்கலாம் மயிலுக்கு ஏன் இவர் போர்வைகொடுத்தார்?. அது பேகனின் அறியாமையல்லவா? என்று.
    உயிர்கள் மீது பேகன் கொண்ட அன்பின் அடையாளமது.
    அதற்குப் பெயர் கொடை மடம்.

    அந்த பேகனிடம் பரிசில் பெற்று வந்த பாணன் ஒருவன் பரிசில் பெறக்காத்திருக்கும் பாணனிடம் பேகனின் கொடைத்திறனை எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

    பரிசில் பெற்ற பாணன் சொல்கிறான்,
    கொடுத்தால் புண்ணியம் என்று மறுமையை எண்ணியெல்லாம் பேகன் இரவலர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கவில்லை அவர்களின் வறுமையை எண்ணித்தான் வழங்குகிறான் என்கிறான்.

    கோமாளியாகக் கூட நடிக்கலாம்
    ஏமாளியாக மட்டும் இருக்கக் கூடாது

    என்றொரு பொன்மொழி உண்டு. இந்த பேகன்
     ஏமாளியா? கோமாளியா?என்றால் இவன் மனிதன் என்றே அறிவுடையோர் கூறுவோர்.


    பாடல் இதுதான்...

    பாணன் சூடிய பசும்பொற் றாமரை
    மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
    கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ
    ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்
    5
    யாரீ ரோவென வினவ லானாக்

    காரெ னொக்கற் கடும்பசி யிரலவ
    வென்வே லண்ணற் காணா வூங்கே
    நின்னினும் புல்லியே மன்னே யினியே
    இன்னே மாயினே மன்னே யென்றும்
    10
    உடாஅ போரா வாகுத லறிந்தும்

    படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
    கடாஅ யானைக் கலிமான் பேகன்
    எத்துணை யாயினு மீத்த னன்றென
    மறுமை நோக்கின்றோ வன்றே
    15
    பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே.

    புறநானூறு  (141)
    பாணாற்றுப்படைபுலவராற்றுப்படையுமாம்.
    வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

           பேகனிடத்தில் பரிசு பெற்ற பாணன் ஒருவன், வழியில் எதிர்ப்பட்ட மற்றொரு பாணனிடம் பேகனின் கொடைச் சிறப்பைக் கூறி, அவனிடம் பரிசில் பெற்றுவர வழிப்படுத்தினான்.

    பேகனின் புகழைப் பாராட்டுகின்றவன், தம்மையும் பாணனாகக் காட்டிக்கொள்வதோடு, பாணன் சூடிய தாமரைப் மலரையும், விறலி அணிந்த பொன்னரி மாலையையும் சுட்டிக்காட்டி இந்த சுரத்திலும் ஊரிலிருப்பதுபோல மகிழ்வோடு இளைப்பாறி இருக்கும் நீங்கள் யார்? எங்களைப் பார்த்துக் கேட்ட வறுமையுடைய சுற்றத்தையும், மிகுந்த பசியையும் உடைய இரவலனே!

    வென்றிவேலுடைய பேகனைக் காண்பதற்குமுன் நாங்களும் உங்களைவிட வறுமையுடையவர்களாகவே இருந்தோம்.

    இப்போது அந்த வறுமையெல்லாம் நீங்கி வளமாயினோம். மதமிக்க யானையும், மனம் செருக்கிய குதிரையும் உடையவன் பேகன்.

    உதவாது என்று தெரிந்தும் உயிர்கள் மீது தான் கொண்ட இரகத்தால் மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தவனான பேகன் தன்னை நாடிவருவோருக்கெல்லாம் அளவில்லாது கொடை வழங்குவது,

    மறுமைப் பயன் (புண்ணியம்) நோக்கியல்ல - பிறரது
    வறுமைத் துன்பத்தைப் போக்குவதை மட்டும் நோக்கியது.

    பாடல் வழியே..

  1. சங்ககாலத்தில் வள்ளல்கள் தம்மை நாடிவரும் கலைஞர்களுக்கு வழங்கும் பரிசில்களுள், பாணனுக்குத் தாமரை மலர் தருவதும், விறலிக்குப் பொன்னரி மாலை தருவதும் மரபாக இருந்தது என்ற கருத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

  2. பேகன் மயிலுக்குப் போர்வை தந்தவன் என்ற செய்தி சுட்டிக்காட்டப்படுகிறது.

  3. மயில்போன்ற உயிரினங்களிடம் பேகன் கொண்ட சீவகாருண்யம் (உயிரிரக்கம்), மனிதர்கள் மீதுகொண்ட மனிதாபிமானம் ஆகிய பண்புகள் இன்றைய தலைமுறையினரும் கற்றுக்கொள்ளவேண்டிய சிறந்த பண்புகளாக அமைகின்றன.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

காப்பீட்டுக் கழகத்துக்காக வள்ளுவர் எழுதிய குறள்


வணிகவியல் மாணவர்களுக்காக நடைபெற்ற சிறப்புசொற்பொழிவுக்காகக் காப்பீட்டுக் கழகத்திலிருந்து ஒரு உயர் அதிகாரி பேசவந்தார். பவர்பாய்ணட் பிரசண்டேசனுடன் அழகாகப் பல புள்ளிவிவரங்களையும் சுட்டிக்காட்டி நகைச்சுவையாகப் பேசினார்.

அவர் பேச்சின் இடையிடையே மாணவர்களிடம் சிறுசிறு கேள்விளையும் கேட்டார். பதிலளி்த்தவர்களுக்கு, தான் கொண்டுவந்திருந்த இனிப்பை (சாக்லேட்) வழங்கினார். பேச்சின் முடிவில்..

ஒரு திருக்குறளின் ஆங்கில மொழியாக்கத்தைத் தந்து,
இது வள்ளுவர் எங்கள் காப்பீட்டு நிறுவனத்துக்காக
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய குறள் என்றார்.

இதனை கண்டுபிடித்து சொல்லும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்குவேன் என்றார். மாணவர்கள் பலருக்குத் தெரியவில்லை. சிலமாணவர்களுக்கு அதன் ஓரிரு சொற்கள் தான் தெரிந்தன. முழுவதும் தெரியவில்லை. யாருமே சொல்லாத சூழலில் நான் சொன்னேன்.

           “வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
            வைத்தூறு போலக் கெடும்“ என்ற குறளா என்றேன். ஆமாம் என்று

அவர் பெரிதும் மகிழ்ந்து எனக்கு இனிப்பு வழங்கினார். காப்பீட்டு நிறுவனத்துக்காக வள்ளுவர் இந்தக் குறளை எழுதவில்லை. அவர் எழுதிய கருத்துகள் இன்றைய காப்பீட்டு நிறுவனக் கொள்ககைளுக்கு ஏற்புடையனவாக இருக்கின்றன அவ்வளவுதான் இருந்தாலும். இந்தக் குறளை அவர் உரிமையோடு சொன்னபாங்கு விரும்பத்தக்கதாக இருந்தது.

இந்த சொற்பொழிவாளரின் பேச்சில் நான் கற்றுக்கொண்ட நுட்பங்கள்.

1. நவீன தொழில்நுட்பங்களுடன் பேசுதல்
2. புள்ளிவிவரங்களுடன் பேசுதல்
3. நகைச்சுவையாகப் பேசுதல்
4. பார்வையாளர்களிடம் கேள்விகேட்டல்
5. பதிலளித்தவர்களைப் பாராட்டுதல், இனிப்புவழங்குதல்

ஆகியவனவாகும். இவற்றுக்கும் மேலாக..


எந்தத் துறைசார்ந்தவராக இருந்தாலும் வள்ளுவரை உரிமையோடு சொந்தம் கொண்டாடும்போது...
தமிழானாக  பிறந்ததில் மனம் பெருமிதம் கொள்கிறது.

சனி, 20 அக்டோபர், 2012

50 ஆண்டுகளில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்(?)







எதிர்காலத்தை வடிவமைக்கும் பெரும் பணி ஆசிரியர்களிடம் இருக்கிறதுஆனால் இன்றைய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல.

இன்றைய மாணவர்கள்
பெற்றோர்கள்
கல்வி நிறுவன்ங்கள் யாவும் எதிர்பார்ப்பது அதிகமதிப்பெண் மற்றும்
100 விழுக்காடு தேர்ச்சி.

மதிப்பெண் எடுத்தால் போதுமா?
வாழ்க்கையை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டாமா?

இன்றைய மாணவர்களிடமெல்லாம் நிறையவே மதிப்பெண்கள் இருக்கின்றன.

ஆனால்..
 புரிந்துகொள்ளும் திறன், படைப்பாக்கத்திறன், தகவல் தொடர்புத்திறன் ஆகியன எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது (?)


தொடர்புடைய இடுகைகள்

1. கல்விச்சாலை = சிறைச்சாலை

சனி, 13 அக்டோபர், 2012

இணையத்தில் தமிழின் இன்றையநிலை.


இணையத்தில் தமிழின், தமிழரின் இன்றைய நிலையை அறிந்துகொள்ளும் ஆவலில் மேற்காணும் இரு வாக்கெடுப்புகளை 
15 நாட்களுக்கு முன்னர் வைத்தேன்..

கூகுளின் ப்ளாக்கர் என்ற வலைப்பதிவு சேவையையும்
முகநூலையும் இன்றைய தலைமுறையினர் அதிகமாப் பயன்படுத்துகிறார்கள்...

இணையத்தில் தமிழ்மொழியைத் தமிழர்கள் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்... 
தமிங்கிலம்,ஆங்கிலம் 
ஆகிய மொழிநடைகளும் பரவலாகத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டுவருகிறன என்ற உண்மையையும் இதன்வழி அறிந்துகொள்ளமுடிந்தது.

வாக்களித்த தமிழ் உறவுகளுக்கு நன்றி! நன்றி! நன்றி!

கூகுளில் படங்களைக் கொடுத்துத் தேடலாம்..

இன்றும் பலருக்கு இணைய தேடுதல் என்பதே அரிய, புதிய, பெரிய தொழில்நுட்பமாக தெரிகிறது..

இந்த நிலையில் இணையதளதேடுதல் அடைந்துவரும் புதியபுதிய தொழில்நுட்ப மாற்றங்கள் வியப்படையச் செய்வனவாக அமைகின்றன.


நமக்குத் தேவையான செய்திகளை தேடுஇயந்திரங்களில் குறிச்சொற்களாக உள்ளீடு செய்து தேடிய காலமெல்லாம் மலையேறிவிட்டது..


இப்போதெல்லாம் படங்களைக் கொடுத்துத் தேடும் நுட்பம் பரவலாகிவருகிறது..

கூகுளின் படவழித்தேடல்  என்ற இணைப்புக்குச் சென்று தங்கள் கணினியிலிருக்கும் படங்களைப் பதிவேற்றியும் தேடலாம். இது பலருக்கும் பயனுள்ள தொழில்நுட்பமாகும். 

மேலும் கூகுளில் சோதனையில் இருக்கும் குரல்வழித்தேடல் முறையும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவி்ட்டால் இணையதள தேடுதலில் அடுத்தநிலையை மனிதகுலம் அடைந்துவிட்டது எனப் பெருமிதம் கொள்ளலாம்..

வெள்ளி, 12 அக்டோபர், 2012

தன்மானம் மிக்கவர்..



நாள்தோறும் இதுபோன்ற ஆயிரம் காட்சிகளை நாம் காண்பதுண்டு. ஆனாலும் நேற்று கண்ட இந்தக் காட்சி என் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பிச் சென்றது..

கொம்பு இல்ல..
வாலு இல்ல..
நாலு காலும் இல்ல..
என்ன இது இரண்டு கால்தான் இருக்கு..?

அடடா!
இவர் மனிதர்தான்..

இது ஒன்றும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படமல்ல..
நேற்றுதான் இப்படியொரு காட்சியைக் கண்டேன்.

இது ஒன்றும் அரிய காட்சியல்ல..

இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் நமக்குப் பாடம் என்றொரு பொன்மொழி உண்டு. இந்தக் காட்சி எனக்கு உணர்த்திச் சென்ற பாடத்தையே இங்கு பதிவு செய்கிறேன்..

இவர்...

திருடவில்லை, பொய்சொல்லவில்லை, பிச்சையெடுக்கவில்லை,
யாரையும் ஏமாற்றவில்லை..

நாள்தோறும் நாளிதழ் படிக்கும்போதும், தொலைக்காட்சி செய்திகள் பார்க்கும்போதும் மனதில் கேள்விகள் எழும்...

மனிதர்களில் இத்தனை வகைகளா? இப்படியும் இருப்பார்களா? என்பதுதான்..

வாழ்க்கை ஒரு விற்பனை நிலையம்
இங்கு
தன்னைப் புரிந்துகொண்டவர்கள் விற்பனையாளனாகிறார்கள்
தன்னைப் புரிந்துகொள்ளாதவர்கள் விற்பனைப் பொருளாகிறார்கள்

என்றொரு பொன்மொழி உண்டு.

இந்த மனிதர் (பொய்சொல்லும்) விற்பனையாளனாகவில்லை
(ஏமாந்த) நுகர்வோராகக் கூட ஆகவில்லை..
விற்பனைப் பொருளாகிவி்ட்டாரே.. என்று தான் தோன்றியது.

 இன்றைய அரசியல்வாதிகளைநடிகர்களைஆன்மீகவாதிகளையெல்லாம் விட ஆயிரம் மடங்கு மேலானவராகவே இவர் தெரிகிறார்.


குளிர்சாதன அறையிலிருந்து கொண்டு குப்பைமேட்டிலிருப்பவர்களின் சுருக்குப்பையிலிருக்கும் பணத்தை எப்படி பறிப்பது என்று திட்டம் தீட்டும் ஆயிரம் ஆயிரம் படித்த முட்டாள்களைவிட படிக்காத இந்த முட்டாள் ஆயிரம் மடங்கு மேலானவர் என்பது என் கருத்து.

இவரிடமிருக்கும் தன்மானம், உழைப்பு நான் இவரிடம் கற்றுக்கொண்ட பாடம்.

தொடர்புடைய இடுகைகள்

வியாழன், 11 அக்டோபர், 2012

ப-த-வி வேண்டுமா..?


குடியரசுத்தலைவர்
பிரதமர்
முதல்வர்
அமைச்சர்
அரசுஅலுவலர்
என ஏதேதோ பதவிகளுக்காக இன்று பெட்டிகள் கைமாறுகின்றன.

பதவி ஆசையில்லாதவங்க யாருதான் இருக்காங்க..?

வாழும்போதே பதவிக்காக பரிதவிக்கும் மனிதன்.
இறந்தபின்பும் வேண்டிநிற்கிறான் சிவலோகப் பதவியை, வைகுண்டப் பதவியை..

“ஆசையிருக்கு கலெக்டராக“ (மாவட்ட ஆட்சியர்)
 அம்சமிருக்கு கழுதை மேய்க்க“ என்றொரு பழமொழி உண்டு.

ஆசைப்பட்டால் மட்டும்போதுமா?
அதற்காக உழைக்கவேண்டாமா?

இராமலிங்க வள்ளலாரின் ப-த-வி கோட்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும்.

சித்திரு - புதியன கற்கும் ஆர்வத்தோடு இரு.
னித்திரு - தனித்துவமுடையவனாக இரு.
விழித்திரு - உள்மன விழிப்போடு இரு.

என்பது நான் புரிந்துகொண்ட கருத்து. இவை மூன்றும் இருந்தாலே பதவியைத் தேடி நாம் செல்லவேண்டியதில்லை. நம்மைத் தேடிப் பதவி தானே வரும்.


தொடர்புடைய இடுகை


ஞாயிறு, 7 அக்டோபர், 2012

கோபம் வரும்போதெல்லாம்..


  1. கோபம் என்பது கொடிய நோய்..
  2. இந்நோய் தன்னையும் அழித்து தன்னைச் சார்ந்திருக்கும் சுற்றத்தாரையும் அழிக்கவல்லது.
  3. மிக விரைவாக அருகே இருப்பவருக்கும் பரவக்கூடிய நோய்..

  4. கோபத்தைக் கட்டுப்படுத்த பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள். அதைப் பின்பற்றுவதில்தான் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய உள்ளது.

  5. கோபம் வரும்போது..

    தண்ணீர் குடிக்கவும்..
    ஒன்று இரண்டு என எண்ணவும்..
    கண்களை மூடிக்கொள்ளவும்..
    கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்க்கவும்..

    என பல வழிமுறைகள் சொல்லியிருக்கிறார்கள்..
    நம் வள்ளுவர் சொல்கிறார்...

    நீங்க கோபப்படுறீங்களா?
    உங்களுக்கு நீங்களே ஏன் தண்டனை கொடுக்கறீங்க..
    நிலத்தில் தன் கைகளை ஓங்கி அடித்துக்கொண்டவனுக்குக் கை வலிக்காமலா போகும்?
    அதுபோலத்தான் அவன் கொள்ளும் கோபத்தால் அவனுக்கு வலி ஏற்படும். அவன் கோபத்தால் ஏற்படும் துன்பத்திலிருந்து தப்பமுடியாது என்கிறார்.

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

    குறள் 307: 
    கோபம் வரும்போதெல்லாம் நான் இந்தக்குறளை நினைத்துக்கொள்கிறேன்..


புதன், 3 அக்டோபர், 2012

மாணவர்கள் காணவேண்டிய திரைப்படங்கள்.

நான் பள்ளியில் படித்த காலத்தில், பள்ளியிலிருந்தே திரையரங்கத்துக்கு அழைத்துச்செல்வார்கள். அங்கு இயற்கை, அறிவியல், விழிப்புணர்வு தொடர்பான ஆவணப்படங்கள் காண்பிப்பார்கள்..

இப்போதும் இந்த வழக்கம் சில பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது. சில பள்ளிகளில் மாணவர்களைத் திரையரங்கத்துக்கு அழைத்துச்சென்று “எந்திரன்” போன்ற படங்களைக் காண்பிக்கிறார்கள்.

திரைப்படம் என்பது ஆற்றல் வாய்ந்த ஊடகமாக விளங்குகிறது. இன்றைய தலைமுறையினர் அதிகமாகவே திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். இந்நிலையில் என் பார்வையில் மாணவர்கள் தவறவிடாமல் பார்க்கவேண்டிய சில படங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.

  • ல்வித்துறை சார்ந்தவர்கள் மாணவர்களை திரையரங்கு அழைத்துச்சென்று தான் காண்பிக்கவேண்டும் என்றில்லை. இப்போதெல்லாம் கல்வி நிறுவனங்களிலேயே எல்சிடி உள்ளிட்ட திரையரங்கு வசதிகள் வந்துவிட்டன. அதனால் மாணவர்களின் எதிர்கால நலம் கருதி இப்படங்களை மாணவர்கள் காண வழிவகை செய்தல் வேண்டும்.

  •  பெற்றோர்களும் பிள்ளைகளுக்காக நிறையவே செலவுசெய்கிறார்கள். கீழ்காணும் திரைப்படங்களை குறுவட்டு (டிவிடி) களாகவாவது தன் குழந்தைகளுக்கு வாங்கித்தந்து கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில், தொடர் நாடகம் பார்க்கும் நேரத்தில் குடும்பத்தோடு அமர்ந்து இந்தப் படங்களைக் காணலாம்.


  • லையுலக உறவுகளே என் பார்வையில் சிறந்ததாகக் கருதும் சில படங்களை மொழிப்பாகுபாடின்றி பட்டியலிட்டிருக்கிறேன். இதுபோல தங்கள் பார்வையில் மாணவர்கள் காணவேண்டிய படங்களாத் தாங்கள் கருதும் படங்களைப் பரிந்துரை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும் கீ்ழ்காணும் படங்களில் தாங்கள் பார்த்த படங்கள் மனதில் பதிந்த சிந்தனைகளையும் தாங்கள் பதிவு செய்தால் இளம் தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டுதலாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இந்தப் படங்களைப் பற்றிய விமர்சனங்கள் நிறையவே இணையப்பரப்பில் எழுதப்பட்டதால் ஒவ்வொரு படங்களைப் பற்றியும் ஒரே ஒரு சிந்தனையை மட்டும் தங்கள் முன் வைக்கிறேன்.

அகிம்சை


கல்வி


சட்டம்


பகுத்தறிவு


விடுதலை


நட்பு


தமிழர் நம்பிக்கைகள்

தன்மானம்


தன்னம்பிக்கை

அன்பே கடவுள்

மாணவர் உலகம்


கல்வியா? விளையாட்டா?
இன்றைய கல்வியின் நிலை


நாட்டுப் பற்று

தன்னையறிதலே கல்வி