வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 22 ஜூலை, 2009

இசை மருத்துவம்.



இசையால் நோய்கள் குணமாகும் என்பது அறிவியல் ஒப்பிய முடிவு. இசைமருத்துவக் கூறுகள் பலவற்றையும் சங்க இலக்கிய வழியாக அறியமுடிகிறது. சங்க கால மக்களின் இசைமருத்துவ அறிவை இனி “ இசைமருத்துவம்“ என்னும் தொடர் இடுகை வழி அறியலாம்...

இசை மருத்துவக் கூறு – 1

சங்க காலத்தில் போரில் புண்பட்ட வீரனின் வலி குறைய காஞ்சிப்பண் பாடினர்.



தன் வேந்தனை எதிர்த்து எதிரி நாட்டு மன்னன் படையெடுத்து வந்துவிட்டான். தன் மன்னனுக்காகத் தான் முன்னின்று போரிட்டு மன்னனைக் காத்தான். ஆயினும் அவ்வீரனின் உடலில் புண் ஏற்பட்டுவிட்டது. இற்றைக் காலத்தைப் போல அன்று மருத்துவ முறைகள் இல்லை....

இருப்பினும் புண்பட்ட வீரனை அவர்கள் காத்தவிதம் வியப்பளிப்பதாகவும், அவர்களின் மருத்துவ அறிவைப் பறைசாற்றுவதாகவும் இருக்கிறது.

புண்பட்ட வீரனின் வீட்டில் இரவமரத்தின் தழையோடு, வேப்ப மரத்தின் தழையையும் சேர்த்துச் செருகினர்.....

பேய்களிடமிருந்து புண்பட்ட வீரனைக் காக்க என்று உரைகள் கூறினாலும், வேம்பின் மருத்துவ குணத்தைச் சங்கத்தமிழர் அறிந்திருப்பார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

புண்பட்ட வீரன் கேட்பதற்காக நல்ல இனிமையான யாழிசை, குழலிசை, மணியிசையோடு பெண்கள் காஞ்சிப்பண் பாடினர்.

இசை வலியைக் குறைக்கும் என்று சங்கத்தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்கான சான்றாக இச்செய்தி அமைகிறது.


இதனை,

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ,
வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்,
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி;
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்,
காக்கம் வம்மோ-காதலந் தோழீ!
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!

281. நெடுந்தகை புண்ணே!
பாடியவர்: அரிசில் கிழார்
திணை: காஞ்சி துறை: பேய்க் காஞ்சி



தன்னோடு போர் செய்ய பகை மன்னனை அம்மண்ணுக்குரிய அரசன் காஞ்சி என்னும் மலர் சூடி காக்க முனைவது காஞ்சித் திணை.


பேய்காஞ்சி :

போர்க்களத்தில் புண்பட்டு வீழ்ந்தாரைப் பேய் மிகவும் அச்சுருத்துவது பேய்க்காஞ்சியாகும்.


இப்பாடல் உணர்த்துகிறது.

சங்க காலத்தில் புண்பட்ட வீரரைப் பேயிடமிருந்து காக்கக் காஞ்சிப்பண் பாடினர் என்று மேலோட்டமான செய்தி கிடைக்கிறது...

இப்பாடலை நன்று உற்று நோக்கினால்,


பேய் குறித்த அச்சம் அவர்களிம் இருந்தாலும்,


நோய் தடுப்பு முறை,

நோய் நீக்கும் முறை,

வலியை இசை வாயிலாக நீக்கும் முறை


ஆகியவற்றை சங்கத்தமிழர் நன்கறிந்திருந்தனர் என்பது புலனாகிறது.

12 கருத்துகள்:

  1. நல்ல பதிவு..வேறென்ன சொல்ல?

    * *
    --------------------,

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அக்னிப் பார்வை

    பதிலளிநீக்கு
  3. இன்று இடுகைகள் மூலம் பல இலக்கிய தகவல்களை தந்தமைக்கு நன்றிகள்.

    உண்மையிலேயே எமது பலன் தமிழர் மருத்துவம் நாங்கள் வியப்படைய வேண்டிய ஒன்றுதான்...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு......

    பதிலளிநீக்கு
  5. என்னே இசையின் வலிமை....

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான ஒரு பதிவு. அருமையாக இருந்தது....

    வாழ்த்துக்கள், தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்....

    அப்படியே எங்க வலைக்குள்ளும் வந்து போங்க......

    பதிலளிநீக்கு
  7. /என்னே இசையின் வலிமை..../
    கருத்துரைக்கு நன்றி தமிழரசி........

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான ஒரு பதிவு. அருமையாக இருந்தது....

    வாழ்த்துக்கள், தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்..../

    கருத்துரைக்கு நன்றி சப்ராஸ்...

    பதிலளிநீக்கு
  9. இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற டி.எம்.எஸ்ஸில் பாடல் இடம்பெறும் காட்சியில் இசையால் தான்சேன் நோயைக் குணப்படுத்துவதைப் பார்த்து இது உண்மையாக இருக்குமா என்ற கேள்வி எழுந்ததுண்டு. இந்தப் பதிவில் பல கேள்விகளுக்கு விடைகிடைத்திருக்கிறது.

    தமிழன் வேணு

    பதிலளிநீக்கு
  10. தீங்கனி இரவமொடு வேம்பினை வீட்டில் செருகியதும் பலவித இசைக்கருவிகளுடன் காஞ்சி இசைத்ததும் அனுபவத்தால் இப்பாடல் சொல்லும் பழந்தமிழர் கண்ட உண்மைகள் போலும். இரவம் என்றால் எந்த மரம் நண்பரே?

    பதிலளிநீக்கு
  11. , n. < இரவு¹. See இருள்மரம். (புறநா. 281.)

    என்று தமிழ் லெக்சிகன் உரைக்கிறது நண்பரே....

    பதிலளிநீக்கு
  12. பழந்தமிழ் இலக்கியங்களை தேடி எமக்காக இலகுதமிழ் விளக்கங்களுடன் பதிவிடும் உங்கள் பணிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு