வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 4 ஜூலை, 2009

விட்ட குதிரையார்




விட்ட குதிரை விசைப்பின் அன்ன
விசும்பு தோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம் தற்படர்நதமை அறியான் தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினள் என்ப நம் மாண் நலம் நயந்தே.


குறுந்தொகை – 74.

தலைமக்கள் இருவரும் பிரிவில் வாடும் நிலையில் தோழி தலைவனின் குறையைத் தலைவி மறுக்காமல் ஏற்கும் வகையில் கூறுகிறாள்...

தலைவன் தலைவி மீது அருளின்றி இருந்தாலும் தோழி தலைவனைக் குறை கூறுவதைத் தலைவி விரும்புவதில்லை. அந்நிலையில் தலைவனின் சிறப்பினைத் தலைவி எடுத்துரைப்பாள்.

ஆனால் இங்கு தலைவனின் குறையைத் தோழி கூறுகிறாள். அதுவும் அதனைத் தலைவி மறுக்கமுடியாதவாறு கூறுகிறாள்..

சென்ற இடுகையில் மீனெறி தூண்டிலார் பற்றிப் பார்த்தோம். அதில் யானை வளைத்த மூங்கில், கவண்ஒலி கேட்டு யானை அஞ்சிக் கைவிட்டவுடன் நிமிரும். அது மீனெறி தூண்டில் போல இருக்கும் எனவும் உரைக்கப்பட்டது.

அது போலவே, இப்பாடலிலும்........

நெடுநாள் பிணித்த கட்டு அவிழ்த்துவிடப்பட்ட குதிரையானது துள்ளி எழும் எழுச்சியைப் போல வளைத்துப் பின் விட்டமையால் மூங்கில் மேலேழுந்து மேகத்தைத் தீண்டும். தன்மையுடைய மலைநாட்டின் தலைவன்,

யாம் தன்னை நினைத்து மெலிதலை அறியாதவனாகவும், தானும் பசுவினால் விரும்பப்பட்ட ஏறு போல நமது அழகினை எண்ணி மெலிந்தனன் என்றாள் தோழி..

தலைமக்கள் இருவரும் ஒருவரை எண்ணி ஒருவர் என இருவரும் உடல் மெலிந்தனர். தலைவன் தலைவியை வரைந்து கொண்டு இந்நிலையை மாற்றலாம் என்பது தோழியின் எண்ணமாகும்.

மூங்கில் இரவில் தானே வளையும். பகலில் வளைத்தாலும் நிமிரும் அதுபோல தலைவன் இரவுக்குறியில் தடையின்றி சந்திக்கிறான். ஆனால் பகற்குறியில் கிடைத்தற்கு அரியனாகிறான்.

நெடுநாள் கட்டப்பட்ட குதிரை கட்டினை அவிழ்த்தவுடன் எவ்வளவு விரைவாகச் செல்லுமோ, அதுபோல மூங்கிலின் நிமிர்தல் இருந்தது என்று மூங்கிலின் விசைத்து எழுதலுக்கு குதிரையின் துள்ளிச் செல்லுதல் உரைக்கப்பட்டது. இவ்வுவமை மிகவும் பொருத்தமாக அமைந்து பாடலுக்கு சிறப்பு சேர்க்கிறது.

விட்ட குதிரை என்ற தொடரின் சிறப்பு கருதியே இப்பாடலைப் பாடிய புலவருக்கு “ விட்ட குதிரையார் “ எனப் பெயரிட்டனர்.

இப்பாடலில் விட்ட குதிரை என்பது தலைவனின் பண்புநலனையும் குறிப்பதாக அமைகிறது.
விட்ட – என்ற சொல் பொருளுக்கும் கூட்டி உரைக்கப்படுகிறது. இயல்பாகவே தலைவன் நிமிர்ந்து நிற்கும் தலைமைப் பண்பு உடையவன்.ள ஆயினும் நலம் நயந்து தலைவிக்காக வந்தனன் எனப் பொருளுடனும் இயைபுற வந்துள்ளது.

இப்பாடல் வழி தலைமக்களின் பிரிவால் இருவரும் உடல் மெலிந்தமையும், தலைவியை விரைந்து வரைந்து கொள்ளாதது தலைவனின் குறையென்றும் தோழியால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விட்ட குதிரை என்னும் உவமையால் இப்பாடலின் ஆசிரியர் பெயர் பெற்றமையும் அறியமுடிகிறது.

16 கருத்துகள்:

  1. தமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. விளக்கமும் அருமை. தொடருங்கள். தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  2. நேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில் நான் அறியாத தகவல் மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்....தலைவி குறிப்பிட்டது போல் ஆண்களின் குணத்தை எப்படி சரியாக கணித்திருக்கிறாள்...விட்ட குதிரை பதிவு நெஞ்சை தொட்டப்பதிவாகி விட்டது..ஏனோ இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு குணா....என்னே சங்கக்கால காதல்....

    பதிலளிநீக்கு
  3. இதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும் புரியுமாறு
    எழுதினால் நலம் பயக்கும்.

    முழுமையான குவாலிட்டி பதிவுக்கு இக்காலத்தில் யார் முக்கியத்துவம் தருகிறார்கள் ??

    பழைய சாதமாக இருந்தாலும் பீங்கான் தட்டில் வைத்து பரிமாறப்படுதலையே இங்கு அனைவரும்
    விரும்புகின்றனர்.

    பதிலளிநீக்கு
  4. நிழற்படம் தலைப்புக்குப் பொருத்தமாகவுள்ளது.

    பதிலளிநீக்கு
  5. திரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்..///

    புதுத்தகவல் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  7. /தமிழ் பாடத்தில் படித்தது. மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பு. விளக்கமும் அருமை. தொடருங்கள்/

    கருத்துரைக்கு நன்றி
    அன்பு..........

    பதிலளிநீக்கு
  8. /நேற்றைய பதிவை மிஞ்சும் வகையில் இன்றைய பதிவு...இதில் நான் அறியாத தகவல் மூங்கில் இரவில் தானே வளையும் பகலிம் வளைத்தாலும் நிமிரும் என்ற தகவல்....தலைவி குறிப்பிட்டது போல் ஆண்களின் குணத்தை எப்படி சரியாக கணித்திருக்கிறாள்...விட்ட குதிரை பதிவு நெஞ்சை தொட்டப்பதிவாகி விட்டது..ஏனோ இந்த பதிவு ரொம்ப பிடிச்சிருக்கு குணா....என்னே சங்கக்கால காதல்..../

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்

    பதிலளிநீக்கு
  9. /இதில் கொஞ்சம் கம்மர்ஷியலையும் சேர்த்து பாமரனுக்கும் புரியுமாறு
    எழுதினால் நலம் பயக்கும்.

    முழுமையான குவாலிட்டி பதிவுக்கு இக்காலத்தில் யார் முக்கியத்துவம் தருகிறார்கள் ??

    பழைய சாதமாக இருந்தாலும் பீங்கான் தட்டில் வைத்து பரிமாறப்படுதலையே இங்கு அனைவரும்
    விரும்புகின்றனர்/

    தங்கள் கருத்து உண்மை தான் நண்பரே....
    ஆயினும் எதிர்காலத்தில் இத்தகைய பதிவுகள் தமிழாய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் . எதிர்காலம் குறித்து சிந்தித்து இப்பதிவு செய்து வருகிறேன்..இருப்பினும் .... தங்கள் கருத்தை ஏற்று இன்னும் எளிமைப்படுத்தித் தர முயல்கிறேன்....

    பதிலளிநீக்கு
  10. /நிழற்படம் தலைப்புக்குப் பொருத்தமாகவுள்ளது/

    கருத்துரைக்கு நன்றி முனைவரே........

    பதிலளிநீக்கு
  11. /திரும்ப தமிழ் பாடம் படிக்கும் பதிவு/

    கருத்துரைக்கு நன்றி அபு......

    பதிலளிநீக்கு
  12. /புதுத்தகவல் நண்பரே!!

    கருத்துரைக்கு நன்றி மருத்துவரே........

    பதிலளிநீக்கு
  13. அழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

    நீங்கள் ஈரோடா? அதும் கே.எஸ்.ஆர் காலேஜா? அங்கு லெக்சரர் தாரிக்(போன வருடம் இருந்தார் தற்சமயம் இல்லை)தெரியுமா? அவர் என் கசின்.

    நான் கலைமகள் மெட்ரிக் ஸ்டூடண்ட். என்னை மெருகேற்றியது என் பள்ளியும் எம் ஆசிரியைகளும். அதனால் ஆசிரிய சமுதாயத்தின் மேல் எப்பவும் எனக்கு தனி மரியாதை உண்டு.

    என் வலைதளத்தைப் பாருங்கள், மேலிருந்து பூ கொட்டுவது போல அமைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. அருமையான உள்ளுறைப் பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான உவமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  15. /அழகான உவமையை, இன்னும் அழகாக விளக்கியிருக்கிறீர்கள்/

    வருகைக்கும் கருத்துரை வழங்கியமைக்கும் நன்றி சுமஜ்லா....

    ஆம் தங்கள் நண்பர் தாரிக் அவர்களை நான் அறிவேன் அவர் இப்போது இங்கு பணியாற்றவில்லை.


    எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கல்லல்.
    பணிநிமித்தம் இங்கு தங்கியுள்ளேன்..

    பதிலளிநீக்கு
  16. /பொருளுடன் இந்தப் பாடல் இருக்கிறது. எக்காலத்திலும் எல்லோருக்கும் பொருத்தமான உவமை. அறிமுகத்திற்கு மிக்க நன்றி நண்பரே/

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமரன்.

    பதிலளிநீக்கு