வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 24 ஜூலை, 2009

ஔவை சென்ற தூது (வாள் மங்கலம்)




மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுவது வாள்மங்கலம் ஆகும். அதியமானின் படைக்கருவிகள் பாராட்டப்பட்டமையால் இது வாள்மங்கலம் ஆனது.

தமிழ்த்தூது இலக்கிய வளர்ச்சியில் சங்க இலக்கியம் பெரும்பங்கு வகிக்கிறது.

காமம் மிக்க கழிபடர்கிளவி என்னும் அகத்துறை அகம் சார்ந்த தூது இலக்கியம் தோன்றக் காரணமானது.

புறம் சார்ந்த தூதுக்குச் சான்றாக இப்பாடல் அமைகிறது. சங்க காலத்தில் பெண்டிரும் தூது சென்றமை இப்பாடல் வழி அறியமுடிகிறது.

(அவன் தூது விட, தொண்டை மானுழைச் சென்ற ஔவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.)

அதியமான்(அரசன்) – ஔவை (புலவர்) நட்பைத் தமிழுலகம் நன்கறியும்.
ஒருமுறை, தொண்டைமான் என்னும் மன்னன் அதியனை எதிர்த்து போரிட எண்ணினான்.

அதியனோ மாவீரன்,
தொண்டைமான் தன் வீரத்தை அறியாது அழியப்போகிறானே என்று அதியனுக்கு வருத்தம். அதனால், ஔவையாரைத் தொண்டைமானிடம் தூதாக விட்டான்.

தூது சென்ற ஔவையார், அங்கு தொண்டைமானைப் புகழ்ந்தும், அதியனை இகழ்ந்தும் பாடியதே இப்பாடல்..
பாடலின் உட்பொருளை அறிந்த தொண்டைமான் அதியனுக்கு அஞ்சி போரைத் தவிர்த்தான்...

வஞ்சப்புகழ்ச்சி அணிக்குத் தக்க சான்றாக இப்பாடலைக் கொள்ளலாம்.

புறநானூற்றில் 95 வது அமைந்துள்ள இப்பாடல் வாள் மங்கலம் என்னும் துறையில் அமைந்துள்ளது..
இனி பாடலை உரையாடல் வழிக் காண்போம்,

தொண்டைமான் : வாருங்கள் புலவரே...
தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது...

ஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா...

தொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..
எனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்...
வாருங்கள்...
பாருங்கள்.......
எனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன.............?


ஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா..... !

தொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்...

ஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..
பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.


தொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்...
அதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்....!

ஔவையார் : ஆம் மன்னா...

உனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான அவைதாம் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.

தொண்டைமான் : அதியனின் வீரம் உணர்ந்தவனாக அவனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக்கொண்டான்...

ஔவையார் பாடலின் உட்பொருள்...

ஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.

தொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு.......

நீ அதிகம் போர்க்களம் காணாதவன்....
ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்...


உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது.

இந்த ஆழமான உட்பொருளை தொண்டைமான் உணர்ந்தமையால் அதியனோடு போரிட எண்ணிய எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

இப்பாடல் வழி புறத்தூது மரபினையும், வாள்மங்கலம் என்னும் புறத்துறையையும் அறியமுடிகிறது..

புகழ்வது போல இகழும் வஞ்சப்புகழ்ச்சி அணி அழகாக விளக்கம் பெறுகிறது.


11 கருத்துகள்:

  1. நல்ல ஆய்வு! பள்ளியில் படித்தவைகள் நினைவுக்கு வருகின்றன. நன்றி!

    பதிலளிநீக்கு
  2. நிறைய படிக்க வேண்டும் போல..
    உங்களது தமிழை இடுகையை புரிந்துகொள்ள..

    பதிலளிநீக்கு
  3. எங்கள் தமிழ் ஆசானால் இப்போதும் எனக்கு இப்பாடலும், விளக்கமும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன். நன்றி தோழரே...

    பதிலளிநீக்கு
  4. சார், தொடர் பதிவுக்கு தங்களை அழைத்திருக்கிறேன், வந்து பார்க்கவும்:http://sumazla.blogspot.com/2009/07/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  5. நல்லதொரு இடுகை வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. நல்ல ஆய்வு! பள்ளியில் படித்தவைகள் நினைவுக்கு வருகின்றன. நன்றி!/
    வருகைக்கும் கருத்துரைக்கும நன்றி தமிழ்ப்பிரியன்...........

    பதிலளிநீக்கு
  7. நிறைய படிக்க வேண்டும் போல..
    உங்களது தமிழை இடுகையை புரிந்துகொள்ள../

    நாம் தமிழர் மரபுகள் பலவற்றையும் இழந்து வருகிறோம்...
    அதனால் சில செய்திகள் புதுமையாகவும், சற்று கடினமாகவும் தோன்றும்...
    புரியாத செய்திகளை கருத்துரையில் தெரிவிக்கவும் .. விளக்கம் தரக் காத்திருக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  8. எங்கள் தமிழ் ஆசானால் இப்போதும் எனக்கு இப்பாடலும், விளக்கமும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன். நன்றி தோழரே.../
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அன்பு........

    பதிலளிநீக்கு
  9. சார், தொடர் பதிவுக்கு தங்களை அழைத்திருக்கிறேன், வந்து பார்க்கவும்/
    அழைப்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு இடுகை வாழ்த்துக்கள்.../

    கருத்துரைக்கு நன்றி சந்ரு.........

    பதிலளிநீக்கு
  11. தமிழ் அய்யா சொல்லிக் கொடுத்ததெல்லாம் ஞாபகம் வருது. அருமையான பதிவு. சங்க காலத்தில் ஆண் பெண் நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்களும் ஒளவையும் அதியமானும் தானே. இவர்கள் நட்புக்கு இலக்கணமாக நெல்லிக்கனி சம்பவம் ஒன்றைக் கூறுவார்களே. அதைப் பதிவிட்டுள்ளீர்களா அய்யா..

    பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

    பதிலளிநீக்கு