வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 15 ஏப்ரல், 2009

பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை




மு.வரதராசன்
தமிழுலகம் நன்கறிந்த அறிஞர். தமிழாய்வின் முன்னோடி.சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்ய விரும்புவோர் இவரின் நூலை படித்துவிட்டுச் சென்றால் சங்க இலக்கியம் குறித்த பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.
இயற்கை குறித்த இவரின் நோக்கு சங்ககால வாழ்வியலை நம் கண் முன் நிறுத்துவதாகவுள்ளது.
நூலின் உள்ளடக்கம்

1.இயற்கை பெறுமிடம்
2.பாடிய புலவர்கள்
3.இயற்கையில் பெயர் பெற்ற புலவர்கள்
4.நிலம்
5.வானம்
6.பயிரினமும் உயிரினமும்
7.உவமையில் இயற்கை
8.இயற்கையோடு இயைந்த வாழ்வு
முடிவுரை

என அமைந்துள்ளது.

மனித இனத்தின் பேராற்றல்களாகிய காதல், வீரம் ஆகிய இரண்டையும் ஊடுருவிப் பாய்ந்து பரந்து கிடக்கச் செய்யும் அளவுக்கு இயற்கையினிடத்து அவர்கள் எல்லையற்ற காதல் கொண்டிருந்தனர். இத்துணையளவு இயற்கைக்கு இலக்கியத்தில் இடம் அளித்தும்
“இயற்கை” என்ற சொல்லோ அதற்கு இனமான பிறிதொரு சொல்லோ ஓர் இடத்தும் குறிக்கப்படவேயில்லை. உலக வாழ்வில் மனித வாழ்வு ஒரு கூறு என்றால், அவனுக்கு புறத்தே உள்ளவற்றைப் பிறிதொரு கூறு என்பர். அப்புற வாழ்வின் குறியீடு என்ற அளவில் கூட இயற்கை என்ற சொல்லைக் கூட சங்க இலக்கியம் குறிப்பிடவில்லை.



என்ற இவரின் கூற்று இந்நூலின் மீது ஆர்வத்தைத் தூண்டுவதாகவுள்ளது. நூலின் பெயரோ “பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை” ஆனால் சங்க இலக்கியத்தில் இயற்கை என்ற சொல்லே எங்கும் இடம் பெறவில்லை என்கிறார். பின் சங்ககாலத்தில் இயற்கை என்ற சொல்லுக்கு என்ன பொருள் ? சங்க கால வாழ்வில் இயற்கை எத்தகைய இடம் பெற்றிருந்தது? என பல்வேறு கேள்விகளுக்கும் விடையளிப்பதாக இந்நூல் விளங்குகிறது.

பண்டைத் தமிழ்ச்சான்றோர் இயற்கையைத் தனியொரு பொருளாகக் கருதிப் பாடினாரல்லர். காதல் வீரம் என்பவற்றைத் தலைமைக் கூறுகளாகக் கொண்டு பிற பல கூறுகளையும் துணையாகப் பெற்றுள்ளது மனித வாழ்க்கை.அத்தகைய மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளையும் வருணித்து தெளிவுபடுத்துவதற்காகவே பண்டைத்தமிழ்ச்சான்றோர் இயற்கையைப் பயன்படுத்தினர். சுருங்கச் சொன்னால், மனித இதயத்தின் உணர்வுகளையும் , இயற்கையின் கவர்ச்சி நிறைந்த எழிலையும் நெருங்கிப் பிணைப்புடையனவாய் – இனிய உறவுடையனவாய் இணைத்தனர் என்னும் கருத்து மனங்கொள்ளத்தக்கதாகவுள்ளது.

நூல் வெளியிடுவோர்

பாரிநிலையம்
184, பிராட்வே, சென்னை -108

2 கருத்துகள்:

  1. மு.வரதராசன்
    தமிழுலகம் நன்கறிந்த அறிஞர். தமிழாய்வின் முன்னோடி.சங்க இலக்கியம் குறித்து ஆய்வு செய்ய விரும்புவோர் இவரின் நூலை படித்துவிட்டுச் சென்றால் சங்க இலக்கியம் குறித்த பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.///

    மு.வ. வின் கதைகளை ஒரு நேரம் விரும்பிப்படித்தேன்!! மண் குடிசை, கள்ளோ காவியமோ? ஆகியவை மிகப்பிடித்தவை!!

    பதிலளிநீக்கு