வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 23 டிசம்பர், 2010

மதிப்புகள்



ஒருமுறை ஒரு மனிதன் பேரழகு சிலையொன்றைத் தன் நிலத்திலிருந்து கண்டெடுத்தான். அவன் அதனை அழகான பொருட்களை விரும்பும் ஓர் ஆட்சியாளரிடம் கொண்டு சென்று விற்பதற்காகக் கொடுத்தான்.

ஆட்சியாளர் ஒரு பெருந்தொகைக்கு அதனை வாங்கியதும் அந்த மனிதன் பிரிந்துசென்றான்.

பணத்துடன் வீட்டை நோக்கிச் செல்லும்போது அவன் ஏதோ நினைத்து தனக்குத் தானே …………

“இந்தப் பணம் எப்பேர்ப்பட்ட உயிர்ப்புள்ளது!
ஆயிரக்கணக்கான வருடங்களாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த இந்த செதுக்கப்பட்ட, யாரும் கனவுகாணா இந்தச் சிலைக்கு இவ்வளவு பணத்தை எவ்வாறு ஒருவரால் கொடுக்கமுடியும்………..,?”

என எண்ணிக்கொண்டான்.

இப்போது அந்த ஆட்சியாளர் தன்னிடமிருந்த அந்தச் சிலையினைப் பார்த்தபடி எண்ணிக்கொண்டார்………

“என்ன அழகு!
என்ன உயிர்த்துடிப்பு!
எப்பேர்ப்பட்டதோர் ஆன்மாவின் கனவு!
ஆயிரக்கணக்கான வருடங்களின் இனிமையான தூக்கத்தின் புதுமையான வளர்ச்சி!
இறந்துபோன கனவற்ற இந்தப் பணத்துக்காக எவ்வாறு ஒருவன் இந்தச் சிலையினைக் கொடுக்கமுடியும்……….?”

புதன், 22 டிசம்பர், 2010

நீங்க அறிவாளியாகவே இருங்க..! - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 20

குறுந்தொகை 20


ஒரு மனிதனைக் கோபத்திற்குள்ளாக்கும் மிகப்பெரிய கேள்வி...?

உனக்கு அறிவிருக்கிறதா...........?

சரி அறிவைப்பற்றி இங்கு ஏன் இவ்வளவு ஆராய்ச்சி என்கிறீர்களா..?

எல்லா அறிவாளிகளும் அறிவாளிகள் அல்ல!
எல்லா முட்டாள்களும் முட்டாள்களல்ல!


என்னும் உண்மையைப் புலப்படுத்தும் அகப்பாடல் இதோ..

“அருளும் அன்பும் நீங்கி துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்

புதன், 15 டிசம்பர், 2010

ஈரோடு வலைப்பதிவர் சங்கமம் 2010




மறக்கமுடியுமா....
ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு முடிந்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்டன என்றால் நம்பமுடியவில்லை.நேற்றுதான் சந்தித்ததுபோல இருக்கிறது


பள்ளிக்கால பழக்கமா..?
கல்லூரி தந்த நட்பா..?
தொப்புள் கொடி உறவா..?

இவையெல்லாவற்றுக்கும் மேலே தமிழ்மொழி தந்த உறவிது..!

தமிழின் இனிமையை,

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிக உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை
குயில் போற் பேசிடும் மனையாள் = அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை
அயலவராகும் வண்ணம் = தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர்
.“

என்பார் பாரதிதாசன். இவ்வினிய மொழிதந்த உறவிது அதனால் இவ்வுறவுக்குத் தனிச்சிறப்பு உண்டு.

எழுத்துக்களால் மட்டுமே அறிமுகமான உறவுகளை நேரில் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சங்கம முயற்சி இணையத்தமிழ் வளர்ச்சியின் அடுத்த படிநிலையாகவே கருதத்தக்கதாகும்.

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.

தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.

அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
துருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.

தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே!

நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.
முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.

நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.


இதோ நாம் தமிழர் என்று கர்வப்பட ஓர் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறது ஈரோடு வலைப்பதிவர் சங்கமக்குழு..

நாள் : 26.12.2010 ஞாயிறு
நேரம் : காலை 11.00 மணி
இடம் : டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்
URC நகர், பெருந்துறை ரோடு, ஈரோடு


தமிழன்பர்கள் அனைவரையும் வருக வருகவென ஈரோடு பதிவர்கள் சார்பாக வரவேற்கிறேன்..

சனி, 4 டிசம்பர், 2010

உள்ளுதொறும் நகுவேன்..


ளம் துறவி தம் குருவிடம் ஓர் சந்தேகம் கேட்டார்...

குருவே நான் புகைவண்டியில் இடம் கிடைக்காது பாதையில் அமர்ந்து வந்தேன். அப்போது என் எதிரே இருந்தவர் தவறுதலாக என்னை மிதித்துவிட்டார். கோபம் கொண்ட நான் அவரைத் திட்டிவிட்டேன். கோபத்தை அடக்க எண்ணியும் என்னால் இயலவில்லையே ஏன்? எப்போது என்னால் அமைதியான மனநிலைக்குச் செல்லமுடியும்? என்று வினவினார்.
குரு சொன்னார்....

“ நீ வேறு !
உன் உடல் வேறு !”
என்ற எண்ணம் எப்போது உனக்குத்தோன்றுகிறதோ அப்போதுதான் உன்னால் முதிந்த நிலையடைய முடியும்! என்றார்.

இன்று இரு பழம்பாடல்களைக் காணப்போகிறோம்....

இப்பாடல்களில் வரும் இருவரும் “தான் வேறு தன் உடல்வேறு ” என்ற எண்ணம் கொண்டவர்கள் தான்! ஆனால் இவர்கள் துறவிகளல்ல..

பாடலுக்குச் செல்வோம்....

சிற்றிலக்கியங்களில் குறிப்பித்தக்ககது முத்தொள்ளாயிரம். இதன் பாடல்கள் சங்கஇலக்கியப் பாடல்களுடன் ஒப்புநோக்கத்தக்கனவாகத் திகழ்வது இதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.

சுவைமிகு சிற்றிலக்கியப் பாடல் ஒன்று....
சேரனின்மேல் தீராத காதல் கொண்ட பெண்ஒருத்தி சேரனைக் காணத்துடிக்கிறாள்.அதனால் இவள் தன் நெஞ்சையே தூதாக அனுப்புகிறாள்.
ஆனால், அவனைத் தேடிச் சென்ற நெஞ்சு, அவளிடம் திரும்பவில்லை. ஏன் ? என்றும் அவளுக்குப் புரியவில்லை !
'குளிர் வாட்டும் மார்கழி மாதம், ஊரெங்கும் பனி பெய்துகொண்டிருக்கிறது - இந்த நிலைமையில், என் காதலன் சேரன் கோதையைக் காணச் சென்ற என் நெஞ்சம், அங்கே எப்படிப் பாடுபடுகிறதோ, தெரியவில்லையே !', என்று மனம் கலங்கி நிற்கிறாள்.
ஆனால் தன் நெஞ்சமோ, சேரனைப் பார்க்காமல், அங்கிருந்து திரும்புவதில்லை என்கிற உறுதியோடு, குளிர் தாங்காமல், தன் கைகளையே போர்வையாய்ப் போர்த்திக்கொண்டு, அவனுடைய அரண்மனை வாசலில் பரிதவித்து நிற்கிறது !', என்கிறாள் அவள் !

இப்பாடலில் தலைவி தன் உடல் வேறு நெஞ்சம் வேறு என்று எண்ணிக் கொள்வது காதலின் ஆழத்தையும், கவிதையின் சுவையையும் கூட்டுவதாகவுள்ளது.

பாடல் இதோ..

கடும்பனித் திங்கள்தன் கைபோர்வை ஆக,
நெடுங்கடை நின்றதுகொல் தோழி நெடுஞ்சினவேல்
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்றஎன் நெஞ்சு. (பாடல்-17)


ஒப்பு நோக்கத்தக்க சங்கப்பாடல்...

தலைவனின் பிரிவை ஏற்க இயலாத தலைவி உடல் மெலிவுற்றாள். தன் நெஞ்சமோ அதன் நல்வினைப் பயனால் தலைவனின் பின்னே சென்றுவிட்டது. ஆனால் நானே தீவினைப் பயனால் இங்கு ஊராற் பழிச்சொல்லுக்கும் உடல்மெலிவிற்கும் உரியவளாய் வாடுகிறேன் என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள். இதனை எண்ணிப்பார்க்கும் போதெல்லாம் தனக்கு சிரிப்பு வருகிறது என்று அவலம் (வருத்தம்) தோன்ற சொல்கிறாள்.

பாடல் இதோ...

உள்ளுதொறும் நகுவேன் தோழி – வள்ளுகிர்
பிடி பிளந்திட்ட நார்இல் வெண்கோட்டு
கொடிறுபோல் காய வால் இணர்ப் பாலை
செல்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம்
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்
பல்இலை ஓமைய புலி வழங்கு அத்தம்
சென்ற காதலர் வழி வழிப்பட்ட
நெஞ்சே நல்வினைப் பாற்றே ஈண்டு ஒழிந்தது
ஆனாக் கௌவை மலந்த
யானே தோழி நோய்ப் பாலேனே

நற்றிணை -107

கூற்று – பிரிவிடை மெலிந்த தலைவி தோழிக்குச் சொல்லியது.

தலைவனின் பிரிவால் உடல்மெலிந்த தலைவி தோழியிடம்........

o பெரிய நகமுடைய பெண்யானை உண்பதற்காக ,பாலை மரத்தின் மேலுள்ள தோற்பட்டைகளை பறித்தது. அதனால் அம்மரம் நாரில்லாத வெண்மையான கிளைகளுடன் பற்றுக்குறடுபோல் காய்களையும் பூங்கொத்துகளையும் கொண்டதாகக் காட்சியளிக்கும்.
o ஓமை மரம், இயங்கும் காற்றினால் இலைகள் பல உதிர்ந்து கிளைகளில் காய்ந்த நெற்றுகள் மலையிலிருந்து வீழும் அருவிபோல ஒல்லென ஒலிக்கும்.
o இத்தகைய மரங்கள் உடையதாயும், புலியின் இயக்கம் உடையதாயும் விளங்குவது என் தலைவர் சென்ற வழியாகும். அப்பாலை நிலத்து வழியே அவரின் பின்னே என் நெஞ்சமும் அதன் நல்வினைப் பயனால் சென்றுவிட்டது.
o ஆனால் நானோ நான் செய்த தீவினைப் பயனால் இங்கு ஊராரின் பழிச்சொல்லுக்கும், உடல் மெலிவிற்கும் ஆட்பட்டுத் தவிக்கிறேன்.
o இவ்வாறு இருவினையாலும் (நல்வினை, தீவினை) ஏற்படும் பயனை நான் ஒருசேர அனுபவிக்கிறேன். என் நிலை கண்டு எனக்கே சிரிப்புத்தான் வருகிறது என்று புலம்புகிறாள்.

பாடலின் வழி


 பிரிந்து சென்ற தலைவனின் நினைவால் தாம் எப்போதும் இருப்பதனை, அவன் பின்னே தன்நெஞ்சம் சென்றது என்றும், இது என் நெஞ்சம் செய்த நல்வினைப்பயனால் கிடைத்த வாய்ப்பு என்றும் சொல்கிறது தலைவியின் மனம்.
 தலைவனின் பின்னே தன் நெஞ்சம் சென்றது போல் தன் உடலால் செல்லமுடியவில்லை. அதனால் உடல் மெலிவுற்று, ஊராரின் பழிச்சொல்லுக்கும் ஆளாகித் தான் வாடுவது தான் செய்த தீவினைப் பயனே என்றும் கருதுகிறாள்.

உள்ளுறைப் பொருள்..
o பெண்யானை மரத்தின் தோலை பறிப்பது போலத் தலைவியின் நலத்தைப் பெற்றான் தலைவன்.
o பாலை நிலத்தில் இலை தீர்ந்து நெற்று ஒலிப்பது போலத் தலைவியின் நெஞ்சம் கலக்கத்திற்குள்ளானது
o புலி வழங்கும் அத்தம் என்றது, அன்னை முதலான உறவினர்கள் தலைவியை அச்சுறுத்தினர் என்ற பொருள்நயம் தோற்றுவிப்பதாகவுள்ளது.
ஒப்பீடு...
உடல் வேறு மனம் வேறு என்று இருத்தல் ஒருவித ஞான நிலையாகும். காதலும் ஒருவகை தவம் தானே அதனால் இந்தப் பண்பு கூடிவந்தது போலும்.
 முத்தொள்ளாயிரம் – நற்றிணை என்னும் இருபாடல்களிலும் தலைவியர்கள் தம் உடல்வேறு – நெஞ்சம் வேறு என்னும் எண்ணம் கொண்டிருத்தல் ஒப்பநோக்கத்தக்கதாகவுள்ளது.
 முத்தொள்ளாயிரத்தில் தலைவி தன் நெஞ்சத்தின் நிலைகண்டு வருந்துகிறாள்
 நற்றிணைத் தலைவி தன் நெஞ்சத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்கிறாள்.
 முத்தொள்ளாயிரத்தில் தலைவி தன் நெஞ்சின் நிலைகண்டு வருந்தினாலும் காதலின் வலிமை கண்டு பெருமிதம் கொள்கிறாள்.
 நற்றிணைத் தலைவி தன் நெஞ்சின் நிலை கண்டு பெருமிதம் கொண்டாலும் தன் உடலால் இயலவில்லையே என்று வருத்தம்கொள்கிறாள்.
 நற்றிணைத்தலைவி இருவினையையும் நினைத்து நினைத்து சிரிப்பதாகத் தோழியிடம் சொன்னாலும். தலைவியின் சிரிப்பு மகிழ்ச்சி காரணமாக மட்டும் தோன்றிதல்ல.... அவலம் (வருத்தம்) காரணமாகவும் தோன்றியது என்று எண்ணும்போத கவிதையின் சுவை கூடுகிறது.

வியாழன், 2 டிசம்பர், 2010

வலியா நெஞ்சம் வலிப்ப….



ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெறமுடியுமா…?

இளமையை தொலைத்துக் கல்வியை வாங்குகிறோம்…!
கல்வியை விற்று சம்பளம் வாங்குகிறோம்…
பணத்தை இழந்து மகிழ்ச்சி வாங்குகிறோம்…

ஆனாலும் மகிழ்ச்சியை மட்டும் யாரும் இழக்க விரும்புவதில்லை.

மகிழ்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சி எல்லோரும் விரும்புவது! இருந்தாலும் சிலருக்கு மட்டுமே கிடைப்பது.

யாருமே தொலைக்கவில்லை
இருந்தாலும்…….
தேடிக்கொண்டே இருக்கிறார்கள் நிம்மதியை!

என்னும் ஆன்றோர் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.

சங்கச் சான்றோர்தம் வாழ்க்கைக் குறிப்புகளாகத் திகழ்வன சங்க இலக்கியங்களாகும்.

இதோ ஓர் வாழ்க்கைக் குறிப்பு..

தலைவன் பொருளுக்காகப் பிரிவான் என்னும் குறிப்பறிந்து தலைவி வருந்தினாள். அவளிடம் தோழி “உனது நலன்கள் தலைவரை தடுத்து நிறுத்துவன அல்ல போலும். அதனால் ஆற்றியிருப்பதன்றி வேறு வழியில்லை என்று சொல்லித் தேற்றினாள்.

பாடல் இதோ…

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி
சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம்
திறம்புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது
அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல் என
வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த
வினையிடை விலங்கல போலும் புனை சுவர்ப்
பாவை அன்ன பழிதீர் காட்சி
ஐதுஏய்ந்து அகன்ற அல்குல் மைகூர்ந்து
மலர் பிணைத்தன் மாஇதழ் மழைக்கண்
முயல் வேட்டெழுந்த முடுகு விசைக் கதநாய்
பல்நாப் புரையும் சீறடி
பொம்மல் ஓதி புனைஇழை குணனே!

நற்றிணை -252 (பாலை)
அம்மெய் நாகனார்.

கூற்று - பொருள்வயிற்பிரியும் என்று கவன்ற தலைவிக்குத் தோழி சொல்லியது.

 உலர்ந்த கிளைகளையுடைய ஓமை மரத்தில் மறைந்து தங்கிச் சிள்வீடு ஒலிக்கின்ற வேற்றுநாட்டின் வழியே “இவ்வாறு தலைவியைப் பிரிந்து பொருளுக்காகச் செல்வோம்” என்ற கொள்கை கொண்டார் தலைவர்.
 அவ்வாறு பெறும் அரிய பொருள் வீட்டில் சோம்பியிருப்பாருக்குக் கூடுவதில்லை என்று இதுவரை பிரியக் கருதாத நெஞ்சமும் (வலியா நெஞ்சமும் வலிப்ப) பிரிவதற்கு உடன்படும்

தலைவியின் அழகுநலன்கள்...

 சுவரிலே புனைந்து எழுதப்பட்ட படிமத்தைப் போன்ற அழகுடையவள் தலைவி.
 மெலிதாய் பொருந்தி அகன்ற அல்குலையும் (இடை) மை எழுதப்பட்டு நீலமலரைப் பிணைத்து வைத்தது போன்ற கரிய இமையுடன் விளங்கும் அழகிய கண்களையும் உடையவள்.
 முயலை வேட்டையாகக் கொள்ளும் விருப்பத்துடன் எழுந்து விரைந்த வேகத்தையுடைய சினமுடைய நாயினுடைய நல்ல நாவை ஒத்த சிறிய அடிகளையுடையவள்.
 பொலிவுடைய கூந்தலையுடையவள்.

 பொருளின் தேவையையுணர்ந்த தலைவனின் முடிவை உனது இத்தகைய அழகுநலன்கள் கூட மாற்ற முடியாது. அதனால் அவர் வரும் வரை ஆற்றியிருப்பதே நாம் செய்யத்தக்கவொன்றாகும் என்று தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள் தோழி.

பாடலின் வழி...

“சிள்வீடு” என்றும் சிள்வண்டு மரத்தின் கிளையோடு மறைந்து ஒலிக்கும் அதுபோல தலைவன் மீது தலைவி கொண்ட ஏக்கமும் கற்பின் மிகுதியால் வெளிப்படத்தோன்றாது உள்ளத்தே நின்று வருத்தும் என்னும் இறைச்சி (உட்பொருள்) அழகாகப் புலப்படுத்தப்படுகிறது.
“அரும்பொருட் கூட்டம் இருந்தோர்க்கு இல்” என்னும் கருத்து சிறந்த பொன்மொழியாகவே கொள்ளத்தக்கதாகும். வீட்டில் இருப்போருக்குத் தானே பொருள் வந்து சேராது. தேடிச்செல்வோருக்கே மகிழ்ச்சி தேடிவரும் என்னும் அரிய கருத்தை விளக்குவதாக இப்பொன்மொழி விளங்குகிறது.
“வலியா நெஞ்சம் வலிப்ப” என்னும் அடிகள் இதுவரை எந்தவொரு சூழலிலும் தலைவியைப் பிரியக் கருதாத தலைவன் இப்போது பிரிவது பொருளின் தேவையை அவன் உணர்ந்ததையே எடுத்துரைப்பதாகவுள்ளது.
சங்ககால மக்கள் சுவரிலே அழகிய ஓவியங்களை வரைந்து வைத்திருந்தனர் என்பதை “புனை சுவர்ப்பாவை” என்னும் அடிகள் விளக்குவனவாகவுள்ளன.

புதன், 1 டிசம்பர், 2010

கலுழ்ந்தன கண்கள்…


தலைமக்களின் ஆழமான காதலைக் கண்டு அவர்களைச் சேர்த்துவைக்க எண்ணினாள் தோழி. அதனால் பெற்றோர் அறியாது அவர்கள் உடன்போக்கில் செல்ல ஏற்பாடு செய்தாள். தலைவியின் வளர்ப்புத்தாயும் தன்தாயுமான செவிலியிடம் சென்று தலைவியின் காதலையும் தெரிவித்தாள்(அறத்தொடு நிற்றல்).

பின்னர் ஆவலாகக் காத்திருந்த தலைவனிடம் சென்று...

“தலைவி உன்னோடு வரமாட்டாள்..
அவள் உன்னுடன் வரலாம் என்ற முடிவுடன்தான் தம் சிலம்பைக் கழற்றிப் பந்தின் அருகே வைக்கச் சென்றாள். ஆனால் அப்போது அவளுக்குத் தம் தோழியரின் நினைவு வந்துவிட்டது. தம் சிலம்பைக் காணும் போது தம் தோழியர் தம் நினைவால் மிகவும் வருந்துவரே அவர்கள் பாவம் என்று மிகவும் கண் கலங்க அழுதனள் என்றாள்.

பாடல்....

விளம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்
பாசம் தின்ற தேய்கால் மத்தம்
நெய்தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும்
வைகுபுலர் விடியல் மெய்கரந்து தன்கால்
அரியமை சிலம்பு கழீஇ பல்மாண்
வரிபுனை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண்தொறும் நோவர் மாதோ
அளியர் அளியர் என் ஆயத்தோர் என
நும்மொடு வரவு தான் அயரவும்
தன்வரைந்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே

கயமனார்

நற்றிணை-12

துறை – தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.


பாடலின் உட்பொருள் இதோ....

 தயிர்ப்பானையின் முடைநாற்றம் நீங்க விளம்பழத்தை இட்டுவைத்துள்ளனர். அதனால் விளம்பழத்தின் மணம் எங்கும் கமழ்கிறது.
 அத்தயிர்ப்பானையைத் தயிர் ஆடித்தேய்த்ததால் மத்தின் தண்டு தேய்ந்திருக்கிறது.வெண்ணை தோன்றத் தேய்தலால் எங்கும் மத்தின் ஓசை முழங்குகிறது. இத்தகைய இருள் நீங்கும் வைகறைப் பொழுதில், தலைவனுடன் செல்ல எண்ணிய தலைவி, பருக்கக்கற்கள் போட்டு செய்யப்பட்ட தன் சிலம்பைக் கழற்றிப் பந்தின் அருகே வைக்கச் சென்றாள். அப்போது தலைவியின் உள்ளத்தில்,

“என் தோழிகள் இவற்றைக் காணும் போதெல்லாம் வருந்துவார்களே!
அவர்கள் இரங்கத்தக்கவர்கள்” என்று எண்ணினாள் அப்போது
அவளுக்கு உன் நினைவும் வந்தது. என்ன செய்வது என்று அறியாது
அவளது கண்கள் அளவிடமுடியாத அளவுக்குக் கலங்கின என்று தோழி
தலைவனிடம் உடன்போக்கின் விளைவினையும், தலைவியின்
இயலாமையையும், மறைமுகமாக ....

தலைவா நீ ஊரறிய திருமணம் செய்வதே சிறந்தது! யாரும் அறியாது உடன்போக்கில் தலைவியை அழைத்துச் செல்வது உனக்கு சிறப்பாகது என்பதையும் அறிவுறுத்துகிறாள்.

பாடலின் வழியே....
 தயிர்ப்பானையின் முடைநாற்றம் நீங்க விளம்பழத்தைப் பானையில் இட்டுவைக்கும் சங்ககால மக்களின் வழக்கத்தை அறியமுடிகிறது.
 பருக்கைகல் போட்டு சிலம்பணியும் சங்ககால பழக்கமும், திருமணத்திற்குப் பின்னர் சிலம்பு அணிவதில்லை என்ற அக்கால மரபும் புலப்படுத்தப்படுகிறது.
 தம் சிலம்பைக் காணும் போதெல்லாம் தோழியர் மனம் வாடுவார்களே என்று கலங்கும் தலைவியின் கண்கள் ஒருகண்ணில் நட்பையும், மறுகண்ணில் காதலையும் தாங்கி நிற்பது பாடலுக்குச் சுவைகூட்டுவதாகவுள்ளது.
 செவிலிக்குச் சொல்லியும் சேர்க்கமுடியாத காதலை உடன்போக்கிலாவது சேர்த்துவைக்கலாம் என்று எண்ணிய தோழியே பின் உடன்போக்கு வேண்டாம் என்று தலைவனை ஆற்றுப்படுத்துவது...
மறைமுகமாகத் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுவதாகவும், உடன்போக்கைவிட பெற்றோர் சேர்த்துவைக்கும் திருமணமே சிறந்தது என்பதை அறிவுறுத்துவதாகவும் உள்ளது.

வெள்ளி, 19 நவம்பர், 2010

பார்மெட்டுக்குப் பின்னும் தரவுகளைப் பெற..



இன்றைய சூழலில் கணினியில் அழிந்த, அழித்த தரவுகளைப் பெற பல இலவச மென்பொருள்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதிலும் விண்டோசு இயங்குதளங்களில் தரவுகளை மீட்டெடுப்பது எளிதாகவுள்ளது. இம்மென்பொருள்களில் இமெஜ் ரிகாலர் என்னும் மென்பொருள் தனிச்சிறப்புடையதாகவுள்ளது.

விரும்பியோ, எதிர்பாராதவிதமாகவோ நாம் நம் கணினிகளைப் பார்மெட் செய்வோம். பின்னர் அந்தக் கணினியிலிருந்த தரவுகள் நமக்குத் தேவைப்படலாம் அப்போது என்ன செய்வது என்று நாம் சிந்திக்கும் வேளையில் இந்த மென்பொருள் துணைபுரிவதாகவுள்ளது. இந்த மென்பொருளை இந்த சுட்டியில் பெறலாம்.

3.75 எம்பி அளவுடைய இம்மென்பொருள் எளியமுறையில் பயன்படுத்தத்தக்கதாகவுள்ளது. இம்மென்பொருளைப் பதிவிறக்கியபின்பு கிடைக்கும் எக்சு வடிவக் கோப்பை இயக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் நம் கணினியில் பார்த்தால் அதற்கான கோப்பு வடிவம் (ஐகான்) இருக்கும் அதில் நாம் தேடவிரும்பும் இடத்தை (டிரைவை) சுட்டினால் தேடல் தொடங்கும்.எல்லா வகையான கோப்புகளும் கிடைக்கும் அதில் நமக்குத் தேவையான தரவுகளை மட்டும் மீண்டும் பெறலாம்.

திங்கள், 15 நவம்பர், 2010

கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா?



கிரிக்கெட் மட்டும் தான் விளையாட்டா? விளையாட்டு என்றவுடன் கிரிக்கெட், கால்ப்பந்து, டென்னிஸ் ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகிறது.
ஏனென்றால் அவ்விளையாட்டுகளில் தான் பணம் கிடைக்கிறது.

பணத்துக்காக விளையாடுகிறார்கள் – பணம் விளையாடுகிறது.

உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கிறதா?
சீனா போன்ற நாடுகளில் திறமைக்குத் தான் மதிப்பளிக்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளியிலேயே சென்று அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் திறமையை வளர்க்கிறார்கள். அதனால் அந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.


விளையாட்டு என்றால் என்ன?
இவை மட்டும் தான் விளையாட்டுகளா? பழந்தமிழர் விளையாட்டுகளை அறிய இங்கே சொடுக்கவும்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

உங்கள் வலைப்பதிவின் மதிப்பை அறிய..



உங்கள் வலைப்பதிவின், இணையத்தின் மதிப்பை அறிய http://bizinformation.org/ என்னும் தளம் உதவுகிறது இங்கு சென்று உங்கள வலைமுகவரியை உள்ளீடு செய்தால்....

வலையின் மதிப்பீடு
நாள்தோறும் பார்வையிடப்படும் பக்கங்கள்
பார்வையாளர் எண்ணிக்கை
மொத்த பக்கங்கள் எனப் பல விவரங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது


வெள்ளி, 29 அக்டோபர், 2010

மாயமல்ல…



சங்க இலக்கியங்கள் சங்ககால வரலாற்றுக் கருவூலங்களாகவே திகழ்கின்றன. சங்ககால மக்களின் நடைமுறை வாழ்வியலை எடுத்தியம்புவன சங்கப்பாடல்களே. அக, புற வாழ்வியலின் நாட்குறிப்புகளாக இப்பாடல்கள் விளங்குகின்றன.

தலைவன் தலைவியைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று மணந்துகொண்டான். தலைவியைப் பார்த்துவரலாம் என்று தோழியும் அவன் வீட்டுக்குச் சென்றாள். தலைவியின் புதிய அழகினைக் கண்டு வியந்தாள் தோழி. பாடல் இதோ...


“தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி! வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரையகம் தொறும்
தொன்று உரை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானை கோடு கண்டன்ன
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே!


-புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்க்கிழான்

நற்றிணை -294 (குறிஞ்சி)

மண மனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.


(தலைவன் தலைவியைக் கொண்டு சென்று தன்னகத்து மணந்தமை அறிந்த தோழி, தலைவனின் வீட்டுக்குச் சென்று தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து தலைவனின் மார்பு முன்பு நோயும், பின்பு இன்பமும் தந்தது என்று கூறியது.)

(காதலிக்கும்போது (களவுக்காலத்தில்) தலைவியை நீங்கி தலைவிக்கு நோய் தந்த தலைவன் இப்போது சேர்ந்திருப்பதால் இன்பம் தந்தான் இதனையே இத்துறை இயம்புகிறது)


தோழி....
மூங்கில்கள் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவியுள்ள பெரிய மலையின் உள்ளிடந்தோறும் பழமையான அறிவுடன் வலிமையுடன் மிகுந்த சினமும் கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற் போல செவ்விய புறப்பகுதியைக் கொண்ட செழுமையான அரும்பவிழ்ந்த காந்தள் மணம் கமழும். அத்தகைய மணம் வீசும் சாரல் விளங்கும் மலைநாடனின் அகன்று விரிந்த மார்பு “தீ, காற்று“ எனும் இரு முரண்பட்ட ஆற்றல்களைக் கொண்டுள்ள ஆகாயம் போன்று நோயும், இன்பமும் தரத்தக்கனவாயிருந்தது. இது மாயமல்ல உண்மையே ஆகும் என்றாள்.


பாடல் வழி..


 வீட்டுக்குத் தெரியாமல் தாம் விரும்பும் பெண்ணைத் தலைவன் தம் ஊருக்கு அழைத்துச் சென்று தம் வீட்டில் மணந்துகொள்ளும் மரபு சங்காலத்தில் இருந்தமை இப்பாடலால் புலனாகிறது
 நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐந்து கூறுகளால் ஆனது நம் உடல் இறுதியில் இக்கூறுகளுடனேயே இரண்டறக் கலந்துபோகிறது. இதனை உணர்ந்தியம்புவதாக இப்பாடல் அமைகிறது.
 தலைவனின் மார்பு தீ, காற்று ஆகிய கூறுகளைத் தம்மகத்தே கொண்ட வானின் பண்புகளைக் கொண்டது என்பதைப் புலவர் சுட்டுகிறார்.


 காந்தள் மலரின் தோற்றத்தைச் சொல்லவந்த புலவர், யானையின் தந்தத்தைப் போன்றது என்று நேரடியாகக் கூறாமல்...

பழமையான அறிவும், வலிமையும், மிகுந்த சினமும் கொண்டது யானை என்றும் அந்த யானை வலிமைமிக்க புலியையும் கொல்லும் தன்மையது என்றும் கூறி அத்தகைய யானையின் தந்தத்தைப் போன்றது காந்தள் என்ற புலவரின் கற்பனைத் திறன் அவரின் அழகுணர்ச்சியைக் காட்டுவதாகவுள்ளது.

யானை புலியைக் கொன்றால் அதன் தந்தத்தில் இரத்தம் தோய்ந்திருக்கும்.இரத்தம் தோய்ந்த யானையின் தந்தம் எப்படியிருக்கும்....?
காந்தள் மலரைப் போல இருக்கும்...!

புலவரின் ஒப்புநோக்கும் திறன்
சங்ககால மக்களுக்கு இருந்த விலங்கியல்
மற்றும் தாவரவியல் அறிவுக்கும்
கற்பனை நயத்துக்கும் சங்ககால பழக்கவழக்கங்களுக்கும் தக்கதொரு சான்றாக இப்பாடல் அமைகிறது.

வியாழன், 28 அக்டோபர், 2010

காதல்னா சும்மாவா..?


எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை – காதல்!
காதலர் மாறினாலும் காதல் என்றும் மாறுவதில்லை.

களவும் கற்று மற ! என்பதையே பலர் பிழைபடத்தான் புரிந்துகொண்டுள்ளனர்.
களவும் கற்று மற ! என்பதற்குத் திருடவும் கற்றுக்கொள்ளவேண்டும் என்றே பொருள் கொண்டுவருகின்றனர்.

களவு என்றால் காதல்.
காதலிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். காதலித்துக்கொண்டே இருந்துவிடக்கூடாது. விரைவில் அதனை மறந்து திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதையே..

களவும் கற்றுமற என்று நம்முன்னோர் உரைத்துச்சென்றனர்.

இன்றைய காதலர்கள்.........

“அறுகம்புல் போல நாங்கள் வளர்த்த காதலை
ஆடுமாடு போல உங்க அப்பன் வந்து மேய்ந்துவிட்டான்“
என்று புலம்புகின்றனர்“.

இன்றைய சூழலில் காதலின் பொருளும், அதன் புரிதலும் பிற பண்பாட்டுத் தாக்கங்களால் சற்றுத் திரிபடைந்துள்ளது.
அற்றைக் காலத்தில் காதலில் எவ்வளவு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை எடுத்தியம்பும் அழகான பாடல் இதோ…

இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், 5
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் 10
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின், 15
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன் மா 20
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.

அகநானூறு 122. குறிஞ்சி - பரணர்

(தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொன்னது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். (தலைவன் அருகில் மறைந்திருக்க அவன் வந்தமை அறியாதது போல தோழிக்குத் தலைவி சொல்வதாக இத்துறை அமைந்துள்ளது)


மிகுதியான கள்ளைப் பருகிக் களித்தாடும் மக்களையுடைமையால், ஆரவாரத்தினையுடைய பழைமையான இந்த ஊரானது, விழாக்கள் நடைபெறவில்லையாயினும் உறக்கம் கொள்ளாது.

ஊரிலுள்ள வளமிக்க கடைத்தெருவும் பிற தெருக்களும் ஒரு சேர உறங்கி ஒலி அடங்கினாலும் ,

உரத்த குரலுடன் பேசும் கொடிய சொற்களைக் கொண்ட நம் அன்னை உறங்கமாட்டாள்.

நம்மைப் புறம் போகவிடாது காவல் செய்யும் அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினாலும் உறங்காத காவலைக் கொண்ட ஊர்க்காவலர் விரைந்து சுற்றி வருவர்.

ஒளி பொருந்திய வேலையுடைய அக்காவலர்கள் உறங்கினாலும் கூர்மையான பற்களையும், வலப்பக்கம் உருளும் தன்மைகொண்ட வாலையுடைய நாய் குரைக்கும் .

நிலவோ வான்முழுவதும் தோன்றிப் பகல் போல ஒளி செய்யும். அந்நிலவு மறைந்து எங்கும் இருள் பரவிய பொழுதும், இல்லத்து எலியை உணவாகக் கொள்ளும் வலிய வாயினையுடைய கூகைச் சேவல் (ஆந்தை) பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும். பொந்தில் வாழும் அந்தக் கூகைச் சேவல் குழறாது உறங்கினாலும் மனையில் வாழும் கோழிச் சேவல் தனது மாட்சிமைப்பட்ட குரலையெழுப்பிக் கூவும்.



ஒருநாள் இவையெல்லாம் உறங்கினபொழுது எப்போதும் என்னையே எண்ணிக்கொண்டிருக்கும் எம் தலைவன் என்னைக் காணாது ஒழிவர்.

என்று ஒரு தலைவி காதலின் இடையூறுகளைக் காட்சிப்படுத்துகிறாள்.


ஒப்புநோக்க...

இன்றைய சூழலில் காதலர்கள் ஒருவரை சந்திப்பதில் சில மரபு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
சங்ககாலக் காதலர்கள் ஊராரின் அலருக்கு (பழி தூற்றுதலுக்கு) அஞ்சினர். இன்றைய காதலர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.
அன்றைய காவலர்களைக் கண்டு காதலர்கள் அஞ்சினர். இன்றை காதலர்களோ காவல் நிலையங்களிலே தஞ்சமடைந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

புதன், 27 அக்டோபர், 2010

பந்திக்கு முந்து.....


பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று நாம் வழக்கில் சொல்வதுண்டு.
பந்தி என்றதும் நமக்குச் சாப்பாட்டுப் பந்தி தான் முதலில் நினைவுக்கு வரும்..


சாப்பாட்டுப்பந்தியில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்த அதிபுத்திசாலித்தனமான செயல்கள் தான் காட்சிகளாக வந்துவந்து செல்லும்.

சாப்பிடுபவரையே எப்போதுடா எழுந்திருப்பார் என்று குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருத்தல்..

அவரின் அருகிலேயே சென்று நிற்றல்.

என இடம்பிடிப்போரின் தொல்லை தாங்காமல் சரியாகச் சாப்பிடாமல் எழுந்து செல்வோர் பலருண்டு. சிலர் தன்னைப் யார்பார்த்தாலும் கவலையேபடாமல் மிகவும் பொறுமையாக இருந்து சாப்பிட்டுக் காத்திருப்பவரை வெறுப்பேற்றுவர். இப்படி பல நகைச்சுவைக் காட்சிகள் சாப்பாட்டுப்பந்தியில் நடைபெறும்.

சரி…
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று இதைத் தான் நம்முன்னோர் சொல்லிச்சென்றார்களா? என்றால் இல்லை.

பந்தி என்றால் வரிசை. இங்கு போரில் உள்ள வரிசையையே இந்த பந்தி என்ற சொல் சுட்டுகிறது.

“போர் என்று அழைத்தால் முதல் ஆளாகச் செல்.
படை என்று வந்தால் போர் முடிந்து எதிரிகளை அழித்து நிலைத்து நின்று கடைசி ஆளாகத் திரும்பி வா“


என்பதே சரியான பொருள். இதற்குச் சான்று பகரும் புறப்பாடல் ஒன்று..

எமக்கு கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணுமன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் ஆர் எயில் முற்றி
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே“

திணை – கரந்தை
துறை – நெடுமொழி
பாடியவர் – ஆலியார்


கலங்கிய கள் மிகவும் களிப்பளிப்பது (மயக்கமளிப்பது) அதனால் அதனை எமக்குத் தந்துவிட்டு, தெளிந்த தேறலை (கள்ளை) தான் உண்பான்.

பகைவரின் அடைவதற்கு அரிய மதிலைச் சூழ்ந்து உதட்டினைக் கவ்வி முழக்கிக் கொண்டு நீ முந்திச் செல்க என்று ஏவாது தான் முந்திச் சென்றான். அதனால் வேந்தன் இப்போது மிகவும் இன்னாதவன் ஆயினன்.

தன்னை ஏவாது தான் முந்திச் சென்று எமக்கு முன்மாதிரியா க இருந்தாலும் தமக்கு இந்த வாய்ப்பை அளிக்கவில்லையே என்று வருந்துகிறான் இந்த வீரன்.

கரந்தை – பகைவர் கைப்பற்றிய பசுக்கூட்டங்களை மீட்டல் கரந்தையாகும்.
நெடுமொழி – சிறப்புமிக்க அரசனுக்கு வீரன் ஒருவன் தன்னுடைய மேம்பாட்டை உயர்த்திச் சொல்லுவதாகும்


பாடலின் வழி..


கரந்தை என்னும் புறத்திணையும், நெடுமொழி என்னும் புறத்துறையும் விளக்கம் பெறுகிறது.

பந்திக்கு முந்து என்றால் போரில் வரிசைக்கு முந்து என்னும் பொருள் விளக்கம் பெறுகிறது

தலைமைக்கான அடிப்படை இலக்கணம் வேலை ஏவுவது அல்ல முன்னின்று தான் செயலாற்றுவது என் தத்துவம் விளக்கம் பெறுகிறது

செவ்வாய், 26 அக்டோபர், 2010

சிரிப்பும் சிந்தனையும்.


விலங்குக் காட்சிச் சாலையில் புலியொன்று ஒரு மனிதனைக் கொன்றுவிட்டது.
புலியிடம் சென்று குரங்கு...

ஏன் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றாய் ? என்று கேட்டது.

அதற்குப் புலி சொன்னது...

3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....

“எவ்வளவு பெரிய பூனை“ என்று …

அதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

--------------------------------------------------------------------------------
உலகில் மனிதர்களை மூவகைப்படுத்தலாம்.
ஒன்று - மாறாதவர்கள்,
இரண்டு - மாறுபவர்கள்,
மூன்று - மாற்றுபவர்கள். ( அரேபியப் பழமொழி)

--------------------------------------------------------------------------------

சராசரி மனிதன் புத்தகத்தோடு இருப்பான்!
சாதனை மனதன் புத்தகத்தில் இருப்பான்!

-------------------------------------------------------------------------------
மனம் திறந்து பேசுங்கள்!
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்!
சிலர் புரிந்து கொள்வார்கள்!
சிலர் பிரிந்து செல்வார்கள்!

-----------------------------------------------------------------------------
மகிழ்ச்சி இருக்குமிடத்தில் நீங்கள் வாழ விரும்புவதைவிட
நீங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை இனிமையுடையதாக இருக்கும்!
----------------------------------------------------------------------------

ஒவ்வொரு மனிதனும் கண் பார்வையற்றவனாகிறான்..
தான் தவறு செய்யும் போதும்,
செய்த தவறை மறைக்கும் போதும்!
---------------------------------------------------------------------------

புதன், 13 அக்டோபர், 2010

திருமண அழைப்பிதழ்..

நட்புகளே வரும் 18.10.2010 அன்று எனது திருமணம் நடைபெறவுள்ளது. இத்துடன் எனது திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். தங்கள் சுற்றத்துடன் வருகைதந்து கலந்துகொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.

குறுந்தொகைச் சாயல் கொண்ட எனது அழைப்பிதழ்.............


யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பெருநகை கேளாய்…



என்னை நீங்கிப்போய்வருகிறேன் என்று சொல்வதானால் அதனை என்னிடம் சொல்லவேண்டாம். உயிரோடு இருப்பவர்கள் யாரோ அவர்களிடம் சென்று சொல்லுங்கள். போகவில்லை என்பதை மட்டுமே என்னிடம் சொல்லுங்கள். என்பாள் குறள் சுட்டும் தலைவி.

செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை.. (குறள் - 1151)

ஏனென்றால் தலைவனை நீங்கித் தலைவியால் வாழ முடியாது இறந்துபடுவாள் என்பது பொருள்.

சங்ககாலத் தலைவியின் நிலை………….


தோழி……..
உன் காதலர் உன்னை ஒருநாள் பிரிந்து தங்கினாலும் நீ உயிர் வாழ்வது அரிது. இந்நிலையில் பெரு நகைப்பிற்குரிய செயல் ஒன்றை நீ கேள்.

நம்மைவிட்டு நீங்கித் தலைவர் தனியே பொருள் தேடச் செல்லலாம் என்ற எண்ணம் கொண்டார் என நம் அருகிலிருக்கும் ஏவலர் கூறுகின்றார்.

பாம்பின் தலை நடுங்குமாறு பெய்யும் மழையில் இடியின் பேரொலியைத் தனியே கேட்டுக்கொண்டு அவர் வினை முடித்து மீளுமளவும் வாழ்ந்திருத்தல் வேண்டும் எனவும் உரைப்பா்.

இது பெருஞ்சிரிப்பை வரவழைப்பதாக அல்லவா இருக்கிறது…………….?


பெரு நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப, தாமே; சென்று,
5 தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.
ஔவையார்

நற்றிணை. 129 (குறிஞ்சி)
(பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது)

தலைவன் பிரிந்து செல்லவிருக்கிறான் என்பதை உணர்ந்த தோழி அதனைத் தோழிக்கு அறித்துதல்.


பாடல் வழி.

² பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது என்னும் அகத்துறை விளக்கம் பெற்றது.
² தலைவனைத் தலைவி மிககககககககககககவும் நேசிக்க்க்க்கிறாள் என்பது தோழியின் கூற்றுவழியகாப் புலனாகிறது.
² தலைவியைத் தனியே விட்டுவிட்டுத் தலைவன் மட்டும் செல்கிறான் என்பது தோழிக்குப் பெருநகையேற்படுத்துவதாக இருக்கிறது. ஏனென்றால் தலைவனை நீங்கித் தலைவியால் எவ்வாறு வாழ முடியும்? இந்த சின்ன உணர்வைக் கூட அறிந்துகொள்ளாத அறியாமையுடையவானக இருக்கிறானே தலைவன் என்பதால் தோழிக்கு பெருநகை (பெருஞ்சிரிப்பு) ஏற்பட்டது.

புதன், 6 அக்டோபர், 2010

மீன் சென்ற வழி....


பொருளின்றி இவ்வுலகில் வாழமுடியாது!
பொருளல்லவரையும் பொருளாகச் செய்யும் பொருள்!

எனவுரைப்பர் வள்ளுவர்.
எல்லோரும் தேடுவது பொருளே!
எல்லோருக்கும் கிடைக்கின்றதா பொருள்?

கிடைத்தாலும் நிலைக்கின்றதா?

நிலைத்தாலும் எடுத்துச் செல்லமுடியுமா?

“காதில்லாத ஊசியைக்கூட நாம் இறந்தபின் நம்முடன் எடுத்துச்செல்லமுடியாது“

என்றெல்லாம் சிந்தித்தால்…

நிலையாமையை நன்கு உணர்வோம். மனிதம் மலரும்!

அடுத்தவேளை உணவுக்குக்கூட வழியின்றி பல்லாயிரம் பேர் தவிக்க உனக்கென்ன ஏழுதலைமுறைக்குச் சொத்து வேண்டியிருக்கிறது என்ற கேள்வியை நம் மனம் நம்மிடம் கேட்கும்.

சங்க இலக்கியத்தில் நற்றிணையில் ஓர் அழகான அகச்சூழலில் ஆழமான வாழ்வியல் அறம் இயல்பாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.



தலைவியை விட்டு நீங்கி பொருள் ஈட்ட வேண்டுமென எண்ணியது தலைவனின் நெஞ்சம். அந்நிலையில் தலைவன் தன் நெஞ்சினை நோக்கி…


பொய்கையில் மீன்சென்ற வழியைப் போல இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகக் கூடியது செல்வம்!

நானோ கடல் சூழ்ந்த அகன்ற இந்நிலத்தையே மரக்காலாகக் (அளவீடுகருவி) கொண்டு ஏழு மரக்கால் அளவு பெரிய நிதியைப் பெருவதாக இருந்தாலும். அந்நிதியை விரும்பேன்.ஏனெனில்,

நான் இவளது கண்களால் கட்டுண்டேன்!
இது இன்பம் தந்தது.
இவ்வின்பத்தினும் பொருள் சிறந்தது இல்லை!

எனவே பொருள் தேட உன்னோடு நான் வரமாட்டேன் என்றான்.

பாடல் இதோ…….


16. பாலை
புணரின் புணராது பொருளே; பொருள்வயிற்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
செல்லினும், செல்லாய்ஆயினும், நல்லதற்கு
உரியை-வாழி, என் நெஞ்சே!-பொருளே,
5 வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடு மீன் வழியின் கெடுவ;
யானே,
விழுநீர் வியலகம் தூணிஆக
எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும்,
கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்
10 அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென்;
எனைய ஆகுக! வாழிய பொருளே!

சிறைக்குடி ஆந்தையார்
(பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது)

பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று எண்ணிய நெஞ்சிடம் தலைவன் பேசி தன் பயணத்தைத் தவிர்த்தான்.

பாடல் வழி..


² செலவழுங்குதல் (தலைவன் பயணத்தைத் தவிர்த்தல்) என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
² பொருள் நிலையற்றது என்னும் வாழ்வியல் உண்மை உணர்த்தப்படுகிறது.

² பொருள் மீன்செல்லும் வழிபோல….
என்னும் உவமை எண்ணி இன்புறத்தக்கதாகவுள்ளது.

² நிலத்தையே மரக்காலாகக் கொண்டு ஏழுமரக்கால் செல்வம் தந்தாலும் அதனை நான் விரும்பமாட்டேன் என்ற தலைவனின் கூற்று நயமுடையதாகவுள்ளது.


v பொருளின்றி யாரும் வாழமுடியாது!
v பொருளோடு யாரும் போகமுடியாது!

செவ்வாய், 5 அக்டோபர், 2010

சிற்றில் நற்றூண் பற்றி…



உங்களை உங்க தோழனோ, தோழியோ தேடி வராங்க….

நீங்க வீட்டிலே இல்லை..

உங்க அம்மாக்கிட்ட நீங்க எங்கேன்னு கேட்கறாங்க…

உங்க அம்மா நீங்க எங்கே இருக்கீ்ங்கன்னு சொல்லுவாங்க…?

விளையாட, கடைக்கு, நூலகத்துக்கு, வெளிநாட்டுக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு இப்படி ஏதேதோ பதில்கள் வரலாம்….

இந்த பதிலில் உங்க அம்மாவுக்கு பெருமிதம் (கர்வம் கலந்த மகிழ்ச்சி) தோன்றுமா?

சங்க காலம் காதலும், வீரமுமே இருகண்களாகப் போற்றப்பட்ட காலம்.

ஆண்கள் மட்டுமின்றிப் பெண்களும் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தனர்.

தன் மகனின் வீரம் குறித்த தாயின் பெருமிதமான பதில் இதோ...



சிறுமி - (சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றியவாறு)

“உன் மகன் எங்கு உள்ளானோ..?“

தாய் - என் மகன் எங்கிருந்தாலும் நானறியேன். புலி இருந்து பின் பெயர்ந்து சென்ற கற்குகை போல அவனைப் பெற்ற வயிறு இதுவேயாகும். அதனால் போர் எங்கு நிகழ்கிறதோ அங்கு தோன்றுவான்.

அவனைப் பார்க்கவேண்டுமானால் அங்குதான் பார்க்கலாம்.

பாடல் இதோ..

சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்
யாண்டு உளனோ? என வினவுதி என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.

காவற் பெண்டு.

திணை - வாகை
துறை - ஏறாண் முல்லை.

(வீரம் செறிந்த குடியில் பிறந்த ஆண்மகனின் இயல்பைப் புகழ்தல் ஏறாண்முல்லையாகும்.)

பாடல் வழி ….

○ ஏறாண் முல்லை என்னும் புறத்துறைக்கான விளக்கத்தைப் பெறமுடிகிறது.
○ சங்ககால மகளிரின் வீரம் புலப்படுத்தப்படுகிறது.
○ காதலும் வீரமும் சங்ககால் மக்களின் இருகண்கள் என்ற கருத்துக்கு வீரத்துக்குச் சான்று பகர்வதாக இப்பாடல் அமைகிறது.
○ யாண்டு? என்னும் அக்கால வினா முறை சங்ககால பேச்சுமுறைக்குச் சான்றாகவுள்ளது.

யாண்டு என்பதே இன்று எங்கு என்று வழங்கப்படுகிறது.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

தமிழனா... தமிங்கிலனா?



தமிழன்…..
“சிட்டி“யில் “காலனி“யில் “அப்பார்ட்மென்“டில் “பிளாக்“கில் “ப்ளோரி“ல் “டோர்நம்பரி“ல் குடியிருக்கிறான்.

தமிழன்……
“மம்மி“யும் “டாடி“யும் “அங்கிளு“ம் “ஆன்டி“யும் “பேபி“யும் ரிளேடிவ்“சும் “ப்ரென்ட்சு“மாய் வாழ்கிறான்.

தமிழன்……
“டூத்பேஸ்ட்“டால்“பிரஷ்“ஆல் பல் தீட்டுகிறான்.“ஹேர்ஆயிலை“ “கிரீமை“ தலைக்கு வைக்கிறான்.“பவுடரை“ பேஸ்“கிரீமை முகத்தில் இடுகிறான்.
“ப்ளேடால்“ சேவிங்“ ரேசரால் முகமயிர் மழிக்கிறான். “சர்ட்டை“பேன்டை“ உடலில் அணிகிறான். “சாக்ஸை“சூசை“ காலுக்குப் போடுக்கறான்.

தமிழன்……
“ஸ்டோரீஸ்“ நாவல்ஸ்“ படித்து - “ஸோங்ஸ்“ கேட்டு “டான்ஸ்“ட்ராமா“ பார்த்து - “சினிமா“டிவி“ சுவைத்து மகிழ்கிறான்.

தமிழன்…….
கடையில் “பில்“ கட்டுகிறான். மருத்துவமனையில்“டோக்கன்“ கேட்கிறான்.பேருந்தில் “டிக்கெட்“ கேட்கிறான்.
பால் விற்பனை நிலையத்தில் “கார்டு“ கேட்கிறான்.

தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருடவருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் “Beware Of Dogs" என்று ஆங்கிலத்தில் எழுதிவைத்திருக்கிறான்.

தமிழனா தமிங்கிலனா… காசியானந்தன். பக்-44-45.

இதற்கு இணையான தமிழ்ச் சொற்கள் நானறிந்தவரை...


சிட்டி - நகரம்
காலனி - கூட்டுக் குடியிருப்பு
அப்பார்ட்மென்ட் -அடுக்ககம்
பிளாக் - கட்டிடத்தொகுதி
ப்ளோர் - தளம்
டோர் - கதவு
நம்பர் - எண்
மம்மி - அம்மா
டாடி - அப்பா
அங்கிள் - மாமா
ஆன்டி - அத்தை
பேபி - குழந்தை
ரிளேடிவ் - உறவினர்
ப்ரெண்ட்ஸ் - நண்பர்கள்
டூத்பேஸ்ட் - பற்பசை
பிரஷ் - பல்துலக்கி
ஹேராயில் - தலைக்குத் தேய்க்கும் எண்ணை
கிரீம் - பசை,களிம்பு
பவுடர் - தூள், பொடி
பேஸ் கிரீம் - முகப் பசை
ப்ளேடு - மழிதகடு
சேவிங் - மழிப்பு
ரேசர் - மழிப்புக் கருவி
சர்ட் - சட்டை
பேன்ட் - கால்சட்டை
சாக்ஸ் - காலுறை,மூடணி
சூ - காலணி
ஸ்டோரி- கதை
நாவல் - புதினம்
ஸோங் - பாடல்
டான்ஸ் - ஆடல்
ட்ராமா - நாடகம்
சினிமா - பெரிய திரை
டிவி - தொலைக்காட்சி
பில் - விலைப்பட்டியல்
டோக்கன் - அடையாள அட்டை
டிக்கெட் - பயணச்சீட்டு
கார்டு - அட்டை

வியாழன், 30 செப்டம்பர், 2010

கண் (கலீல் ஜிப்ரான்)



ஒரு நாள் கண் சொன்னது….
நான் இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் நீலப்பனித்திரை மூடிய மலையினைக் காண்கிறேன். அது அழகாக இருக்கிறதன்றோ!

காது கேட்டது…

சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின் சொன்னது….
ஆனால் இங்கே எங்கே இருக்கிறது மலை?
யாதொரு மலையும் இல்லையே?
நான் எதுவும் கேட்கவில்லையே?

பிறகு கை பேசியது…
நான் அதை உணரவோ தொடவோ முயற்சித்தும் என் முயற்சி வீணாகிவிட்டதே! என்னால் எந்த மலையையும் காணமுடியவில்லையே!

இப்போது மூக்கு சொன்னது….
இங்கே எந்த மலையும் இல்லை. நான் அதை உணரவோ,நுகரவோ மோப்பம் பிடிக்கவோ முடியவி்ல்லையே?

பிறகு கண் மறு பக்கம் திரும்பிக்கொண்டது. மற்ற புலன்கள் யாவும் தங்களுக்குள் கூடி கண்ணினுடைய தவறான நம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டன.

இந்தக் கண்ணுக்கு ஏதோ ஆகிவி்ட்டது…
ஏதோ ஒன்று இருக்கிறது என்று.


கதை உணர்த்தும் நீதி….



○ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
○ அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
○ நான்கு முட்டாளுக்கிடையே ஒரு புத்திசாலி வாழமுடியாது.

இன்னும் திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது சிந்தனைகளின் திறவுகோலாக இக்கதை இருக்கிறது.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

நம்மால் ஏன் முடியாது?

தொழில்நுட்பம் இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது…………...

² எதிர்காலத்தில் மக்கள் தம்முள் தொடர்பு கொள்ளும் ஒரே மொழியாக இணையம் இருக்கப்போகிறது. நமக்குள் ஏற்படும் மொழிச்சிக்கல்களை சில மென்பொருள்கள் தீர்த்துவிடுகின்றன.

² இந்நிலையில் இணையத்துடன் உறவாட அவரவர் தாய்மொழியே சிறந்த கருவி என்ற சிந்தனை மேலோங்கிவருகிறது.

² ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியிலேயே கணினியை இணையத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருகிறது.

² கணினியையும், இணையத்தையும் பயன்படுத்த இன்று ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் என்ற தேவையில்லை.

² தமிழ் மொழியை ஆதரிக்கும் இயங்குதளங்களும் (ஓ.எஸ்), உலவிகளும் (ப்ரௌசர்), தேடு எந்திரங்களும் (கூகுள்….), மென்பொருள்களும் (என்.எச்.எம், அழகி…..) நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன…

² நாம் பயன்படுத்தும் தட்டச்சுப்பலகையும் தமிழிலேயே இருந்தால் எப்படி இருக்கும்…!!!!!!!!!



சீனம் உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி. சீனர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் தாய்மொழிப்பற்றே அடிப்படைக் காரணமாகும். சான்றாகப் பாருங்கள்….

இவர்கள் பயன்படுத்தும் தட்டச்சுக் கருவி கூட அவர்தம் தாய்மொழியிலேயே இருக்கிறது.

²  திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழி தமிழ்,செம்மொழிகளுள் ஒன்று. தென்னிந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும்  அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட்போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

(இவ்வலைப்பதிவில் வலது ஓரத்தில் தெரியும் நியோ கவுண்டரில் 100 நாடுகளுக்கு மேல் பார்வையாளர்களின் வருகையைப் பார்க்கமுடிகிறது. உலகு பரவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இத தக்க சான்றாக விளங்குகிறது.)

² இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த  இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசைஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது

இப்படி பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு தமிழில் தட்டச்சுப்பலகையை வழக்கத்திற்குக் கொண்டுவர நம்மால் ஏன் முடியாது?



மென்பொருள்களில் மட்டுமே வழக்கிலுள்ள தமிழ்த்தட்டச்சுப் பலகைகளை வன்பொருள் பயன்பாடடுக்கும் கொண்டுவருவதால் இன்னும் தமிழ் நுட்பம் வளரும். தமிழர்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.
(புள்ளிவிவரங்களுக்கு நன்றி விக்கிப்பீடியா)

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தீயில் விழுந்த தளிர்.



காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

தமிழர் மரபில் சில பண்பாடுகள் உலகத்துக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்தவர்கள் நாம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றன.

அகம், புறம் என வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒரே நாகரீகம் தமிழ்நாகரிகமே ஆகும்.

அகத்தில்,

தலைமக்களின் காதலை களவு, கற்பு என இரண்டாகப் பகுத்தனர்.

இயற்கைப் புணர்ச்சி ( தலைமக்கள் ஒருவரையொருவர் இயல்பாகப் பார்ப்பது)
இடந்தலைப்பாடு ( தலைவியை முன்பார்த்த இடத்தில் மீண்டும் பார்த்தல்)
பாங்கர் கூட்டம் ( தோழனின் துணையால் தலைவியைத் தலைவன் பார்த்தல்)
பாங்கியர் கூட்டம் ( தோழியின் துணையால் தலைமக்கள் சந்தித்தல்)
அம்பல் (தலைமக்களின் காதலை ஊரார் தமக்குள்ளே பேசுதல்)
அலர் (தலைமக்களின் காதலை ஊரார் பலரறிய பேசுதல்)
இற்செறித்தல் (களவினை அறிந்த பெற்றோர் தலைவியைக் காத்தல்)
வரைவு கடாவுதல் (தலைவனைத் திருமணம் செய்துகொள்ளத் தூண்டுதல்)
அறத்தொடு நிற்றல் (காதலை தலைவி தோழிக்கும் தோழி செவிலிக்கும் செவிலி நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்கும் புரியவைத்தல்)
உடன் போக்கு (பெற்றோரறியாது தலைமக்கள் அவர்களை நீங்கிச் செல்லுதல்)


இவ்வாறு இன்றும் நிகழும் இது போன்ற காதல் நிகழ்வுகளுக்கு அற்றைக் காலத்தில் அகத்துறைகளில் இதுபோல அழகான பெயரிட்டு அழைத்தனர்.

ஒரு முறை முனைவர் பட்ட வாய்மொழித்தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

ஆய்வி்ன் தலைப்பு “ இற்செறித்தலும் உடன்போக்கும் “ என்பதாகும். வினாநேரத்தில் நான் ஒரு வினாவை….

இற்செறித்தல் என்றவொன்றிருக்கும்போது உடன்போக்கு தேவையா? என்று கேட்டேன்…

ஆய்வு மாணவரால் பதிலளிக்கமுடியாத சூழலில் எனது நெறியாளர் சொன்னார்….


“இற்செறித்தல்“ பெற்றோரின் கடமை உடன்போக்கு காதலரின் “திறமை“ என்று..


சரி சங்ககாலச் சூழல் ஒன்றைப் பார்ப்போம்.

தோழி தலைவியிடம்….

நீ குன்றுகளையுடைய நாட்டின் தலைவனோடு, உடன்போக்கில் செல்ல உடன்பட்டமையால், யான் அவனிடம் கூறி அவனை அழைத்துக் கொண்டுவந்தேன். அவன் உன்னுடன் செல்லத் தயாராகக் குறியிடத்து வந்து நின்றான்.

நின் கைகளும், கால்களும் தளர்ந்து மெலிய தீயுற்ற தளிரைப்போல நாணத்தால் உள்நடுங்கி “இன்றைய பொழுது கழிவாதாகுக“ என்று கூறுகிறாய்….!

இந்நிலையில் நான் என்ன செய்வது………..?

என்று கேட்கிறாள்.

தலைவியின் உயிர் அவளை உடன்போக்குக்குச் (தலைவனுடன்) செல்ல
தூண்டியது!

அவளுடைய நாணம் (ஒழுக்கம் காரணமாக வரும் வெட்கம்) தீ உறு தளிர் போல நடுங்கி அதனைத் தவிர்க்க முற்பட்டது.


தோழியோ தலைவியிடம் நாணத்தைவிட கற்பு மேலானது என்பதை அறிவுறுத்தி அதற்குத் தயங்கும் தலைவியிடம் தன்னால் வேறு என்ன செய்ய இயலும் என்று வினவுவதாக இப்பாடல் அமைகிறது. பாடல் இதோ..

நீ உடம்படுதலின், யான் தர, வந்து,
குறி நின்றனனே, குன்ற நாடன்;
‘இன்றை அளவைச் சென்றைக்க என்றி;
கையும் காலும் ஓய்வன ஒடுங்கத்
தீ உறு தளிரின் நடுங்கி,
யாவதும், இலை, யான் செயற்கு உரியதுவே.


குறுந்தொகை 383. பாலை

படுமரத்து மோசி கீரன்

உடன்போக்கு நேர்வித்து வந்த தோழி நாணால் வருந்தும் தலைமகளை நாணுக்கெடச் சொல்லியது.

இப்பாடலின் வழி..

² அகத்துறையொன்று விளக்கம் பெறுகிறது.

² உடன்போக்குச் செல்ல எண்ணிய தலைவி பின் தீயில்பட்ட தளிர்போல நடுங்குவது தமிழ்பண்பாட்டின் அடையாளமாக உணரமுடிகிறது. மரபை மீறிச்செல்கிறோமே என்ற அச்சம் காரணமாகவே தலைவியின் உடல் நடுக்கம் அமைகிறது.



வியாழன், 23 செப்டம்பர், 2010

ஒரு துளி கண்ணீர்.


ஒரு துளி கண்ணீர்.


² உலகில் மிகப்பெரிய செல்வம்……………….?
நமக்காக ஒருவர் சிந்தும் கண்ணீர்!
அடுத்தவருக்காக நாம் சிந்தும் கண்ணீர்!

உண்மையான அன்பிருந்தால் மட்டுமே இந்தச் செல்வம் கிடைக்கும்.



² பள்ளிக்கூடம்.


போகவேண்டிய நாளில் போக மனமில்லை!
போகமுடியாத நாளில் போகத்துடிக்கிறது மனம்!

பள்ளிக்கூடத்துக்கு!


² ஒலி அளவு


பேச்சின் ஒலி அளவை அதிகரிப்பதைவிட,
பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.

“நாணயங்கள் தான் ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும்!
ரூபாய் நோட்டுகள் அதிகம் ஓசை எழுப்புவதில்லை!!!


² கடவுள்

இன்று பசியால் வாடும் மக்களுக்கு
உணவு கொடுக்காத கடவுள்…

நாளை சொர்க்கமே கொடுப்பதானாலும்….

அப்படியொரு கடவுள் தேவையில்லை!!!

புதன், 22 செப்டம்பர், 2010

செல்வத்துப் பயனே ஈதல் - UPSC EXAM TAMIL - புறநானூறு -189



செல்வந்தர் ஒருவர் நாள்தோறும் அதிகாலையில் கையில் பணமுடிப்போடு ஊருக்குள் செல்வாராம். 
முன்பின் அறியாத யாரோ ஒருவரிடம் அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் பணமுடிப்பைக் கொடுத்துவிட்டுத் திரும்பிவிடுவாராம்.  

ஒருநாள் இப்படி யாரோ ஒரு ஆணிடம் கொடுத்துவிட்டு வந்தாராம். மறுநாள் காலையில் 
ஊர் மக்கள்….. யாரோ ஒருவர் திருடனிடம் பணமுடிப்பைத் தானே சென்று கொடுத்துவிட்டாராம் என்று பேசிக்கொண்டார்கள். 

வருந்திய செல்வந்தர் இன்று வேறு யாரிடமாவது கொடுக்கலாம் என்று அதிகாலையில் இன்னொரு ஆணிடம் கொடுத்துவந்தாராம்.

மறுநாள் காலையில் மக்கள்… 
யாரோ ஒருவர் பெரிய கஞ்சனிடம் பணமுடிப்பைக் கொடுத்துச் சென்றாராம் என்று பேசிக் கொண்டார்கள்.  

சரி இன்றாவது வறுமையில் வாடக்கூடிய யாருக்காவது தம் பணம் போய்ச்சேரட்டும் என்ற நல்ல மனதில் அதிகாலையில் ஒரு பெண்ணிடம் பணமுடிப்பைக் கொடுத்தாராம். 

மறுநாள் காலையில் மக்கள்… 
யாரோ ஒருவர் விலைமகளிடம் பணத்தைக் கொடுத்தாராம் என்று பேசிக்கொண்டார்கள். 

மனம் வாடிய செல்வந்தர் என்ன இது? 
நாம் நல்ல மனதுடன் தானே கொடுக்கிறோம்? 
 ஏன் இப்படி நடக்கிறது? 
என மனம் வருந்தியிருந்தபோது மறுநாள் காலையில் மக்கள்…. 

யாரோ ஒருவர் தினமும் பணமுடிப்பைக் கொடுத்துச் சென்றாரல்லவா… 

அந்தத் திருடன் தன் திருட்டுத் தொழிலை விட்டுத் திருந்தி வாழக் கற்றுக்கொண்டான்.. 

பெரிய கஞ்சன் மனம் மாறித் தானும் ஏழை எளியவருக்கு உதவிசெய்ய ஆரம்பித்துவிட்டான். 

விலைமகள் தம் நேர்வழியில் வாழ ஆரம்பித்தாள்… 
எனப் பேசிக்கொண்டார்கள். 

என்று ஒரு ஒரு கதை படித்திருக்கிறேன்.. 
நல்ல மனதுடன் செய்யப்படும் கொடை நல்ல வாழ்க்கைக்கு அடித்தளமாகும் என்பதற்கு இக்கதையைச் சிறந்த சான்றாகக் கூறலாம். 

கொடுத்துக் கொண்டே இருந்தால் நம்மை ஏமாளி என்றல்லவா கூறுவார்கள்! 

கொடுத்துக் கொடுத்தே அடுத்தவர்களை நாமே சோம்பேறியாக்கலாமா? என்றெல்லாம் நாம் சிந்திக்கும் வேளையில், எல்லோருக்கும் அடிப்படையானது உணவு, உடை, உறைவிடம்….

போதும் என்று மனிதன் சொல்வது உணவுக்கு மட்டுமே! 
மானம் காக்கவே ஆடை அணிகிறோம்! 
இந்த செயல்கள் பணக்காரனுக்கும் ஏழைக்கும் பொதுவானது என்ற சிந்தித்தால் மண் பயனடையும். 

 நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும்.. அதற்கு ஈதலே சிறந்த வழி. 

கொடுத்து வாழ்பவரின் வாழ்க்கை பல்லாயிரமாண்டுகள்! 
இவ்வரிய கருத்தைக் கூறும் சங்கப்பாடல்... 

உண்பது, உடுப்பது ஆகிய செயல்கள் இரண்டும் அரசனுக்கும், ஆண்டிக்கும் பொதுவானது.

பெற்ற செல்வத்தைக் அடுத்தவருக்குக் கொடுப்பதே சிறந்த அறமாகும்.
என்பதை….

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே;
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே'' 

                                                                    (புறநானூறு - 189)


பாடியவர் - மதுரை கணக்காயர் மகனார் நக்கீரனார்.

தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிற வேந்தர்க்குப் பொதுவாதலன்றித் தமக்கே உரித்தாக ஆட்சி செய்து, வெண்கொற்றக் குடையால் நிழல் செய்த அரசர்க்கும்,


இடையாமத்தும், நண்பகலும் துயிலாது, விரைந்த வேகத்தைக்கொண்ட விலங்குகளை வேட்டையாடித்திரியும் கல்வியில்லாத ஒருவனுக்கும் (வறியவனுக்கு) உண்ணப்படும் பொருள் நாழியளவு தானியமே!

உடுக்கப்படுபவை அரை ஆடை, மேலாடை என இரண்டே!
இவை போல பிற உடல், உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும்.

ஆதலால் செல்வத்துப் பயனே ஈதலாகும்!

செல்வத்தின் பயனை தாமே நுகர்வோம் என்று கருதினால் அறம், பொருள், இன்பம் பெறமுடியாது. ஈதலால் மட்டுமே இதனைப் பெறமுடியும்.

இதே கருத்தை வள்ளுவர்..


"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்,
என்பும் உரியர் பிறர்க்கு'' (குறள் - 72)

"ஈதல் இசைபட வாழ்தல்; அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு'' (குறள் - 231)

என்றுரைப்பர்.

பாடல் வழி…

கொடுத்து வாழ்வோர் இறப்புக்குப் பின்னரும் வாழலாம் என்ற கருத்தை இப்பாடல் பதிவு செய்கிறது. ( செல்வத்துப் பயனே ஈதல்)

உயிர்கள் யாவுக்கும் உணர்வுகள் பொதுவானது (உண்பது நாழி; உடுப்பவை இரண்டே)

எல்லாத் திணைகளுக்கும் பொதுவான இலக்கணங்களைக் கூறும் "பொதுவியல்" திணையாகவும், தெளிந்த பொருளை எடுத்துச் சொல்லும் - உயிர்க்கு உறுதி தரும் பொருள்களை எடுத்துரைக்கும் பொருண்மொழிக் காஞ்சித் துறையாகவும் இப்பாடல் பாகுபாடு பெற்றுள்ளது.

சனி, 18 செப்டம்பர், 2010

கணினி செயல்பாடுகளை வீடியோவாக்க..


இன்றைய சூழலில் நம் கணினியில் பயன்டுத்தும் பலவிதமான கோப்புகளை நாம் விரும்பும் வெவ்வேறு வடிவங்களாக மாற்றிக்கொள்வதற்கெனப் பல தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன.

பவர் பாயின்ட் கோப்பினை வீடியோவாக்கும் வசதிக்குப் பின்னர் நானறிந்து வியந்த தொழில்நுட்பம்..

கணினி செயல்பாட்டை வீடியோவாக்கும் தொழில்நுட்பமாகும்.
இந்த இலவச மென்பொருளைப் இங்கு பதிவிறக்கிக் கொள்ளலாம்..


கணினியின் செயல்பாடுகளை வீடியோவாக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி..

1. கணினியில் ஒரு செயல்பாட்டை அடுத்தவருக்கு ஒலி ஒளி வசதியுடன் தெளிவாக விளக்கலாம்.
2. எந்தத் துறையாக இருந்தாலும் நம் கருத்துக்களை இதுவரை வேர்டு, பவர்பாயின்ட், ஒலி, ஒளி என வெவ்வேறு தொழில்நுட்பங்களின் துணைகொண்டு கொடுத்திருப்போம்…

இந்த முறை அதற்கு ஒரு மாற்றாகவும் புதிய அனுபவமாகவும் அமையும்.


கூகுளில் சென்று ப்ரீ ஸ்கீரீன் ரெக்கார்டர் என்னும் குறிச்சொல்லைக் கொடுத்துத் தேடினால் நிறைய மென்பொருள்கள் கிடைக்கின்றன. அதில் இலவசமாகவும் நல்ல தொழில்நுட்ப வசதியும் கொண்டதாக இந்த மென்பொருள் விளங்குகிறது.

கணினி செயல்பாட்டை இலவசமாக ரெக்கார்டு செய்யம் வசதி விண்டோசின் ஏழாவது பதிப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வசதி இல்லாதவர்கள் இந்த மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மென்பொருள் விண்டோசின் எச்பியில் நன்றாகப் பணிபுரிகிறது.

வியாழன், 16 செப்டம்பர், 2010

முரசு கட்டிலில் தூங்கியவர்.

இரும்பொறையின் அரண்மனையிடத்து முரசு வைக்கும் கட்டிலில் 

மோசிகீரனார் அறியாது ஏறி வழிநடந்த களைப்பால் அயர்ந்தார்.

முரசு கட்டிலில் ஏறியது தவறு என்று தண்டிக்காது ,  

அவர் துயில் நீங்கும் வரை கவரி வீசினான் அரசன்.

மோசிகீரனாரின் தமிழ்ப்புலமையைப் போற்றுமாறு இச்செயல் அமைந்தது.

நின் வீரமுரசு குற்றம் தீர இறுகப் பிணித்துக் கட்டப்பட்ட வாரையுடையது

கரிய மரத்தால் அமைந்ததால் கருமை படர்ந்த பக்ககங்களையுடையது.

மயிலின் தழைத்து நீண்ட தோகைகளால் ஒளிபொருந்திய புள்ளியையுடைய நீலமணிபேன்ற மாலையாகக் கொண்டு சூடப்பபெற்றது.
அதனுடன் உழிஞையின் பொன் போன்ற தளிர்களும் அழகு பெறச் சூட்டப்பபெற்றது.

புதன், 15 செப்டம்பர், 2010

வேடிக்கை மனிதர்கள்!


மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்…

இந்த விடுமுறைநாளில் ஊருக்குச் சென்றேன். 3 நாள் விடுமுறையதனால் இரவு 12க்குக் கூட மக்கள் கூட்டம் அலைமோதியது. பேருந்தில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்யும் வீரதீர செயல்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது.

² பேருந்தின் சன்னல் வழியே ஏதோ ஒரு பொருளைப் போட்டு இடம்பிடிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன்……
அந்தப் பொருளுக்குப் பதில் தன் குழந்தையை வைத்து இடம்பிடிப்பவர்களைப் பார்த்து வியந்துபோனேன்!!

² பேருந்து நிற்கும் முன்னர் ஏறுபவர்களையும் இறங்குபவர்களையும் பார்த்திருக்கிறேன்…..
ஒருவர் பேருந்து நிற்கும் முன்னர் படிவழியே ஏறமுடியாத அளவுக்குக் கூட்டமானதால்……….
மெதுவாக வந்த பேருந்தின் வலதுபுறம் வந்து பின்புற சக்கரத்தில் கால் வைத்து சன்னல் வழியே ஏறி அமர்ந்து தன்னைத்தானே வியந்துகொண்டு பெருமிதத்துடன் மற்றவர்களைப் பார்த்தார்…!!

v பேருந்துகளில் செல்லத்தக்க கூட்டம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்தது. நானும் அந்தக் கூட்டத்தில் ஒருவனாக இருந்தேன்.

ஒரு பேருந்து வந்தது…. நிலையத்தின் முகப்பிலேயே இருந்தநான் வழியிலேயே ஏறி அமர்ந்துகொண்டேன். ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக்கொண்டு ஏறி ஒருவழியாக பேருந்து நிற்கும் முன்னரே அமர்ந்துகொண்டார்கள்…

ஆனால் அந்தப்பேருந்து 30 நிமிடங்களுக்குப் பின்னர்தான் செல்லும் என்று சொல்லிவிட்டு நடத்துனரும், ஓட்டுநரும் எங்கோ சென்றுவிட்டனர். வெறுப்படைந்த மக்கள் அரசுமுதல் பணியாளர்கள் வரை யார் யாரையோ திட்டினார்கள். மக்களை மேலும் வெறுப்பேற்றும் விதமாக….

அந்த 30 நிமிடத்தில் 5 பேருந்துகள் வந்து மக்களை ஏற்றிக்கொண்டு உடனேயே சென்றுவிட்டன.

இறங்கி அந்தப் பேருந்துகளி்ல் ஏறிச்சென்றவர்கள் சிலர். (சரியான நேரத்தில் சரியான முடிவெடுப்பவர்கள்!)

நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவி்டலாம் என்றிருந்தனர் சிலர் (தெளிவாக முடிவெடுப்பர்கள்)

இறங்கி ஏறுவோமா?
வேண்டாமா? என்று சிந்தித்துக்கொண்டே பேசாமல் (பேசிக்கொண்டே) இருந்துவிட்டவர்கள் பலர்
(இவர்களுக்கு முடிவெடுக்கத்தெரியாது. காலம் தான் இவர்களுக்கு வழிசொல்லும்)

எதைப் பற்றியும் கவலைப் படாமல் தூங்கி அருகில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் உரிமையுடன் தோளில் சாய்ந்துகொண்டவர்கள் சிலர்!!(எங்கிருந்துதான் இவர்களுக்கு இப்படித் தூக்கம் வருகிறதோ!)


நள்ளிரவு என்றும் பாராமல் பலவித உணவுப்பொருள்களை தன் குடும்பத்துடன் பெரும் சத்தத்துடன் வயிற்றில் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தனர் சிலர்!! ( பாவம் அவர்களுக்கு என்ன பசியோ!)

அந்தப் பேருந்தில் நடக்கும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து, கேட்டுக் கொண்டே நேரமானாலும் பரவாயில்லை இதே பேருந்தில் சென்றுவிடலாம் என்று காத்திருந்தேன்..

மக்கள் கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள். எங்கடா நடத்துனரையும், ஓட்டுநரையும் காணோம்….

நேரமாகும்னா வண்டியை ஏன்டா பேருந்து நிலையத்துக்குக் கொண்டுவரீங்க? என்றார் ஒருவர்

பேருந்தில் ஏன்டா பெயர்ப்பலகை போட்டீங்க? வண்டியை எடுக்கும் போது வெச்சிக்க வேண்டியதுதானடா என்றார் ஒருவர்?


ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒருவழியாக ஓட்டுநரும், நடத்துனரும் உள்ளே வந்தார்கள்..

எல்லோரின் கோபமும் நடத்துனர் மீது திரும்பியது. பலரும் திட்டிக்கொண்டிருக்க ஒருவர் நடத்துனரைப் பார்த்து….

ஏன்யா என்னயா நினைச்சிட்டிருக்கீங்க?
நீங்க பாட்டுக்க எனக்கென்னன்னு வண்டிய நிறுத்திட்டுப் போய்டீங்க?
பெயர்பலகை வைக்காவிட்டால் நாங்க ஏறியிருப்போமா? வேறு பேருந்தில் போயிருப்போம்ல. வண்டி போயிடுச்சு?

என்று வாய்மூடாமல் பேசிக்கொண்டிருந்தார்…..

அதானே நல்லா கேளுங்க என்று பிறரும் அவரை உசுப்பேத்திவிட்டனர்.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த நடத்துனர்….

அமைதியாக….

நான் தூங்கி 3 நாளாச்சுங்க..
அரசுப் பேருந்து அதனால் நடத்துனர் பற்றாக்குறை..
காலைல 12 மணிக்குச் சாப்பிட்டதுங்க..
இரவு 12 மணியாச்சு பசிதாங்கமுடியாம சாப்பிட்டு வந்தேங்க….

அவ்வளவு தான் வண்டிய எடுத்தாச்சு என்றார்..

அதற்கு மேல் யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. பேருந்து அமைதியாகச் செல்ல ஆரம்பித்தது.

மக்கள் கோபமாகப் பேசும் போது நடத்துனரும் கோபமா….

உங்கள யாருய்யா ஏறச் சொன்னது?
நான்தான் அப்பவே சொன்னேன்லயா 30 நிமிடம் ஆகும்னு?

என்று ஏதாவது பதில் பேசியிருந்தால் வார்த்தை வளரும், கோபம் அதிகரிக்கும்.

இந்தச் சூழலை மிக அழகாகக் கையாண்ட நடத்துனரின் பண்பு வியப்பிற்குரியாதாக இருந்தது.

வியாழன், 9 செப்டம்பர், 2010

விஸ்டா சைடுபார் நுட்பங்கள்.



ஒவ்வொரு இயங்குதளங்களும் ஒவ்வொரு வகையில் தனிச்சிறப்புடையனவாக விளங்குகின்றன. விஸ்டாவில் என்னைக் கவர்ந்த சில…..



² ஸ்விட்ச் பிட்வின் விண்டோ என்ற கருவி எனக்கு மிகவும் பிடித்ததாகும். நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் விண்டோக்களை பிரிவியுவாக பார்ப்பதற்கு இவ்வசதி பயன்படுகிறது. இவ்வசதி விண்டோவின் பிற இயங்குதளங்களில் இருந்தாலும் விஸ்டாவிலிருக்கும் மேம்பட்ட வடிவாக்கம் என்னைக் கவர்வதாக இருந்துவருகிறது.

² சைடுபார் வசதி

◊ இதற்கு முன் சில ஆண்டுகளாக எக்ஸ்பி பயன்படுத்தி வந்த நான் விஸ்டாவிற்கு மாறியபின்னர் இவ்வசதி என்னை மிகவும் கவர்வதாக இருந்தது.
◊ (கன்ட்ரோல் பேனலில் சைடுபார் என்னும் பிரிவைச் சொடுக்கி இதனை விஸ்டா பயனாளர்கள் பெறலாம்.)

1. பீட் - இவ்வசதியை நம் முகப்பில் சேமிக்கும் போது வலைத்தளத்தில் பீட் முகவரியை (தளஓடை) இதில் சேர்த்தால் இணைய இணைப்பு இல்லாத போதும் அவ்வலைத்தளத்தின் இடுகைகளை, செய்திகளை நாம் படித்து மகிழலாம். நம் விருப்பப்படி 25,50,75,100 என இடுகைகளை வகைப்படுத்திக் கொண்டு கேட்கெட்டாகப் பயன்படுத்தமுடியும்.
2. நாட்காட்டி , கடிகாரம் இரண்டையும் நம் விருப்த்திற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.
3. ஸ்லைடு சோ வில் நாம் விரும்பும் படங்களை வரிசைப்படுத்தி நம் விரும்பும் விதத்தில், விரும்பும் கால இடைவெளியில் தோன்றச் செய்யலாம்.
4. மேலும் ஆன்லைனில் நமக்கு விருப்பமான கேட்கட்களைத் தேடியும் பெற முடியும்.
5. விண்டோஸ் விஸ்டாவின் இந்த சைடுபார் வசதியை, நம் கணினியின் வலது புறத்திலோ, இடதுபுறத்திலோ வைத்துக்கொள்ளலாம். மேலும் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் சைடுபார் கேட்கட்டின் மீது வலதுபுறம் சொடுக்கினால் Detach From Sidebar என்னும் வசதியைப் பயன்படுத்தி நம் கேட்கட்டினை எந்த முகப்புப்பகக்கத்தில் எவ்விடத்தில் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.