வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உன்னையே வியக்கும் உலகம்!


சிறியவர், பெரியவர் என்ற அளவீடுகள் ஒருவரின் வயதை வைத்தோ, உயரத்தை வைத்தோ அளக்கப்படுவதில்லை. அவர்களின் செயல்பாடுகளை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றன. செயற்கரிய செயல்களைச் செய்த ஒருவரை இவ்வுலகம் பெரிதும் வியந்து நோக்கும். 

புறநானூற்றில் சோழன் கடுமான் கிள்ளி என்ற அரசனை,கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர் வியந்து பாடுகிறார். 

கிள்ளி கண்ணுக்கு இன்னாதவனாக இருந்தாலும் செவிக்கு இனியவனாக இருக்கிறான். 
அவனுடைய எதிரி கண்ணுக்கு இனியவனாக இருந்தாலும் செவிக்கு இன்னாதவனாக இருக்கிறான். இருந்தாலும் கிள்ளியையே இவ்வுலகம் வியக்கிறது என்கிறார் புலவர். ஏனென்று பார்க்கலாம் வாங்க..


நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,

ஊறுஅறியா மெய் யாக்கை யொடு.
கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!
அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!

நின்னை வியக்குமிவ் வுலகம்; அது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.



வெல்லும் போரைச் செய்யும் வீரக்கழல் அணிந்த, திருந்திய அடியினையும், விரைந்த வேகம் கொண்ட குதிரையையும் உடைய கிள்ளி! நீயோ போரைக் கண்டால் பகைவரை வென்று அவரது படையை விலக்கி எதிர்நின்றாய். அதனால் வாள் தைத்த தழும்புடன் நீ காணப்படுவதால் உன் வீரத்தைக் கேட்பவர் செவிகளுக்கு இனியவனாக விளங்குகிறாய். புண்ணுடைய உடம்புடன் கண்ணுக்கு இன்னாதவனாகத் தோன்றுகிறாய்.

பகைவரோ உன்னைக் கண்டு புறங்காட்டி ஓடியதால் புண்இல்லாத உடம்புடன் தோற்றத்தில் கண்ணுக்கு இனியவராகவும்,அவரது அச்சம் காரணமாக, செவிக்கு இன்னாதவராகவும் உள்ளனர்.

அதனால் நீயும் ஒன்றில் இனியை, அவரும் ஒன்றில் இனியர் இருந்தாலும் இவ்வுலகம் உன்னையே புகழ்ந்து போற்றுகிறது அதற்குக் காரணம் யாதோ? எமக்குச் சொல்வாயா? என்று திருக்கிள்ளியின் வீரத்தை வியந்து இகழ்வதுபோல புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சியாகப் புலவர் பாடுகிறார்.

“அழகு என்பது கண்களால் காண்பது மட்டுமல்ல!
செவியால் கேட்பதும் தான்” என்ற நுட்பமான கருத்தை மிக அழகாக இப்பாடல் விளக்குகிறது.

6 கருத்துகள்:

  1. hello. I am not getting your articles through e mail for the past 2 months or so. pl look into it and do the needful.
    Thanks. -Ganesan.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு நண்பரே தாங்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை இவ்வலையின் வலதுபக்கம் கீழே உள்ள அஞ்சல் இடுகைப் பகுதியில் மீண்டும் ஒருமுறை பதிவுசெய்யுங்கள் தங்களுக்கு இடுகைகள் தொடர்ந்து கிடைக்கும்.
      தங்கள் வாசித்தலுக்கு நன்றி.

      நீக்கு
  2. வஞ்ச புகழ்ச்சி என்றவுடன் ஒவ்வை அதியமானை புகழ்ந்தது தான் நினைவுக்கு வருகிறது .அருமை !

    பதிலளிநீக்கு
  3. “அழகு என்பது கண்களால் காண்பது மட்டுமல்ல!
    செவியால் கேட்பதும் தான்" நல்ல விளக்கம்.

    பதிலளிநீக்கு
  4. Hello, As suggested by you, today I have entered my e mail Id. There is a message to the effect that my mail id was already registered. Thanks.

    பதிலளிநீக்கு