வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 28 ஜூலை, 2009

வரை பாய்தல்




சங்க காலத்தில் தலைவன் தன் காதலியைப் பெற மானத்தை
விட்டு மடலூர்ந்து வருவான். அவ்வாறு வந்தால் தலைவியின் பெற்றோர் அஞ்சி தன் மகளைத் தலைவனுக்கு மணமுடித்து வைப்பர். இது தமிழர் தம் மரபு. ஐந்திணையில் மடல்கூற்று மட்டுமே நிகழும். பெருந்திணையில் ஏறிய மடல்திறமும் நிகழும். மடலூர்தலின் ஒரு கூறாக வரை பாய்தல் அமைகிறது.

வரைபாய்தல் என்பது மலையிலிந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளுதலைக் குறிப்பதாக அமைகிறது. காதல் கை கூடாத நிலையில் இன்றும் காதலர் மலையிலிருந்து குதித்தத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

வரைபாய்தல் என்பதை ஒரு சங்க காலத்திலிருந்த சமூக வழக்காகவே அறிஞர்கள் கருதுவர்.

தமிழர்தம் மரபினை அறிந்து கொள்வதற்காக,
வரை பாய்தல் பற்றிய குறிப்புடைய அகநானூற்றுப் பாடலைக் காண்போம்.


வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின் றலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
5. பாம்பெறி கோலிற் றமியை வைகித்
தேம்புதி கொல்லோ நெஞ்சே உருமிசைக்
களிறுகண் கூடிய வாண்மயங்கு ஞாட்பின்
ஒளிறுவேற் றானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற்
10. பிழையுறழ் மருப்பிற் கடுங்கட் 1பன்றிக்
குறையார் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றரு நெடுஞ்சிமைப்
புகலரும் பொதியில் 2போலப்
15. பெறலருங் குரையணம் அணங்கி யோளே.

- பரணர்.


கூற்று : அல்ல குறிப்பட்டுப் போகும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்லியது.

( தலைவியை தாம் சந்திப்பதற்காக ஏற்படுத்தும் அடையாள ஒலியைக் குறிப்படுத்தல் என்பர். அவ்வொலி இயற்கையிலே எழுவதுண்டு அவ்வேளையில் தலைவி அவ்வொலியைத் தலைவன் ஏற்படுத்தினான் என்று எண்ணி வந்து ஏமாந்து திரும்பிவிடுவாள். பின் தலைவன் வந்து உண்மையிலேயே ஒலி எழுப்பியும் அவ்வொலி இயற்கையிலேயே எழுவது தலைவன் ஏற்படுத்துவது அல்ல என்று தலைவி தவறாக எண்ணி அவ்விடம் வாராது இருப்பாள்.

இதனை அல்லகுறிப்படுதல் என்றழைத்தனர்.)


இன்றெல்லாம் காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது மிகவும் எளிதாக உள்ளது. சந்திக்கவே இயலாத நிலையில் செல்லிடப்பேசி, இணையவழி சாட்டிங் என பல்வேறு தொழில்நுட்ப வசதிகளின் துணையால் ஒருவரோடு ஒருவர் உரையாடி மகிழ்கின்றனர்.

சங்க காலத்தில் தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது என்பது அரிதான செயலாகவே இருந்தது. தலைமக்கள் பகலில் சந்தித்தால் அதனைப் பகற்குறி, என்றும் இரவில் சந்தித்து மகிழ்ந்தால் அதனை இரவுக்குறி என்றும் அழைத்தனர். இரவுக்குறி தலைவியின் வீட்டின் அருகிலேயே நிகழும்.

தலைவன் தன் வருகையைப் பறவைகள் போலவோ, அல்லது வேறு வகையான இயற்கையில் எழும் ஒலிகளைப் போல எழுப்புவான். அவ்வொலி கேட்டுத் தலைவி, தலைவனைச் சந்தித்து மகிழ்வாள்.

அவ்வாறு தலைவியை அழைக்கத் தலைவன் ஒலி எழுப்பினான். இதைப் போன்ற ஒலி முன்பே இயற்கையில் எழுந்தமையால் தலைவி முன்பே வந்து பார்த்துச் சென்று விட்டாள்.
பின் தலைவன் ஒலி எழுப்பும் போது அதனைத் தலைவி இவ்வொலி இயற்கையில் எழுவது என்று தவறாக உணர்ந்துவிட்டாள்...

இந்நிலையில் தலைவியைக் காண இயலாது அல்லகுறிப்பட்டுத் தலைவன் வருந்தித் தன் நெஞ்சுச் சொல்லிப் புலம்புவது போல இப்பாடல் அமைகிறது.

பாடலின் பொருள்

திதியன் என்பான் இடியென முழங்கும் களிறுகளையும்,
வாளொடு போரிடும் போர்ப்படைகளையும்,
விரைந்தோடும் தேர்ப்படைகளையும் கொண்டவன்.

அவனது மலையானது செறிவான மரங்களைக் கொண்டு விளங்குகிறது.
அங்கு எதற்கும் அஞ்சாத தன்மை வாய்ந்த காட்டுப்பன்றியை அடித்துத் தின்ற வலிமை வாய்ந்த கொடிய புலிகள் முழக்கமிடும்.
உச்சிப் பாறைகளில் உள்ள தேனை ஏறி எடுக்கமுடியாமல் குறவர்கள் வருந்துவர்.

இத்தகைய அரிய, பெரிய மலை போல என் தலைவி......
கிடைத்தற்கு அரியவளாக விளங்குகிறாளே என்று தன் நெஞ்சில் எண்ணிக்கொள்கிறான்.

தலைவன், தலைவி மீது மிகுந்த அன்புடையவனாக விளங்குகிறான்.
இப்பிரிவைத் தலைவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை........
இப்பிரிவின் வலி கொடுமையானது...
அதனை அடுத்தவருக்குப் புரியவைப்பது கடினம்....
ஆனால் புலவர் அதனை அழகாக வெளிப்படுத்திப் புரியவைக்கிறார்...


தலைவன் தன் நெஞ்சிடம் ...............

ஏ நெஞ்சே ................
நள்ளிரவில் அடங்காக் காமம் வருத்துவதால் மலை உச்சியிலிருந்து வீழ்பவரைப் போலவும்.....

கோலால் அடிபட்ட பாம்பைப் போலவும்...........

நீ ஏன் வருந்துகிறாய் என்று கேட்கிறான்.....

தலைவியின் பிரிவை ஏற்க மறுக்கும் நெஞ்சம்...
அதன் வலியை இவ்வாறு உணர்கிறது
.

இப்பாடல் வழியாக ....

“ஆராக் காமம் அடூஉநின் றலைப்ப
இறுவரை வீழ்நரின்“

என்னும் அடிகள் வாயிலாக......

அல்லகுறிப்படுதல் என்னும் அகத்துறை விளக்கம் பெறுகிறது.

• மலையிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் சங்ககாலத் தமிழர் மரபு அறியப்படுகிறது.
• காமம் என்ற சொல் இன்று வழங்கும் பொருளில் வழங்காமல் அன்பின் மிகுதிப்பாட்டையே புலப்படுத்துவதாக உள்ளது.
• தலைவியின் பிரிவை ஏற்க மறுக்கும் தலைவனின் நெஞ்சம் மலையிலிருந்து வீழ்வோரின் மன நிலையையும், அடிபட்ட பாம்பின் வலியை உணர்வது.......
காதலின் ஆழத்தை உணர்த்துவதாக உள்ளது.

11 கருத்துகள்:

  1. இந்த இடுகையின் மூலமாக நான் அறியாத பல விடயங்களை அறியக் கிடைத்தன. நன்றிகள் தொடருங்கள்.... வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஒரு பதிவு பார்த்த சந்தோஷத்தோடு திரும்புகிறேன். வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்......

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு....

    பதிலளிநீக்கு
  4. தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி அபூ

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்குரிய பரிசு http://shanthru.blogspot.com/2009/07/blog-post_28.html இங்கே இருக்கிறது வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..

    பதிலளிநீக்கு
  6. காதல் என்றாலே வலி தானா? முதன் முறையாய் குணா பதிவில் வலி...

    பதிலளிநீக்கு
  7. சிறந்த பதிவுகள் மட்டுமே எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. வரைபாய்தலைப் பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறாரே என்று எண்ணிக் கொண்டே படித்தேன். வேறு பல செய்திகளும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. சிறந்த பதிவுகள் மட்டுமே எழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள்/

    நன்றி மருத்துவரே..

    பதிலளிநீக்கு
  10. வரைபாய்தலைப் பற்றி முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறாரே என்று எண்ணிக் கொண்டே படித்தேன். வேறு பல செய்திகளும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி நண்பரே/

    கருத்துரைக்கு நன்றி குமரன்...

    பதிலளிநீக்கு