வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

பொருளில்லாருக்கு...




அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கு
இவ்வுலகம் இல்லை (குறள் - 247)


என்பார் வள்ளுவர். அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை என்றவுடன் அவ்வுலகம் என்பது சொர்க்கம் தானே!!
என்றெல்லாம் கற்பனை செய்துகொள்ளவேண்டாம்..

அவ்வுலகம் என்பது எங்கோ இல்லை. நாம் வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையே!

மகிழ்ச்சி என்பது நம் மகிழ்ச்சி மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களும், சுற்றியுள்ளவர்களும் சேர்ந்த மகிழ்ச்சி!!

நம்மைச் சுற்றியிருப்போர் வருந்த நாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால்
நாம் வாழும் இடம் நரகம்!

பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்ற கருத்து எக்காலத்துக்கும் ஏற்புடையது.

பொருள் சேர்ப்பது பெரிய செயல் அல்ல…
பொருளை நேர்வழியில் சேர்ப்பது மிகப்பெரிய செயல்!!

பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல…
சேமித்த பொருளை நல்ல வழியில் செலவுசெய்வது அரிய செயல்!

பொருளின் மதிப்பைவிட..
அந்தப் பொருள்வழி மதிப்புமிக்க உறவுகளைச் சேமிப்பதுதான் மதிப்பு!!


சரி சங்ககாலத்தில் பொருள் குறித்த சிந்தனையைப் பார்ப்போம்…



ஒரு தலைவியின் புலம்பல்….

பொருள் தேடச் சென்றான் தலைவன். அதனால் உடல்வேறுபாடு கொண்டு வருந்தினாள் தலைவி. அவளைத் தேற்றினாள் தோழி. அப்போது தோழியிடம் இவ்வாறு சொல்கிறாள் தலைவி...

அழகிய அணிகன்களை அணிந்தவளே!

எக்காலத்தும் தவறான வழியில் செல்லாத வாழ்க்கை,
பிறர் வீட்டு வாசலில் சென்று நின்று வேண்டாத சிறப்பு,

இவ்விரண்டும் பொருளால் கிடைக்கும் என்று நமது இருளை ஒத்த கூந்தலைத் தடவியவாறு நம் தலைவர் கூறினார்….


பாற்பசுக்கள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பலவிடங்களிலும், அப்பசுக்கள் நீர் உண்ணும் பொருட்டு நீண்ட சீழ்க்கை ஒலி எழுப்பும் கோவலர், தாம் தோண்டிய கிணற்றினின்றும் வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீர், ஒழுகிச் சென்று சிறுகுழியில் நிரம்பியது. கதிரவன் காய்ந்தமையால் அந்நீரும் வற்றிக் குழியும் காய்ந்தது.


நீருண்ண வந்த பெரிய யானை நீ்ர் இல்லாது சிறிது ஈரத்துடன் காணப்பட்ட குழியைக் கண்டு வருத்தமுற்றுத் தன் நீர் வேட்கையைத் தணித்துக்கொள்வதற்கு வேறுஇடம் காணப்பெறாது அக்குழியினை மிதித்துக்கடந்து சென்றது.

பின் அங்கு சென்ற பெரிய புலி, யானையின் அடிச்சுவட்டில் கால்வைத்து நடந்து சென்றது. யானையின் அடிச்சுவட்டில் பதிந்த புலியின் கால்சுவடு குற்றமற்ற நாவினையுடைய கூத்தர், தம் தோளின் பின்புறத்தே காட்டிய மார்ச்சனை பூசிய மத்தளத்தின் கண்ணிடத்தே விரல் பதிந்த வடுப்போலக் காணப்படும். அத்தகைய கானகத்தே மரலும் வாடுகின்ற இடங்களையுடைய மாலையைக் கடந்து நம் காதலர் சென்றுள்ளார்.



அவரது பிரிவால் நாம் நோயுற்று வருந்துவோமாயினும்,
அவர் தமது பொருளீட்டும் வினையியை முடித்தபின் வருவாராக.


தாம் வருந்துவதால் தலைவனின் பொருளீட்டும் முயற்சி தடைபடுமோ என்று கருதிய தலைவி தாம் நோயுற்றாலும் தலைவன் செய்வினை முடிக்கவேண்டும் என்று வாழ்த்தினாள்.



பாடல் இதோ…

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
5 நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
10 நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
15 விரல் ஊன்று வடுவின் தோன்றும்
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.

அகநானூறு 155. பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

பொருளீட்ட வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்தான். அப்பிரிவினை ஆற்றாத உடல் வேறுபட்ட தலைவியைத் தோழி தெளிவுறுத்த அப்போது தோழியை நோக்கித் தலைவி கூறியது.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

○ எக்காலத்தும் தவறான வழியில் செல்லாத வாழ்க்கை,
பிறர் வீட்டு வாசலில் சென்று நின்று வேண்டாத சிறப்பு,
இவ்விரண்டும் பொருளால் கிடைக்கும் என்ற கருத்து,

சங்ககால மக்களின் மாண்பை அறிவுறுத்துவதாகவுள்ளது.



○ அங்கு சென்ற பெரிய புலி, யானையின் அடிச்சுவட்டில் கால்வைத்து நடந்து சென்றது. யானையின் அடிச்சுவட்டில் பதிந்த புலியின் கால்சுவடு குற்றமற்ற நாவினையுடைய கூத்தர், தம் தோளின் பின்புறத்தே காட்டிய மார்ச்சனை பூசிய மத்தளத்தின் கண்ணிடத்தே விரல் பதிந்த வடுப்போலக் காணப்படும் என்ற செய்தி அழகிய ஓவியம் போல நிழற்படம் போல கண்முன் தோன்றுகிறது.

இக்காட்சியை இவ்வளவு அழகுறச் சொல்லிய புலவரின் ஆற்றல் வியப்பிற்குரியதாகவுள்ளது.

17 கருத்துகள்:

  1. அந்த காலத்திலேயே தலைவன் துபாய் சென்று பொருள் ஈட்ட போய்விட்டார் போல..... ஹா,ஹா,ஹா,ஹா....
    சும்மா சொன்னேன்.... உண்மையிலேயே நல்ல பதிவுங்க.... தமிழ் செய்யுளையும் சங்க கால பண்புகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.... பகிர்வுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  2. "மத்தளம் போன்ற யானையின் கால்தடம், அதில் விரல் பதிந்த வடுபோல புலியின் கால்சுவடு"

    மிகவும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் இரசித்தேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. உண்மை தான் நண்பா . கையில் ஏதாவது வைத்திருந்தால் தான் ரோட்டில் போகும் நாய் கூட திரும்பி பார்க்கும்

    பதிலளிநீக்கு
  5. ஒவ்வொரு பதிவிலும் சந்தோஷத்தோடு வியப்பு.
    இலக்கியத்தை எவ்வளவு அழகாக விவரித்து விளக்குகிறீர்கள்.நன்றியும் சந்தோஷமும் குணா.

    பதிலளிநீக்கு
  6. பகிர்தலுக்கு மிகுந்த நன்றி அருமை,

    சங்க கால பாடல் எதிலாவது, கடல் தாண்டி செல்ல கூடாது என்று இருக்கிறதா
    .. .

    பதிலளிநீக்கு
  7. @ஹேமாதங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஹேமா..

    பதிலளிநீக்கு
  8. @ராம்ஜி_யாஹூ நான் பார்த்தவரை அப்படியெதுவும் குறிப்புகள் இல்லை நண்பா..

    கடலில் வணிகம் தொடர்பான செய்திகள் நிறையஉண்டு.

    பதிலளிநீக்கு
  9. @ஆரூரன் விசுவநாதன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்கள் வருகை மகிழ்வளிப்பதாகவுள்ளது அன்பரே..

    பதிலளிநீக்கு
  10. 4 கருத்துரைகள்:

    NIZAMUDEEN said...

    //பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல...
    சேமித்த பொருளை நல்ல வழியில் செலவு செய்வது அரிய செயல்//
    -இந்த வரிகளைப் படித்தபோது, நான் ஏற்கெனவே
    படித்த " நம்மிடம் உள்ள பொருள்களை
    நாம் சேமித்து வைத்துள்ள பொருள் என்று
    சொல்ல இயலாது; நல்வழியில் பிறருக்காக
    நாம் எவ்வளவு செலவு செய்கிறோமோ
    அந்த நன்மையே நம்முடைய பொருள்" என்ற
    பொன்மொழி நினைவு வந்தது.
    அழகான விளக்கம்!
    July 27, 2010 8:47 AM
    உமா said...

    //பொருள் சேர்ப்பது பெரிய செயல் அல்ல…
    பொருளை நேர்வழியில் சேர்ப்பது மிகப்பெரிய செயல்!!

    பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல…
    சேமித்த பொருளை நல்ல வழியில் செலவுசெய்வது அரிய செயல்!

    பொருளின் மதிப்பைவிட..
    அந்தப் பொருள்வழி மதிப்புமிக்க உறவுகளைச் சேமிப்பதுதான் மதிப்பு!!//

    உண்மைதான். அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    நேரல்லார் பெருஞ்செல்வம் நிலைக்காதே உடற்புண்ணில்

    கூரான விரல்நகத்தால் குறுதியுறத் தேய்ப்பதற்கே

    நேராகும்; நல்வழியின் நீங்காதார் சேர்பொருளோ

    ஊரார்க்கும் உதவிடுமே உண்மையின்பம் தாந்தருமே!
    [தரவுக் கொச்சகக் கலிப்பா]
    சங்க கால மக்களின் இயற்கையோடியைந்த வாழ்வையும் மேன்மையையும் மிகஅழகாக படம் பிடித்துக்காட்டும் சங்க இலக்கியங்கள் எண்ணி எண்ணி வியக்கத்தக்கன.
    அருமையான பதிவு.
    July 27, 2010 9:40 PM
    முனைவர்.இரா.குணசீலன் said...

    @NIZAMUDEEN ஓ மகிழ்ச்சி நண்பா.
    September 9, 2010 2:06 AM
    முனைவர்.இரா.குணசீலன் said...

    @உமா உண்மைதான் உமா..
    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றிகள்..
    September 9, 2010 2:08 AM

    பதிலளிநீக்கு