வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 17 ஜூன், 2011

இதுவல்லவோ அரசு!!


ஒரு புலவன் அரசனைப் பார்த்து மன்னா நீ கடல்மணலினும் நீண்டகாலம் வாழ்வாயாக என்று மனம் நிறைய வாழ்த்துகிறான் என்றால் அந்த அரசன் எவ்வாறு ஆட்சிசெய்திருப்பான்...?
ஆளும் அரசுக்கு சாதனைகள் நிறைய இருக்கலாம் ஆனால் உண்மையான சாதனை என்பது என்ன..?

அறம் அன்றோ உண்மையான சாதனை!
(“அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“)
இன்றைய சூழலில் ஒரு அரசு ஆட்சிக்கு வந்தால் அதன் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஏதோ தானே நாட்டுக்கு அரசனானது போல ஆதிக்கம் செலுத்துகின்றனர். தனக்கு வேண்டியர்களுக்கு ஒரு சட்டம், ஏழை எளியவர்களுக்கு ஒருசட்டம் என்று!
சரி எப்படி இருக்கவேண்டும்..?

(நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது)
வேண்டியவர்களுக்கு ஒரு நீதி வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி என்று வழங்காது பொதுவான நீதியை வழங்கவேண்டும்.
ஒரு அரசன் தான் மக்களுக்குச் செய்த சாதனைகளைப் பட்டியலிடுவதா சிறப்பு..?
செய்ய வேண்டிய கடமையை நினைவில் கொள்வதே சிறப்பு!

(இல்லோர் கையற)

இல்லாதவர்கள் இல்லாத நிலையை ஒரு நாட்டுக்குத் தரவேண்டும் அதுவல்லவா நல்லரசின் கடமை!

இதோ சங்ககாலக் காட்சி ஒன்று,
பாண்டிய மன்னனைப் புலவர் ஒருவர் வாழ்த்துகிறார்.

உயர்ந்தமலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக்
கொளுத்தி ஒப்பில்லாததோரம்பை வாங்கிய மூன்றுமதிலையும் எய்து; பெரிய வலியையுடையதேவர்கட்கு; வெற்றியைக்
கொடுத்த; கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது; அழகிய திருமுடிப் பக்கத்தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம் போல; மூவேந்த ருள்ளும் மேம்பட்ட பூந்தாரை யுடைய மாற,
கடிய சினத்தை உடையவாகிய கொல் களிறும்;
விரைந்த செலவை யுடையவாகிய மனஞ் செருக்கிய குதிரையும்;
நெடிய கொடியை யுடையவாகிய உயர்ந்த தேரும்;
நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென;
நான்கு படையுங் கூட மாட்சியைப்பட்டதாயினும்;
மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி;

அதனால்-;
இவர் நம்முடையரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது;
இவர் நமக்கு அயலோ ரென்று
அவர் நற்குணங்களைக் கெடாது; ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும்; திங்களைப் போன்ற
குளிர்ந்த பெரிய மென்மையும்;
மழையைப் போன்ற வண்மையுமென்ற;
மூன்றையு முடையையாகி;
இல்லாததோர்
இல்லையாக; நீ நெடுங் காலம் வாழ்வாயாக;
நெடுந் தகாய்; தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய
தலையையுடைய திரை யலைக்கும் செந்திலிடத்து; நெடிய முருகவேள் நிலைபெற்ற;
அழகிய அகன்ற துறைக்கண்; பெருங் காற்றுத்
திரட்டுதலால்; குவிந்த
வடு வழுந்திய எக்கர் மணலினும் பலகாலம்
குணம் கொல்லாது என்பதற்கு, முறைமை யழிய நீ வேண்டியவாறு
செய்யா தெனினுமாம். பூந் தார் மாற, நெடுந்தகாய், நான்குடன்
மாண்டதாயினும் அரசின் கொற்றம் அறநெறி முதற்கு; அதனால் கோல்
கோடாது குணங் கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையு
முடையையாகி இல்லோர் கையற நீ மணலிலும் பலகாலும் நீடு வாழிய எனப் பொருள் கொள்ளமுடியும்.

பாடல் இதோ...
ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
5. பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
10. அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
15. வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
20. கடுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே. (55)

புறநானூறு 55. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன்
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார்
பாடியது.

பாடல் வழியே.

1. “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்“
2. நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
3. இல்லோர் கையற

ஆகிய பாடல் அடிகள் வழியே
அறவழியே ஆட்சி செய்வதே அரசின் முதல் கடமை,
நீதி வழங்குதல் ஒருபக்கம் சாராது பொதுவானதாக இருத்தல்வேண்டும்,
இல்லையென வாடுவோர் இல்லாத நாடாக அந்நாட்டை ஆளவேண்டும்.

ஆகிய செய்திகள் ஆட்சிசெய்வோர் மனதில் எழுதப்படவேண்டிய பொன்மொழிகளாக உள்ளன.

5 கருத்துகள்:

  1. தமிழை, சான்றோர் வாக்கை நன்கு அறிந்தவர்களும் ஆட்சிக்கு வந்த போதும் ஆட்சியில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்கவில்லையே.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பதிவு. நன்றி!

    இதை ஆட்சியாளர்கள் உணர்ந்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு