வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 10 மே, 2014

தமிழ் வாழ வேண்டுமா? (பாவலரேறு)



தமிழ் வாழ்கவென்பதிலும் தமிழ்வா ழாது
தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது!
குமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டுங்
கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே!
அமிழ் கின்ற நெஞ் செல்லாம் குருதியெல்லாம்
ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிரு மாறே
இமிழ் கடல்சூழ் உலகமெல்லாம் விழாக்கொண் டாடி
ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே!


பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது
எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை
எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்
தட்டி, சுவர், தொடர்வண்டி, உந்துவண்டி
தம்மிலெல்லாம் தமிழ் தமிழ்“ - என்றெழுதி வைத்தே
முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்
மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை!

செந்தமிழ்செய் அறிஞர்களைப் புரத்தல் வேண்டும்
செப்பமொடு தூய தமிழ் வழங்கல் வேண்டும்
முந்தைவர லாறறிந்து தெளிதல் வேண்டும்
முக்கழக உண்மையினைத் தேர்தல் வேண்டும்
வந்தவர் செய் தீங்குகளால் தமிழர்க் குற்ற
வரலாற்று வீழ்ச்சிகளை எடுத்துக் கூறி
நொந்தவுளஞ் செழித்ததுபோல் புதிய வையம்
நோக்கிநடை யிடல்வேண்டும்! தமிழ்தான் வாழும்!

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்
தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும்!
தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்
தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்
கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும்!
கற்கின்ற சுவடிகளில் செய்தித் தாளில்,
விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்
விதைத்திடுதல் வேண்டும் தமிழ் வாழும் அன்றே!

                                       -பாவலரேறு பெருஞ்சித்திரனார்
                                            (கனிச்சாறு முதல் தொகுதி)






9 கருத்துகள்:

  1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் மதியுரை தூய தமிழ் பேண வழிகாட்டுகிறது என்பதை மறத்தலாகாது.
    இப்பதிவை எனது தளத்திலும் அறிமுகம் செய்துள்ளேன்.

    தமிழை வாழ வைக்கும் வழி
    http://yarlpavanan.wordpress.com/2014/05/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/

    பதிலளிநீக்கு
  2. பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  3. அருமையான கவிதை! எடுத்க் காட்டிய தங்களுக்கு மிக்க நன்றி! முனைவரே!

    பதிலளிநீக்கு
  4. தமிழ் வாழ செய்ய வேண்டியதை அருமையாக எடுத்தியம்புகிறது அருமைப்பாடல். பகிர்விற்கு வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  5. தமிழ் பள்ளிகளை வாழவிடுங்கள் தமிழ் தானே உயர்வுபெறும். இடை நிலைப்பள்ளிகளில் தமிழ் போதனையை ஆயுத்தம் செய்யுங்கள் தமிழினம் பிரிவுபட்டு போகாமலும் பிளவு பட்டு போகாமலும் இயம்பும்.

    பதிலளிநீக்கு