வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 31 ஜூலை, 2014

துளிப்பாக்கள்


வாா்த்தைகள்

உன்னுடன் பேச என் வாா்த்தைகள் 

நான் நீ என சண்டைபோட்டுக்கொள்கின்றன

ஆனால் உன்னைப் பார்க்கும்போது

என் மௌனம் மட்டுமே எப்போதும் முந்திக்கொள்கிறது!


----  ---- -----

அழுகை

பிறக்கும்போதும் கலவரம்

இறக்கும்போதும் கலவரம்

இதுவே வாழ்வின் நிலவரம்!


----- --- -----

பிாிவின் வலி

மரணத்தினால் ஏற்படும் வலியைவிட
.
பிாிவினால் ஏற்படும் வலி கொடுமையானது

மரணம் ஒரு நிமிட வலியைத் தரும்

பிாிவு மரணத்தையே வலியாகத் தரும்!

----- ---- -------

படைப்பாக்கம் - இளம் கவிஞர் மு.தமிழ்மணி

வேதியியல் முதலாம் ஆண்டு

கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி

திருச்செங்கோடு


செவ்வாய், 29 ஜூலை, 2014

கேள்வி கேட்கவேண்டிய முறை (தென்கச்சியார்)



முன்னொரு காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டார்கள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி அவர்களுக்கிடையில் விவாதம் எழுந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் கூறினார்கள். இருந்தாலும் அவர்களுக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஆதலால் அவர்கள் தங்கள் சந்தேகத்தை உத்தாலக மகரிசியிடம் சென்று கேட்டனர்.
ஆனால் உத்தாலகரோ, “இதற்கு ஒருவரால்தான் விளக்கம் கொடுக்கமுடியும். அவர்தான் மன்னர் அசுவபதி. மகாஞானி அவர். எனவே நாம் அனைவரும்அவரிடம் சென்று இதைப்பற்றிக் கேட்கலாம்.”என்றார்.
அதன்படியே அனைவரும் அசுவபதி மன்னரிடம் சென்றனர்.
அசுவபதி எல்லோரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவா்களுக்கு உயர்ந்த ஆசனம் கொடுத்து விதிமுறைப்படி வணங்கினார். பிறகு நல்ல உணவு பரிமாறி அவர்கள் அனைவரையும் சாப்பிடும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் ரிசிகள் யாரும் சாப்பிடாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

இதை அசுவபதி மன்னர் பார்த்தார்.அவர்  அவர்களை நோக்கி ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்? நான் கொடுத்த உணவு குற்றமுடையது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமில்லை. என் ராச்சியதில் திருடர்கள் கிடையாது! குடிகாரர்கள் கிடையாது! ஆசாரமற்ற ஆண்கள் கிடையாது! அதனால் ஆசாரமற்ற பெண்களும் கிடையாது! என்றார்.

அதற்கு அந்த ரிசிகள்,  “ நாங்கள் இங்கே உங்களுடைய உணவை உட்கொள்வதற்காக வரவில்லை. ஜீ(சீ)வாத்மா, பரமாத்மா பற்றிய எங்களுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகவே உங்களிடம் வந்திருக்கிறோம். என்று தெரிவித்தார்.
உடனே அசுவபதி மகாராசா, ” இன்று உணவு அருந்துங்கள். நாளைக்கு அதைப்பற்றி யோசிக்கலாம்” என்று தெரிவித்தார். முனிவர்களும் அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு உணவு அருந்தினார்கள்.
அதன்பிறகு அவர்கள் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று தங்களுக்குள் உரையாட ஆரம்பித்தனர்.
அப்போது முனிவர்களுள் ஒருவர், “அசுவபதி மன்னர் நாளைக்கு இதைப் பற்றி யோசிக்கலாம் என்றுதான் கூறினாரே தவிர, பதில் சொல்கிறேன் என்று சொல்லவில்லையே!” என்றார் அவர் அவ்விதம் கூறியதும், மகாராசா இப்படிச் சொன்னதற்குக் காரணம் என்னவாக இருக்கும்!” என்று முனிவர் அனைவரும் தங்களுக்குள் யோசிக்க ஆரம்பித்தனர். அப்போது மகரிசி உத்தாலகருக்குப் பளிச்சென்று காரணம் புரிந்தது.
உடனே அவர் மற்ற முனிவர்களைப் பார்த்து, ”நாம் எல்லோரும் ரிசிகள். நன்றாக விவரம் தெரிந்தவர்கள். அப்படியிருந்தும் ஒரு விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றார். எந்த விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று மற்ற முனிவர்கள் வினவினார்கள்.

உத்தாலகர் விளக்கம் கூறினார் – நம்முடைய சந்தேகத்தை மன்னர் அசுவபதியிடம் கேட்கவேண்டிய முறையில் நாம் கேட்கவில்லை.நாம் உயர்ந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு அவரிடம் விளக்கம் கேட்டது சரியில்லை” என்றார் உத்தாலகர்.
அவர் கூறியதைக் கேட்டபிறகுதான் முனிவர்களுக்குத் தாங்கள் செய்த தவறு புரிந்தது. மறுநாள் முனிவர்கள் அனைவரும் அசுவபதியிடம் சென்றார்கள்.  ஒரு சீடன் எப்படி குருவை நாடிப் போகவேண்டுமோ, அந்த முறையில் பணிவோடு, முறைப்படி அசுவபதியை வணங்கி தங்கள் சந்தேகத்தைக் கேட்டார்கள்.  
அவரும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சரியான விளக்கம் கொடுத்தார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எதையும் கேட்கவேண்டிய முறைப்படி கேட்கவேண்டும் என்பதுதான்!
ஒரு விசயத்தை எடுத்துச்சொல்பவர் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும். கேட்டுத்தெரிந்துகொள்பவர் தாழ்ந்த இடத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் கேட்பர் அக்கறையாகக் கவனித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும். இது கௌரவப் பிரச்சினை இல்லை.

( இன்று பாடம் கேட்பவர் அமர்ந்துகொண்டும், பாடம் சொல்லித்தருபவர் நின்றுகொண்டும் இருப்பதை அன்றைய கல்வி முறையோடு ஒப்பிட்டுக் காணும்போது, பெரியவர்கள் ஏன் அடிக்கடி நான் அந்தக்காலத்துல படித்தவன் என்று சொல்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது.)

தொடர்புடைய இடுகை

அந்தக் காலத்து எட்டாவது

ஞாயிறு, 27 ஜூலை, 2014

அன்று இதே நாளில்..

அன்று இதே நாளில் பிறந்தவர்களுள், 

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களும் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களது தமிழ்ப்பணியை எண்ணிப் பார்ப்பது நம் கடமையாகும்.      


நாவலர்

                                          
கவிமணி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்து இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்று விளங்கிய கவிஞர்கள் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகிய நால்வருமாவர். அவருள், பாரதி ஒரு விடுதலை இயக்கக் கவிஞர்; பாவேந்தர் ஒரு திராவிட இயக்கக் கவிஞர்; நாமக்கல்லார் ஒரு தேசிய இயக்கக் கவிஞர். ஆயின், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஓர் இயக்கம் சாரா இனிமைக் கவிஞர், எளிமைக் கவிஞர், உண்மைக் கவிஞர், உணர்ச்சிக் கவிஞர் எனக் கூறுதல் சாலப் பொருந்தும். இவர் தேனொழுகக் கவிபாடுவதில் வல்லவர். கவிதை நூல்களோடு பல ஆராய்ச்சி நூல்களையும் இவர் படைத்துள்ளார்.
பிறப்பு: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27 ஆம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை - ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி: ஐந்தாவது வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார். எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
ஆசிரியர் பணி: கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் அமர்ந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணிபுரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக்கொண்டு வந்தார். மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன.
ஓர் அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது. முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாள ராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.
இலக்கியப் படைப்புகள்: இந்த நூற்றாண்டில் எழுந்த இனிய கவிதைகளில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் புகழ் பெற்றவை. பழைய மரபின்படியும் புதிய முறைகளின்படியும் பல புதிய சோதனை முயற்சிகளைக் கவிதைகளில் செயல்படுத்த வேண்டுமென்று முனைப்புடன் இயங்கியவர். போராட்டமும், பரபரப்பும் மிகுந்த காலக்கட்டத்தில் வாழ்ந்தபோதும்கூட இவருடைய கவிதைகளில் அமைதியும், இனிமையும் இழையோடிக் கொண்டிருந்தது. வெண்பாக்களின் வழியாகச் சொல்ல வந்ததை எளிமையாகவும், தெளிவாகவும் கையாண்டவர்.
   - பக்திப் பாடல்கள்,
   - இலக்கியம் பற்றிய பாடல்கள்,
   - வரலாற்று நோக்குடைய கவிதைகள்,
   - குழந்தைப் பாடல்கள்,
   - இயற்கைப் பாட்டுகள்,
   - வாழ்வியல் போராட்டக் கவிதைகள்,
   - சமூகப் பாடல்கள்,
   - தேசியப் பாடல்கள்,
   - வாழ்த்துப்பாக்கள்,
   - கையறுநிலைக் கவிதைகள்,
   - பல்சுவைப் பாக்கள்... என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

கவிமணியின் படைப்புகள்: மலரும் மாலையும்(1938), ஆசிய ஜோதி(1941), நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம் (1942), உமார்கய்யாம் பாடல்கள்(1945), கதர் பிறந்த கதை(1947), தேவியின் கீர்த்தனங்கள், குழந்தைச்செல்வம், கவிமணியின் உரைமணிகள் போன்றவற்றை படைத்துள்ளார். இவை மிக இலக்கியத்தரம் வாய்ந்தவை.
மலரும் மாலையும்: பழந்தமிழ்ப்பண்பும், தமிழ்மணமும், புதுமைக் கருத்துகளும் நிறைந்த பல பாடல்களைக் கவிமணி எழுதியுள்ளார். இப்பாடல்களின் தொகுப்பே "மலரும் மாலையும்" என்னும் நூலகாக வெளியிடப் பெற்றது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மூலம் கவிமணியின் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இறைவழிபாடு, சாதிபேதம் கடிதல், குழந்தைகளிடம் கொண்ட பற்று ஆகியவற்றை அறியலாம்.
பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! - அவன்
  பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! - அந்தக்   கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!
சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! - கவி
  துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா !கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா ! - பசுங்
  கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!
மருமக்கள்வழி மான்மியம்:
   கவிமணியின் ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ மிகவும் பரபரப்பாக அக்காலத்தில் பேசப்பட்டது. இது சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற ஒரு புரட்சிக்காவியம். மருமக்கள் வழி மான்மியம் என்பது திருவிதாங்கூரில் அக்காலத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த சொத்துரிமை சம்பந்தமான ஒரு ஏற்பாடு. சட்டம்போல் கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த முறையின்படி ஒருவருக்குப் பிறந்த மகனுக்கோ, அல்லது மகளுக்கோ தகப்பனாரின் சொத்தில் உரிமை கிடையாது. மருமகன்(சகோதரியின் மகன்)களுக்கே தந்தையின் சொத்துகள் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அரசர்களுக்கும் அப்படித்தான். இவ்வாறுதான் திருவிதாங்கூரின் அரசர்கள் அனைவரும் ஆட்சிக்கு வந்தார்கள். இத்தகு புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. கவிமணி இம்மாதிரியான ஏற்பாட்டிற்கும், சட்டங்களுக்கும் எதிர்ப்பாளர். இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார். அதன் விளைவே 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம்'!
   'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம். கவிமணியின் சொற்பொழிவுகளும் உரைநடைகளும் 'கவிமணியின் உரைமணிகள்' என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது.
இனிமைக் கவிஞர்: தேசம், மொழி, மக்கள், உலகம் எனப் பெரும் வட்டத்தைத் தன் பாடல்களுக்குள் அடக்கி
சத்தமில்லாமல் தமிழ் உலகில் சஞ்சாரம் செய்தவர். சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்.
உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்
  உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் - உண்மை
  தெரிந்து ரைப்பது கவிதை.
என்னும் கவிமணியின் கவிதை பற்றிய விளக்கம் அவரின் கவிதைகளுக்கு நன்கு பொருந்துவதாகும்.
   கவிமணி தமிழுக்குத் தொண்டாற்றிய புலவரைப் போற்றுகிறார். தமிழ்நூல்களின் சிறப்புகளைக் கூறுகிறார். தமிழ்மொழி வளரப் பழைமையோடு புதுமையையும் வரவேற்கின்றார். தமிழில் புதுப்புதுத் துறைகளைத் தோற்றுவித்து வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். "அறிவின் எல்லை கண்டோன், உலகை அளந்து கணக்கிட்டோன்," என வள்ளுவரையும், "நெல்லிக்கனியைத் தின்றுலகில் நீடுவாழும் தமிழ்க்கிழவி," என ஔவையாரையும், "இந்திர சாலமெல்லாம் கவியில் இயற்றிக்காட்டிடுவான்," எனக் கம்பரையும், "பாட்டைக் கேட்டு கிறுகிறுத்துப் போனேனேயடா, அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா," எனப் பாரதியையும் போற்றிக் கவியாரம் சூட்டுகிறார்.
குழந்தைக் கவிஞர்: கவிமணி ஒரு தலைசிறந்த குழந்தைக் கவிஞர். பெரியவர்களுக்கு மாத்திரம் என்று இல்லாமல், குழந்தைப் பாடல்கள் பலவும் மிகச்சிறப்பாக இயற்றியுள்ளார். இதுவரையிலான தமிழ் ஆளுமைகளில் குழந்தைகளின் பிரபஞ்சத்தில் சுதந்திரமாய் நுழைந்து உலவியர் கவிமணி ஒருவரே. குழந்தைகளுக்கான பாடல்களை கவிமணி அளவிற்கு இனி யாராலும் எழுதிவிட முடியாது என்பதை நிறுவியவர். "ஆங்கிலத்தில் உள்ளதைப் போல் தமிழில் குழந்தைப் பாடல்களில்லையே என்று நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் சில பாடல்களை எழுதினேன்," என்று தன்னுடைய குழந்தைப் பாடல்கள் குறித்துக் கவிமணி சொல்கிறார். அவர் சொன்னதுபடியே தன் வாழ்வில் பெரும்பகுதியைக் குழந்தைப் பாடல்கள் எழுதுவதற்காகவே செலவிட்டவர். இவர் குழந்தைகளுக்காகத் தாய்மார் பாடும் தாலாட்டுப் பாடல்களையும், குழந்தைகள் தாமே பாடி மகிழத்தக்க எளிய அழகிய பாடல்களையும் பாடியுள்ளார்.
காக்கை, கோழி முதலிய பறவைகளைக் குழந்தை விளித்துப்பாடும் பாடல்கள் சுவைமிக்கன.
காக்காய்! காக்காய்! பறந்து வா
கண்ணுக்கு மை கொண்டு வா
கோழி! கோழி! கூவி வா
குழந்தைக்குப் பூக்கொண்டு வா

கோழி! கோழி! வா வா
கொக்கொக்கோ என்று வா
கோழி! ஓடி வாவா
கொண்டைப்பூவைக் காட்டு வா

"தோட்டத்தில் மேயுது  வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது  கன்றுக்குட்டி அம்மா என்றது  வெள்ளைப்பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி."
போன்ற எளிமையான வருணனைகள் அடங்கிய வரிகளின்வழி குழந்தைகளின் உலகில் சிநேகிதமாய்ச் சஞ்சரித்தவர். எளிமையான பாடல்களின் மூலம் குழந்தைகளுக்கு அறிவு புகட்டவும் செய்தார்.

'தம்பியே பார், தங்கையே பார், சைக்கிள் வண்டி இதுவே பார்',
போன்ற குழந்தைப்பாடல்கள், அக்காலங்களில் ஆரம்பப் பள்ளிப் புத்தகங்களில் தவறாது இடம் பெறுவது வழக்கம்.
தான்கண்ட மெய்ம்மையான காந்தியத்தை;
 "கூனக்கிழவி நிலவினிலே - இராட்டில்
   கொட்டை நூற்கும் பணி செய்வதை - இம்
 மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே - காந்தி
   மாமதி யோங்கி வளருதம்மா."
என்கிற இயற்கை வர்ணனையோடு ஒட்டிக் குழந்தைகளுக்குப் புரிய வைத்தவர். பல்வேறு உத்தி முறைகளில் பாடி குழந்தைப் பாடல்களைப் பல்வேறு தளத்திற்கும் பரவச் செய்தவர் கவிமணி.

சமுதாயக் கவிஞர்: பாரதியாரைப் போலவே இவரும் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் சில நாட்டுப் பாடல்களின் இசை வடிவங்களைப் பயன்படுத்தித் "தீண்டாதோர் விண்ணப்பம்" என்ற பாடலையும் பாடியிருக்கிறார். அக்காலக் கட்டத்தின் சமூகக் கொடுமைகளுக்கும், அன்னியரின் அடிமைத்தனத்திற்கும் எதிரான கவிமணியின் பாடல்களில் தீர்க்கமான முற்போக்குப் பார்வையாளராக அவரை இனங்காண முடிகிறது.
"கண்ணப்பன் பூசை கொளும்
   கடவுளர் திருக்கோவிலிலே நண்ணக் கூடாதோ நாங்கள்
   நடையில் வரல் ஆகாதோ."
என்று தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலில் நுழைவதைப் பற்றி, சைவப்பிள்ளை ஆச்சார மரபிலிருந்து கொண்டு சிந்தித்தவர்.
"அல்லும் பகலும் உழைப்பவர்ஆர் - உள்ளத்து
   அன்பு ததும்பி யெழுபவர்ஆர்? கல்லும் கனியும் கசிந்துருகித் - தெய்வக்
   கற்பனை வேண்டித் தொழுபவர்ஆர்?"
எனப் பாடியதன் மூலம் அவர் காலத்தில் நிலவி வந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.

மனத்தூய்மையின்றிச் செய்யும் இறைவழிப்பாட்டினால் பயனில்லை என்பது கவிமணியின் கருத்து. இதனை வலியுறுத்தும் பாடல்:
"கண்ணுக் கினியன கண்டு - மனதைக்
   காட்டில் அலைய விட்டு பண்ணிடும் பூசையாலே - தோழி
   பயனொன்றில்லையடி

உள்ளத்தில் உள்ளானடி - அது நீ
   உணர வேண்டும் அடி உள்ளத்தில் காண்பாயெனில் - கோயில்
   உள்ளேயும் காண்பாயடி."
கவிமணி தம் கவிதைகளில் சாதிபேதங்களைச் சாடுகிறார். "சாதியிரண்டொழிய வேறில்லை," என்றார் ஔவையார். சாதி இறைவனால் வகுக்கப்படவில்லை. மக்களின் கற்பனையே. பிறர்க்காக உழைப்பவர் உயர்ந்தவர். தன்னலம் பேணுவோர் தாழ்ந்தவர். இதனை,
"மன்னுயிர்க்காக உழைப்பவரே - இந்த
 மாநிலத் தோங்கும் குலத்தினராம்
 தன்னுயிர் போற்றித் திரிபவரே - என்றும்
 தாழ்ந்த குலத்தில் பிறந்தோர் அம்மா." எனப் பாடுகிறார்.

விடுதலைக் கவிஞர்: சுதந்திர வேட்கை தீயாய்க் கொழுந்துவிட்டுக் கொண்டிருந்த காலத்தில் காந்தியத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துச் சமாதானத்தை வலியுறுத்தியவர். காந்தியின் கொள்கையான மதுவிலக்கு குறித்து,
 "கள்ள ரக்கா! குலத்தோடு நீ
   கப்ப லேறத் தாமதம் ஏன்?
 வள்ளல் எங்கள் காந்தி மகான்
   வாக்கு முற்றும் பலித்ததினி."
என்று உற்சாகமாய்ப் பாடுகிறார்.
   ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் குதூகலித்த பாரதிக்குச் சுதந்திர இந்தியாவில் வாழக் கொடுத்து வைக்கவில்லை. ஆயின் கவிமணி விடுதலை பெற்ற இந்தியாவில் ஏழாண்டுகள் வாழும் பேறு பெற்றார். "பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பது நமது கடமை என்றும், உரிமை வாழ்வின் பயனை நினையாது வாதினை விளைவித்துச் சண்டை செய்வது தேவையற்றது," என்றும் வலியுறுத்தினார். நம்நாட்டு மக்களுக்கு ஊக்கமும் உழைப்பும் வேண்டும். "உண்ணும் உணவுக்கும், உடுக்கும் உடைக்கும் அந்நியரை நம்பி வாழ்தல் கூடாது." "பலதொழில்கள் செய்து பஞ்சப் பேயினைத் துரத்த வேண்டும்." "அண்ணல் காந்தியினை அடியொற்றி வாழ்வோம்," என்பதைக் கீழ்காணும் கவிதை வலியுறுத்தும்.
"ஆக்கம் வேண்டுமெனில்- நன்மை
 அடைய வேண்டுமெனில்
 ஊக்கம் வேண்டுமப்பா - ஓயாது
 உழைக்க வேண்டுமப்பா

 உண்ணும் உணவுக்கும் - இடுப்பில்
 உடுக்கும் ஆடைக்கும்
 மண்ணில் அந்நியரை நம்பி
 வாழ்தல் வாழ்வாமோ?

 உண்ணும் உணவுக் கேங்காமல்
 உடுக்கும் ஆடைக் கலையாமல்
 பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
 பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
 அண்ணல் காந்திவழி பற்றி
 அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்."
இந்தியாவில் சமாதானம் நிலவ வேண்டும் என்றில்லாமல், உலகம் முழுவதும் சமாதானம் நிலவ வேண்டுமென விரும்பியவர். இரண்டாம் உலகப் போரினால் மக்கள் அடைந்த துயரை,
"போரில் எழுந்த பஞ்சம் - பாரத
   பூமியைத் தாக்குதைய்யா நேருங் கொடுமை யெல்லாம் - நினைக்க
   நெஞ்சு துடிக்குதைய்யா."
என்ற பாடலின் மூலம் விளக்குகிறார்.
உணர்ச்சிக் கவிஞர்: அக்காலத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளை மிகவும் தைரியமாக விமர்சனம் செய்திருக்கிறார். ஒரு நீதிமன்றக் காட்சி, சாட்சியிடம் வக்கீல் ஒருவர் கேள்வி கேட்டு விசாரணை செய்கிறார்.
வக்கீல் : ஓடுற குதிரைக்கு கொம்பு ஒண்ணா? ரெண்டா?
சாட்சி  : குதிரைக்கு ஏதுங்க கொம்பு.
வக்கீல் : கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. கேட்ட கேள்விக்கு பதில். கொம்பு ஒண்ணா? ரெண்டா? அதைத்தான் சொல்லணும்.
இவ்வாறுதான் நீதிமன்ற நடவடிக்கை அக்காலத்தில் திருவிதாங்கூரில் இருந்ததாகத் தெரிவிக்கிறார்.
மொழிபெயர்ப்புகள்: பிறமொழிக் கவிஞர்தம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதி, தமிழிலக்கியச் சாளரத்தின் வழியாக பிற நாட்டுக் காற்று உள்ளே வர அனுமதியளித்தவர் கவிமணி. பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் பாடல்களை ‘எட்வர்ட் பிட்ஸ் ஜெரால்டு’ ஆங்கிலத்தில் ஆக்கியுள்ளார். கவிமணி ஆங்கில நூலைத் தழுவித் தம் நூலைப் படைத்துள்ளார்.
ஆசிய ஜோதி: சர். எட்வின் அர்னால்டு எழுதிய "The Light of Asia" என்னும் நூலைத் தழுவி எழுதப் பெற்ற அரிய நூல் "ஆசிய ஜோதி" ஆகும். இந்நூல் புத்தர் பெருமானின் வரலாற்றை விளக்குவது. சுத்தோதனர் மனைவி மாயாதேவி இறைவன் தன் மூலமாகப் பிறக்க விருப்பதைக் கனவாகக் காண்கிறாள். "Dreamed a strange dream" என்பதை "எந்நாளும் காணாத கனவொன்று கண்டாள்" எனக் கவிமணி, மொழியாக்கம் எனத் தோன்றா வகையில் ஆக்கியுள்ள அருமை போற்றத்தக்கது. இப்பாடலின் தழுவலாக கவிமணி எழுதிய கீழ்க்கண்ட பாடல் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது.
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
ஆராய்ச்சிகள்: கவிமணி பல்துறைகளிலும் கால் பதித்து விட வேண்டுமென முனைப்புடன் செயல்பட்டவர். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.
வையாபுரிப்பிள்ளை, இராஜாஜி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே. சண்முகம் போன்றோருடன் நட்பு அடிப்படையிலும், புலமைத்துவ அடிப்படையிலும் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தவர். மேற்கண்டவர்களின் வழியாகவும் பல்வேறு துறைகளைப் பற்றிய அறிவைச் சாகும்வரை சேகரித்துக் கொண்டிருந்தவர். அவருடைய படைப்புலகத்தையும், ஆய்வுலகத்தையும் நோக்கின் பாரதிக்கு இணையாக அவரும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
திரைத்துறையில் கவிமணி: முதன்முதலில் என்.எஸ்.கே பிக்சர்ஸ் தயாரித்த பைத்தியக்காரன் (1947) படத்தில் இவரது பாடல் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் இதே நிறுவனத்தின் தயாரிப்பான 'மணமகள்' படத்தில் ஒரு பாடல், பின்பு 'தாயுள்ளம்' என்கிற படத்தில்
கோயில் முழுதும் கண்டேன் - உயர்   கோபுரம் ஏரி கண்டேன்
தேவாதி தேவனை நான்
எங்கெங்கும் தேடினும் கண்டிலனே
என்கிற ஒரு அற்புதமான பாடலை எம்.எல் வசந்தகுமாரி பாட அப்பாடல் மிகவும் பிரபலமாயிற்று. இவைதவிர 1952ல் வேலைக்காரன், 1955ல் கள்வனின் காதலி, 1956ல் கண்ணின் மணிகள், நன் நம்பிக்கை ஆகிய படங்களிலும் இவரது பாடல் இடம் பெற்றன.
'கள்வனின் காதலி' படத்தில் இவரது
வெய்யிற்கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு
தெய்வகீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுண்டு
வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ!
பாடல் பி. பானுமதி, கண்டசாலா குரலில் மிகவும் வெற்றியடைந்தது. இவராகத் திரைப்படத் துறையில் இவரது பல பாடல்களைத் திரையுலகம் அவ்வப்போது பயன்படுத்தி வந்திருக்கிறது. மேற்கண்ட பாடல்கள் கூட திரைப்படத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. இவரது பாடல்களை திரைத்துறை பயன்படுத்தியதே தவிரே, இவராகத் திரைப்படத் துறையின் பக்கம் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாராட்டுகளும் விருதுகளும்: "அழகு என்பதே உண்மை, உண்மை என்பதே அழகு" என்றார் ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ். கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் எனப் புகழ்வார் இரசிகமணி டி.கே.சி.
“தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை” என சக காலத்தில் வாழ்ந்த நாமக்கல் கவிஞரால் பாராட்டப்பட்டவர்.
 "இவரது உண்மையுள்ளம், உண்மைப் பாடல்களின் மூலமாய் உண்மை வித்துகளைக் கற்பவர் மனத்தில் விதைத்து, உண்மைப் பயிரைச் செழித்தோங்கச் செய்கிறது. இவர் பாடல்களில் காணும் தெளிவும், இனிமையும், இவரது உள்ளத்திலேயுள்ள தெளிவு, இனிமை முதலிய சிறந்த இயல்புகளின் நிழற்படமேயாகும்," என்பார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை.
25 டிசம்பர் 1940 இல் தமிழ்ச்சங்கம் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் நிகழ்த்திய 7வது ஆண்டு விழாவில் இவர்தம் கவிபாடும் புலமையைப் பாராட்டி,  தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் இவருக்குக் "கவிமணி" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தனர்.
1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார்.
1954 இல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
அக்டோபர் 2005 இல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
மறைவு: 78 ஆண்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்த கவிமணி மனைவியின் ஊராகிய புத்தேரி' என்கிற ஊரில் 26.09.1954 இல் வாழ்நாள் முழுவதும் தமிழ்மணி ஒலித்துக் கொண்டிருந்த ஒளிரும் தமிழ்மணி, நம் ஒப்பற்ற கவிமணியின் நா ஓய்ந்தது. எனினும் அவர் பாடல்கள் செவிகளில் ஒலித்துக் கொண்டே உள்ளன.



 


    வெள்ளி, 25 ஜூலை, 2014

    பொய்சாட்சி சொன்னால்..



    ஒரு கதை...

    ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் 

    பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும்  என்று அறிவித்தார்.நாட்டின் பல 

    பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் 

    அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள்  கந்தல் உடை அணிந்த 

    ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள 

    விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் 

    தெரிவித்தார்.அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம்  

    இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர 

    வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான்  இன்று இங்கு நான் 

    வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய்   

    ..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று 

    கத்தினான்.உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் 

    கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே 

    போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் 

    கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை 

    உணர்ந்தான்.உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் 

    சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது 

    அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர 

    வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை 

    சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.


    பொய் குறித்து இப்படிப் பல கதைகள் உண்டு. மருத்துவரிடமும், 

    வழக்கறிஞரிடமும் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இவர்கள் 

    எவ்வளவு வேண்டுமானாலும் பொய்சொல்லலாம் என்பது இன்றைய 

    நிலையாகிவிட்டது.



    பொய் பற்றிய சங்ககால நம்பிக்கையைக் காண்போம்


    கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி


    கலித்தொகை 34-10


    பொய் சாட்சி கூறியவன் வந்து கீழே தங்கியதால் பட்டுப்போன மரம் போல 

    நானும் அழகினை இழந்துவிட்டேன் என்கிறாள் தலைவி. 


    பொய் சாட்சி உரைத்தவன் கீழே நின்றால் அந்த மரம் வாடிவிடும் என்ற 

    இச்செய்தி அக்கால மக்களின் நம்பிக்கைக்குத் தக்க சான்றாக அமைகிறது.


    தொடர்புடைய இடுகைகள்






    வியாழன், 24 ஜூலை, 2014

    நூலகங்களை அறிவோம்!



    • கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள்


    என்னைக் கேட்டால் கோயில் இல்லாத ஊரில் கூட குடியிருக்கலாம் ஆனால்

    நூலகம் இல்லாத ஊரில்தான் குடியிருக்கக்கூடாது என்பேன்.


    • நல்ல நூல்களே நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய 


    விலைமதிப்புமிக்க சொத்தாகும்.

    தொடர்புடைய இடுகைகள்


    புத்தக சாலை

    நூல்களைக் கடந்து சிந்திப்போம்

    சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்

    புதன், 23 ஜூலை, 2014

    நன்றி சொல்ல வார்த்தைகள் தேவையா?


    நன்றி நவில்தல் தமிழரின் சிறப்புடைய பண்பாடுகளுள் ஒன்றாகும். இப்போதெல்லாம் தேங்ஸ் என்று ஒரே வார்த்தையில் தன் நன்றி உணர்வை யாவரும் தெரிவித்துவிடுகின்றனர். நன்றியை வார்த்தைகளால் பலவழிகளில் நாம் வெளிப்படுத்தமுடியும். சிலர் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும், சொல்வதுண்டு. 


    வேர்களை அறுத்தோடும் 

    நதியின் மீதும் 

    கலகலவென்று பூச்சொரியும் 

    கரையோரத்துக் கிளைகள்... 

    அறுத்ததற்குக் கோபமில்லையாம் 

    நனைத்ததற்கு நன்றியாம் 

    மரம் சொன்னது : 

    ''இன்னா செய்தார்க்கும் 
    இனியவை செய்'' 

    என்பார் கவிஞர் வைரமுத்து.




    லித்தொகையில் ஒருபாடல் நன்றியைச் சொல்ல வார்த்தைகள் தேவையா? என்று கேட்கிறது.


    அகன்ற ஆறுகள், பரந்த உலகிடத்து, உயிர்களெல்லாம் வாழும்படி எங்கும் நீரைப் பரந்து ஊட்டிப் பாதுகாத்தன. அந்நீர் வற்றியபின் சிலவாகிய நீரோடு, வாய்கால்களில் அறல் உண்டாகும்படி அழகுபெற்றுச் சென்றன.

    முன்னர் தனக்கு உதவி செய்து முயன்றவர்  பின்னொரு நாள் வாடி வருந்தும்போது, உதவியை மீண்டும் செய்வார்கள் பெருமையுடையவர்கள். அவர்களைப்போல, ஆற்றில் வெள்ளம் பெருகியபோது நீரை உண்ட மரங்கள் நீர் வற்றிய இளவேனிற் காலத்தில் சுரும்புகள் ஒலிக்க வண்டுகள் ஆராவரிக்க, கொம்புகளினின்றும் பல மலர்கள் ஆற்றிலே உகும்படி இனிமை பொருந்தின இளனேில் வந்துவிட்டது


    மன் உயிர் ஏமுறமலர் ஞாலம் புரவு ஈன்று
    பல் நீரால் பாய்புனல் பரந்து ஊட்டிஇறந்த பின்,
    சில் நீரால் அறல்வாரஅகல் யாறு கவின்பெற
    முன்ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
    பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளா் போல்
    பல்மலர் சினை உகசுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
    இன்அமா் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்

    கலித்தொகை -34 -1-7

    இந்தக் கலித்தொகைப் பாடல் நமக்கு உணர்த்தும் நீதி..


    நன்றி சொல்ல வார்தைகள் தேவையில்லை!
    நன்றியை நம் நன்றியுடைய செயல்களில் காட்டவேண்டும்!