வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 20 ஜூலை, 2009

எமன் பெற்ற சாபம்...




போருக்குச் சென்ற தன் கணவன் வீடு திரும்பவில்லை அவன் வீரமரணம் அடைந்துவிட்டான். அதனை அவன் மனைவி அறியவில்லை பாவம் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனவள் அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்கும் என அஞ்சியவளாகப் போர் நடைபெற்ற இடத்தைச் சென்றடைந்தாள். அவன் வீழ்ந்து கிடந்த இடமோ புலி போன்ற கொடிய விலங்குகள் வாழும் காடு. தன் கணவன் இறந்தமை கண்டு உள்ளம் வெதும்பி அழுது புலம்புவதாகவும். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய எமனுக்கே சாபம் கொடுப்பதாகவும் இப்பாடல் அமைகிறது.

(கூற்றுவன்- எமன்)

ஐயோ........! என்று நான் வாய்விட்டு அழுவதற்கும் பயமாக இருக்கிறது..
ஏனென்றால் இவ்விடமோ கொடிய புலிகள் வாழும் காடு.
என் குரல் கேட்டு புலி வந்தால் என்னையும் அடித்துக் கொன்றுவிடும்.
சரி உன்னையாவது தூக்கிக்கொண்டு வேறு பாதுகாப்பான இடத்துக்குச் செல்லலாம் என்றால் உன்னுடைய அகன்ற மார்பு பெரிதாகையால் உன்னை நான் தூக்கிச் செல்வதும் இயலாததாகிறது.

எனது நிலை யாருக்கும் வரக்கூடாது....
என்னை இந்த கொடிய காட்டில் இவ்வாறு பெறு விதிர்ப்புற்றுப் புலம்ப வைத்தவன் எமன்....
அவனும் யான் பெற்ற இதே போன்ற துன்பத்தை பெற்று வருந்தவேண்டும்.....
என்று எமனுக்கே சாபம் இடுகிறாள்.

கூற்றுவனாகிய எமன் அறனில்லாதவன்..
வாழவேண்டிய வயதில் எம்மைப் பிரித்தானே...
அவனும் நான்பெற்ற துயரைப் பெறவேண்டும் என்று சாபமிடுகிறாள் தலைவி..

இறந்துகிடக்கும் தலைவனைப் பார்த்து நீ எனது வளையணிந்த முன்கையைப் பற்றி மெல்ல நடந்து வா...
நாம் இம்மலையின் நிழலை அடைவோம் என்று கூறினாள்............

தன் கணவன் இறந்துவிட்டான்........
இச்செய்தியை அறிந்தவுடன் தலைவியின் அறிவு வேலை செய்யவில்லை....

உணர்வு செயல்பட ஆரம்பித்துவிட்டது......

அறிவு வேலை செய்திருந்தால் ..................
சரி பிறப்பதும் இறப்பதும் இயல்பு என்று அவனை அடக்கம் செய்யப் போயிருப்பாள்.........................

அவ்வேளையில் உணர்வு வேலை செய்ய ஆரம்பித்தது.....
இவ்வுணர்வுதான் விலங்கினமிருந்து மனித இனத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது...
கணவன் இறந்துவிட்டான் என்றவுடன் அழுது புலம்புவது இயற்கைதான்....
ஆனால் அதற்குக் காரணமாகக் கருதும் எமனை எண்ணி ...
அறனில்லாத கூற்றுவனே நீயும் இத்துயரைப் பெறுவாயாக என்ற சாபமிடுகிறாளே.................
அங்கு அவள் அவன் மீது கொண்ட அன்பு புலனாகிறது....

கணவன் இறந்துவிட்டான் என்று புத்தி சொல்கிறது...
இல்லை அவன் எழுந்து தன்னுடன் நடந்து வந்துவிடுவான் என்று உணர்வு சொல்கிறது..........


அதையும் உன்னால் நடக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை எனது வளையணிந்த முன்கையைப் பற்றிக்கொண்டாவது நடந்து வந்துவிடு என்று கூறும் போது மனிதம் உள்ள மனங்கள் யாவும் வலியை உணர்கின்றன....

மனிதர்கள் எல்லாம் இயந்திரங்களாக மாறிவருகிறார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்குச் சிரிக்கவும் அழுகவும் கற்றுக் கொடுக்கும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை...
அவ்வேலையில் உணர்வு என்றால் என்ன? என்று எடுத்தியம்ப இது போன்ற சங்கப் பாடல்கள் துணைநிற்கும்,

பாடல் இது தான்...


ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி-
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!


பாடியவர்: வன்பரணர்
திணை: பொதுவியல் துறை: முதுபாலை
புறநானூறு-255.

எல்லா உணர்வுகளையும் எல்லோராலும் உணர முடியும். ஆனால் வெளிப்படுத்த முடியாது.
சங்கப் பாடல்களை நோக்கும் போது பெரு வியப்புத் தோன்றுகிறது..
எத்தகைய சூழலாக இருந்தாலும் அதனை அழகாக எளிமையாக விளக்கிச் செல்லும் பாங்கு தமிழ் மொழியின் செம்மைப் பண்பிற்குத் தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

9 கருத்துகள்:

  1. மிகவும் அழகாக எல்லோரு விளங்கும் படி எழுதி இருக்கிறிங்க படிக்கும் போது மேலும் மேலும் படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டுகின்றது...

    தொடருங்கள் உங்கள் பணியை வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. மிக்க மகிழ்ச்சி சந்ரு...
    இடுகையிட்ட சில மணித்துளிகளுக்குள் வந்து கருத்துரையிட்டு விடுகிறீர்களே...
    நன்றி....

    பதிலளிநீக்கு
  3. //மனிதர்கள் எல்லாம் இயந்திரங்களாக மாறிவருகிறார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்குச் சிரிக்கவும் அழுகவும் கற்றுக் கொடுக்கும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை...//

    சிந்திக்க தூண்டும் வரிகள் தோழரே... அப்படி ஒரு நிலை மட்டும் வரவே கூடாது.

    எளிமையான விளக்கம். வழக்கம்போலவே ரசித்தேன். தொடருங்கள் - தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  4. சிந்திக்க தூண்டும் வரிகள் தோழரே... அப்படி ஒரு நிலை மட்டும் வரவே கூடாது./

    கருத்துரைக்கு நன்றி அன்பு...

    பதிலளிநீக்கு
  5. அடிக்கடி உங்கள் வலைப்பதிவை பார்க்க வேண்டு ஏதாவது புதிதாக பதிவிட்டிருப்பீர்களே என்கின்ற ஆதங்கமே அடிக்கடி உங்கள் வலைப் பக்கம் என்னை எழுக்கிறது...

    பதிலளிநீக்கு
  6. நல்ல, எளிய முறையில் சங்கப்பாடல்களை விளக்கும் முயற்சி. ரொம்ப நல்லா இருக்கு சார்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு