வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 ஜூலை, 2010

இரு பேராண்மைகள் (250வது இடுகை)


ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான்.

ஆண் தனக்குள் இருக்கும் பெண்வடிவத்தை காதலிக்கிறான்.
பெண் தனக்குள் இருக்கும் ஆண்வடிவத்தைக் காதலிக்கிறாள்

என்கிறது உளவியல்.


ஆண்களுக்குப் பெண்தன்மை அதிகரித்து வருகிறது.
பெண்களுக்கு ஆண்தன்மை அதிகரித்து வருகிறது.

என்கிறது அறிவியல்.

ஆண்போல வீரம் நிறைந்த பெண்களையும்,
பெண் போல அச்சம் நிறைந்த ஆண்களையும் நடைமுறை வாழ்க்கையில் நாம் காணமுடிகிறது.

100 விழுக்காடு ஆண்தன்மையுள்ள ஆண்களும்,
100 விழுக்காடு பெண்தன்மையுள்ள பெண்களும், இல்லை என்கிறது மருத்துவம்.

மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே ஆணுக்கும் பெண்ணுக்குமான போர் தீராது நடந்து வருகிறது. இந்தப் போருக்குப் பெயர் காதல்.

ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் சார்ந்த போர் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். மனம் சார்ந்த போர் உயிர்உள்ள காலம் வரை தீராது வரும்.

இந்தப் போர் மனம் என்னும் ஆயுதம் தாங்கி ஒருவரையொருவர் தாக்கிக் கொல்லும் கொடுமையான போர்.


மற்ற போருக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.


○ பிற போர்களில் வாழ்வு - சாவு இரண்டில் ஒன்று கிடைக்கும்.

○ காதலர்களுக்கான போரில் - வாழ்ந்துகொண்டே சாகவும், செத்துக்கொண்டெ வாழவும், தினம் தினம் சாகவும் முடியும்.
இந்தக் கொடுமையை (சுகமான வலியை) அனுபவிக்க முடியாதவர்கள் தாங்களே தற்கொலை செய்துகொள்வர்.

○ பிற போர்களில் உடல் காயப்படும்.
○ காதல்ப் போரில் மனம் காயப்படும்.


○ பிற போர்களுக்கான நோக்கம் மண்,பெண்,பொன் என பல்வேறு ஆசைகள் இருக்கலாம். ஆனால், காதல்ப் போரின் நோக்கம் அன்பில் உயந்து நிற்பது நீயா? நானா? என்பது தான்.

○ பிற போர்களில் யாரோ ஒருவர் தான் வெற்றியோ, தோல்வியோ அடைவர். ஆனால் காதல்ப் போரில் இருவரும் வெற்றிபெறவும், தோல்வியடையவும் முடியும்.


○ பிற போர்களில் விட்டுக்கொடுத்தவர் தோற்றுப் போவார். ஆனால் காதல் போரில் விட்டுக்கொடுப்பதே வெற்றியின் அடிப்படையாக அமைகிறது.

○ பிற போர்களில் ஒருவரையொருவர் எதிர்த்துப் போர்புரிவர். காதல்ப் போரில் ஒவ்வொருவரும் தம் மனதை எதிர்த்துப் போரிடுவர். ஆனால் இந்தப் போராட்டமே தன் இருவருக்கும் வலி தருவதாக அமையும்.



○ நீ பார்த்ததால் தான் நான் மெலிகிறேன் என்று உடல் கண்ணிடம் முறையிடும்!

நீ மெலிவதால் நான் தூக்கம் தொலைந்தேன் என்று கண் உடலிடம் எதிர்வாதம் செய்யும்!

சும்மா பேசிக்கிட்டே இருக்காதீங்க நீங்க செய்த தவறுக்கு என்னை நானே அடித்துக்கொள்கிறேன் என தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் இதயம்!

கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் எனக்கு வலியில்லை என்று நினைத்துவிட்டீர்களா? என்று இந்த சண்டைக்கிடையே பாவமாகக் கேட்கும் மனம்!

என்னடா இது குடியிருக்கலாம்னு வந்தா இந்த வீடு சரியில்லையே நான் வீட்டைவிட்டுப் போறேன் என்று உடலிடம் உயிர் சொல்லும்!


நான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா?
நான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்துச்சிப்பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.


கண், உடல், இதயம், மனம், உயிர் எல்லாம் மூளையின் கட்டளைக்கு அடிபணிந்து நடப்பதால் தான் இன்னும் ஆண், பெண் இன்னும் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறார்கள்.




என்றும் தீராத காதல்ப் போரை நானறிந்தவரை, உணர்ந்தவரை சொல்லிவிட்டேன்..

இன்னும் விளக்கமாக, அழகாக, ஆழமாக, ஔவையார் சொல்கிறார்………..


“செல்வார் அல்லர்“ என்று யான் இகழ்ந்தனனே
“ஒல்வாள் அல்லள்“ என்று அவர் இகழ்ந்தனரே
ஆயிடை இருபேர் ஆண்மை செய்த பூசல்
நல் அராக் கதுவியாங்கு என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.

குறுந்தொகை - 43 (பாலை)
என்கிறார் ஔவையார்

பிரிவிடை மெலிந்த கிழத்தி (தலைவி) சொல்லியது.


தலைவன் தன் மீது மிகுந்த அன்பு கொண்டவன் அதனால் தன்னை விட்டுப் பிரியமாட்டான் என நினைத்தாள் தலைவி!
அதனால் அவன் பிரிவினைத் தடுக்கும் எண்ணமின்றி இருந்தாள்.


பிரிவு என்றால் இதுதான் என்று அறியாதவள் தன் காதலி. அதனால் பிரிவினை உரைத்தாள் இவள் தாங்கமாட்டாள் என்ற எண்ணம் கொண்டிருந்தான் தலைவன்.


இவ்வாறு இருவரும் தம் மனதுக்குள் பேராற்றல் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது,

ஒருவரை மட்டும் பாம்பு கடித்து, அதனை நஞ்சு தலைக்கு ஏறி அறிவிப்பது போல,

தலைவியின் உடல் மெலிந்தது, அதற்கு தலைவனின் பிரிவே காரணம் என்று உடல் மாற்றம் அறிவித்தது.

பாம்பு கடித்தவர் தம் உயிர்போகும்வரை துன்புறுத்துவது போல
தலைவனின் பிரிவு தலைவியின் உயிர்போகும் வரை துன்புறுத்துவதாகவுள்ளது.

“அவர் நம்மைப் பிரியமாட்டார் என்ற தலைவியின் ஊக்கம்!
இவளுக்குச் சொல்லாமலே பிரிவோம் என்ற தலைவனின் துணிவு!“

இருவரின் பேராண்மைகளுக்குச் சான்றாகும்.

பிரிவால் துன்பமும்
அறியாமையால் கலக்கமும் கொண்ட தலைவியின் மனநிலை முழுவதையும் எடுத்தியம்புதாக “அலமலக்குறுமே“ என்னும் சொல் அமைகிறது.


பாடல் வழியே….

v ஆண்மை - பெண்மை இரண்டும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை என்றே பலரும் எண்ணிவருகின்றனர். இப்பாடல் இக்கருத்தாக்கத்தில் புதிய சிந்தனையைத் தூண்டுவதாகவுள்ளது.

v இருபேராண்மை என்ற சொல்லாக்கம் பெண்ணுக்குள் இருக்கும் ஆண் தன்மையை, ஆற்றலை உணர்த்துவதாகவுள்து.

v தலைவியின் மனம் தாங்காது என்ற தலைவியின் மனநிலையை ஆழ்ந்துநோக்கும் தலைவனின் பண்பு தலைவனுக்குள் இருக்கும் பெண்மைக்கு மென்மைக்குச் சான்றாகவுள்ளது.

v தலைவி ஆற்றலுடையவளாக இருந்தாலும் பாம்பு கடித்தது போன்ற உயிர்வலியைக் கடைசியில் பெறுகிறாள். ஆற்றலுடன் போர்புரிந்தாலும் மென்மைகாரணமாகத் தோற்றுப்போகிறாள். அதனால்தான் தலைவி பெண் வடிவத்துடனும் பெண் மனதுடனும் இருக்கிறாள்.


v தலைவியின் நிலையை நன்கு உணர்ந்த இவன் நம்பிரிவை ஏற்கமாட்டாள் என்பதை அறிந்தவனாயினும், பிரிவு வாழ்க்கைத்தேவைகளை நிறைவு செய்வது என்று துணிந்து தலைவியைப் பிரியும் பண்பு அவன் ஆணாகவே இருப்பதற்கு அடிப்படையாகவுள்ளது.

v காதல் உடல்மட்டும் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது. உடல் சார்ந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். மனம் சார்ந்த போராட்டம் காலம் உள்ளவரை மனிதர் வாழும் வரை தீராது என்கிறார் ஒளவையார்.

v பிரிவிடை மெலிந்த கிழத்தி (தலைவி) சொல்லியது என்னும் அகத்துறை தலைவனைப் பிரிந்த தலைவி தன் உடல் மெலிந்து தோழிக்குச் சொல்லியது என்ற அகத்துறைக்குத் தக்க சான்றாகவும் அமைகிறது.

39 கருத்துகள்:

  1. நல்ல ஆக்கம் , எளிமையாய் புரிந்துகொள்ளக்கூடிய முறையில் இக் கட்டுரை இருக்கிறது.
    மேலும் இது போன்ற ஆக்கங்கங்கள் அவசியம்.

    பதிலளிநீக்கு
  2. @vandhiyan தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வந்தியன்.

    பதிலளிநீக்கு
  3. //○ பிற போர்களில் உடல் காயப்படும்.
    ○ காதல்ப் போரில் மனம் காயப்படும்.//


    ஒரே அக்கப்போரா இருக்கே!

    :-)

    பதிலளிநீக்கு
  4. //காதல் உடல்மட்டும் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்தது. உடல் சார்ந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும். மனம் சார்ந்த போராட்டம் காலம் உள்ளவரை மனிதர் வாழும் வரை தீராது என்கிறார் ஒளைவையார்.//

    அம்மணிக்கு உடல் வயசாகியும், மனசு வயசாகல பார்த்திங்களா!?

    பதிலளிநீக்கு
  5. நாம ரெண்டு பேரும் இன்னைக்கு ஒரே மூடுல தான் இருக்கோம் போல!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கட்டுரைகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன நண்பரே...

    எளிமையாகவும் புரிந்து கொள்ளும் விதத்தில் இருப்பது இன்னும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. 250 !!!!!! பாராட்டுக்கள்!

    அந்த படத்தில், பாம்பு ஏதோ 3 D effect ல பாக்குற மாதிரி மிரட்டுதே!

    காதலைப் பற்றியும் காதலிப்பவர்களின் மன நிலை பற்றியும் சுவாரசியமாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். அருமை.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு....மிகவும் ரசித்தேன்....

    அந்த பாம்பு படத்திற்கு மட்டும் பொருள் விளங்கவில்லை

    பதிலளிநீக்கு
  9. சொல்லியிருக்கும் முழுதுமே வாசித்தேன்,சந்தர்ப்பம் வரும்போது பரீட்சித்தும் பார்க்கவேணும் !
    இன்னும் நிறையத் தொடர்ந்து எழுத வாழ்த்துகள் குணா.

    பதிலளிநீக்கு
  10. @வால்பையன் வால் தங்கள் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  11. @Chitra அப்படியா கூகுளில் கிடைத்த படம் தான் சித்ரா..

    தங்கள் கருத்துரைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. @ஆரூரன் விசுவநாதன்

    நல் அராக் கதுவியாங்கு என்ற அடிகள் தலைவி பாம்பு கடித்தது போன்ற உயிர்வலியைப் பெற்றாள் என்பதை விளக்கவே பாம்பின் படத்தை இட்டேன் நண்பரே..

    பதிலளிநீக்கு
  13. 250 வது இடுகைக்கு வாழ்த்துகள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  14. தரமான பதிவுகளைத் தொடர்ச்சியாக இட்டு வலைப்பூவை தொடர்ச்சியாக செயல்பட வைப்பதற்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும், தரமான இலக்கிய ஆக்கங்களுக்கும் என் முதல் வணக்கங்கள்.. 250 வது இலக்கியப் பதிவு என்பது வலையுலகில் சாதனை தான்... வாழ்த்துக்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  15. 250 இடுகைக்கு வாழ்த்துக்கள் நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. காதல் மனத்திற்கும்... உடலுக்குமான மற்றும்... இலகிய பாடல் கொண்டு விளக்கிய விதம் நல்லாயிருக்கு ... அந்த பாடல்தான் புரியவில்லை நீங்க விளக்கியதுதான் புரிகிறது.
    பகிர்வுக்கும்
    250 க்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

    பதிலளிநீக்கு
  17. 250 ஆவது பதிவுக்கு வாழத்துக்குள் நண்பரே..
    கட்டுரையும் அருமை..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    பதிலளிநீக்கு
  18. இந்த போரில் வெல்பவர் யார்? தோற்பவர் யார்?
    அந்த போரில் WINNERS GAIN NOTHING என்று சொல்வார்கள்.
    ஆனால் இந்த போரில்....????

    பதிலளிநீக்கு
  19. நண்பா விரும்பி படித்தேன் மிகவும் அருமை தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  20. @சி. கருணாகரசு நன்றி கருணாசு..

    இன்னொரு முறை படித்தால் புரியும் நண்பா..2500 ஆண்டுகள் பழைய இலக்கியயம் ஆதலாம் சற்று புரிதலில் கடினம் இருக்கத்தானே செய்யும்..

    பதிலளிநீக்கு
  21. @ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி நல்ல கேள்வி அன்பரே..

    காதல் போரில் விட்டுக்கொடுப்பவர் தான் வெற்றி பெறுகிறார்.

    பதிலளிநீக்கு
  22. ஆக்கபூர்வமான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. சார், சிறிய ஒரு பழங்கால பாடலை எடுத்துக்கொண்டு, மிகப்பெரிய விளக்கங்கள் கொடுத்து, அனைவருக்கும் எளிதாகப்புரியும் வண்ணம், மிகச்சிறப்பாக திறனாய்வு செய்து தரும் தங்கள் பணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    இன்று 11.06.2011 சனிக்கிழமை தங்களை வலைச்சரத்தில், திருமதி லக்ஷ்மி அம்மா அவர்கள், அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகே நான் இதை படித்துப்பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டு, இப்போது பத்தில் ஒன்றை மட்டும் படித்து முடித்துள்ளேன். அருமை. மிகவும் அருமை.

    தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.
    250 ஆவது வெளியீடு விரைவில் ஆயிரமாக ஆகட்டும்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  24. காதல்ல ஏகப்பட்ட அனுபவம் போல இருக்கே...அருமையாய் இருக்கிறது உங்கள் ஒப்பீடு.அனுபவம் இல்லன்ன இப்படிஎல்லாம் எழுத முடியாது..நான் சொல்வது உண்மைதானே..

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் பெரிய உளவியல் மேதைதான் பைங்கிளி.

    பதிலளிநீக்கு