வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 14 நவம்பர், 2011

கருவுற்ற மேகம்.




மகளிர் கருவுறும் காலம் 10 மாதங்கள் என்று இன்றைய அறிவியல் சொல்கிறது.

  பழந்தமிழ் இலக்கியங்கள் மகளிர் கருவுறும் காலம் 12 மாதங்கள் 
  என்று பதிவு செய்துள்ளன.

 சான்றாக ஒரு அகப்பாடல்..
   தலைவி கருவுற்றிருக்கிறாள். நினைத்தவுடன் பார்க்க தலைவன்   
   அருகில் இல்லையே என்ற ஏக்கததுடன் இருக்கிறாள். அதனால் வருத்தத்துடன் அவர் வருவதாகச் சொன்ன காலமும் வந்தது அவர் வரவில்லையே என்று புலம்புகிறாள். அதற்குத் தோழி.. தலைவியிடம் இவ்வாறு சொல்கிறாள்.

தோழி கேட்பாயாக..

பன்னிரண்டு மாதம் நிறைந்த கருப்பத்தைத் தாங்கித் தளர்ந்து..
நடக்க மாட்டாத பச்சைப் புளிச் சுவையில் விருப்பத்தை 
உடைய  முதற் சூலை உடைய மகளிரைப் போல..
நீரை முகந்து கொண்டு..
வானத்தின் கண் ஏறாமல், அந்நீரைத் தாங்கிக் கொண்டு 
ஒன்றோடு ஒன்று சேர்ந்து..
வளம் மிக்க பல மலைகளை நோக்கி..
பெரிய முழக்கத்தை உடைய மேகங்கள்..
எழுகின்ற கார்ப் பருவத்தை
இப்பொழுது பார்த்த பின்பும்காதலர் நம்மைப் பிரிந்து வாராமல் இருப்பாரோ?
வருவார் என்கிறாள்..
பாடல் இதோ..
                                                       அம்ம வாழி தோழி காதலர்
இன்னே கண்டுந் துறக்குவர் கொல்லேர்
முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ
ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக்

கடுஞ்சூன் மகளிர் போல நீர்கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்ற நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே.

(தலைவன் பிரிந்த காலத்து, "தலைவர் நம்மைத் துறந்தார்
இனி வாரார்" என்று வருந்திய தலைவியை நோக்கி,
"இதோ கார்ப் பருவம்வந்தது; இனி அவர் துறந்திரார்; வருவர்" 
என்று தோழி கூறியது.)


பாடல் வழியே..

1.   மகளிர் கருவுறும் காலம்  12 மாதம் என இப்பாடல் சுட்டும்
கருத்து புதுமையாகவும் அக்கால அறிவுநிலையைப் 
புலப்படுத்துவதாகவும் உள்ளது.

2. கருவுற்ற மகளிருடன் நீர் கொண்ட மேகத்தைப் புலவர் 
ஒப்பிட்ட பாங்கு சிறந்த கற்பனை நயம் கொண்டதாக உள்ளது.

3. கருவுற்ற மகளிர் புளிச்சுவையை மிகவும் விரும்புவர் என்ற 
புலவரின் கருத்து உவமைக்கு மேலும் சுவை சேர்ப்பதாக உள்ளது.

4. தலைவியின் வருத்த நோய்க்குச் சிறந்த மருந்து நம்பிக்கை
என்பதை அறிந்து.. தலைவன் விரைவில் வருவான் என்று சொன்ன தோழியின் கூற்று தோழி ஒரு சிறந்த உளவியல் மேதை என்று பாராட்டத்தக்கதாக உள்ளது.

14 கருத்துகள்:

  1. வியப்பளிக்கிறது முனைவரே,
    சில கணப்பொழுதுகள் மட்டுமே
    மிஞ்சிப் போனால் சில நாட்கள் மட்டுமே
    சூழ்ந்திருக்கும் மேகத்தை பெண்ணின் கருவுருதலுக்கு
    உவமையாய் காட்டியிருப்பது புலவரின்
    அதீத கற்பனை என்பது தெள்ளத்தெளிவாகிறது...

    அதிலும் சூழ் மேகங்களை
    சூல் மேகங்களாய் இங்கே
    புனைந்திருப்பது கவியின் கற்பனை வளம்....

    பனிரெண்டு மாதங்களா???
    கேட்கவே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.....
    யுகம் செல்லச் செல்ல கருக்காலங்களும்
    குறைந்துபோயிற்றோ????

    பதிலளிநீக்கு
  2. 1. மகளிர் கருவுறும் காலம் 12 மாதம் என இப்பாடல் சுட்டும்
    கருத்து புதுமையாகவும் அக்கால அறிவுநிலையைப்
    புலப்படுத்துவதாகவும் உள்ளது.

    2. கருவுற்ற மகளிருடன் நீர் கொண்ட மேகத்தைப் புலவர்
    ஒப்பிட்ட பாங்கு சிறந்த கற்பனை நயம் கொண்டதாக உள்ளது.

    3. கருவுற்ற மகளிர் புளிச்சுவையை மிகவும் விரும்புவர் என்ற
    புலவரின் கருத்து உவமைக்கு மேலும் சுவை சேர்ப்பதாக உள்ளது//

    இதெல்லாம் நீங்களே சொல்லிட்டா நாங்க என்னதான் கருத்து சொல்ல..

    ஆனாலும் இவ்வளவு உவமைகளும் எங்களால சொல்ல முடியாதுங்கறது வேற விஷயம்.

    பதிலளிநீக்கு
  3. தற்ப்போழுது உள்ள பெண்கள் 10மாதமே படாதபாடு படுகிறார்கள்...

    12 மாதங்களா? ஆச்சரியமாக உள்ளது... நண்பரே...

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  4. @மகேந்திரன் தங்கள் ஆழ்ந்த வாசித்தலுக்கும்
    நயம் பாராட்டலுக்கும்..
    வியப்புக்கும் நன்றிகள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  5. @ராஜா MVS எனக்கும் தான் வியப்பாக இருக்கிறது நண்பரே..

    பரிணாம வளர்ச்சியின் மாற்றங்களில் இதுவும் ஒன்றோ..

    பதிலளிநீக்கு
  6. நல்ல எடுத்துக காட்டு
    அருமை முனைவரே!

    புலவர் சாஇராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. தமிழ் இணைய உலகில் சினிமாவை மட்டுமே நம்பி பலர் காலம் ஓட்டும் வேளையில் நல்ல பயனுள்ள பதிவுகளை வெளியிட்டு வரும் முனைவருக்கு வாழ்த்துக்கள்.
    தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்!http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  8. அழகான உவமையும் காட்சிப்படுத்தலும். தலைவியின் துயர் தீர்க்க இந்தத் தோழிகள் எப்படியெல்லாம் பாடுபட்டிருக்கிறார்கள்! பாடலை விளக்கத்துடன் பகிர்ந்ததற்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  9. நம் மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பதிவு செய்த சங்க இலக்கியத்தை
    எங்களை போன்ற சாதாரண மக்களும் புரியும் பட்டி சொலியதற்கு நன்றி ..
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு