வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 8 ஜூலை, 2021

மாசு அறக் கழீஇய யானை போல -UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 13

குறுந்தொகை 13


குறிஞ்சித் திணை என்பதால் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் பேசப்படுகிறது. தலைவனின் பிரிவால் உடல் வாடும் தலைவி. தலைவன் தந்த காமநோய் குறித்து தன் தோழியிடம் சொல்வதாக இப்பாடல் அமைகிறது.

யானை தங்கியது போல தங்கினான் தலைவன் பின் யானை நீங்கியது போன்றே நீங்கினான் யானை இல்லாத இடம் எத்தகைய வெற்றிடத்தைக் காட்டுமோ அதுபோல தலைவன் இல்லாத தாம் சந்தித்த இடம் தலைவிக்குப் பெரிய ஏமாற்றத்தையும் வலியையும் தந்தது. 


குறிஞ்சி

மாசு அறக் கழீஇய யானை போலப்

பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்

பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்

நோய் தந்தனனே - தோழி!-

பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.

குறுந்தொகை - 13

கபிலர் பாடல்

தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய கிழத்தி தோழிக்கு உரைத்தது


தோழியர் கூட்டம் என்பது தோழியின் உதவியால் தலைவன் தலைவியைச் சந்திக்கும் சூழல் ஆகும்.

ஆற்றுதல் என்றால் தலைவியைத் தேற்று ஆறுதல் சொல்லிப் பிரிதல்.


தோழி! மேலே உள்ள தூசிகள் முழுதும் நீங்கும்படி பாகனால் கழுவப்பட்ட யானையைப் போன்ற தலைவன், பெரிய மழையை ஏற்றுத் தூய்மையுற்ற பெரிய மலையில் என்னுடன் தங்கிய தலைவன் காம நோயைத் தந்து சென்றான். அதனால் முன்பு குவளை மலரைப் போன்று இருந்த என்னுடைய அழகிய கண்கள் இப்பொழுது பசலை நிறம் நிரம்பப் பெற்றன என்று உரைக்கிறாள் தலைவி.


தலைவனின் பிரிவால் தலைவிக்கு ஏற்பட்ட பசலை நோய் இங்கு குறிப்பிடப்படுகிறது. யானை தன் தலையிலும் உடலிலும் தானே புழுதியை வாரி இறைத்துக்கொள்ளும். அதன் உடலில் உள்ள புழுதி முற்றிலும் நீங்குமாறு கழுவப்பெற்றமை போல பெரிய மழை பெய்து துறுகல்லின் மாசெல்லாம் நீங்கியது. பிரிவாற்றாமையால் தோன்றிய காமநோய் தலைவியின் உடல்மெலிவுக்குக் காரணமானது.

பெருமழையால் உழந்த துறுகல் போல தலைவி ஊரார் அலர் மொழிகளால் உடல் மெலிந்தால்.

பிரிவுக்கு முன் குவளைபோல இருந்த தலைவியின் கண்கள் தலைவன் பிரிவுக்குப் பின் பசலையால் வாடியது.


சொற்பொருள் விக்கம்


துறுகல் - தலைவியின் வீட்டின் புறத்தே இருக்கும் சிறிய பாறை

மாசு - புழுதி

பெயல் - மழை

பைதல் - குளிர்ச்சி

நாடன் - தலைவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக