வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 10. இனியவை கூறல்

 

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.- 91

உண்மையானவர்களின் இனிய சொற்கள் குற்றமற்றவை

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலான் ஆகப் பெறின்.- 92

ஈதலைவிடச் சிறந்தது இனிய சொல்லே

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.- 93

மனமகிழ்வுடன் கூடிய இனியசொல்லே அறம்

துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறுஉம் இன்சொ லவர்க்கு.- 94

இன்சொல்லுடையவர்க்கு துன்பநிலை தோன்றாது   

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.- 95

பணிவுடன்,இனிய சொல்லுடையவர்க்கு வேறு அணி வேண்டாம்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.- 96

இன்சொல்லால் தீமை நீங்கி நன்மை பெருகும்

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்.- 97

நல்ல செயலும், இனிய சொல்லும் நன்று

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.- 98

இனிய சொல் இப்பிறப்புக்கும், மறுபிறப்புக்கும் இன்பம் தரும்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.- 99

இன்பம் தரும் இன்சொல்லிருக்க, வன்சொல் எதற்கு?

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.- 100

கனிபோன்ற இன்சொல்லிருக்க, காய்போன்ற வன்சொல் ஏன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக