வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 10 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 32. இன்னா செய்யாமை

 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள். - 311

சிறந்த செல்வம் கிடைத்தாலும் பிறர்க்கு தீமை செய்யாதே

கறுத்துஇன்னா செய்தஅக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசுஅற்றார் கோள். - 312

தீமை செய்தவருக்கும் தீமை செய்யாதரே மாசற்றவர்

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

உய்யா விழுமம் தரும்.- 313

தீமை செய்தவருக்கே தீமை செய்தாலும் அது தீமையே

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல். - 314

தீமை செய்தவரும் வெட்கப்பட நன்மை செய்து விடு

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை.- 315

பிறர் துன்பத்தையும் தன்துன்பமாக நினைப்பதே அறிவின் பயன்

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.- 316

தீமையென நீ உணர்ந்ததை பிறர்க்குச் செய்யாதே

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான்ஆம்

மாணாசெய் யாமை தலை. - 317

எப்படியும், எப்போதும், யார்க்கும் தீமை செய்யாதே

தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல். - 318

தான் பெற்ற துன்பத்தை பிற உயிர்க்கும் தருவது எதனால்?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.- 319

பிறர்க்கு முற்பகல் செய்யும் தீமை, நமக்கு பிற்பகல் தாமே வரும்

நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோய்இன்மை வேண்டு பவர். - 320

இன்பமாக வாழ பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே நல்ல வழி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக