வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 10 டிசம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 110. குறிப்பறிதல்

 


இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. - 1091

இவளது ஒருநோக்கு நோய்செய்யும், மறுநோக்கு மருந்தாகும்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது. -1092

நானறியாது என்னைக்காணும் அவள் பார்வை இன்பத்தில் மிகப்பெரிது

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்.-1093

இவளின் கடைக்கண்பார்வை எம் அன்புக்கு அவள் ஊற்றிய நீர்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.-1094

பார்த்தால் நிலத்தைப் பார்ப்பாள், பார்க்காவிட்டால் பார்த்து மகிழ்வாள்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்

சிறக்கணித்தாள் போல நகும்.- 1095

என்னை நேரே காணவில்லை, கடைக்கண்ணாலே கண்டு மகிழ்கிறாள்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்

ஒல்லை உணரப் படும்.-1096

அயலார்போல பேசினாலும் அன்புடையார் சொல்லை உணரலாம்     

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்

உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.-1097

கடுஞ்சொல், எதிரிபோன்ற தோற்றத்தில் உள்ளன்பே காதல் குறிப்புகள் 

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்

பசையினள் பைய நகும்.- 1098

நான் பார்க்கும்போது அவள் மெல்லச் சிரிப்பதில் அழகுள்ளது 

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே உள.-1099

தொடர்பில்லாதவர் போல பார்த்தல் காதலர்களுக்கு உள்ள இயல்பு   

கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள்

என்ன பயனும் இல. -1100

கண்களிரண்டும் பேசும்போது, வார்த்தைகளால் எந்தப் பயனுமில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக